அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 7 நவம்பர், 2010

இவ்வுலகமும் மறுஉலகமும்



அபூ நஸீஹா
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது உங்களில் ஒருவர் தம் ஆட்காட்டி விரலைக் கடலில் நுழைப்பதைப் போன்றதாகும். பின்னர் (கடலிலிருந்து எடுக்கும் போது) அந்த விரல் எந்த அளவுக்கு (தண்ணீரை) எடுத்துக் கொண்டு வருகிறது என்பதைக் கவனிக்கட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஸ்தவரித் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 5101
திர்மிதீ 2245, இப்னுமாஜா 4098
மறுமை வாழ்க்கையின் அளவில்லா சிறப்பை விளங்குவதற்கு இது மிகச் சிறந்த உதாரணமாகும். இவ்வுலக வாழ்க்கையில் கிடைக்கும் இன்பங்கள் மற்றும் மறு உலக வாழ்க்கையில் கிடைக்கும் இன்பங்களைப் பற்றி இந்த உதாரணம் மூலம் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
மறு உலகத்தில் கிடைக்கும் இன்பங்கள் கடலளவு நிறைந்தவை. இவ்வுலக இன்பங்கள் ஒருவர் கடலில் தனது ஆட்காட்டி விரலை நுழைத்து வெளியே எடுக்கும் போது அந்த விரலில் கடல் நீர் எவ்வளவு மிஞ்சியிருக்கும்? இந்த விரலில் ஒட்டிக் கொண்டிருப்பது தான் இவ்வுலக இன்பம். இதுதான் இவ்வுலக, மறு உலக இன்பங்களுக்கு உதாரணம்.
மறுமை இன்பம் என்ற கடலுடன் ஒப்பிடும் போது விரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் அளவு தான் இவ்வுலக இன்பங்கள் எனும் போது, இதில் முஃமின்கள் எந்த இன்பத்தைத் தேர்வு செய்ய போகிறார்கள்?
இதைப் போன்று நபி (ஸல்) அவர்கள், ஒருவருக்குச் சொர்க்கத்தில் சிறிதளவு இடம் கிடைப்பதைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்கள்.
"சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது இவ்வுலகம், இவ்வுலகத்தில் உள்ளதை விடச் சிறந்ததாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்கள்: புகாரீ 2892,
திர்மிதீ 1572, இப்னுமாஜா 4321, அஹ்மத் 15012, தாரமீ 2699
விரல் நுனியில் ஒட்டிக் கொண்டிருக்கும் இன்பத்திற்காக, கடல் அளவு இன்பத்தை இழக்கும் மனிதர்களைப் பார்த்து அல்லாஹ் இவ்வாறு கேட்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? "அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள்!'' என்று உங்களிடம் கூறப்படும் போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது. (அல்குர்ஆன் 9:38)
இவ்வுலக இன்பத்தை விரும்பி ஒருவர் நடந்தாலும் அதைத் தருபவனும் அல்லாஹ் தான். அவன் நாடாமல் ஒரு போதும் இவ்வுலக இன்பத்தை நீங்கள் அடைய முடியாது என்று பின்வரும் வசனத்தில் கூறுகின்றான்.
யாரேனும் இவ்வுலகின் பயனை விரும்பினால் இவ்வுலகின் பயனும், மறுமையின் பயனும் அல்லாஹ்விடமே உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:134)
அல்லாஹ்வை நம்பாதவர்கள், நம்பியும் அவன் கட்டளைப்படி நடக்காதவர்கள், பொருட் செல்வங்கள் அதிகம் பெற்றவர்கள் ஆகியோரைப் பார்த்து நாமும் இவ்வாறு இருந்தால் நமக்கும் அதிகப் பொருட் செல்வம் இருக்குமே என்று எண்ணி ஏமாந்து விடக் கூடாது. ஏனெனில் இவ்வாறு அவர்களுக்கு பொருட் செல்வம் வழங்கப்பட்டிருப்பது அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு தான் என்பதை மறந்துவிட வேண்டாம்!
அவர்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அவற்றின் மூலம் இவ்வுலக வாழ்க்கை யில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டு இருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 9:55)
"விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும்  அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை'' என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 57:20)
இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.
"இவ்வுலகத்தைப் பயந்து கொள்ளுங்கள்! பெண்களையும் பயந்து கொள்ளுங்கள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: முஸ்லிம் 4925
இவ்வுலக வாழ்க்கை மனிதனை மயக்கத்தில் ஆழ்த்தும். அதன் மீது ஆசையைத் தூண்டும். மனிதன் வளரும் போதே இந்த ஆசையும் சேர்ந்தே வளர ஆரம்பிக்கும். அதற்காக மார்க்கச் சட்டங்களைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு உலக இன்பங்களுக்கு முதலிடம் கொடுத்து விடக் கூடாது.
"மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன. 1. பொருளாசை, 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 6421
நபித்தோழர்களிடத்தில் நபி (ஸல்) அவர்கள் இந்த உலக இன்பங்களைத் தான் மிக அதிகமாக எச்சரித்துச் சென்றுள்ளார்கள்.
இவ்வுலக வாழ்க்கையில் இறைக் கட்டளைப்படியும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியின்படியும் நடப்பவர் களுக்கு இந்த உலகம் ஒரு சிறைச்சாலையைப் போன்றே தோற்றமளிக்கும். இறைக் கட்டளையை மதிக்காதவர்களுக்கு இந்த உலகம் சொர்க்கப் பூஞ்சோலையாகக் காட்சியளிக்கும்.
நபி (ஸல்) அவர்களிடம் இந்த உலக இன்பத்தைப் பற்றி எடுத்துரைத்த போது கூட அவர்கள் மறு உலகத்தில் இதைவிடச் சிறந்த இன்பத்திற்குக் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்கள்.
படைத்தவனை நம்பியவர்கள், மறு உலக வாழ்க்கையை நம்பியவர்கள் கடல் அளவு இன்பத்தைப் பெற முற்சிக்க வேண்டும்.
இவ்வுலகம் முஃமின்களுக்குச் சிறைச்சாலையாகவும் இறை நிராகரிப்பாளர்களுக்குச் சொர்க்கமாகவும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்கும் இடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்சம் நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுது விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஏன் அழுகிறீர்கள்?'' என்றார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை   நீங்கள் விரும்பவில்லையா?'' என்று கேட்டார்கள். (நூல்: புகாரீ 4913)
பிர்அவ்ன் என்ற கொடுமைக்கார அரசனின் ஆட்சியில் வாழ்ந்த சூனியக்காரர்கள், ஃபிர்அவ்னின் கட்டளைப்படி மூஸா நபியுடன் போட்டிக்கு வந்தார்கள். ஆனால் மூஸா (அலை) அவர்கள் செய்தது சூனியம் அல்ல; உண்மையான அற்புதம் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டார்கள். அப்போது அவர்கள், பிர்அவ்னின் கொடுமைகளுக்குப் பயப்படாமல் ஓரிறைக் கொள்கையை ஏற்று இவ்வாறு கூறினார்கள்:
"எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்த வனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய். எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்'' (என்றும் கூறினர்.) (அல்குர்ஆன் 20;72,73)
நபி (ஸல்) அவர்களைப் போன்றும், பிர்அவ்ன் காலத்தில் வாழ்ந்த இந்தச் சூனியக்காரர்களைப் போன்றும் மறுமை வாழ்க்கைக்கு முதலிடம் கொடுத்து இவ்வுலக வாழ்க்கையில் இஸ்லாம் கூறிய அறிவுரைகளைப் பேணி நடந்து கொள்வோம்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites