அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 2 டிசம்பர், 2010

அடையாளம் காணப்பட்ட அசத்திய வாதிகள்



கொள்கை வேடமிட்டுக் கொண்டு கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய இயக்கங்கள் பல உண்டு. அத்தகைய நிலையில் தான் இன்றைய ஜாக் அமைப்பின் செயல்பாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் கொள்கைப் பிரச்சாரத்திற்காக சத்தியப் பிரச்சாரகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து பாடுபட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இன்று சறுகல் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஜாக் என்ற அமைப்பு!
இந்த இயக்க நிர்வாகிகளால் சத்தியப் பிரச்சாரத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! வெளியில் நல்லவர்களைப் போன்றும் அப்பாவிகளைப் போன்றும் காட்சி தரும் இவர்களின் பின்புற வேலைகளைப் பார்த்தால் படு பயங்கரமானதாக இருக்கும். காசுக்காகவும், காழ்ப்புணர்ச்சியினாலும் எதையும் செய்யத் துணிபவர்கள் தான் இவர்கள்.
"அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும் உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 158
இது போன்று தான் இன்றைய  ஜாக் அமைப்பின் நிர்வாகிகள் இருக்கின்றனர். தாயத்து, தட்டு புத்தகங்களையும், மத்ஹபு புத்தகங்களையும் வைத்து விற்பனை செய்யக்கூடியவர்களும், காயிதே மில்லத்திற்குப் பிறந்த நாள் கொண்டாடி ஃபாத்திஹா ஓதி சாப்பிடக் கூடியவர்களும், வரதட்சணை திருமணங்களில் முன்னிலை வகிக்கக் கூடியவர்களும், தர்ஹா எங்களுக்குத் தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடக் கூடியவர்களும் தான் இன்றைக்குப் பல ஊர்களில் பெயரளவில் உள்ள ஜாக் அமைப்பின் நிர்வாகிகளாக உள்ளனர்.
இவர்கள் இந்த அமைப்பில் ஒட்டிக் கொண்டிருப்பதின் நோக்கமே மாதா மாதம் வருகின்ற சல்லிகளுக்காகத் தான். இந்த சல்லிகள் நின்று விட்டால் இவர்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
படம் காட்டி வெளிநாட்டில் பணம் பறித்து வயிறு வளர்க்கும் இந்த இயக்கத்தினர், தவ்ஹீத் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்களையெல்லாம் தங்கள் இயக்கச் சொத்து என்றும், சங்கங்கள் என்றும் அங்கு தொழுகையே நடைபெறவில்லையென்றும் நீதி மன்றங்களில் பொய்களைத் துணிந்து சொல்ல ஆரம்பித்து விட்டனர். இது போன்ற வேலைகளுக்காகவே இத்தகையோரை மாநில நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானை, தானே நிர்வகித்து வருவதாகவும், ஷம்சுல்லுஹா வந்து தன்னிடம் சண்டை போட்டதாகவும் கூசாமல் பொய்யெழுதி நீதிமன்றத்தில் கொடுத்தவரெல்லாம் தற்போது ஜாக்கில் மாநில நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
அது மட்டுமல்ல! 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மவ்லவி எம். ஷம்சுல்லுஹா அவர்களுக்குச் சம்பளம் கொடுத்ததாகவும், இனிமேல் சம்பளம் கிடையாது என்றும் பச்சைப் பொய்யை, ஜாக் லெட்டர் பேடில் கடிதமாக எழுதி, கையெழுத்திட்டு அந்தப் போர்ஜரி கடிதத்தை நீதிமன்றத்தில் கொடுத்தவர் தான் மாநில அமீர் எஸ். கமாலுத்தீன் மதனீ!
மேலே நாம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் அவர்களே கையெழுத்திட்ட ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.
மேலப்பாளையத்தில் பள்ளிவாசல் பிரச்சனையில் இவர்களது மோசடிகள் அம்பலமாகி விட்டதால் அதைத் திசை திருப்புவதற்காக இவர்கள் நடத்திய பைக் எரிப்பு நாடகத்தைப் பற்றி ஏற்கனவே ஏகத்துவம் இதழில் எழுதியிருந்தோம். இந்த பைக் எரிப்பைச் செய்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் என்று காவல்துறையில் பொய்ப் புகார் கொடுத்து, தற்போது வழக்கும் நடைபெற்று வருகின்றது. தங்களது அல்ஜன்னத் என்ற பத்திரிகையிலும் பைக்கை எரித்தது தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் என்று கூசாமல் எழுதியிருந்தார்கள்.
ஆனால் தற்போது ஜாக் சார்பில் மேலப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், "பைக்கை எரித்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது எங்களுக்குத் தெரியும்'' என்று கூறியுள்ளார்கள். ஆக, தங்கள் சுயநலத்திற்காக எப்படிப்பட்ட பொய்யையும் சொல்லி, யாரையும் சிறைக்கு அனுப்பத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் உதாரணம்.
உண்மை அவர்களிடம் வந்த போது அதை அவர்கள் பொய்யெனக் கருதினர். அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது குறித்த விபரங்கள் அவர்களிடம் வந்து சேரும்.
அல்குர்ஆன் 6:5
தமக்கெதிராக அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் கற்பனை செய்த யாவும் அவர்களை விட்டு மறைந்து போகும்.
அல் குர்ஆன் 6:24
"நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
அல் குர்ஆன் 9:107
"நயவஞ்சகர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான்.
அல்குர்ஆன் 63:1
சல்லடை ஊசியைப் பார்த்துக் கேட்டதாம், உனக்கு பின்னால் ஒரு துளையிருக்கிறதே என்று! அது போலத் தான் இன்றைய ஜாக் இயக்க நிர்வாகிகள் நம்மைப் பார்த்து செய்கின்ற விமர்சனங்களும் இருக்கின்றன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பிரச்சினையைத் தொட்டுப் பேசியுள்ளனர். ஜாக் இயக்க நிர்வாகிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் பண மோசடியில் நிரூபிக்கப் பட்டவர்கள். தவறான தொடர்பில் சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டவர்கள். திருமணம் செய்து அபலைப் பெண்களை ஏமாற்றியவர்கள். பணத்திற்காகக் கொள்கையில் தடம் புரண்டவர்கள்.
இவையெல்லாம் சாட்சிகளுடன் அந்தந்த நேரங்களில் நிரூபிக்கப்பட்டும், உண்மை தெரிந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கிப் பெருமைப்பட்ட இவர்கள் நம்மை பார்த்து விமர்சனம் செய்வது வேடிக்கையிலும் வேடிக்கையே!
(இது பற்றி ஆதாரங்களுடன் நாம் வெளியிட்ட ஐந்து சிடிக்களைக் காண்க!)
தடம் மாறும் ஜாக்
நாங்கள் தான் கொள்கைவாதிகள் என்றும், குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றி வருபவர்கள் என்றும்  கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்களின் கொள்கை ஆட்டம் காணத் துவங்கி விட்டது. ஒரு தனி நபரின் மீது கொண்டுள்ள வெறுப்பு, மார்க்க விஷயத்திலும் கொள்கையிலும் கூட இவர்களை தடுமாறச் செய்துள்ளது. இவர்களின் பேச்சுக்களும், எழுத்துக்களும் இவற்றைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
களியக்காவிளை விவாதம் தொடர்பாக இவர்கள் தொலைபேசியில் பேசிய பேச்சுக்கள் இதற்குத் தெளிவான சான்றாகும். இவர்களுடைய மாநில அமீர் பேசிய சில பேச்சுக்கள் பதிவு செய்யப்பட்டு ஆதாரமாக இருக்கும் போதே, இவர்கள் கப்ரு வணங்கிகளுக்கு உதவி செய்ய மறுத்ததாக தங்களுடைய பத்திரிகைகளில் எழுதியுள்ளனர். இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இது ஒன்றே மாபெரும் சான்றாகும்.
இவர்கள் தங்கள் உள்ளங்களில் கொண்டுள்ள காழ்ப்புணர்வின் காரணமாக களியக்காவிளை சம்பவம் மட்டுமல்லாது பல நிலைகளில் கொள்கையில் தடம் புரண்டு அசத்தியத்திற்குத் துணை சென்றுள்ளனர் என்பதை நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும்.
ஆரம்ப காலத்தில் மார்க்க விஷயங்களில் திருமறைக் குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கு மட்டும் தான் கட்டுப்பட வேண்டும் என்று கூறி வந்தவர்கள், ஒரு தனி நபரின் மீது ஏற்பட்ட பொறாமையின் காரணமாக "உலக, மார்க்க விஷயங்களில் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும்'' எனும் மார்க்கத்திற்குப் புறம்பான புதுக் கொள்கையைப் புகுத்தினார்கள்.
குர்ஆனும், நபிவழியும் தான் மார்க்கத்தின் அடிப்படைகள் என்று கூறி வந்தவர்கள், "ஸஹாபாக்களுடைய கருத்துக்களையும் மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று திருமறைக் குர்ஆனிலும், நபிவழியிலும் இல்லாத ஈமானுக்கு மாற்றமான மூன்றாவது அடிப்படைக்குச் சென்றார்கள். இன்று வரை அதைத் தங்கள் பத்திரிகையில் எழுதியும், பேசியும் வருகிறார்கள்.
ஆதாரப்பூர்வமான ஸஹீஹான நபிமொழிகளைத் தான் மார்க்கமாகக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இருந்தவர்கள், ஒரு தனி நபரின் மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக இன்றைக்குப் பலவீனமான செய்திகளையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் நிலைக்குச் சென்று விட்டனர்.
தன்னுடைய உறவினர் என்பதற்காக, கொள்கையற்றவர்களை தங்களுடைய மதரஸா நிகழ்ச்சிகளில் பங்கு பெறச் செய்து "உமறுப் புலவர் கனவில் நபிகள் நாயகம் வந்தார்கள்'' என்று அவர் உளறியதையெல்லாம் ரசித்துக் கேட்ட கொள்கை வீரர்கள் தான் இவர்கள்.
அது மட்டுமல்ல! அதே பிர்தவ்சியா மதரஸா ஆண்டு விழாவில், "வந்தே மாதரம்' பாடுவதை ஆதரித்து, அதாவது இணை வைப்பை ஆதரித்து ஒருவர் பேசுகிறார். அவரை இறுதி வரை பேச வைத்து, வந்தே மாதரம் என்பது எவ்வளவு பெரிய இணை வைப்பு வரிகள் என்பதை அந்தக் கூட்டத்தைக் கேட்டவர்களுக்குக் கூட விளக்காமல் அனுப்பி வைத்த இந்தக் கொள்கைச் சிங்கங்கள் தான் சத்தியவாதிகளாம்.
குர்ஆன் அனைவருக்கும் விளங்கும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறி வருவதால், "16 கலைகளைக் கற்றவர்கள் தான் குர்ஆனை விளங்க முடியும்'' என ஜாக்கின் மாநில அமீர், தான் என்ன பேசுகிறோம் என்று கூட அறியாமல் தனிமனித வெறுப்பில் குராபிகளை விட மோசமாகப் பேசியுள்ளார்.
இவர்கள் தனி மனிதக் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் தான் கொள்கையில் தடம் புரண்டுள்ளார்கள் என்பதற்கு நாம் இன்னும் பல சான்றுகளைப் பட்டியலிட முடியும்.
ஸஹர் நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டுள்ளன. அதை நாம் நம்முடைய பள்ளிகளில் நடைமுறைப் படுத்த வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கூறியதால் வெறுப்புற்ற இவர்கள் ஹதீஸை மறுக்கின்றோமே என்பதைக் கூட அறியாமல் "ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்வது குழப்பமானது'' என குராபிகளைப் போன்று அறிவித்தனர்.
பெருநாள் தொழுகைகளைத் திடலில் தொழுவது தான் நபிவழி; எனவே திடலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி நபிவழியை நிலைநாட்ட வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கூறியதால், "திடல் தொழுகை என்று ஒரு தொழுகையே மார்க்கத்தில் கிடையாது' என்று தமிழக முதல்வரையே மிஞ்சும் அளவிற்கு தங்களின் தமிழ் மொழிப் புலமையை வெளிப்படுத்தி, திடலில் தொழ வேண்டும் என்ற சுன்னத்தை மறுத்தனர்.
பெண் வீட்டு விருந்து என்பது நபிவழித் திருமணத்தில் இல்லாத ஒன்று; எனவே பெண் வீட்டுத் திருமண விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என தவ்ஹீத் ஜமாஅத் கூறியதால் "பெண் வீட்டு விருந்து வைக்கக் கூடாது என ஹதீஸில் வருகிறதா?'' என்ற அபாரக் கேள்வியைக் கேட்டு இன்று ஜாக் இயக்கத்தினர் பெருவாரியாகப் பெண் வீட்டு விருந்தில் கலந்து கொண்டு வெளுத்துக் கட்டி வருகின்றனர்.
தவ்ஹீத் பெயரில் ஆடம்பரத் திருமணம் நடத்தக் கூடியவர்கள், பெண் வீட்டு விருந்திற்குத் தவ்ஹீத் போர்வை போர்த்தியவர்கள் வர வேண்டும் என விரும்பக் கூடியவர்கள் ஜாக் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டுத் திருமணத்திற்குத் தங்கள் ஜமாஅத்தின் பேச்சாளரை அனுப்பி வைத்து திருமணத்தையும் நடத்தி வைப்பார்கள். அந்தச் சபையில் என்ன நடந்தாலும் வந்த வேலையை மட்டும் பார்த்து விட்டுச் சென்று விடுவார்கள். அதைக் கண்டித்துக் கூட பேச மாட்டார்கள். இவை நாம் கற்பனை செய்து எழுதவில்லை. ஜாக் இயக்க நிர்வாகிகள் எடுத்த அவதாரங்களை விபரமாகக் கேட்டறிந்து தான் எழுதுகிறோம்.
உணர்வு வார இதழில், "அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, உழவர் சிலை போன்றவை வரலாற்று சிறப்பு வாய்ந்தவை'' எனத் தவறாக எழுதி விட்டோம். பிறகு இதற்கு மறுப்பு வெளியிட்டு மன்னிப்பும் கேட்டு விட்டோம்.
ஆனால் பரிசுத்த வேடம் போடும் இந்தக் கொள்கை வேடதாரிகள், "சமாதி வழிபாட்டை ஆதரிக்கும் ததஜ'' என்று தங்கள் பத்திரிகையிலே எழுதி அகமகிழ்ந்து கொண்டனர். ஆனால் என்ன வேடிக்கை என்றால் அதற்கு மறு பக்கத்திலேயே, "கண்ணகிக்குச் சிலை வைத்து பூம்புகாரை அழகு பார்த்தவர் நீங்களல்லவா?'' என கலைஞரைப் புகழ்ந்து எழுதி சிலை வழிபாட்டை ஜாக் இயக்க நிர்வாகிகள் ஆதரித்துள்ளனர். இவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ள முறையற்ற தனி மனித வெறுப்பு தான் இவர்களை இப்படியெல்லாம் தடுமாறச் செய்துள்ளது.
விரலசைப்பது நபி வழி என்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். வெளிநாட்டிலிருந்து பணப் பட்டுவாடா செய்யக்கூடிய சில சவூதிகள் சரியான ஆய்வில்லாமல் இது தவறு என்று கூறியதாலும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அனைவரும் விரலசைத்து இந்த நபிவழியை நிலைநாட்டி வருவதாலும் வெறுப்புணர்வின் காரணமாக இவர்களின் ஆதரவுப் பத்திரிகைகளில் எந்த விதமான முறையான ஆய்வுமில்லாமல் விரலசைப்பது நபிவழியல்ல, அது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும் என எழுதியுள்ளனர்.
இட ஒதுக்கீட்டை ஆதரித்து இவர்கள் தங்கள் பத்திரிகைகளில் அதிகமதிகம் எழுதியுள்ளனர். இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு தர மறுத்தவர்களைக் கண்டித்தும் எழுதியுள்ளனர். பல மாநாடுகளில் தீர்மானங்களும் நிறைவேற்றியுள்ளனர். ஏன்? ஜாக் மாநில நிர்வாகியாக இருந்து தற்போது அவர்களாலேயே தூக்கியெறியப் பட்டுள்ள கோவை அய்யூப் அவர்கள், "முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காகக் கை சின்னத்தில் வாக்களிப்பீர்'' என நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் அரசியல் மேடையில் பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் செய்தார்.
ஆனால் பாருங்கள், இவர்களின் கயமைத்தனத்தை! ஜனவரி 29 அன்று கும்பகோணம் மாநாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு கொடுத்த போது, "உரிமைகளை இவர்களிடம் கேட்கலாமா?'' என மாநில அமீர் கொள்கை வெறி (?) மேலோங்கி பல இடங்களில் முழங்கியுள்ளார். பல இடங்களில் ஜாக் இயக்கப் பேச்சாளர்கள் வெள்ளிக்கிழமை பயான்களில், இட ஒதுக்கீடு கேட்பது மார்க்கத்திற்கு முரணாணது என்றும் சொர்க்கத்தில் இட ஒதுக்கீடு கேட்க வேண்டும் என்றும் உளற ஆரம்பித்து விட்டனர். அவர்கள் ஆதரித்த ஒன்றையே தவ்ஹீத் ஜமாஅத் சொல்கிறது என்பதற்காக மறுத்துப் பேசுவது கொள்கைப் பிடிப்பா? இல்லை தடுமாற்றமா?
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையின் அடிப்படையில் தவ்ஹீது ஜமாஅத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அதைக் கண்மூடித்தனமாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் அதே சமயம், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பல்வேறு இயக்கங்களிலிருந்தும் விரட்டப்பட்ட ஒருவருக்கு, பாளை தொகுதியில் எம்.எல்.ஏ. சீட் வழங்கக் கோரி தங்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இவர்களின் கொள்கைத் தடுமாற்றங்கள் இது மட்டுமல்ல! சுருக்கமாகக் கூறினாலே பல பக்கங்களுக்கு எழுதிக் கொண்டே போகலாம். எனவே அடையாளம் காணப்பட்ட அசத்தியவாதிகள் யார் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். காசுக்காகவும், தனி மனித வெறுப்பு வழிபாட்டினாலும் தடம் புரண்ட இவர்கள் இனிமேலாவது தங்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites