அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 18 செப்டம்பர், 2010

எது இலவசம்?


இலவசத் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தபின்னர், அதன் பலனை தொடர்புடையோர் அனுபவிக்க முடியாததுடன், அந்தப் பலனைப் பெறுவதற்கு முன்பு அவமானங்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்றால், அத்தகைய திட்டத்தால் என்ன பயன் இருக்க முடியும்? அப்படியொரு திட்டமாக மாறி வருகிறது மாணவர்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம்.
பள்ளிக் குழந்தைகள் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கிடந்தாலும், பேருந்துகள் நிற்காமல் அவர்களைக் கடந்து ஓடுவதும், மாணவர்கள் அப்பேருந்தை விரட்டிச் செல்வதும், பாதிப் பேர் ஏறியும், மீதிப் பேர் கீழே விழுவதுமான சம்பவங்கள் தமிழக நகர்ப்புறங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் அன்றாடக் காட்சிகளாகி வருகின்றன.
அண்மையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் ஒரு மாணவர், நிற்காது சென்ற பேருந்தை விரட்டிச் சென்று ஏற முயன்றபோது கீழே விழுந்து இறந்தார். ராமநாதபுரத்தில் ஒரு மாணவி, இலவசப் பயண அட்டை இல்லாத காரணத்தால் அவமானப்படுத்தப்பட்டு, அதனால் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த இரு சம்பவங்களையும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்தது. நீதிபதிகள் டி. முருகேசன், எஸ். நாகமுத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாணவர்களுக்குப் பிரச்னை இல்லாதபடி அரசு இத்திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பதுடன், ஓட்டுநர், நடத்துநர்களை எச்சரித்துள்ளனர். இத்தகைய சம்பவம் மீண்டும் தங்கள் கவனத்துக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
வசூல் "பேட்டா' குறைகிறது என்பதற்காக மாணவர்களை நடத்துநர்களும், ஓட்டுநர்களும் புறக்கணிப்பதாகத் தெரிகிறது என்று அடிப்படையான காரணத்தை இந்த வழக்கில் நீதிபதிகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆம். இதுதான் கசப்பான உண்மை.
1990-ல் திமுக அரசு கொண்டு வந்த திட்டம்தான் பேருந்துகளில் மாணவர் இலவசப் பயணத் திட்டம். முதலில் இத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. மீண்டும் இதை பிளஸ் 2 மாணவர்கள் வரை நீட்டித்தார்கள். அதன் பிறகு அரசு கலைக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இப்போது தொழிற்பயிற்சிக் கல்லூரி (ஐடிஐ) மாணவர்களுக்கும் கடந்த மே மாதம் இச்சலுகை நீட்டிக்கப்பட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தால் பள்ளி மாணவர்கள் 2.81 லட்சம் பேரும், கல்லூரி மாணவர்கள் சுமார் 20 ஆயிரம் பேரும் பயனடைகின்றனர்.
இத்திட்டம் இலவசப் பயணம் என்ற பெயரில் இருந்தாலும் இது இலவசமே அல்ல. இந்த சேவைக்காக மக்கள் பணத்திலிருந்து ஆண்டுக்கு ரூ 300 கோடியை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அரசு அளிக்கிறது. அதாவது, மொத்தம் 3 லட்சம் மாணவர்கள் என்று வைத்துக் கொண்டாலும், ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ 10,000 மக்கள் வரிப்பணம் இந்தப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பிறகு ஏன் இந்த அவமானம்? பிறகு ஏன் மாணவர்களைக் கண்டால் பேருந்தை நிறுத்தாமல் வேகமாகப் பறக்கிறார்கள்? இதற்குக் காரணம் நீதிமன்றம் குறிப்பிட்டதைப்போல, வசூல் "பேட்டா'தான்!
ஒவ்வொரு நாளும் ஒரு பேருந்தில் டிக்கெட் விற்பனை மூலம் வசூலாகும் பணத்தில், 2 விழுக்காடு தொகை "கலெக்ஷன்
பேட்டா' என அளிக்கப்படுகிறது. இதனை ஓட்டுநரும் நடத்துநரும் சமமாகப் பிரித்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ரூ 10,000 வசூல் என்றால், ஓட்டுநர், நடத்துநர் இருவருக்கும் தலா ரூ 100 கிடைக்கும். இத்தகைய இலவச பயண அட்டைகள் இவர்களது வசூல் கணக்கில் ஏறாது. இவர்களை ஏற்றினால் பேருந்து நிரம்பிவிடும். இந்த மாணவர்களால் வசூல் "பேட்டா' கிடைக்காது என்பதுடன், மற்ற பயணிகளை ஏற்ற முடியாதபடி மாணவர்களே பேருந்தில் நிரம்பி வழிவதை இவர்களால் சகித்துக்கொள்ள முடியாததன் விளைவுதான் இலவச பயண அட்டை மாணவர்களை இவ்வாறாகப் புறக்கணிக்கிறார்கள் என்கிற நீதிமன்றத்தின் கணிப்பு சரியானதுதான்.
எத்தனையோ செய்திகள், படங்கள், புகார்கள் என்றாலும் அரசுப் போக்குவரத்துக் கழகமோ, அத்துறை அமைச்சரோ இதைப் பொருள்படுத்துவதே இல்லை. ஏளனப் புன்னகையுடன் புறந்தள்ளி விடுகிறார்கள். அவமானப்படுவதும் அவதிப்படுவதும் அவர்கள் வீட்டுக் குழந்தைகள் அல்லவே!
மாணவர்கள் அவமதிக்கப்படுவதை உண்மையிலேயே தமிழக அரசு விரும்பவில்லை என்றால், தற்போதைய நடைமுறையை மாற்றியாக வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பணத்தை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும். மாணவர்களுக்கு 180 வேலை நாள்களுக்காக 360 "டோக்கன்'களை அளித்து, அந்த "டோக்கன்'களை நடத்துநர் தனது வசூல் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளும் புதிய நடைமுறையை உருவாக்கினால் மட்டுமே, நடத்துநர்களும் ஓட்டுநர்களும் இந்த மாணவர்களை மனித உயிர்களாக, பயணிகளாக மதிப்பார்கள். இல்லாவிட்டால், மாணவர்கள் ஆண்டுதோறும் ஆங்காங்கே இறப்பது நடக்கவே செய்யும்.
ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் நீதிமன்றம் தந்துள்ள இந்த நம்பிக்கையான தீர்ப்பைப் பயன்படுத்தும் வகையில், மாணவர்களை ஏற்றிக்கொள்ள மறுத்து விலகி ஓடும் பேருந்துகள் பற்றிய தகவல்களுடன் நீதிமன்ற அவமதிப்பு என்பதாக வழக்குத் தொடுக்கலாம். நீதிமன்றத்தின் படியேறுவோர் எண்ணிக்கை அதிகமாகும்போதாகிலும், இவர்கள் கீழ்ப்படிவார்களா என்பதைப் பார்க்கலாம்.

                                                      THANKS : DINAMANI






                                                                                                                First Published : 18 Sep 2010 12:00:00 AM IST



வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மார்க்கமா? உறவா?


  சத்தியமார்க்கமான இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள், அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்கள் மட்டுமே. இவ்விரண்டுக்கு எதிரான எந்தவொரு கருத்துக்கும், இஸ்லாத்துக்கும்  இம்மியளவுகூட சம்பந்தமில்லை. இதையறிந்து மற்ற வழிகேடான வலுவற்ற ஆதாரங்களை உதறித்தள்ளிவிட்டு, இந்த இரண்டு உண்மையான  ஆதாரங்களை ஏற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வளர்பிறைபோல வளர்ந்துகொண்டே இருக்கின்றது. இருப்பினும், இவர்களில் பலர் தங்களுடைய பெற்றோர்கள், வாழ்க்கை துணைவியர், குழந்தைகள், உடன்பிறந்தவர்கள், சொந்தபந்தங்கள் மற்றும் நண்பர்கள் போன்றோர் நடைமுறைப்படுத்துகின்ற மார்க்கத்திற்கு முரண்பாடான காரியங்களில் பங்கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் அத்தகைய வழிகேடானக் காரியங்களைத் தடுத்துநிறுத்துவதற்குரிய அனைத்து வாய்ப்பு வசதிகளையும், தகுதிகளையும் பெற்றிருந்தாலும்          அதற்காக அசையாமல் அமைதியாகவே இருந்துவிடுகின்றார்கள். தங்களின் ஆதரவை மறைமுகமாக அளித்துவிடுகின்றார்கள். இத்தகையவர்களிடம் இதைப்பற்றி விசாரித்தால் "மக்களோடு மக்களாக இணக்கமாக வாழவேண்டும். உறவுகளோடு ஒன்றுபட்டுவாழ வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தியுள்ளது. ஆகவேதான், நாங்கள் அவர்களின் காரியங்களில் கலந்துகொண்டோம்" என்று வேகமாக பதிலளிக்கின்றார்கள். இன்னும் சிலரோ "எங்களின்  நிலைபாடு சரியானது தான். ஆனால் நீங்கள்தான் ஒரே குடும்பத்திற்குள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றீர்கள். உறவுகளுக்கிடையே விரிசலை உருவாக்குகின்றீர்கள். ஒற்றுமையை சீர்குலைக்கின்றீர்கள்" என்று நம்மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகின்றார்கள்.

   இறைநம்பிக்கையாளர்கள், தங்களது உறவுமுறைகளை அரவணைத்து வாழவேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்தியிருப்பது உண்மைதான். அதில் நமக்கு எவ்விதமான ஆட்சேபனையும்  இல்லை. அதேசமயம் அவர்கள் மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களில் குதிக்கின்றபோது, அவர்களுடன் கைகோர்த்துகொண்டு மற்றவர்களும் களமிறங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றதா? என்று ஆராய்ந்து பார்த்தால், அணுஅளவும் அனுமதி இல்லை என்பதுதான் மார்க்கத்தின் தீர்ப்பாகக் கிடைக்கின்றது. எந்தளவிற்கெனில் மார்க்கம் முக்கியமா? உறவுமுக்கியமாஎன்ற தடுமாற்றமான நிலை நமக்கு எப்போது ஏற்பட்டாலும் சரி, நாம் மார்க்கத்திற்குதான் முக்கியத்துவம் வழங்கவேண்டும். எந்தவொரு உறவுக்காகவும் மார்க்கத்திலுள்ள எந்தவொரு அம்சத்தையும் மறைக்கவோ மாற்றவோ கூடாது என்று திருமறைக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. ஆகவே அவற்றையும், அதன்படி வாழ்ந்த நபிமார்கள், நல்லடியார்கள் மற்றும் நபித்தோழர்களுடைய வாழ்க்கையில் நமக்கு பரவலாகக் காணப்படுகின்ற படிப்பினைகளையும் வரிசையாகக் காண்போம்.

மார்க்கமா? பெற்றோரா?
           
   ஒவ்வொரு மனிதனும் இப்பூமியில் பிறப்பதற்கு ஊடகமாக இருக்கின்ற பொற்றோர்கள், தாங்கள் பெற்றெடுத்த குழந்தையை பலவிதமான துன்பங்கள், துயரங்கள் மற்றும் தியாகங்களுக்கு மத்தியில் பாராட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்குகின்றார்கள். ஆகவே உறவுகளிலேயே முதன்மையான உறவாக இருக்கின்ற பெற்றோர்களிடத்தில் பண்போடும் பணிவோடும் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான காரியங்களில் ஒன்று, பெற்றோருக்கு நன்மை செய்வதாகும். கண்ணியமான முறையில் அவர்களுக்கு  கட்டுப்பட்டு வாழவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ''சீ'' என்று வார்த்தையால் கூட அவர்களை வேதனைப்படுத்திவிடக் கூடாது என்றெல்லாம் மார்க்கத்திலே கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எந்தளவிற்கெனில் ''பெற்றோரை நோவினைப் படுத்துவது பெரும்பாவம்'' என்றும், ''முதுமையடைந்த தாயையோ தந்தையையோ பெற்றிருந்தும் சொர்கத்தில் நுழைய முடியாமல் போனவன் நாசமாகட்டும்'' என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அதேசமயம் பெற்றோர்கள், மார்க்கத்திலே எச்சரிக்கப்பட்டக் காரியத்தை செய்யுமாறு நம்மை ஏவும்போது அல்லது  வலியுறுத்தப்பட்ட கடமைகளைவிட்டு விலகுமாறு வற்புறுத்தும் போது,  "தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது; தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை" என்று பழமொழியைப் பேசிக்கொண்டு அவர்களுக்கு அடிபணிந்துவிடக் கூடாது. மாறாக, இவ்வாறு மார்க்கமா? பெற்றோரா? என்ற நிலை நமக்கு ஏற்படும் போது மார்க்கத்தையே தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும் என்று கண்டிப்பான முறையில் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
(அல்குர்ஆன் 29 : 8 )
 
நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பெற்றோரும், உங்களின் உடன்பிறந்தோரும் நம்பிக்கையை விட (இறை)மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.
( அல்குர்ஆன் 9 : 23 )

ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள், தங்களது பெற்றோர்களின் மீது அளவுகடந்த அன்பை  வைத்திருந்தாலும் அவர்கள் தங்களை இறைமறுப்பு அல்லது இணைவைப்பின் பக்கம் வருமாறு அழைத்தால் அதற்கு அணுஅளவும் இசைந்துவிடக் கூடாது. அவர்கள் அநீதியின் பக்கம் அணிதிரள்கிறார்கள் என்பதை அறிந்தபிறகும் அவர்களுக்கு சாதகமானமுறையில் செயல்படக்கூடாது என்று முன்சென்ற இரு வசனங்களிலும் அல்லாஹ் ஆணையிடுகின்றான். இத்துடன் தமக்கு உற்றத்தோழராகத் தேர்ந்தெடுத்து கொண்ட இப்ராஹிம் (அலை)  அவர்களுடைய வாழ்க்கை, இக்கட்டளையை மதிக்கின்ற விதத்தில்தான் அமைந்திருந்தது என்பதையும் திருமறையில் சுட்டிக்காட்டியுள்ளான்.

இறைத்தோழர் இப்ராஹிம் (அலை) :
            சபிக்கப்பட்டவனான ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியவராக செதுக்கப்பட்ட சிலைகளுக்கு சிரம் தாழ்த்தாதீர்கள். அவையெல்லாம் பேசமுடியாத, காதுகேட்க இயலாத, எந்தவொரு பயனையும் தருவதற்கு சக்தியில்லாத, உயிரற்ற படைப்பினங்கள். ஆகவே அகிலத்தைப் படைத்துப் பரிபாலிக்கின்றவனான அல்லாஹ்விற்கு மட்டுமே அடிபணியுங்கள். அதன் மூலம் அவனது அளவற்ற அருள்பெற்று ஈருலகிலும் வெற்றியடைவீர்கள். இல்லையெனில், அவன் அளிக்கின்ற வேதனை மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று எடுத்துச்சொல்லி இப்ராஹிம் (அலை) அவர்கள், தமது தந்தையை சத்தியத்தின் பக்கம் அழைத்தார்கள். அதற்கு அவருடைய தந்தையோ "இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப் படுத்துகின்றாயா? நீ என்னைவிட்டு விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொன்றுவிடுவேன். இந்நொடியிலிருந்து நீ நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!'' என்று பதிலளித்தவராக சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் இறைமறுப்பிலேயே வீழ்ந்துகிடந்தார், இத்தருணத்தில் இப்ராஹிம் (அலை) அவர்கள், தமது தந்தையின் வழிமுறையே தனது வழிமுறை என்று தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்களா ? தமது தந்தையின் அர்த்தமற்றக் காரியங்களுக்கு  ஒத்தாசையாக இருந்தார்களா? இல்லை. மாறாக மார்க்கத்திற்காக தமது தந்தையைக் கூட பொருட்படுத்தாமல் அவரைவிட்டு விலகி படைத்தவனின் பாதையில் புறப்படுகின்றார்கள். தனக்கு ஓரிறைக் கொள்கையே முக்கியம் என்று பகிரங்கமாகப் பறைச்சாட்டுகின்றார்கள், இதைத் திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்.
"உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான். உங்களையும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றையும் விட்டு விலகிக் கொள்கிறேன். என் இறைவனையே பிரார்த்தனை செய்வேன். எனது இறைவனிடம் பிரார்த்தனை செய்வதில் துர்பாக்கியசாலியாக ஆகாமல் இருப்பேன்'' (என்று இப்ராஹீம் கூறினார்.)
( அல்குர்ஆன் 19 : 47, 48 )

தாலாட்டிவளர்த்த தாய் தந்தையர் மீதுள்ள பாசம் எந்தவிதத்திலும் தாங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் விசுவாசமாக வாழ்வதற்கு தடையாக வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள், நபித்தோழர்களும் நபித்தோழிகளும். பெற்றோரா? மார்க்கமா? என்ற சிக்கலான நிலையில் மாட்டிக்கொள்கின்றபோது, தங்களை மார்க்கத்திற்குத் தோதுவாகப் பரிசுத்தப்படுத்திக் கொண்டார்கள். ஏனெனில் அவ்வாறு தான் இருக்கவேண்டும் என்று அல்லாஹ் தனது அருள்மறையில் அறிவுறுத்தியுள்ளான். ஆகவே அவ்வசனத்தையும், அது அருளப்பட்டதின் பின்னணியையும் அறிந்து கொள்வோம்.

ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) :

சஅத் பின் அபீவக்காஸ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
என் விஷயத்தில் குர்ஆனின் சில வசனங்கள் அருளப்பெற்றன. (அவை வருமாறு:)
(என் தாயார்) உம்மு சஅத், நான் எனது (இஸ்லாமிய) மார்க்கத்தை நிராகரிக்காத வரை என்னுடன் பேசமாட்டேன்; உண்ணமாட்டேன்; பருகமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டார். மேலும், அவர் "உன் பெற்றோரிடம் நீ நல்லமுறையில் நடந்துகொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுறுத்தியுள்ளான் என்று நீ கூறுகிறாய். நான் உன் தாய். நான் தான் இவ்வாறு (மார்க்கத்தைக் கைவிடுமாறு) கட்டளையிடுகிறேன். (அதற்கு நீ கட்டுப்பட வேண்டும்)'' என்று கூறினார்.
இவ்வாறு என் தாயார் மூன்று நாட்கள் (உண்ணாமலும் பருகாமலும்) இருந்து பசியால் மயக்க முற்றுவிட்டார். அப்போது அவருடைய உமாரா எனப்படும் ஒரு மகன் எழுந்து அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராகப் பிரார்த்தித்தார். அப்போதுதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் குர்ஆனில், "மனிதனுக்கு, அவனுடைய பெற்றோர் குறித்து நாம் அறிவுறுத்தியுள்ளோம்'' என்று தொடங்கி, "உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக ஆக்கும்படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே. இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமையோடு நடந்து கொள்'' (31:14,15) என்பதுவரையிலான வசனங்களை அருளினான்.
நூல் : முஸ்லிம் (4432)

அல்லாஹ்வை மட்டும் ஒருமைப்படுத்துவதை விட்டு ஒதுங்கிவிடு என்று பெற்றோர்கள் நம்மை சித்தரவதைசெய்து காயப்படுத்தினாலும் அல்லது அவர்கள் நம்முடைய கொள்கை உறுதியை சிதைப்பதற்காக தங்களையே வேதனையால் வருத்திக்கொண்டு பயமுறுத்தினாலும்  அவர்களுடைய மிரட்டல்களுக்கும் தந்திரம் நிறைந்த பயமுறுத்தல்களுக்கும் ஒருபோதும் நாம் மசிந்துவிடக்கூடாது என்ற பாடத்தை இச்சம்பத்திலிருந்து கற்றுக்கொள்ள முடிகின்றது.
 
அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) :

மனிதனுக்கேற்ற  மகத்துவமிக்க வாழ்வியல் நெறிமுறையான இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதின் மூலம் தமது வாழ்க்கையை அலங்கரித்துக் கொண்டார்கள், அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி). ஆனால்  அவர்களுடைய தாயார் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதைத் தொடர்ந்து, தம்மைத் தேடிவந்த தாயாரிடம் கூட தமது பாசத்தேடலைத் தவிர்த்துக் கொள்கின்றார்கள். ஏனெனில் இன்றளவும் இணைவைப்பிலேயே நீடித்திருக்கின்ற தமது தாயுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு மார்க்கத்திலே அனுமதியில்லை. தவிர, அதன்மூலம் தாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட சத்தியப்பாதையில் சிறிதளவும் தடுமாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அஸ்மா(ரலி) அவர்கள் கருதினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கின்றார்கள், இறைநம்பிக்கையாளர்கள், தங்களது பெற்றோர்கள் இறைமறுப்பு அல்லது இணைவைப்பில் இருந்தாலும், அவர்களுடன் மார்க்கத்திற்கு மாறுசெய்யாத வகையில் உறவைப்பேணி வாழ்வது தவறில்லை என்று  சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்ட பின்னால்  தமது தாயுடன் சேர்ந்துவாழத் துவங்கினார்கள், அஸ்மா(ரலி) அவர்கள்.

என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள்.  நான் அல்லாஹ்வின் தூதரிடம், "என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?'' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ர-)
நூல் : புஹாரி ( 2620 )
  
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) :

ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்ற மூன்று முறைகளில்  ஒன்று, தமத்து ஹஜ் முறை ஆகும். அதாவது முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றியவுடன், மக்காவில் தங்கியிருந்து ஹஜ்ஜடைய நேரம் வந்ததும் மறுபடியும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவதாகும். இவ்வாறு செய்வதற்கு ஆதாரமாக திருமறைவசனம் (2 : 196) இருக்கின்றது. தவிர, இதற்கு நபி(ஸல்) அவர்களும் அனுமதி  அளித்திருக்கின்றார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்களோ தமத்துஹஜ் செய்வதைத் தடுப்பவர்களாக இருந்தார்கள். ஆகவே இவ்விஷயத்தில் தீர்க்கமானத் தெளிவைப் பெற்றுக்கொள்வதற்காக ஒருவர்உமர்(ரலி) அவர்களின் மகனான அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வந்து விசாரித்தார். அப்போது இப்னு உமர்(ரலி) அவர்கள் அவருக்கு அளித்த பதிலை நாமெல்லாம் நிதானமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ர-) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார்.  அதற்கு அவர், "அது அனுமதிக்கப்பட்டதே!'' என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், "உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!'' என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ர-), "என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?'' என்று கேட்டார்.  அதற்கு அம்மனிதர், "நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்'' என்றார்.  அப்போது இப்னு உமர் (ர-), "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தான் செய்துள்ளார்கள்'' என்று விடையளித்தார்.
அறிவிப்பவர் : ஸா-ம்
நூல் : திர்மிதீ (753)
 
பரந்து விரிந்திருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது கலீஃபா ஆக இருக்கின்ற தமது தந்தையின் அறியாமைக்கு ஆதரவாக இருந்துவிடாமல், இறைமார்க்கத்தின் உண்மைநிலையை உள்ளவாறு எடுத்துச் சொல்கின்றார்கள் இப்னு உமர்(ரலி) அவர்கள். மேலும் திருத்தூதரின் கூற்றுக்கு மாற்றமான கருத்தைக் கொண்டிருப்பது தமது பெருமதிப்புக்குரிய தந்தையாக இருந்தாலும், எவ்விதமான தயக்கமுமின்றி அத்தவறை தைரியமாகச் சுட்டிக்காட்டினார்கள். காரணம், தந்தையின் கருத்தைவிட பெருமகனார் நபி(ஸல்) அவர்களின் நடைமுறை தான் பின்பற்றபடவேண்டியது  என்பதில் உறுதியாக இருந்தார்கள், இப்னு உமர்(ரலி) அவர்கள்.

இன்றைய மக்களின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது? என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கல்வி, தொழில், வாகனம் வாங்குதல், துணிஎடுத்தல் போன்ற உலகவிஷயங்களிலே தாய் தந்தையரின்  உள்ளம் குளிருகின்ற விதத்தில் அவர்களுக்கு அடிபணிந்து வாழ்வதற்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கின்றது. ஆனால் இந்த விஷயங்களிலெல்லாம் அவர்களின் விருப்பத்தை வெறுத்து ஒதுக்கித் தள்ளக்கூடியவர்கள், சமரசம் செய்துகொள்ளக்கூடாத சன்மார்க்கத்தின் சட்டதிட்டங்களை செயல்படுத்துகின்ற விஷயத்திலே ''நாங்கள் பெற்றோருக்குக் கட்டுப்படுகின்றோம்'' என்று போலித்தனமாகப் பிதற்றிக்கொண்டு, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்பவர்களாக மாறிவிடுகின்றார்கள். பெரும்பாலும் இன்றைய இளைஞர்கள் தர்காவிற்கு பாதுகாப்பாக நிற்பது, மத்ஹபுக்கு வக்காலத்து வாங்குவது, வரதட்சனை வாங்குவது என்பதெல்லாம் இதனுடைய வெளிப்பாடு தான்.

மார்க்கமா? மக்கட்செல்வமா?

மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அருட்கொடைகளில் முக்கியமான ஒன்று, குழந்தை பாக்கியம். மற்ற அருட்கொடைகளை வழங்குவதைப் போன்றே இதையும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டுமே கொடுக்கின்றான். பெற்றோர்கள் நாடி நரம்புகள் தளர்ந்து முதுமையால் தள்ளாடுகின்ற காலத்தில் சுமைதாங்கிகளாக இருப்பவர்கள், குழந்தைகள் தான். இன்னும் சொல்லப்போனால் கால நீரோட்டத்தில் மறைந்துபோன பிறகு, ஒவ்வொரு மனிதனுடைய மறைக்கஇயலாத முகவரிகளாக அவனது வாரிசுகள் இருக்கின்றார்கள். இத்தகைய குழந்தைச் செல்வத்தைப் பற்றியும் மறுமையில் விசாரிக்கப்படும். எனவே ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகளுக்கு மார்க்கத்தைக் குறித்து வலியுறுத்தவேண்டும். நற்பண்புகளைப் பற்றி போதிக்க வேண்டும். அவர்களைப் பிற்காலத்தில் பிறரிடத்தில் கையேந்துபவர்களாக விட்டுவிடாமல், அவர்களின் நல்வாழ்விற்காக சொத்துக்களைச் சேர்த்து வைக்கவேண்டும். அவர்களைப் பராமரிக்கின்ற போது, அவர்களிடத்தில் எந்த விஷயத்திலும் பராபட்சம் காட்டக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது.
அதேசமயம், பிள்ளையின் மீதுள்ள பாசத்தால் படைத்தவனை மறந்துவிடக் கூடாது.  அவர்களின் மீதுள்ள அதிகப்படியான அக்கறையால் மார்க்கத்தின் எல்லைக்கோடுகளை விட்டும் அத்துமீறிவிடக்கூடாது. மார்க்கமா? குழந்தைகளா? என்ற சூழ்நிலை தோன்றினால் மார்க்கத்திற்கே முதலிடம் அளிப்பவர்களாக இருக்க வேண்டும். காரணம், மறுமைநாளில் நமக்கு இறைவனின் கிருபையைப் பெற்றுத்தருவது நம்முடைய நல்லமல்கள் மட்டுமே. ஆகவே பாசமிகுந்த பிள்ளைகளையை விட பரிசுத்தமான கொள்கைதான் நமக்கு மிக முக்கியமானதாக இருக்கவேண்டும். இதை பின்வருகின்ற ஆயத்துகளிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும்  அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள்.
(அல்குர்ஆன் 63 : 9 )

உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் பன்மடங்கு கூலி இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் கவலையற்றிருப்பார்கள்.
(அல்குர்ஆன் 34 : 37 )

அவர்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் அவர்களைக் காப்பாற்றாது. அவர்களே நரகவாசிகள், அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்,
 (அல்குர்ஆன் 58 : 17 )

மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும்  ஆழமாக போதிக்கப்படுகின்ற ''கொள்கை பாசமே அதிமுக்கியமானது'' என்ற கோட்பாடு, பின்வருகின்ற சம்பவங்களில் மிகவும் அழுத்தமாக முன்நிறுத்தப்பட்டுள்ளதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

நூஹ் (அலை) :
 இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் சத்தியக் கொள்கையை எடுத்துறைத்த போது அதை ஏற்க மறுத்தவர்களில் ஒருவனாக அவர்களுடைய அருமை மகனும் இருந்தான். சத்தியத்தின் மீதான இறைநிராகரிப்பாளர்களின் வெறுப்பைப் பொறுத்திருந்துப் பார்த்த நூஹ்(அலை) அவர்கள், அந்த மக்களுக்கு எதிராக கடும்வேதனையை இறக்கச்சொல்லி இறைவனிடத்தில் இறைஞ்சினார்கள். தவிர, நிகழப்போகின்ற பேராபத்திலிருந்து இறைநம்பிக்கையாளர்களை  பாதுகாப்பதற்காக, படைத்தவனின் கட்டளைப் படி ஒரு பிரமாண்டமானக் கப்பலைக் கட்டிமுடித்தார்கள். துரிதமாகவே இறைவனின் வேதனை அந்த இறைநிராகரிப்பாளர்களைச் சூழ்ந்துகொண்டது. வானம் மற்றும் பூமியின் மடை திறக்கப்பட்டதால் பீறிட்டெழுந்த வெள்ளப்பெருக்கு, வானுயர்ந்த மலைகளின் முகடுகளோடு முட்டிமோதியது. அந்த அபாயகரமான பேரழிவின் போது, இறைநிராகரிப்பில் வீழ்ந்திருந்த தமது மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த நூஹ்(அலை) அவர்கள், எத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டார்கள்  என்பதை அல்லாஹ் கூறுகிறான்.
 மலைகளைப் போன்ற அலை மீது அது (கப்பல்) அவர்களைக் (இறை நம்பிக்கையாளர்களைக் ) கொண்டு சென்றது. (அப்போது) விலகி இருந்த தன் மகனை நோக்கி "அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!'' என்று நூஹ் கூறினார்.
"ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை'' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகிவிட்டான்.
(அல்குர்ஆன் 11 : 42, 43)
இறைத்தூதராக இருக்கின்ற  தந்தையோ கப்பலில் பாதுகாப்பாக இருக்கின்றார். இறைமறுப்பாளனாக இருக்கின்ற தமையனோ மாபாதகமான வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றான். இந்நேரத்தில் அன்புமகனே நீ அல்லாஹ்விற்கு அடிபணியாமல் காஃபிராக இருந்தாலும் பரவாயில்லை, தாமதிக்காமல் ஒடிவந்து கப்பலில் தொற்றிக் கொள்; உனது உயிரைக் காப்பாற்றிக் கொள் என்று தந்தையான நூஹ்(அலை) அவர்கள், தமது மகனிடம் பாசத்தால் பரிதவித்தார்களா? இல்லைவே இல்லை. மாறாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இரட்சகனுக்குக் கட்டுப்படக்கூடியவனாக இருந்தால் எங்களுடன் கப்பலில் வந்து ஏறிக்கொள் என்று நிபந்தனையோடுதான் அழைக்கின்றார்கள். ஆனால், அதற்கு அவன் முன்வரவில்லை. நம்பிக்கையாளர்களை மட்டுமே அழைத்துச் செல்லவேண்டும் என்ற படைத்தவனின் கட்டளையா? பாசமகனா? என்ற போராட்டமான நிலை கண்முன்னே மலைத்து நிற்கும் போது, படைத்தவனுக்கே முழுமையாகக் கட்டுப்பட்டார்கள், நூஹ்(அலை) அவர்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் :

ஈமான்கொண்டவர்கள், அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சியாளர்களாக இருக்கவேண்டும். அந்த நீதி யாருக்கு பாதமாக இருந்தாலும் சரி. நீதியை நிலைநாட்டும் போது ஏழை, பணக்காரன், எதிரி, நண்பன் என்றெல்லாம் ஒருபோதும் பாரபட்சம் காட்டக்கூடாது. நீதிசெலுத்துகின்ற நேரத்தில்   மனோ இச்சையின் மடியில் மயங்கிவிடக்கூடாது. அல்லாஹ் நீதமான முறையில் நீதி செலுத்துவோரை  நேசிக்கின்றான். இது இஸ்லாமிய சட்டநீதியின் நிலைபாடு. மேலும் இப்பிரகடனத்திற்கு மகுடம் சூட்டுகின்ற விதத்தில் நபி (ஸல்) அவர்கள், ஒருவேளை தமது மகள் குற்றம் செய்தாலும் பாகுபாடின்றி கண்டிப்பாக அவரையும் தண்டிப்பேன். மிகைத்தவனிடமிருந்து வகுத்தளிக்கப்பட்ட இந்த மார்க்கத்தின் கட்டளையை தயவுதாட்சனையின்றி செயல்படுத்துவேன் என்று சூளுரைத்துள்ளார்கள்.

மக்சூமிய்யா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்கு கவலையளித்தது. அப்போது அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து  (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?'' என்று சொன்னார்கள். அவ்வாறே உசாமா (ர-) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் தண்டனைகüல் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாயா?'' என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:
"மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்கüடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்) விட்டு விடுவார்கள். அவர்கüலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரது கையை நான் துண்டிப்பேன்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர-)
நூல் : புஹாரி (6788)

மார்க்கமா? மகளா? என்ற மனகுழப்பமான நிலை தமக்கு வந்தாலும் மார்க்கத்திற்கே முதன்மையளிப்பேன் என்று  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதோ வார்த்தையளவில் சொல்லவில்லை. மாறாக தெரிந்தோ தெரியாமலோ தமது பாசமகள் பாத்திமா (ரலி) அவர்கள் மார்க்கத்திலே தடுக்கப்பட்ட  காரியங்களை செய்கின்ற போது மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாங்கள் முன்மொழிந்தவாறே முன்மாதிரியாக நடந்துகொண்டார்கள்.

திரைச்சீலையைத் தொங்கவிடுதல் :
அலீ (ரலி) அவர்கள் ஒருவரை விருந்துக்கு அழைத்து அவருக்காக உணவைத் தயார்செய்துவைத்திருந்தார்கள். (அப்போது) ஃபாத்திமா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் நாம் விருந்துக்கு அழைத்தால் ( நன்றாக இருக்கும்) என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து கதவின் ஓரத்திலே தமது கையை வைத்த போது வீட்டின் ஓரத்திலே ( உருவத்தாலான) திரைச்சீலையை கண்டார்கள். உடனே திரும்பிசென்றுவிட்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரை சந்தித்து, தாங்கள் ஏன் திரும்பிச் செல்கின்றீர்கள்? என்று கேட்குமாறு கூறினார்கள், அவ்வாறு கேட்டதற்கு, ''அலங்கரிக்கப்பட்ட வீட்டிலே நுழைவற்கான எந்த தேவையும் எனக்கு இல்லை '' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் ; அபூஅப்திர்ரஹ்மான் (ரலி)
நூல் : அஹ்மத் (20916)

அருள்வளத்தைக் கொண்டுவருகின்ற மலக்குமார்கள், உருவப்படம் இருக்கின்ற வீட்டில் நுழையமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தமது பாசமகள் வீட்டிலே உருவத்திரைச்சீலை இருப்பதை கண்கூடாக பார்த்த போது, அதை அலட்சியப்படுத்தி விட்டு அவருடைய அகம் மகிழ்கின்ற விதத்திலே விருந்தில் கலந்துகொள்ளவில்லை நபி (ஸல்) அவர்கள். தடுக்கப்பட்ட செயல் நடந்திருப்பது தமது மகளுடைய இல்லமாக இருந்தாலும் அங்கிருந்து திரும்பிவந்துவிட்டார்கள். இதே போன்ற மற்றொரு சம்பவத்தைக் காண்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாக இருந்த ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
            ஹுபைராவின் மகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது கையில் பெரிய வளையங்கள் இருந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையில் அடித்தார்கள். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளான ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் வந்து தன்னிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்துகொண்ட விஷயத்தை முறையிட்டார். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தனது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை கழற்றி இது ஹசனுடைய தந்தை(யும் எனது கணவருமான அலீ (ரலி) அவர்கள்) எனக்கு அன்பளிப்பாக வழங்கியதாகும் என்று கூறினார்கள். அவர்களது கையில் அச்சங்கிலி இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே வந்தார்கள். ஃபாத்திமாவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளின் கையில் நெருப்பால் ஆன சங்கிலி உள்ளது என மக்கள் கூறிக்கொள்வது உனக்கு மகிழ்ச்சியைத் தருமா? என்று கேட்டுவிட்டு உட்காராமல் வெளியே சென்றுவிட்டார்கள். எனவே ஃபாத்திமா (ரலி) அவர்கள் அச்சங்கிலியை கடைத்தெருவுக்கு கொடுத்தனுப்பி விற்றுவிட்டு அதன் கிரயத்தில் ஒரு அடிமையை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு தெரிவிக்ப்பட்ட போது நரகத்திலிருந்து ஃபாத்திமாவை காப்பாற்றிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும் என்று கூறினார்கள்.
நூல் : நஸாயீ (5050)
 
இந்த சம்பவம், இஸ்லாத்தின் ஆரம்பக்காலகட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளியை சேமித்து வைப்பதற்கு  தடை இருந்தபோது நடந்ததாகும். ஸகாத் கடமையாக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. அதாவது பொருளுக்குரிய ஸகாத்தை கொடுத்துவிட்டால் அப்பொருளைச் சேமித்துவைப்பது தவறில்லை என்று அனுமதிதரப்பட்டது. மேற்கண்ட சம்பவத்தில் நாம் கருத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், தமது மகள் (அப்போதைய) மார்க்கச் சட்டத்திற்கு மாற்றமாக  தங்கஆபரணத்தை வைத்திருப்பதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள், அதை வைத்திருப்பது தவறு என்பதை அச்சமயத்திலேயே அவருக்கு நெகிழ்வான முறையில் சுட்டிக்காட்டினார்கள். அந்த நகையை தமது மகள் விற்று விட்டார்கள் என்ற செய்தியை அறிந்ததும் அல்லாஹ்வை புகழ்ந்து அகமகிழ்ந்தார்கள் என்பதை தான்.

இப்ராஹிம் (ரலி) இறப்பு :
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தமது மகன் இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்துபோது தாங்கவியலாத துக்கத்தால் துவண்டுபோயிருந்தார்கள். அண்ணலாரின் விழிகளில் வழிந்த கண்ணீர் துளிகள் அவர்களுடைய அகத்தை ஆக்கிரமித்திருந்த  ஆழ்ந்த வருத்தத்தை அறிவிப்பு செய்தன. இத்தருணத்தில்இறைத்தூதருடைய மகன் இப்ராஹீம் (ரலி) அவர்கள் மரணித்ததால் தான் இன்று கிரணம் நிகழ்ந்தது என்று மக்கள் கதைபேசிக்கொண்டிருந்தார்கள். இதை செவிமடுத்த தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் தமது மகனைதானே மேன்படுத்தி பேசுகின்றார்கள் என்று மௌனமாக இருக்கவில்லை. மறுகணமே தம்மைத் தொய்வடைய வைத்திருந்த துக்கத்தையும் சோகத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, அம்மக்களிடமிருந்த அறியாமையைக் கண்டிக்கின்றார்கள். மாற்றுமதத்தவர்களின் மடமையான சித்தாந்தம் சிந்திக்கத் தூண்டுகின்ற மார்க்கத்தில் திணிக்கப்படுவதைக் களைந்தெறிகின்றார்கள். கிரகணம் ஏற்படுவதில் எவருக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லை. அது அகிலத்தை அடக்கியாள்பவனான அல்லாஹ்வின் மாபெரும் அத்தாட்சிகளில் ஒன்றாகும். எனவே அந்நேரத்தில் அவனிடத்திலே அதிகமதிகமாக உதவிதேடுங்கள். அவனுக்கு தொழுகையின் மூலம் அடிபணிந்து நன்றிசெலுத்துங்கள் என்று அறிவுரைக் கூறினார்கள். தமது மகன் புகழப்படுவதைவிட தூய்மையான மார்க்கம் கலங்கப்படுத்தப்படாமல் இருப்பதே மிகமுக்கியம் என்பதை தமது நடைவடிக்கையின் வாயிலாக தெளிவுபடுத்துகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்றைய தினத்தில் (நபியவர்களின்  புதல்வர்) இப்ராஹீம் (ர-) இறந்தார்.  இதையொட்டி மக்கள்  "இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற்பட்டது'' என்று பேசிக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகüல் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் (பிரகாசம் வரும்வரை) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஅபா (ர-)
நூல் : புஹாரி (1043)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) :

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் மனைவியர் உங்களிடம் பள்ளி வாசல்களுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்' என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்'' என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலிலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (என் சகோதரர்) பிலால் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் "அல்லாஹ் வின் மீதாணையாக! நாங்கள் அவர்களைத் தடுப்போம்'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலிலி) அவர்கள் (தம் புதல்வர்) பிலால் பின் அப்தில்லாஹ்வை நோக்கி மிகக் கடுமையாக ஏசினார்கள். அதைப் போன்று அவர்கள் ஏசியதை நான் கேட்டதே இல்லை. பிறகு அவர்கள், "நான்  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை உனக்கு அறிவிக்கிறேன். ஆனால், நீயோ "அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை நாங்கள் தடுப்போம்' என்று கூறுகிறாயே?'' என்றார்கள்.
அறிவிப்பவர் :  சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்)   நூல் : முஸ்லிம் (667)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அங்கீகாரத்தை மீறி செயல்படுவோம் என்று தமது மகன் கருத்துதெரிவித்ததுமே கடுமையாக ஆவேசமடைந்தார்கள், அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள். மேலும் மார்க்கத்தின் அனுமதியை மறுத்துபேசுவது தமது மகன் தானே என்று  அமைதியாக இருந்துவிடாமல் அடுத்த கணமே இதுவரை இல்லாத அளவிற்கு அவர்களை ஆக்ரோஷமாகக் கண்டிக்கின்றார்கள். காரணம், தவறான நிலைபாட்டினை கொண்டிருக்கின்ற தமது மகனிடம் பரிவுகாட்டுவதை விட நபி (ஸல்) அவர்களுடைய போதனையை நிலைநாட்டுவதுதான் முக்கியம் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

சஅத் பின் அபீவக்காஸ்(ரலி) :

முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் - ரலிலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகüன் இடுக்கில் வைத்துக்கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்துகொண்டிருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக்கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்'' என்று கூறினார்கள்.
நூல் : புஹாரி (790)

            திருத்தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைக்கு மாற்றமாக தமது மகன் தொழதபோது அத்தவறைத் தடுத்துநிறுத்தினார்கள், சஅத் பின் அபிவக்காஸ் (ரலி) அவர்கள். தமது மகன் எப்படித் தொழுதால் நமக்கு என்ன ? என்று தவறைப் பார்த்தும் பார்க்காதவரைப் போன்று இருந்துவிடாமல் அதைத் திருத்தித்தந்து சட்டம் மாற்றப்பட்டதை எடுத்துரைக்கின்றார்கள்.

இனியாவது, தங்களது வாரிசுகள் வருங்காலத்தில்  வசதிவாய்ப்போடு இருக்கவேண்டும் என்பதற்காக ஹராமான வழிகளில் வருமானத்தைத் திரட்டுபவர்களும்அவர்கள் மார்க்கச் சட்டதிட்டங்களைக் கடைபிடிப்பதில் தவறிழைத்தால் அவற்றைக் கண்டுகொள்ளமல் இருப்பவர்களும், தமது மகன் மற்றும் மகளுடைய மனம் கலங்கிவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் அழைப்பை ஏற்று கத்தம் பாத்திஹா, மவ்லூது, கந்தூரிவிழா, அவ்லியாக்களுக்கு செலுத்துகின்ற நேர்ச்சை விருந்துபதுமனை புகுவிழா, பேரனின் கத்னாவிருந்து போன்ற மார்க்கத்திற்கு எதிரான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களும் தங்களைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

மார்க்கமா? மனைவியா?

மனைவியிடம் சிறந்தவரே மக்களில் சிறந்தவராவார். மனைவி என்பவள் வளைந்த விலா எலும்பைப் போன்றவள். எனவே கணவன், அவளிடம் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். எதற்காகவும் அவளை வெறுக்கக் கூடாது. அவளிடமிருந்து ஏதாவதொரு பண்பினை வெறுத்தால் அவளிடமுள்ள மற்றொரு நல்லபண்பினை நினைத்துப் பொருத்துக் கொள்ளவேண்டும். அவள் தவறிழைத்தால் இல்லத்திலே தவிர வெளியில் மற்றவர்களின் முன்னிலையில் அவளை கண்டிக்கக் கூடாது. மனைவிக்குரிய தேவைகளை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். மனைவிமார்களிடத்தில் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் ஒரு கணவன் தமது மனைவியிடத்தில் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை இஸ்லாம் அழகியமுறையில் வரையறுத்து கூறுகின்றது.
அதேசமயம் ''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'' என்று வர்ணித்துக்கொண்டு, மனைவியின்  மார்க்கத்திற்கு விரோதமான வரம்புமீறிய காரியங்களை கைகுலுக்கி வரவேற்பதை வன்மையாகக் கண்டிக்கின்றது, இஸ்லாமிய மார்க்கம். வாழ்க்கைதுணைவி என்பவள் நரகநெருப்பிற்குரிய காரியங்களின் பக்கம் வழிகாட்டக்கூடியவளாக இருந்துவிடாத வண்ணம் நாம் கவனமாக இருக்கவேண்டும். ஆதலால் தான் அல்லாஹ் அருள்மறையில் இவ்வாறு எச்சரிக்கின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்க ளுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்
  ( அல்குர்ஆன் 64 : 14 )

இறைத்தூதர்களுடைய மனைவிமார்களாக இருந்தாலும் அவர்கள் இறைமறுப்பு அல்லது இணைவைப்புக் காரியங்களில் அங்கம் வகித்தார்கள் என்றால் அவர்களும் குற்றவாளிகள் தான். அவர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்  தான். ஆகவேதான்  இறைமறுப்பாளர்களுக்கு எதிராக கடுமையான இறைவேதனை வந்திறங்கியபோது இறைத்தூதர்கள் இறைநிராகரிப்பிலே இருக்கின்ற தங்களது மனைவிமார்களை தங்களுடன் அழைத்துச்செல்லவில்லை. அதற்கு அல்லாஹ்வும் அனுமதி அளிக்கவில்லை. இதை பின்வருகின்ற வசனங்களின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

நூஹடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியாக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருஹ்ரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது .
( அல்குர்ஆன் 66 : 10 )

எனவே அவரது (லூத்துடைய) மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும், அவரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக இருந்தாள். அவர்களுக்கு பெரு மழையைப் பொழிவித்தோம். "குற்றவாளிகளின் முடிவு எவ்வாறு இருந்தது?' என்பதைக் கவனிப்பீராக!
( அல்குர்ஆன் 7 : 83, 84 )

இறைத்தூதர்களாக இருப்பினும் அவர்களுக்கு சத்திய கொள்கையா? வாழ்க்கைத் துணைவியா? என்ற தடுமாற்றமான நிலை தென்படும்போது அவர்கள் கொள்கைக்குதான் முக்கியத்துவம் வழங்கவேண்டும். நூஹ் (அலை) மற்றும் லூத் (அலை) அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து இது வெட்ட வெளிச்சமாகின்றது. எனவே மனைவியின் விருப்பத்திற்கு தலையசைத்துக் கொண்டு மார்க்கத்தின் விதிமுறைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிடக்கூடாது என்ற படிப்பினையை நாம் பெற்றுகொள்ள வேண்டும். இன்னும் இப்படிப்பினை இன்றியமையாதது என்பதை இறுதித்தூதர்(ஸல்) அவர்களுடைய செயல்பாடுகளும் , அவர்களின் அடிச்சுவடுகளை அழகியமுறையில் பின்பற்றி நடந்த நபித்தோழர்களின் செயல்பாடுகளும் நமக்கு புரியவைக்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட தமக்கு பிடித்தமான உணவை தமது மனைவியின் விருப்பத்திற்காக தனக்குத்தானே தடைசெய்துகொள்கின்றார்கள். இச்செயல் அல்லாஹ் அனுமதித்ததைத் தடைசெய்கின்ற அம்சத்தை உள்ளடக்கிய குற்றமாக இருப்பதால், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அருள்மறையின் (66 : 1) வசனத்தின் மூலம் எச்சரிக்கப்பட்டார்கள். அவ்வசனம் மற்றும் அது இறக்கப்பட்ட பிண்ணனியைக் காண்போம்.

நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப் பவன்; நிகரற்ற அன்புடையோன்.
( அல்குர்ஆன் 66 : 1 )

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர-) அவர்கüடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள் முத-ல் வருவார்களோ அவர், நபி (ஸல்) அவர்கüடம் "கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்கüடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே'' என்று கூறிட வேண்டும்.
(வழக்கம் போல் ஸைனபின் வீட்டி-ருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், "இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒருபோதும் அதைக் குடிக்கமாட்டேன்; நான் சத்தியமும் செய்து விட்டேன்'' என்று கூறிவிட்டு, "இது குறித்து எவரிடமும் தெரிவித்துவிடாதே!'' என்றும் கூறினார்கள். (இது குறித்தே மேற்கண்ட (66:1) ஆவது இறைவசனம் அருளப்பெற்றது.)
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : புஹாரி (4912)

ஆகவே மார்க்கத்தின் மணிமொழிகளா? மனைவியின் கோணல் காரியங்களா? இவ்விரண்டில் எதற்கு முக்கியத்துவமளிப்பது ? என்ற இக்கட்டான சூழ்நிலையை நம்பிக்கையாளர்கள் எதிர்நோக்கினால், அவர்கள் மார்க்கத்திற்கே முழுமையாக சரணடைந்துவிட வேண்டும். மனைவியின் வழிதவறலை வெறுப்பதோடு அவளுக்கு மார்க்கத்தின் சட்டதிட்டங்களை எடுத்துச்சொல்ல வேண்டும். இவ்வாறு தான்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவிமார்களிடத்தில் நடந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது. நபி (ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்து விட்டு) இரு கதவுகளுக்கிடையே நின்று கொண்டார்கள். அவர்களுடைய முகம் (கோபத்தால் நிறம்) மாறத் தொடங்கியது. நான், "நாங்கள் என்ன (தவறு) செய்து விட்டோம்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என்ன இந்தத் தலையணையில்?'' என்று (கோபமாகக்) கேட்டார்கள். நான், "இது, நீங்கள் (தலை வைத்துப்) படுத்துக் கொள்வதற்காக தங்களுக்கென நான் தயாரித்த தலையணை'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "உருவப் படம் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதும், உருவப் படத்தைச் செய்தவன் மறுமை நாüல் வேதனை செய்யப் படுவான் என்பதும் அப்போது அல்லாஹ் (உருவப் படத்தைச் செய்தவர்களை நோக்கி), "நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்' என்று சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா?'' என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : புஹாரி (3224)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிலிருந்து (தபூக் அல்லது கைபரி-ருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த எனது திரைச் சீலையொன்றால் நான் எனது அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, "மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்'' என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம்.
                                                     அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)நூல் : புஹாரி (5954)

தமது மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் மதிப்பளிக்கின்ற விதத்தில் பொறிக்கப்பட்ட உருவத்தாலான திரைச்சீலை மற்றும் தலையணையை வைத்திருந்ததை பார்த்தபோது அதைப் பொருட்படுத்தாமல் இருந்துவிடவில்லை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அத்திரைச்சீலையை வைத்திருப்பது தமது அன்புமனைவியாக இருந்தாலும் அதை ஆமோதிக்காமல் கிழித்தெறிந்தார்கள். மேலும் மார்க்கத்திற்கு புறம்பான அச்செயலைக் கண்டு வெறுத்ததோடு, தமது துணைவியாருக்கு மார்க்கத்தின் யதார்தத்தை எடுத்துரைத்தார்கள். இதைப் போன்றே மற்றொரு நிகழ்வும் நடந்தது.

அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்களின் துனைவியரான ஆயிஷா (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்த போது எனது கைகளில் வெள்ளி மோதிரங்கள் இருப்பதைக் கண்டு ஆயிஷாவே இதுவென்ன? என்று கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே உங்களுக்கு முன்னால் நான் அலங்காரத்துடன் காட்சி தருவதற்காக இவற்றை செய்துள்ளேன் என்று கூறினேன். இவற்றுக்கான ஸகாத்தை நிறைவேற்றிவிட்டாயா? என்று கேட்டார்கள். அதற்கு நான் இல்லை என்றோ அல்லது அல்லாஹ் (இன்னும்) நாடவில்லை என்றோ கூறினேன். நரகத்திற்கு(ச் செல்ல) இதுவே உனக்குப் போதுமானதாகும் என்று கூறினார்கள்.
                                                                                                            நூல் : அபூதாவுத் (1338)

முஸ்லிம்கள் நிறைவேற்றவேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்று ஜகாத் ஆகும். தமது மனைவி தம்மிடமுள்ள வெள்ளி மோதிரத்துக்கான ஜகாத்தினை செலுத்தவில்லை என்பதை அவரிடம் கேள்வியைத் தொடுத்துத் தெரிந்துகொண்டார்கள்நபி(ஸல்) அவர்கள். அதையறிந்த அடுத்தநிமிடமே அவருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றார்கள்.
தங்களுடைய மனைவிமார்கள் தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை கண்ணும் கருத்துமாக சரியான முறையில் நிறைவேற்றுகின்றார்களா? என்பதை அறிந்து கொள்வதற்கு முற்படாமலும், அவர்கள் அக்கடமைகளை நிறைவேற்றாமல் அலட்சியமாக இருந்தால் அவர்களிடத்தில் அதன் அவசியத்தை சொல்லி  அழகியமுறையில் அழைப்புபணி செய்யாமல் இருப்பவர்களும் முன்சென்ற சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.  

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-) :

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-) அவர்கள், "பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?'' என்று கூறினார்கள். இந்தச் செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, "உம்மு யஅகூப்' எனப்படும் ஓரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-) அவர்கüடம் வந்து, "இப்படிப் பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், "(குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பட்டதை நான் அதில் காணவில்லையே!'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். "இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கின்றாரோ அதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்'' எனும் (59:7ஆவது) வசனத்தை நீ ஓதவில்லையா?'' என்று கேட்டார்கள். அந்தப் பெண், "ஆம் (ஓதினேன்)'' என்று பதிலüத்தார். அப்துல்லாஹ் (ர-) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்'' என்று சொன்னார்கள்.
அந்தப் பெண்மணி, "உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக நான் கருதுகிறேன்'' என்று கூறினார். அப்துல்லாஹ் (ர-) அவர்கள், "சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!'' என்று கூறினார்கள். ஆகவே அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-) அவர்கள், "என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால்அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்கமா பின் கைஸ் (ரஹ்) நூல் : புஹாரி (4886)

மார்க்கத்திலே வெறுக்கப்பட்ட தடுக்கப்பட்ட காரியத்தை  மனைவி செய்தாலும் அக்காரியத்தை விட்டு வெறுத்து விலகிநிற்கவேண்டும்.  இந்த நிலைபாட்டில் தான் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள்  இருந்தார்கள் என்பதை ''அவளுடன் சோந்து வாழமாட்டேன்'' என்ற அவர்களுடைய ஆக்ரோஷமான அதிரடியான அறிவிப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) :
மார்க்கத்தின் அடிப்படையில் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்தவர்கள் தங்களுக்குள் திருமணத்தை செய்துகொள்ள முடியாது. ஏனெனில் அப்பால்குடியின் மூலம் அவர்களுக்குள் சகோதர உறவு ஏற்பட்டுவிட்டது. இதனடிப்படையில் தாம் மணமுடித்திருக்கின்ற பெண், தமக்கு பால்குடி சகோதரியாக இருப்பதால் அத்திருமண ஒப்பந்தம் செல்லாது என்பதை அறிந்ததுமே அப்பெண்ணை விட்டு விலகிவிடுகின்றார்கள் உக்பா (ரலி) அவர்கள். பலவிதமான கனவுகளோடு ஆசையாகப் பார்த்து மணமுடித்துக் கொண்ட மனைவியா? மார்க்கக் கட்டளையா? என்ற நிலையை  சந்தித்தபோது, தமது கனவுகள் நிராசையானலும் பரவாயில்லை என்று மார்க்கத்தின் சட்டத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டார்கள்

நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்துகொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து "நான், உக்பாவுக்கும் நீ மணந்துகொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன்' (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நான் "நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்டபோது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே!'' என்று கேட்டேன்.
 ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபி (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுப் போன பிறகு எப்படி (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?'' என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்துவிட்டேன். அந்த பெண்ணும் வேறொரு கணவனை மணந்துகொண்டாள்.
அறிவிப்பவர் : உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலிலி)
நூல் : புஹாரி ( 88 )

 இன்றைய கணவன்மார்களின் நிலையோ மிகவும் கவலைக்கிடமாக  இருக்கின்றது. ''தமது மனைவியின் மனதைக் குளுமைப்படுத்தவேண்டும். அவள் பொழிகின்ற அன்புமழையில் சிலிர்த்துபோக வேண்டும்'' என்று ஆசைப்பட்டு அவளுக்காக மார்க்கத்தின் எச்சரிக்கை மீறி, காசுபணத்தை குறுக்குவழியில் சம்பாதிக்க கூடிய கணவன்மார்கள் கனிசமாக இருக்கின்றார்கள். அதுமட்டுமின்றி மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை மற்றவர்கள் செய்கின்றபோது எதிர்த்துக் குரல்கொடுப்பவர்களில் பலர், அதே காரியங்களைத் தங்களது மனைவிமார்கள் செய்தால் கண்டிக்காமல் பூனைப்போல  பதுங்கிக்கொள்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால், தங்களது வாழ்க்கைத்துணைவியரின் கருத்தை வேதவாக்காக கருதிக்கொண்டு பெற்றோரை  ஆதரிக்காமல் இருப்பது, உடன்பிறந்தவர்களை ஒதுக்கித்தள்ளுவது, ன்னதான முறையில் வைத்திருந்த தாடியை மழித்துவிடுவது, அவளுக்கு திரைப்பட கேசட்டுகளை வாங்கித்தருவது போன்ற காரியங்களை செய்பவர்களும் இருக்கின்றார்கள். இத்தகையவர்கள் இனியாவது  தங்களை மாற்றிக்கொள்ள முன்வருவார்களா?

மார்க்கமா? கணவனா?

''ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு சிரம்பணியலாம் என்று நான் கட்டளையிடுவதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து, எந்தளவிற்கு மனைவி தமது கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. தவிர, கணவனுடைய குழந்தைகள் மற்றும் சொத்துகளுக்கு மனைவியே பொறுப்பாளியாவாள். கணவன் ஊரில் இருக்கும் போது அவனுடைய அனுமதியின்றி மனைவி உபரியான நோன்பை கடைபிடிக்கக் கூடாது என்றும் மார்க்கத்திலே கட்டளையிடப்பட்டுள்ளது. என்றாலும் கணவன் மார்க்கத்திற்கு விரோதமான காரியங்களை செய்கின்றபோது அல்லது செய்யத் தூண்டுகின்ற போது மனைவி அவனுக்கு கட்டுப்படக் கூடாது. ''கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்'' என்று பழங்கதையைப் பேசிக் கொண்டு கணவனின் வரம்பு மீறிய காரியங்களுக்கு ஆதரவாக இருந்துவிடக் கூடாது என்றும் மார்க்கத்திலே எடுத்துறைக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இம்மையிலே யாருக்காக மனைவி என்பவள் மார்க்கத்தின் மகிமையை மறந்து குற்றவாளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாளோ அந்த கணவனால் அவளை  அந்தத் தவிர்க்கமுடியாத தீர்ப்புநாளின் திடுக்கத்தில் இருந்து தப்பிக்கவைக்கவே முடியாது. மாறாக அவன் தனது தண்டனையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தமது மனைவியை பணயமாக வைப்பதற்கு துடித்துகொண்டிருப்பான்.

அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதர னையும், தனது தாயையும், தனது தந்தை யையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.
( அல்குர்ஆன் 80 :36 )

அவர்கள் ஒருவருக் கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனை யும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.
( அல்குர்ஆன் 70 : 12 ).

ஆதலால், தறிகெட்டு தடம்புரண்டு வாழ்கின்ற கணவணின் கயமைத்தனமா? மார்க்கத்தின் தனித்தன்மையா? என்ற நிலையை சந்திக்கின்ற போது மனைவியாக இருக்கக்கூடியவள் மார்க்கத்தையே தேர்வுசெய்துகொள்ள வேண்டும். இவ்வாறு இருக்க முடியுமா? இதற்கு முன்னால் யாராவது இப்படி இருந்தார்களா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதிலாக குர்ஆனில் ஒருநல்லடியாருடைய வாழ்க்கையை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

ஃபிர்அவ்னின் மனைவி :

ஃபிர்அவன், தன்னைத் தானே கடவுள் என்று மக்களிடத்திலே பிரகடனப்படுத்திவிட்டு அடாவடித்தனம் செய்து கொண்டிருந்தான். தன்னை ஏற்க மறுப்பவர்களை மாறுகால் மாறுகை வாங்கி கொலை செய்கின்ற கொடூரனாகவும் அலைந்துகொண்டிருந்தான். இந்நேரத்தில் இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள் முன்வைக்கின்ற செய்திகள்தான் மெய்யானவை என்பதை தெரிந்துகொண்ட ஃபிர்அவ்னின் மனைவியான ஆசியா (அலை) அவர்கள், எவ்விதமான தயக்கமுமின்றி சத்தியக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறார்கள். தனிமனிதவழிபாட்டை முழங்கிக்கொண்டிருக்கின்ற தமது கணவனைவிட ஏகஇறைவனுக்கு அடிபணிந்து வாழ்வதே முக்கியம் என்று ஓரிறைப்பாதையில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்கள். தவிர, தமது கணவன் மற்றும் அவனுடைய அடியாட்களின் அராஜகத்தை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடினார்கள். இதோ இவர்களைப் பற்றி அருள்மறையில் அல்லாஹ் கூறியுள்ளான்.

என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை  எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்தரவதையிலிருந்தும் என்னை காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக! என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.
( அல்குர்ஆன் 66 : 11 )
           

அம்ரா பின்த் ரவாஹா(ரலி) :

நுஃமான் பின் பஷீர் (ர-) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, "என் தந்தை அன்பüப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார்.  என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ர-) அவர்கள் என் தந்தையிடம், "நீங்கள் இதற்கு அல்லாஹ் வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ளவேமாட்டேன்'' என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே!  நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பüப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, "இல்லை'' என்று பதிலüத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகüடையே நீதி செலுத்துங்கள்'' என்று கூறினார்கள்.  இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பüப்பை ரத்து செய்தார்.
அறிவிப்பவர் : ஆமிர் பின் ஷர்ஹபீல்  (ரஹ்)
நூல் : புஹாரி (2587)

  குழந்தைகளிடத்தில் பராபட்சம் காட்டுகின்ற விதத்தில் தமது கணவன் தன் மூலம் பிறந்த பிள்ளைக்கு மட்டும் அன்பளிப்பு வழங்கும் போது, அக்காரியத்தை எதிர்த்து நின்றார்கள் அம்ரா பின்த் ரவாஹா(ரலி) அவர்கள். கணவன்மார்கள், மார்க்கத்தின் போதனைகளுக்கு எதிராக எக்காரியத்தை செய்தாலும் எதிர்த்து எந்தவொரு கேள்வியும் எழுப்பக் கூடாது என்ற நிலைபாட்டில் இருக்கின்ற இன்றையப் பெண்களைப் போன்று, அவர்கள் அத்தவறை கண்டும் காணாததுபோல அமைதியாக இருந்துவிடவில்லை.

உமர் (ரலி) யின் மனைவி :
உமர் (ர-) அவர்கüன் மனைவியரில் (ஆத்திகா எனும்) ஒருவர் சுப்ஹு, இஷா ஆகியத் தொழுகையைப் பள்üயில் ஜமாஅத்தில் தொழச் செல்வார். அவரிடம், "(உங்கள் கணவர்) உமர் (ரலிலி) அவர்கள் இ(வ்வாறு செல்வ)தை வெறுக்கிறார்கள்; ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந்தும் நீங்கள் ஏன் (பள்üக்குச்) செல்கிறீர்கள்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "(என்னைப் பள்üக்குச் செல்ல வேண்டாமென்று கூறவிடாமல்) அவரை எது தடுக்கிறது?'' என்று கேட்க, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பெண்கள் பள்üவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள் என்று கூறியதே உமர் (ர-) அவர்களைத் தடுக்கிறது'' என்று பதில் வந்தது.
அறிவிப்பவர் : இப்னு உன்ர்(ரலி)
நூல் : புஹாரி (900)

பெண்கள், பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்திலே எந்தவொரு தடையும் இல்லை. தான் பள்ளிக்குச் சென்றுவருவதைத் தனது கணவன் வெறுத்தபோதிலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  அனுமதியளித்த இக்காரியத்தை நடைமுறைப்படுத்துவதை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள் உமர் (ரலி) அவர்களின் மனைவி. ''கணவருக்குக் கட்டுப்படுகிறோம்; அவருக்குப் பணிவிடை செய்கின்றோம்'' என்ற பெயரில் தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைக் கூட  கடைபிடிக்காமல் முடங்கி இருக்கக் கூடிய மனைவிமார்கள் இச்சம்பவத்திலிருந்து படிப்பினைப் பெறவேண்டும்.

ஒட்டுமுடி வைப்பது கூடாது :

அன்சாரிகüல் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகüன் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவள் நபி (ஸல்) அவர்கüடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, "என் கணவர், எனது தலையில் ஒட்டுமுடி வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார்'' என்று கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேண்டாம்! (ஒட்டுமுடி வைக்காதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : புஹாரி (5205)
கணவனாக இருந்தாலும் சரி அல்லது யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மார்க்கத்திலே சபிக்கப்பட்ட தடுக்கப்பட்ட காரியங்களை  ஏவினால் எக்காரணத்தைக் கொண்டும் தயைôட்டிபொம்மை போல அவற்றை செயல்படுத்தத் தயாராகிவிடக்கூடாது. பரிசுத்தமான கொள்கையைப் பலிகொடுத்தாவது மனைவி என்பவள் தனது கணவனுக்குப் பணிந்துவாழ வேண்டும் என்ற சித்தாந்தம் இஸ்லாத்தில் இல்லை என்பதை இச்சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகின்றார்கள்.
இந்த அடிப்படையை அறியாததால் தான், தமது பிள்ளைக்கு உடல்நிûல் சரியில்லாத போது, கணவனின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பிள்ளையை தர்காவிற்கு தூக்கிச்செல்லக்கூடிய மற்றும் தாயத்துதகடு என்று தேடிச்செல்கின்ற மனைவிமார்கள் காணப்படுகின்றார்கள். மேலும் தமது கணவன், ஹராமான தொழில் செய்தால் என்ன? அடுத்தவரின் பணத்தை அபகரித்தால் என்ன? மோசடி செய்தால் என்ன? தமக்கு  விதவிதமான பட்டுச்சேலைகள், தங்கநகைகள் மற்றும் அழகுசாதனங்களை  வாங்கிக்கொடுத்தால் போதும் என்று ஆடம்பர வாழ்வதற்காக தமது கணவனின் அக்கிரமங்களை ஆமோதிக்கக்கூடியவர்கள் இருக்கின்றார்கள்..


மார்க்கமா? உடன்பிறப்புகளா?
 குடும்ப அங்கத்தில் பொங்கியெழுகின்ற பாசத்தைப் பறிமாறிக்கொள்வதற்காக இருக்கின்ற மற்றொரு பந்தம் உடன்பிறந்தவர்கள். ஒரு முஃமின் அனைத்துவிஷயத்திலும் தமக்கு நல்லதையே விரும்புவதை போன்று தமது சகோதர சகோதரிகளுக்கும் நல்லதையே விரும்ப வேண்டும். இது உலகவிஷயங்களில் மட்டுமல்ல, மார்க்கத்தை சீரியமுறையில் அறிந்து அதன்படி  செயல்படுகின்ற விஷயத்திலும் தான். அதேசமயத்தில் சகோதர பாசம் என்ற சாயத்தைப் பூசிக்கொண்டுதனது சகோதரனுடைய மோசமான மோசடியான செயல்பாடுகள் சரியானது தான் என்று வாதிடுவதற்கு வரிந்துகட்டி நிற்கக் கூடாது. தன்மீது உடன்பிறந்தவர்களின் நேசத்தை பாசத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக கொள்கையை குழிதோண்டிப் புதைப்பவர்களாகவும் புறப்பட்டுவிடக்கூடாது. இதைப் பின்வருகின்ற வசனங்களின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காணமாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களை சொர்க்கச் சோலை களில் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.
(அல்குர்ஆன் 58 : 22 )

"உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகிவிட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன்  9 : 24 )

மற்றவர்கள் மட்டுமல்ல. மார்க்கத்தின் உயிரோட்டமான சட்டதிட்டங்களுக்கு உடன்பட்டுவாழ மறுப்பவர்களாக நமது உடன்பிறந்தவர்கள் இருந்தாலும், அவர்களின் தட்டழிகின்ற காரியங்களுக்கு தூணாக நாம் இருந்துவிடக்கூடாது. அப்போது தான் நாம் முழுமையான முறையில் இறைநம்பிக்கைக் கொண்டவர்களாக இருக்கமுடியும். தவிர, தீர்ப்புநாளிலே அவர்களால் நம்மை இறைவேதனையின் கடுமையான பிடியிலிருந்து துரும்பளவும் காப்பாற்ற முடியாது. மாறாக அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கே இயலாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். அந்நாளில் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருப்பார்கள். இதோ அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தை யையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.
                       (அல்குர்ஆன் 80 : 33 - 36)

ஆகவே அண்ணன், தம்பி, அக்கா மற்றும் தங்கை போன்றவர்கள் மார்க்கத்தின் எல்லையை கடந்துசெல்கின்றபோது அவர்களுக்காக பக்கபலமாக நிற்பவர்கள், இதற்கு பிறகாவது தங்களின் தவறை உணர்ந்து. அவர்களுடைய அநீதங்களுக்கு அடைக்கலம் அளிக்காமல் அகன்றிருக்கவேண்டும்.

மார்க்கமா? உறவினர்களா?
உறவினர்களை அரவணைத்து வாழவேண்டும். அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். தமக்கு வாழ்வாதாரம் அதிகமாக வழங்கப்படவேண்டும் தமது ஆயுள்காலம் அதிகரிக்கக்கபட வேண்டும் என்று ஆசைப்படுபவர், தமது உறவினரை இணைத்து வாழட்டும். உறவைத் துண்டித்து வாழ்பவர் சொர்கத்த்தில் நுழையவேமுடியாது. உறவினரை இணைத்து வாழ்தல் என்பது நரகத்திலிருந்து விடுவித்து சொர்க்கத்தில் நுழையவைக்கின்ற செயல்களில் உள்ளதாகும் என்றெல்லாம் மார்க்கத்திலே மொழியப்பட்டுள்ளது. அதேசமயம், அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வார்த்தைகளை உறவினர்கள் உதாசினப்படுத்தும்போது ''உறவினர்களுடன் ஒன்றிணைந்து வாழ்கின்றோம்''  என்று பசப்பிக்கொண்டு அவர்களுடன் அந்த பாவமான காரியங்களில் பங்கெடுத்துகொள்ள கூடாது. மார்க்கமா? உறவினர்களா? என்ற நிலையில் சத்தியமார்க்கத்தின் மாண்பினைப் பாதுகாப்பவர்களாகவே இருக்க வேண்டும். இவ்வாறுதான் இறைமறையில் இறைவன் உத்தரவு பிறப்பித்துள்ளான்.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
(அல்குர்ஆன் 9 : 113)

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்!
(அல்குர்ஆன் 4 : 135)
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி அவர் மரண சாசனம் செய்தால் உங்களைச் சேர்ந்த நேர்மையான இருவர் அதற்குச் சாட்சியாக இருக்க வேண்டும். நீங்கள் பூமியில் பயணம் மேற்கொண்டிருக்கும் போது மரணம் எனும் துன்பம் உங்களுக்கு ஏற்பட்டால் உங்களைச் சேராத இருவராக இருக்கலாம். நீங்கள் (அவர்களைச்) சந்தேகப்பட்டால் தொழுகைக்குப் பின் அவ்விருவரையும் தடுத்து வைத்துக் கொள்ளவும்! "இதனை (சாட்சியத்தை) விலை பேச மாட்டோம். நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே. அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவும் மாட்டோம். அப்போது நாங்கள் குற்றவாளிகளாவோம்'' என்று அல்லாஹ்வின் மீது அவ்விருவரும் சத்தியம் செய்ய வேண்டும்.
( அல்குர்ஆன் 5 : 106)
 
இறைநம்பிக்கையாளர்கள், தங்களது உறவினர்களுக்காக நீதியை வளைக்கக் கூடாது. அவர்களுக்கு சாதகமாகப் பொய்சாட்சி சொல்லக்கூடாது. அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கின்ற பட்சத்தில் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதற்கு அனுமதியில்லை என்று மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளான். இந்த மூன்று விஷயங்களில் மட்டுமல்ல, மார்க்கத்தின் எந்தவொரு கட்டளையையும் மீறுகின்ற விதத்தில் உறவினர்களுக்கு உபகாரம்செய்பவர்களாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் தீர்ப்பு நாளில் அவர்களால் நமக்கு எந்தவொரு பயனையும் பாதுகாப்பையும் தரவே முடியாது. இதை அல்லாஹ் திருமறையில் தெளிவுபடுத்தியுள்ளான்.

கியாமத் நாளில் உங்களின் உறவினரும், உங்கள் சந்ததிகளும் உங்களுக்குப் பயன் தரவே மாட்டார்கள். உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிப் பான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 60 : 3)

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். கனத்தவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது. தனிமையில் இருக்கும் போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலை நாட்டி யோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ் விடமே திரும்புதல் உள்ளது.
அல்குர்ஆன் 35 : 18)
ஒவ்வொரு முஸ்லிமுடைய வாழ்விலும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்ற தன்னலமற்றத் தன்மை காலமெல்லாம் தழைத்திருக்கவேண்டும். மக்கள் அரங்கத்தில் மார்க்கக் கருத்துக்களைக் கூடுதல் குறைவின்றி முன்ûவ்க்கவேண்டும். இப்பணியைத் தொடருகின்ற போது, உறவினர்கள் நம்மை விமர்சிப்பார்கள்; எதிர்ப்பார்கள் என்று நினைத்து நடுங்கிக் கொண்டு அவசியமான அப்பணியைவிட்டு பின்வாங்கிவிடக்கூடாது. அவர்கள் மூலம்  பல்வேறான பிரச்சனைகள் தொடர்ச்சியாகப் படையெடுத்து வந்தாலும் தயவுதாட்சனையின்றி சத்தியத்தைத் தெளிவுபடுத்தவேண்டும். இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை இருந்தது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் :

அல்லாஹ் "(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை எச்சரியுங்கள்'' எனும் (26:214ஆவது) வசனத்தை அருüய போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, "குறைஷிக் கூட்டத்தாரே!' அல்லது "இது போன்ற ஒரு வார்த்தையைக்' கூறியழைத்து, "உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கிக் (காப்பாற்றிக்)கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்றவியலாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்த-பின் புதல்வரான (என் பெரிய தந்தை) அப்பாஸ் அவர்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும்  என்னால் காப்பாற்ற இயலாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபியாவே! உங்களை அல்லாஹ்விட மிருந்து ஒரு சிறிதும் என்னால் கப்பாற்ற முடியாது. முஹம்மதின் புதல்வியான ஃபாத்திமாவே! என் செல்வத்தி-ருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! (தருகிறேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் :  அபூ ஹுரைரா (ர-)
நூல் : புஹாரி (4770)

பத்ரும் படிப்பினையும் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நம்பிக்கையாளர்களுக்கும், நிராகரிப்பாளர்களுக்கும் இடையே நேருக்குநேர் நிகழ்ந்த மிகவும் முக்கியமான போர், பத்ரு போர் ஆகும். ஏனெனில் இந்தபோரில் கலந்துகொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை காஃபிர்களின் எண்ணிக்கையை விட மிகவும் குறைவாக இருந்தது. இன்னும் அவர்களிடம் இருந்ததை விட குறைவான போர்தளவாடங்கள் ஆயுதங்கள் மற்றும் போர்குதிரைகளைதான் முஸ்லிம்கள் வைத்திருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் போரில் முஃமின்களுக்கு உறுதுணையாக இருந்து போர்புரிவதற்காக வானவர்களை அனுப்பிவைத்து அல்லாஹ் உதவிபுரிந்தான். இப்போரில் மக்கத்து முஷ்ரிக்குகளின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்.

 (முஸ்லிலிம்கள்) அன்றைய (பத்ருபோர்) தினத்தில் (இணைவைப்பாளர்களில்) எழுபது பேரைக் கொன்றனர்; எழுபது பேரைச் சிறைப்பிடித்தனர்.முஸ்லிலிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலிலி) அவர்களிடமும் உமர் (ரலிலி) அவர்களிடமும் "இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?'' என்று (ஆலோசனை) கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலிலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே. அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்'' என்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?'' என்று கேட்டார்கள்.
உமர் (ரலிலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர் கள்), அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்ற தன்று. மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் (ரலிலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்களை விடுவிக்க வேண்டாம்)'' என்று (ஆலோசனை) கூறினார்கள்.
உமர் (ரலிலி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் (ரலிலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலிலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!'' என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்துவிடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன். ஆனால், (இதோ) இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு அருகிலிருந்த ஓர் மரத்தைக் காட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், "பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது'' என்று தொடங்கி, "நீங்கள் அடைந்த போர்ச் சொல்வங்களை அனுமதிக்கப்பட்ட தூய்மையானவையாகவே (கருதி) உண்ணுங்கள்'' (8:67-69) என்பது வரை (மூன்று வசனங்களை) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்களை அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான்.
                                                அறிவிப்பவர் : உமர் (ரலிலி)
      நூல் : முஸ்லிம் (3621)
ஆரம்பகாலத்தில் சத்தியமார்க்கத்தை எதிர்த்து படைதிரட்டி வந்தவர்களை படுகொலை செய்யவேண்டும் என்று அல்லாஹ் ஆணை பிறப்பித்தான். பின்னாளில் சிறை பிடிக்கப்படும் போர்கைதிகளிடம் பிணையத் தொகையைப் பெற்றுக் கொண்டு அவர்களை விடுதலை செய்வதற்கு அல்லாஹ அனுமதியளித்தான். எனினும் இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் வேரறுப்பதற்காக அணிதிரண்டுவந்தவர்கள் இறைநம்பிக்கை யாளர்களின் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் அவர்கள் இறைவிரோதிகளாக தான் நடத்தப்பட்டார்கள் என்பதை தான். தவிர, கூடிக்குலவி வாழ்ந்த சொந்த பந்தங்களை விட கொள்கையே முக்கியம் என்பதுதான் அன்றைய ஸஹாபிய சமுதாயத்தின் நிலைபாடாக இருந்தது என்பதை எப்போதும் நாம் மறந்துவிடக்கூடாது.
ஆகவே தங்களை சொந்த பந்தங்கள் பகைத்துக்கொள்வார்கள் என்பதை திட்டவட்டமாக தெரிந்தபோதிலும் இறைக்கட்டளையை நிலைநாட்டுவதற்காக வீறுகொண்டு முழங்கிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களுக்காக உயிரையே தியாகம்செய்வதற்கு தயாராக இருந்த நபித்தோழர்களின் வாழ்விலிருந்து நாம் படிப்பினை கொள்ளவேண்டும். நெருங்கிய உறவினர்கள்  செய்கின்ற இணைவைப்பு மற்றும் பித்அத் நிறைந்த காரியங்களை தடுப்பதற்கு முற்பட்டால், அவர்கள் தங்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ள மாட்டார்கள். தங்களுடைய குடும்பரீதியான எந்தவொரு காரியத்திலும் பங்கெடுத்துகொள்ள மாட்டார்கள் என்று காரணத்தை கற்பித்துக் கொண்டு அவர்களின் அத்துமீறல்களை அனுமதிப்பவர்கள் இனியாவது தங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
மார்க்கமா? நண்பனா?

வீதியிலே விளையாடிக் கொண்டிருக்கின்ற சிறுவர்கள் முதல், வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருக்கின்ற முதியவர்கள் வரை அனைத்துத்தரப்பு வயதினருக்கும் நண்பர்கள் தோழர்கள் இருக்கின்றார்கள். பெற்றோரிடத்தில் சொல்லமுடியாத செய்திகளைக் கூட முதலில் நெருங்கிய நண்பர்களிடத்தில் தான் நாம் பகிர்ந்து கொள்கின்றோம். வளமான வாழ்க்கை விதிமுறைகளை வகுத்தளித்திருக்கின்ற இஸ்லாம், இந்த நட்பு என்ற பந்தத்திலும் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை விவரித்துள்ளது. அதனடிப்படையில், நம்முடைய நட்பு என்ற பிரமாண்டமான கோட்டை அதன் அஸ்திவாரம் முதல் முகடுவரை நன்மையான விஷயங்களின் மூலம் கட்டியெழுப்பப் பட்டதாக இருக்கவேண்டும். மார்க்கத்திலே அனுமதிக்கப்பட்ட அம்சங்களின் மூலம் அழகுபடுத்தப்பட்டதாக இருக்கவேண்டும். மாறாக ''துன்பத்தின் போது தோள் கொடுப்பான் தோழன். உயிர்காப்பான் உற்றநண்பன் என்று வசனம் பேசிக்கொண்டு மார்க்க நெறிமுறைகளை தகர்த்தெறிகின்ற காரியங்களில் நண்பர்களுடன் ஒன்றுபட்டுவிடக்கூடாது. தவிர, தான் பாவமான செயல்களைச் செய்யாமல் இருப்பதோடு, தமது தோழர்கள் இழைக்கின்ற பாவங்களுக்கும்  துளியளவும் துணைப்போகாமல்  இருக்க வேண்டும். ஏனெனில் நாமெல்லாம் இங்கு செய்கின்ற குற்றங்களுக்காக மறுமையில் பரிதவித்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில், பெற்றெடுத்த பெற்றோர்களே நம்மைக் காப்பாற்ற முடியாது எனும்போது நம்முடன் பாவத்தில் பங்கெடுத்துச் சுற்றிக்கொண்டிருந்த நண்பர்களால் மட்டும் காப்பாற்றிவிடமுடியுமா என்னஇதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான். (அல்குர்ஆன் 70 : 10 )

உற்ற நண்பர்களாக இருந்தோரில் (இறைவனை) அஞ்சி நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருந்தோரைத் தவிர (மற்றவர்கள்) அந்நாளில் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 43 : 63)

"உங்களை அகிலத்தின் இறைவனுக்கு சமமாக்கிய போது அல்லாஹ்வின் மீது ஆணையாக தெளிவான வழி கேட்டில் இருந்தோம்'' என்று அங்கே தர்க்கம் செய்து கொண்டே கூறுவார்கள். இந்தக் குற்றவாளிகளே எங்களை வழி கெடுத்தனர். எங்களுக்குப் பரிந்துரை செய்வோர் எவருமில்லை. உற்ற நண்பனும் இல்லை. உலகுக்குத் திரும்பிச் செல்லுதல் எங்களுக்கு இருக்குமானால் நம்பிக்கை கொள்வோம் (என்றும் கூறுவார்கள்).
(அல்குர்ஆன் 26 : 96 - 102)

எனவே நமது நண்பர்கள் மார்க்கத்தில் எச்சரிக்கப்பட்டுள்ள எந்தவொருக் காரியத்தையேனும் செய்வதற்காக நம்மை அழைத்தால் அல்லது மார்க்கத்திலுள்ள முக்கியமானதொரு வழிமுறையைக் கைவிடச்சொன்னால் அந்நேரத்தில் அவர்களின் வேண்டுகோளுக்கு நாம் கடுகளவும் சம்மதித்துவிடக்கூடாது. இவ்வாறு மார்க்கமா? நண்பனா? என்ற நிலை ஏற்படும் போதெல்லாம் மார்க்கத்திற்கு மட்டுமே முழுமையாக முக்கியத்துவம் தருபவர்களாகத் திகழவேண்டும். இந்த படிப்பினையை நபிகளாரின் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ளமுடிகின்றது.

வலதுபக்கத்திற்கே முன்னுரிமை :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, அருந்துவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். ஆகவே, அவர்களுக்காக நாங்கள் ஓர் ஆட்டின் பாலைக் கறந்தோம். பிறகு எனது இந்தக் கிணற்றிலிலிருந்து தண்ணீர் எடுத்து, அதில் கலந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்தினார்கள். அப்போது அபூபக்ர் (ரலிலி) அவர்கள் நபியவர்களின் இடப் பக்கத்திலும், உமர் (ரலிலி) அவர்கள் நபியவர்களின் முன் பக்கத்திலும், ஒரு கிராமவாசி நபியவர்களுக்கு வலப் பக்கத்திலும் இருந்தனர். அப்போது உமர் (ரலிலி) அவர்கள், "இதோ அபூபக்ர் (அவருக்கு மீதியுள்ள பாலைக் கொடுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!'' என்று (இடப் பக்கத்திலிருந்த) அபூபக்ர் (ரலிலி) அவர்களைக் காட்டிக் கூறினார்கள். எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலப் பக்கமிருந்த) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். அபூபக்ர் (ரலிலி) அவர்களுக்கும் உமர் (ரலிலி) அவர்களுக்கும் கொடுக்கவில்லை.
மேலும், "(பரிமாறும்போது முதலில்) வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்). வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமை யுடையவர்கள்). வலப் பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி)
நூல் : முஸ்லிம் (4127)

செருப்பணிதல், ஆடை அணிதல், உணவுப் பரிமாறுதல் உட்பட எந்தவொரு செயலையும் வலதுபுறத்தில் இருந்து துவங்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். இப்போதனைக்கு நேர்மாற்றமாக நடந்துகொள்ளவேண்டிய நிலைவந்தபோது தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்? அச்சமயத்தில் தம்மோடு நெருக்கமான தோழமை வைத்திருந்த அபூபக்ர் (ரலி) அவர்களுக்குக் கூட பாலை கொடுக்காமல், வலதுபுறத்தில்  இருந்த கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். அதுபோல மற்றொரு தோழரான உமர் (ரலி) அவர்களின் வேண்டுதலை புறக்கணித்தது மட்டுமின்றி அவர்களுக்கும் அந்தப் பாலை தரவில்லை. தம்மை பின்பற்றுகின்ற மக்களுக்குக் கொள்கையாக குறிப்பிட்டதையே தமதுவாழ்விலும் நடைமுறைப்படுத்திக் காட்டிய உன்னதமான தலைவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்,

சல்மான் (ரலி) :
நபி (ஸல்) அவர்கள், மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்துவந்த முஸ்லிம்களுக்கும் மதீனாவிலிருந்த முஸ்லிம்களுக்கும் இடையே சகோதரத்துவமான தோழமையை ஏற்படுத்தினார்கள். அண்ணாலரின் ஆணைக்கு மறுப்பின்றி கட்டுப்பட்ட மதீனத்து முஸ்லிம்கள், தங்களுக்கு உடமையான சொத்து சுகங்களிலிருந்து முஹாஜிரின்களுக்குப் பங்கிட்டுக்கொடுத்தார்கள். ஆதலால் தான் அன்றுமுதல் அவர்கள் 'அன்சாரிகள்' என்று அடைமொழியோடு அன்பாக அழைக்கப்பட்டார்கள். அத்தகைய  தோழமையின் வாயிலாக சேர்த்து வைக்கப்பட்டவர்களில் சல்மான் (ரலிலி) மற்றும் அபூதர்தா (ரலிலி)  அவர்களும் அடங்குவர்.

நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரலிலி), அபூதர்தா (ரலிலி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள்.  சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த  ஆடை அணிந்திருக்கக் கண்டார். "உமக்கு என்ன நேர்ந்தது?' என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரலிலி) அவர்கள், "உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை' என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலிலி) அவர்கள் அபுத்தர்தாவிடம், "உண்பீராக!' என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, "நான் நோன்பு நோற்றிருக்கிறேன்' என்றார். சல்மான், "நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்' என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலிலி) அவர்கள் நின்று வணங்கத் தயாரானார்கள். அப்போது சல்மான் (ரலிலி) அவர்கள், "உறங்குவீராக!' என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், "உறங்குவீராக!' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலிலி) அவர்கள், "இப்போது எழுவீராக!' என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் சல்மான் (ரலிலி) அவர்கள், "நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!'' என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலிலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சல்மான் உண்மையையே கூறினார்!'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஜுஹைஃபா (ரலிலி)
நூல்   : புஹாரி (1968)

 மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் நடுநிலையோடு இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக தீனின் சட்டதிட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பதையும், எல்லாநேரத்திலும் தன்னையே வருத்திக்கொண்டு வணக்கவழிபாட்டில் மட்டுமே மூழ்கிதிளைத்த நிலையில் இதர கடமைகளை கவனிக்காமல் இருப்பதையும் இஸ்லாம் ஆதரிக்கவே இல்லை. அபூதர்தா (ரலி) அவர்கள், உலகப்பற்றில்லாமல் உபரியான வணக்கவழிபாடுகளில் ஊறித்திளைத்தவர்களாக இருந்ததால், தமது குடும்பத்தாருக்கு செய்யவேண்டிய மற்ற கடமைகளை பொறுப்புகளை சரிவர நிறைவேற்றாமல் இருந்தார்கள். இதையறிந்த சல்மான் (ரலி) அவர்கள், தம்முடைய தோழர் அபூதர்தா(ரலி) அவர்களின் தவறான நிலைபாட்டினைக் கண்டித்ததோடுகடமைகளைக் கடைபிடிப்பதிலுள்ள மார்க்கத்தின் கண்ணோட்டத்தை அவருக்குத் தயங்காமல் தெளிவுபடுத்துகின்றார்கள்

தமது தோழர்கள் வற்புறுத்தினார்கள் என்பதற்காக மதுஅருந்துவது, பீடிகுடிப்பது, திரைப்படத்திற்கு செல்வது, போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற தீயக்காரியங்களை செய்பவர்கள் அல்லது இத்தகைய பாவமான செயல்களை அவர்கள் செய்வதற்கு  அனைத்துவகையிலும் தம்மால் முடிந்த உதவிகளை செய்பவர்கள் இனியாவது தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். தங்களது தோழர்கள் பரிகாசம் செய்தாலும் பரவாயில்லை என்று பெருமகனாரின் புனிதமான வழிகாட்டுதலை தங்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பவர்களாக மாறவேண்டும்.

எனவே, எழில்மிகுந்த எளிமையான மார்க்கத்தை வாழ்க்கைநெறியாக ஏற்றிருக்கின்ற நாம், அதற்கு மாறுசெய்யாத விதத்தில் உறவுமுறைகளை ஒன்றிணைத்து வாழ்வோமாக. எந்நேரத்திலும் ஏகத்துவத்தை  நிலைநாட்டுவோமாக.

எம். முஹம்மது ஸலீம்,  மங்களம்

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites