ஒரு ஹதீஸின் தரத்தை இனம் கண்டு தான் பின்பற்ற வேண்டுமா? அவ்வாறு ஹதீஸின் தரத்தைப் பற்றி ஆராயும் போது, ஒரு அறிவிப்பாளரை அதிகமானவர்கள் நல்லவர் என்று கூறி, ஒருவர் மட்டும் அவரைப் பற்றி குறை கூறியிருந்தால் எப்படி முடிவு செய்ய வேண்டும்? மெஜாரிட்டி அடிப்படையில் தீர்மானிக்கலாமா?
நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை ஹதீஸ்கள் என்கிறோம். இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையை ஆய்வு செய்து அவற்றில் ஆதாரப்பூர்வமானவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக முழுமையான விளக்கத்திற்கு ஏகத்துவத்தில் இடம் பெறும் "ஹதீஸ் கலை' என்ற தொடரைப் பார்வையிடுக!
ஒரு அறிவிப்பாளரைப் பற்றி அதிகமான ஹதீஸ் கலை அறிஞர்கள் நல்லவர் என்று கூறியிருந்து, ஒரேயொரு ஹதீஸ் கலை அறிஞர் மட்டும் அந்த அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று கூறி, அதற்குச் சரியான காரணத்தையும் கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். இங்கு மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. அந்த அறிவிப்பாளரைப் பற்றிய மோசமான விமர்சனத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர் பலவீனமானவர் என்ற முடிவுக்கே வர வேண்டும். ஏனெனில் நல்லவர் என்று விமர்சனம் செய்தவர்களுக்கு அவரது குறையைப் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஒருவரது குறையைப் பற்றித் தெரியாத போது அவரை நல்லவர் என்றே விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஒருவரை மனன சக்தி குறைவானர் என்றோ, பொய்யர் என்றோ ஒரு ஹதீஸ் கலை அறிஞர் விமர்சனம் செய்கின்றார் என்றால் அவரது குறையை நன்கு தெரிந்து தான் விமர்சனம் செய்கின்றார். எனவே இந்த விமர்சனத்திற்கு முன்னுரிமை கொடுத்து அந்த அறிவிப்பாளரைப் பலவீனமானவர் என்றே முடிவு செய்ய வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக