கோடைக்காலத்தில் சென்னை, திருச்சி போன்ற இடங்களில் கடும் வெயில் வீசுகிற நேரத்தில் ஊட்டியில் சுகமாக குளுகுளு என்று இருக்கிறது. குளிர்காலத்தில் ஊட்டியில் நன்றாகவே குளிர் இருக்கிறது. ஊட்டி மட்டுமல்ல! மணாலி, சிம்லா, டார்ஜிலிங் போன்ற மலை உச்சிகளில் உள்ள இடங்களில் எல்லாம் குளிர் வீசுகிறது.
கடல் மட்டத்தில் உள்ள சென்னை நகருடன் ஒப்பிட்டால் ஊட்டியானது சூரியனுக்குச் சற்றே அருகாமையில் உள்ளதாகவும் கூறலாம். அப்படியிருந்தும் ஊட்டியில் குளிர் வீசுவானேன்? மலை உச்சியில் உள்ளதால் ஊட்டி குளுகுளு என்று இருப்பதாக விளக்கம் அளிக்கலாம். ஆனால் ஊட்டி போன்று உச்சியில் உள்ள இடங்களில் கடும் வெப்பம் இல்லாதது ஏன்?
காற்று அழுத்தக் குறைவு இதற்குக் காரணம். கடல் மட்டத்தில் காற்று அழுத்தம் சுமார் 1000 மில்லி பார் அளவில் உள்ளது. தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்று அழுத்தம் குறைகிறது. அதே போல காற்று அடர்த்தியும் குறைகிறது.
சுமார் 400 பேர் அமரக் கூடிய மண்டபத்தில் நிற்கக் கூட இடமில்லாத வகையில் 700 பேர் கூடி இருந்தால் நடக்கும் போது ஒருவர் மீது ஒருவர் இடிக்காமல் செல்ல முடியாது. ஓரிடத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது காற்று மூலக் கூறுகள் (ஙர்ப்ங்ஸ்ரீன்ப்ங்ள்) ஒன்றோடு ஒன்று முட்டி மோதுகின்றன. அவை இவ்விதம் வேகமாக முட்டி மோதுகிற நிலையில் தான் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது.
எனினும் ஒரு பெரிய மண்டபத்தில், இங்கு ஒருவர், அங்கு ஒருவர் என்று உட்கார்ந்திருப்பது போல தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்று மூலக்கூறுகள் குறைகிறது. அவற்றின் இடையே மோதலும் குறைகிறது. ஆகவே வெப்பம் குறைகிறது.
தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல 1000 அடிக்கு 3.6 டிகிரி பாரன்ஹீட் வீதம் வெப்பம் குறைவதாக நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். ஊட்டி சுமார் 2240 மீட்டர் (8031 அடி) உயரத்தில் உள்ளதால் அங்கு காற்று அழுத்தம் குறைவாகவும் அதன் விளைவாக வெப்பம் குறைவாக - அதாவது குளுகுளு என்று இருக்கிறது. ஊட்டி மட்டும் 18 ஆயிரம் அடி உயரம் கொண்டதாக இருக்குமானால் ஊட்டியில் உறைபனி காணப்படும்.
ஆப்பரிக்காவில் கென்யா நாட்டில் மவுண்ட் கென்யா சிகரம் உறை பனியால் மூடப்பட்டதாகும். சொல்லப்போனால் அது பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில் உள்ளது.
ஊட்டியின் குளிர் காலத்தில் குளிர் கடுமையாக உள்ளதற்கு இன்னொரு காரணமும் சேர்ந்து கொள்கிறது.
அதாவது டிசம்பர் வாக்கில் சூரியன், பூமியின் நடுக்கோட்டுக்கு மிகவும் கீழே இருபத்தி மூன்றரை டிகிரி தெற்கு அட்சரேகைக்கு மேலாக அதாவது மகரரேகைக்கு மேலே உள்ளது.
ஆகவே சூரிய கிரணங்கள் ஊட்டியில் மிகச் சாய்வாக விழுகின்றன. எந்த இடமானாலும் சூரியனின் ஒளிக் கதிர்கள் சாய்வாக விழுகிற காலங்களில் வெயில் உறைக்காது.
பூமியின் நடுக்கோட்டிலிருந்து ஓர் இடம் எந்த அளவுக்கு வடக்கே தள்ளி இருக்கிறதோ அந்த அளவுக்கு டிசம்பர், ஜனவரி மாதங்களில் அங்கு சூரியக் கதிர்கள் சாய்வாக விழும். சூரியக் கதிர்கள் எந்த அளவுக்கு சாய்வாக விழுகிறதோ அந்த அளவுக்கு அங்கு குளிர் அதிகமாக இருக்கும்.
ஆகவே தான் மேற்படி மாதங்களில் வடக்கே செல்லச் செல்ல குளிர் கடுமையாக உள்ளது. அதன் விளைவாக அங்கு பனிப்பொழிவு (Snowfall) ஏற்படுகின்றது.
இமாச்சலப் பிரதேசம் வடக்கே மிகத் தள்ளி அமைந்துள்ளது. அத்துடன் அது உயரத்திலும் உள்ளது. ஆகவே அங்கு குளிர்காலத்தில் பனிப் பொழிவு உள்ளது.
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். சூரிய ஒளிக் கதிர்கள் காற்றை நேரடியாகச் சூடாக்குவதில்லை. சென்னை போன்ற இடங்களில் கோடையில் சூரிய வெப்பத்தின் விளைவாக தரை சூடு ஏற. அதன் விளைவாகவே காற்று சூடாகிறது. காற்றில் உள்ள சூடு தான் வெப்பமாகப் பதிவாகிறது.
நன்றி: தினமணி நாளிதழ்
1 கருத்துகள்:
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே ..
உங்களது தளம் மிக அருமை ..வாழ்த்துக்கள் ..
நான் ஒரு ஆயுர்வேத மருத்துவன்
நானும் ஒரு பிளாக் வைத்துள்ளேன் அதனது முகவரி ..www.ayurvedamaruthuvam.blogspot.com -என்பதாகும் ..
இப்போது நான் ஒரு போரம் தயார் செய்துள்ளேன் ..அதனுடைய முகவரி www.ayurvedamaruthvam.forumta.net -என்பதாகும் ..அதனில் இஸ்லாமும் மருத்துவமும் என்ற தலைப்பில் உங்களால் (நிச்சயம் எழுதவேண்டும் )முடிந்தால் உறுப்பினர் ஆகி -உங்களது கட்டுரைகளை எழுத வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொள்கிறேன் .செய்வீர்களா ?
கருத்துரையிடுக