இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று
முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான
எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.
குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட
நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு
இஸ்லாம் தடை செய்துள்ளது.
ஆனால் இஸ்லாத்தில்
தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல்
என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.
இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள்
செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.
இன்று முஸ்லிம்கள்
ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில்
பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று
புற்களை மிதிக்கின்றார்கள்.
ஸபர் குளி என்ற பெயரில் ஆற்றில் போய்
குளித்து பீடையை நீக்குகின்றனர்.
இன்னும் சிலர்
மாவிலைகளில் “சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்” என்ற திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்துக்
குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும்
என்று கருதுகிறார்கள்.
இன்னும் சில
இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக் கட்டைகளைச் செய்து
அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இது போன்று
ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.
மேலும் ஸபர் மாதத்தில் கல்யாணம் போன்ற
நல்ல காரியங்களைத் தள்ளி வைத்து
விடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர்
மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால்
மாதமும் சபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது.
பீடை மாதம்
கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக,
தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால்
மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும்
கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா
காலத்தில் வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள்.
(அபூதாவூத்)
சபர் மாதத்தைப் பீடை மாதமாகக்
கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும்
இல்லை. மாறாக சபர் மாதத்தைப் பீடை
மாதமாகக் கருதக் கூடாது என்று தான்
உள்ளது.
தொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸபர் பீடை
என்பதும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5707, 5717
ஸபர் மாதம் வந்து
விட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும்
அதிகமாகிவிடும் என நம்பி அதைப் பீடை
பிடித்த மாதமாக அன்றைய மக்கள்
கருதினர். இந்த மூட நம்பிக்கையை
ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர்
என்பது இல்லை என்று கூறினார்கள்.
கெட்ட நாள் உண்டா?
காலத்தை நல்ல
காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.
தொடர்ந்து
துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை
நாம் அனுப்பினோம். (அல்குர்ஆன் 54:19)
பீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த
வசனத்தைக் கொள்கிறார்கள். இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை.
இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது
சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக்
கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி
ஏமாற்றி வருகின்றனர்.
ஆனால் இவ்வசனம்
இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7)
ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று
வீசியதாகவும், ஏழு நாட்களுமே
பீடை நாட்கள் என்றும் பன்மையாகக்
கூறப்பட்டுள்ளது. (41:16)
ஏழு நாட்களில்
எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல
கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365
நாட்களுமே பீடை நாட்கள் என்று
இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.
மேலும் அந்த
நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள்
காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.
உலகில் ஏற்படும்
விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப்
பொருத்து அல்ல.
எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே
தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை.
எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு
நாளும் உலகில் இல்லை.
இவ்வசனத்தைச்
சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று
கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு
பிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.
உலகத்துக்கு நல்ல
நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள
முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவரும் தரித்திர நிலையில் தான்
உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய
இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.
“ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான்.
நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு
பகலை நானே புரட்டி வருகிறேன்”
என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா
நூல்: புகாரி 4826
எனவே நாட்களை நாம்
தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.
மேலும் நபி (ஸல்)
அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள்
ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத
அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள்.
என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப்
பிடித்த பீடை நீங்குவதற்காக
கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ
சென்றார்களா என்றால் இல்லை.
பீடை நாள் என்று
கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே
தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம்
விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் உமக்கு
ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை.
உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது.
தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற
அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107)
மாற்று மதக்
கலாச்சாரம்
இஸ்லாமிய
மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக்
கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை
மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.
இந்த மூடப் பழக்க
வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா
என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு
அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று
மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள்
அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் எந்த
அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்)
அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள்
ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப்
பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில்
நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.
(புகாரி 3456)
இது போன்று நபி
(ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது,
இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம்
ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன
போக்கில் செல்லக்கூடிய நிலையை
தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.
மாற்று மதத்தினர்
தேரிழுப்பதையும். விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை
அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப் பதையும், கந்தூரி கொண்டாடுவதையும்
வழமையாக்கிக் கொண்டனர்.
இது போன்று
இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில்
குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.
இதைப் பார்த்துத்
தான் முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதி, அந்த மாதத்தில்
இஸ்லாத்தில் இல்லாத நடைமுறைகளை மாற்று
மதத்தவர்களிடமிருந்து காப்பியடித்து
செய்து வருகின்றனர்.
இது போன்று மாற்று
மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக்
கண்டிக்கின்றார்கள்.
இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில்
நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டுவதாக அமைந்துள்ளது.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு
வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன்
ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு
இணைவைப்பவர்களுக்கென்று ஒரு
இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள்
(பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்)
இருப்பார்கள். “தாத்து அன்வாத்”
என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள்
அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து” என்று இருப்பதைப்
போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்”
என்று கூறினோம்.
அதற்கு நபி (ஸல்)
அவர்கள் “சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம்
(அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்;
என் உயிர் யார் கைவசம்
இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில்
பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள்
நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள்
இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை)
அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள்.
இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள்
உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ
வாக்கிதுல்லைசி (ரலி)
நூல்:திர்மிதி
தனக்குப் பின்னர்
முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப்
பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்)
அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான்
புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப்
பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.
நாயகம் (ஸல்)
அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும்.
நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய
நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை
ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள்
ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு
சேர்க்கும்.
அறிவிப்பவர்:
ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ 1560
எனவே அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ஸஃபர் மாதம்
உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்ட நாளாகக்
கருதாமல்,
மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றாமல்
வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக! .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக