அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 1 மே, 2010

மனிதர்களைத் தலைவர் என்று அழைக்கலாமா ?

 பனூ ஆமிர் தூதுக் குழுவினர், நபி (ஸல்) அவர்களை நோக்கி, நீங்கள் எங்களின் தலைவர் என்று கூறிய போது, அல்லாஹ் தான் தலைவன் என்று நபி (ஸல்) கூறியதாக அபூதாவூதில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. நாம் இஸ்லாமிய மேடைகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தலைவர் என்று தான் கூறுகின்றோம். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் தலைவர் என்று அழைக்கக் கூடாது என்றால் திமுக தலைவர் என்றும் சொல்லக் கூடாதா?
அப்துல் அலீம், அய்யம்பேட்டை
தாங்கள் குறிப்பிடும் ஹதீஸ் அபூதாவூதில் 4172வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மத்ரஃப் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான். எனினும் இதற்கு மாற்றமான கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸில் தலைவர் என்பதற்கு ஸய்யித் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில், ஸய்யித் - தலைவர் என்ற பதத்தை அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குப் பயன்படுத்தி உள்ளார்கள்.
பனூ குரைழா குலத்தவர் ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஅத் (ரலி) அவர்களை அழைத்து வர ஆளனுப்பினார்கள். ஸஅத் (ரலி) அவர்கள் அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் தான் (ஓரிடத்தில்) இருந்தார்கள். அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவருக்காக எழுந்து செல்லுங்கள்'' என்று கூறினார்கள்....
அறிவிப்பவர்: அபூஸயீத்   அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 3043
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் (தம் பேரப் பிள்ளை) ஹஸன் (ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்து வந்து அவருடனே மிம்பரில் ஏறினார்கள். பிறகு, "இந்த என் மகன் தலைவர் ஆவார். இவர் வாயிலாக அல்லாஹ் முஸ்லிம்களின் இரு குழுவினரிடையே சமாதானம் செய்து வைக்கக் கூடும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 3629
அல்லாஹ் தான் தலைவன் என்று கூறிய நபி (ஸல்) அவர்களே, மற்றவர்களைத் தலைவர் என்று அழைத்திருப்பதால் இரண்டையும் இணைத்துத் தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
மனிதர்களைத் தலைவர் என்று அழைப்பது, அல்லாஹ்வுக்கு நிகராக மனிதர்களைக் கருதும் அளவுக்குக் குற்றம் என்றால் அதை நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்.
எனவே மனிதர்களில் ஒரு கூட்டத்தின் தலைமைப் பொறுப்பு வகிப்பவரையோ அல்லது ஓர் அமைப்பிற்குத் தலைமை தாங்கக் கூடியவர்களையோ தலைவர் என்று அழைப்பதில் தவறில்லை என்பதை அறியலாம்.
அப்படியானால் நபி (ஸல்) அவர்களைத் தலைவர் என்று பனூ ஆமிர் கூட்டத்தினர் அழைத்த போது அல்லாஹ் தான் தலைவன் என்று கூறியது ஏன்? என்ற கேள்வி எழுகின்றது.
இந்த ஹதீஸின் கருத்தை வைத்துப் பார்க்கும் போது, குறிப்பிட்ட இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமே இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாகத் தெரிகின்றது. எனவே பனூ ஆமிர் கூட்டத்தினர், ஸய்யித் - தலைவர் என்ற வார்த்தையை, அல்லாஹ்வுக்கு நிகரான பொருளில் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதனால் தான், அல்லாஹ்வே தலைவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அபூதாவூதின் விரிவுரையான அவ்னுல் மஅபூத் எனும் நூலில் இந்த ஹதீஸிற்கு விளக்கம் எழுதும் போது, பனூ ஆமிர் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்கள், எனவே தலைவர் என்ற வார்த்தையை அல்லாஹ்வுக்குப் பயன்படுத்துவது போன்ற அர்த்தத்தில் அவர்கள் பயன் படுத்தியிருக்கலாம் என்று விளக்கம் அளிக்கின்றார்கள். இது ஏற்கத்தக்க விளக்கமாக அமைந்துள்ளது.
எனவே அல்லாஹ் அல்லாதவர் களைத் தலைவர் என்று அழைப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை.
அபூசுஃப்யான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் அவரை குறைஷிகளின் தலைவர் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் அழைத்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார் கள். எனவே முஸ்லிம்களாயினும் மற்ற சமூகத்தவர்களாயினும் அவர்களில் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களை, தலைவர் என்று அழைப்பதில் தவறில்லை

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites