அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 9 ஏப்ரல், 2011

தேர்தல் விவரம்


நான் அறிந்த வகையில் உங்களுக்கு சில பயனுள்ள தகவல் . . . . . .
6 தேசிய கட்சி
51 மாநில கட்சி
173 தேர்தல் ஆணையம்
67 கோடி வாக்காளர்கள்
7 லட்சம் வாக்கு சாடி
35 லட்சம் தேர்தல் பணியாளர்கள்
11 லட்சம் மின் அனு இயந்திரம்
5 லட்சம் பாதுகாப்பு பணியாளர்கள்

நமது நாட்டில் மத்தியில் & மாநிலத்தில் ஆட்சி செய்வதற்காக மக்களுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்து தேர்தல் நடத்தப்படுகிறது.
நமது உரிமைகளை அரசாங்கத்திற்கு எடுத்து சொல்லுவதற்கு நமது சமுதாயத்திற்கு பாடுபடக் கூடிய தலைவரை நாம் தேர்தெடுப்போம்.
நாம் ஓட்டு போட வில்லையென்றால் நம்முடைய ஓட்டை வேற யாராவது கள்ளஓட்டு போட்டு விடுவார்கள். நம்முடைய உரிமைகளை அவர்கள் எடுத்து சொல்ல மாட்டார்கள். அதனால் நம்முடைய ஓட்டை சரியான முறையில் பயன்படுத்துவோம்.
இன்ஷா அல்லாஹ்

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

சினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா?


பாட்டுப் பாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா? என்பதை அறிவதற்கு முன்னால் இசையைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை அறிந்து கொள்வோம்.
நவீன சாதனங்கள் அதிகரித்து விட்டதால் நாம் எங்கு சென்றாலும் அனைவரின் செவியிலும் இசைக் கருவிகளின் சப்தம் மிகுதியாக விழுந்து கொண்டிருப்பதை அன்றாட வாழ்வில் கண்கூடாகக் கண்டு வருகிறோம்மனிதனின் உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஈர்ப்பதால் அதிகமான மக்கள் இதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை.
 மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசையும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இமாம் இப்னு ஹஸ்ம்யூசுஃப் கர்ளாவீகஸ்ஸாலீ மற்றும் தற்காலத்தில் தோன்றிய இன்னும் சில அறிஞர்கள் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் என்று கூறியுள்ளார்கள். இசை கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசை கூடும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள்.
 எனவே இவர்களின் கருத்து சரியானதா? அல்லது நாம் ஏற்கனவே இசை கூடாது என்று எடுத்த முடிவு சரியானதா என ஆய்வு செய்யும் போது இசை கூடாது என ஏற்கனவே நாம் எடுத்த முடிவே சரியானது என்பதை அறியலாம்.
இசை கூடாது என்று கூறக் கூடியவர்கள் புகாரியில் இடம் பெற்ற பின்வரும் செய்தியையே  பெரும்பாலும் முதன்மையான ஆதாரமாகக் கொள்கிறார்கள்.
அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூஆமிர் (ரலி) அவர்கள் அல்லது அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது)
நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மதுஇசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்நூல்: புகாரி 5590
விபச்சாரம் மது பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதாலும் "இவற்றை ஆகுமாக்குவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம் என்று இசை கூடாது என்று வாதிடுபவர்கள் கூறுகிறார்கள்.
இந்தச் செய்தியில் வரும் அறிவிப்பாளர்களில் ஹிஷாம் பின் அம்மார் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் நம்பகமானவர் என்று சான்று கூறியுள்ளார்கள். ஆனால் ஒருவரின் ஹதீஸ் ஏற்கப்படுவதற்கு நம்பகத்தன்மை மாத்திரம் இருந்தால் போதாது. அவரது நினைவாற்றலும் சரியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும் நன்னடத்தையிலும் சிறந்து விளங்கிய எத்தனையோ அறிவிப்பாளர்கள் மோசமான நினைவாற்றலைப் பெற்றிருந்ததால் அறிஞர்களிடம் அவர்கள் பலவீனமானவர்களாகத் தான் கருதப்பட்டார்கள்.
ஒருவர் நல்ல மனனத்தன்மை கொண்டவராக இருந்து பிற்காலத்தில் ஏதோ ஒரு மாற்றத்தால் அவரது மூளை குழம்பிவிட்டால் அவர் நன்றாக இருந்த போது அறிவித்த செய்திகளை எடுத்துக் கொண்டு மூளை குழம்பிய பிறகு அறிவித்த செய்திகளை விட்டுவிட வேண்டும் என்று ஹதீஸ் கலை கூறுகிறது.
 மனனத் தன்மையில் கோளாறு ஏற்படுவதற்கு முன்பு அறிவித்ததா? அல்லது பின்பு அறிவித்ததா? என்று நமக்குத் தெரியாவிட்டால் தெளிவு கிடைக்கும் வரை அவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ளாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.
 மேலுள்ள ஹதீஸில் இடம் பெறும் ஹிஷாம் பின் அம்மார் என்ற அறிவிப்பாளர் முதியவரான போது அவரின் மனனத் தன்மை மாறி விட்டது. அப்போது அவரிடத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து செய்திகளையும் ஆராயாமல் மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுவார். தனக்குச் சொல்லப்படுவதையெல்லாம் பிறகுக்கு எடுத்துச் சொல்பவராக இருந்தார். முந்தைய காலத்தில் தான் இவர் சரியாக அறிவிக்கக் கூடியவராக இருந்தார் என்று இமாம் அபூஹாதம் கூறியுள்ளார். அடிப்படையில்லாத நானூறுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை இவர் அறிவித்திருப்பதாக இமாம் அபூதாவூத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறு செய்யக் கூடியவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளார். இவரிடத்தில் ஹதீஸ்கள் சொல்லப்படும் போது அதையெல்லாம் இவர் ஏற்றுச் சொன்னதே இவரால் ஏற்பட்ட ஆபத்தாகும் என்று கஸ்ஸாஸ் என்பவர் கூறியுள்ளார்.
நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 30, பக்கம்: 242
இவர் முந்தைய காலத்தில் அறிவித்த செய்தி தான் சரியானது என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.
எனவே புகாரியில் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை ஹிஷாம் பின் அம்மார் மூளை குழம்புவதற்கு முன்பு அறிவித்தாரா அல்லது பின்பு அறிவித்தாரா என்று தெளிவு கிடைக்காததால் ஹிஷாம் அறிவிக்கும் இந்தச் செய்தியை இசை கூடாது என்பதற்கு முதன்மை ஆதாரமாகக் காட்ட முடியாது.
இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருந்தாலும் இதே செய்தி பிஷ்ர் பின் பக்ர் என்ற அறிவிப்பாளரின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை இமாம் பைஹகீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தன்னுடைய நூலில் பதிவு செய்துள்ளார்கள்
நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா, பாகம்: 3, பக்கம்: 272
இந்தச் செய்தியை அறிவிப்பவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். குறை சொல்லப்படாதவர்கள். எனவே இமாம் பைஹகீ அவர்கள் பதிவு செய்த ஹதீஸ் மார்க்கத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதற்குப் போதிய ஆதாரமாக உள்ளது. பைஹகீயில் உள்ள இந்த சரியான ஹதீஸைப் போன்றே புகாரியில் உள்ள ஹிஷாம் பின் அம்மார் அறிவிக்கும் செய்தி உள்ளதால் ஹிஷாம் பின் அம்மார் இந்த ஹதீஸில் தவறு செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது.
எனவே இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு அம்சமாகும்.

42 கோடி இந்தியர்கள் வறுமையில் தவிப்பு: ஐ.நா. ஆய்வில் தகவல்


இந்தியாவில் எட்டு மாநிலங்களில் 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமையில் தவிப்பதாக .நா. சபையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

166 நாடுகளில் பணியாற்றும் .நா. சபையின் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், இந்தியா குறித்து ஆய்வு செய்து ஆய்வறிக்கை தயார் செய்துள்ளனர்.

அந்த அறிக்கையில், பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 42.1 கோடி பேர் வறுமையில் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 26 பின்தங்கிய நாடுகளில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 41 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய ஏழைகளின் எண்ணிக்கை அதையும் தாண்டியுள்ளது.

அதாவது, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையின்பிடியில் சிக்கித் தவிப்பதாகவும், இந்தியப் பெண்களில் பாதி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் .நா. ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020-ல் இந்தியா வல்லரசாகும் என்று மார்தட்டும் வேளையில் இந்த ஆய்வறிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

வியாழன், 7 ஏப்ரல், 2011

விபரீத முடிவு..



தற்கொலை என்பது மற்ற குற்ற நிகழ்வுகளைப்போல் அதிக மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் சமுதாயமும் ஒருவரது தற்கொலைக்குக் காரணமாகிவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை, புகுந்த வீட்டில் கொடுமை தாளாமல் மணமான பெண் தற்கொலை, தொழில் தோல்வி, காதலில் தோல்வி, வேலையில்லாத் திண்டாட்டம், கடன் தொல்லை என்று கணக்கில் அடங்காத காரணங்களால் மக்கள் தமது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில் ஜெர்மனியில் தலைசிறந்த கால்பந்து வீரர் ராபர்ட் என்கே தன் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையால் கால்பந்து விளையாட்டில் முன்போல ஜொலிக்க முடியாது என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது விளையாட்டு வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டின் கால்பந்து வீரர் சத்தியன், ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டது மறக்க முடியாத சம்பவம்.

மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வுப்படி தற்கொலை செய்து கொள்ளும் முடிவு, ஒருவர் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்படும் நிலையில் எடுக்கப்படுகிறது. அந்த நிலையில் எது சுலபமான வழி என்று புலப்படுகிறதோ அந்த வழியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இத்தகைய மனநிலையில் அவர்களுக்கு உதவி கிடைத்தால் அவர்களை அந்த நிலையில் இருந்து மாற்றிவிடலாம். சில தனியார் தொண்டு அமைப்புகள் இத்தகைய முடிவு எடுப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆலோசனை வழங்குகிறது.

இளைஞர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணம் பெரியவர்களின் தவறான அணுகுமுறை எனலாம். அவசர உலகத்தில் இத்தகைய பிரச்னை உள்ளவர்களிடம் பேசுவதற்கு நேரமில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விளைவுகளைச் சிந்திக்காமல் மனதுக்குப் பட்டதை வார்த்தைக் கணைகளால் கொட்டி விடுவது தற்கொலைக்கு மறைமுகமான காரணமாகிவிடுகிறது. பெரும்பாலான தற்கொலைகள் விவேகமற்ற சொல் அம்புகளால் விளைகின்றன என்பது உண்மை.

படிப்பறிவில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலங்களில் ஒன்று கேரளம். ஆனால் அங்கு தற்கொலைகள் அதிகம். ஆண்டுக்கு சுமார் 9,000 நபர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் 2007, 2008-ம் ஆண்டுகளில் முறையே 13,811, 14,425 நபர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் செய்து கொள்ளப்பட்ட தற்கொலை கணக்கை எடுத்துக் கொண்டால் முந்தைய 10 ஆண்டுகளைவிட சுமார் 28 சதவிகிதம் அதிகமாகியுள்ளது.
இந்தியாவில் 2007-ம் ஆண்டு 1,22,637 நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2008-ம் ஆண்டில் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 1,25,017 ஆகும். சராசரி ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 10 பேர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

எதற்காக தற்கொலை என்ற விபரீத முடிவு எடுக்கப்படுகிறது, காரணங்கள் யாவை, சுற்றுப்புறப் பாதிப்புகள், படிப்பறிவின் தாக்கம் போன்ற நிலைகளிலிருந்து இந்தப் பிரச்னை ஆராயப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகைப் பெருக்கத்தை எடுத்துக்கொண்டால் (2008-ம் ஆண்டு மக்கள்தொகை 115.3 கோடி) 1 லட்சம் மக்கள்தொகைக்கு தற்கொலையில் இறப்போர் எண்ணிக்கை 10.8-ல் இருந்து 2007, 2008-ம் ஆண்டுகளில் மாற்றமில்லை.

அறிவாற்றலிலும், கலைத்திறனிலும் சிறந்து விளங்கும் மாநிலம் மேற்குவங்கம். அந்த மாநிலத்தில் தான் 2008-ம் ஆண்டு எல்லா மாநிலங்களையும்விட அதிகமாக 14,852 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. மேற்குவங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நாட்டின் தற்கொலை நிகழ்வுகளில் 56.2 சதவிகிதம், மற்ற 23 மாநிலங்கள் மைய அரசுப் பகுதிகளில் 43.8 சதவிகிதம் என்ற புள்ளிவிவரம் நம்மைச் சிந்திக்க வைக்க வேண்டும். அதிக மக்கள்தொகை உள்ள மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்த தற்கொலைகளில் 3.3 சதவிகிதம் எண்ணிக்கையில் 4,125 மட்டுமே நிகழ்ந்துள்ளது.

தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் சுமார் 14,000 தற்கொலைகள் ஆண்டொன்றுக்கு நிகழ்கின்றன. இது மொத்த நிகழ்வுகளில் 10 சதவிகிதம் ஆகும். தற்கொலைகளின் தலைநகரம் பெங்களூரு எனலாம். ஏனெனில் அங்கு 2008-ம் ஆண்டு 2,396 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.

அதே ஆண்டில் மும்பையில் 1,111, தில்லியில் 1,107, சென்னையில் 1,319 பதிவாகியுள்ளது. சென்னையைவிட அதிகமாக கோயம்புத்தூரில் 1,353 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. நகரங்களுக்கே உரித்தான மனதுக்கு அழுத்தம் தரக்கூடிய அவசர உலக அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள் தற்கொலைக்குக் காரணமாகி விடுகின்றன. சிக்கிம், நாகாலாந்து, மிசோரம், ஹிமாசலபிரதேசம், காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 2008-ம் ஆண்டு முந்தைய ஆண்டுகளைவிட 10 சதவிகிதம் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.

தற்கொலை என்றால் நமது நினைவுக்கு வருவது அபலைப் பெண்கள் மணம் முடித்து புகுந்த வீட்டில் எழக்கூடிய பிரச்னைகள் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வது ஒன்றுதான். சமீபத்தில் சேலையூரில் மணமான 2 ஆண்டுகளில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது வரதட்சிணை பிரச்னை காரணமாக நிகழ்ந்தது என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு கைக்குழந்தை வேறு உள்ளது. இருந்தும் இத்தகைய முடிவுக்கு இந்த இளம் தாய் தள்ளப்பட்டார் என்பது வேதனைக்குரியது. இந்தியவில் 2008-ம் ஆண்டு 3,038 பெண்கள் வரதட்சிணை சம்பந்தமான நிகழ்வுகளில் இறந்துள்ளனர். தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 2008-ம் ஆண்டு 207 மற்றும் 2009-ம் ஆண்டு 194.

இளமை என்றென்றும் இனிமை என்று போற்றப்படுகிறது. ஆனால் 15 வயதிலிருந்து 29 வயதுவரை உள்ள இளைஞர்கள் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர். மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இது 35.7 சதவிகிதம் ஆகும். ஆண்பால், பெண்பால் என்ற அடிப்படையில் கணக்கெடுத்தால் ஆண்கள் 64 சதவிகிதம், பெண்கள் 35 சதவிகிதம். ஆனால் பதிநான்கு வயதுக்குள்பட்ட தற்கொலைப் பாதிப்புக்கு உள்ளாகிய குழந்தைகளைக் கணக்கிட்டால் 49 சதவிகிதம் சிறுவர்கள், 51 சதவிகிதம் சிறுமிகள். ஆகக்கூடி பாதிக்கப்படும் ஆண், பெண், குழந்தைகளின் மனநிலை ஒத்திருப்பது கண்கூடு.

தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்தால் குடும்பம் மற்றும் பொருளாதாரப் பிரச்னையால் ஆண்கள் பெருவாரியாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் பெண்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், ஆசாபாசங்களின் பாதிப்பாலும் இத்தகைய முடிவெடுக்கின்றனர். தனிப்பட்ட காரணங்களான வரதட்சிணை பிரச்னை, தகாத உறவால் ஏற்பட்ட கருத்தரிப்பு, மலட்டுத்தன்மை, விவாகரத்து, கற்பழிப்பு என்று பெண்களுக்கே உரித்தான பிரச்னைகளுக்குக் கணக்கில்லை.

ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் பொதுவான பிரச்னை குடும்பச் சச்சரவு. 2008-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தற்கொலை செய்து கொண்ட 1.25 லட்சம் மக்களில் 15 வயதிலிருந்து 29 வயதுக்குள்பட்டவர்கள் 10,027 இளைஞர்கள் குடும்பப் பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதே காரணத்துக்காக 11,363 நடுத்தர வகுப்பினர் உயிரைவிட்டுள்ளனர்.

அறுபது வயதுக்கு மேற்பட்ட 9,230 வயோதிகர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு உடல்நலக் குறைவே முக்கிய காரணம். இதில் 15 சதவிகிதம் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். குழந்தைகள் தற்கொலை அதிகமாக உள்ள மாநிலம் மேற்குவங்கம்.

இந்தியாவின் மக்கள்தொகையில் 55 சதவிகிதம் பேர் இளைஞர்கள். தற்கொலை என்ற சாபக்கேடு இளைஞர்களை அதிகமாகத் தாக்குகிறது என்பது கசப்பான உண்மை. குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்தை அடைவதை இரண்டும்கெட்டான் வயது என்பார்கள். உடல் ரீதியாகவும், மனம், சிந்தனை, உணர்வுகள் வெளி நிகழ்வுகளின் தாக்கம் என்று பலவகைப்பட்ட மாறுதல்கள் இளமைப் பருவத்தில் சந்திக்க நேரிடும். இந்த இக்கட்டான பருவத்தில் உற்றார் யாருளரோ என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்பு.
அவர்களுக்கு உற்ற நண்பனாக உறுதுணையாக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பெரியோர்களின் பக்குவமான அணுகுமுறைதான் அதை உறுதி செய்ய முடியும்.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites