இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்து உயிரை இழந்த இஸ்லாமிய சமுதாயம் இன்று வரையிலும் புறக்கணிப்பட்டே வந்துள்ளது. அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எந்த அரசும் முயற்சிக்கவில்லை. அதே நேரத்தில் அவர்களின் ஓட்டை மட்டும் தொடர்ந்து பெற்று ஏமாற்றி வந்துள்ளனர்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் கூட முஸ்லிம்கள் தங்கள் பயனை அடைய முடியவில்லை. ஏனெனில் பிற்படுத்தப் பட்டவர்கள் பட்டியலில் சுமார் 200 ஜாதிகள் உள்ளனர். இந்த 200 ஜாதிகளையும் தாண்டித் தான் முஸ்லிம்கள் இடம் பிடிக்க வேண்டும்.
கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்கள் இந்த 200 ஜாதியினருடனும் போட்டி போட முடியுமா? எனவே தான் முஸ்லிம்கள் இன்று வரையிலும் பின்தங்கியே உள்ளனர்.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் முஸ்லிம்கள் அரசு வேலைகளிலும் பொருளாதாரத்திலும் கல்வியிலும் முற்றிலும் பின்தங்கி உள்ளார்கள் என்பதை சமீபத்தில் மத்திய அரசு அமைத்த சச்சார் கமிட்டி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
2005 மார்ச் 9ல் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் உயர்மட்டக் குழுவை முஸ்-ம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது. அந்த ஆய்வுக் குழு அளித்த அறிக்கை முஸ்லிம்களின் பரிதாப நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முறையான கல்விக் கூடங்கள் இல்லாததால் முஸ்லிம்களின் கல்வித் தரம் குறைந்துள்ளதையும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதால் முஸ்லிம்கள் கல்வி கற்கத் தயங்குவதையும் இந்தக் கமிட்டி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வங்கிகளில் முஸ்லிம் பகுதிகளை அபாயகரமான பகுதியாகக் கணித்து கடன் வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பதையும் சச்சார் கமிட்டி தெளிவுபடுத்தியுள்ளது.
அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் அதிகப்பட்சமாக சில துறைகளில் மட்டும் 4.9 சதவிகிதம் வரை உள்ளனர். மிக உயர்ந்த பதவிகளில் 1.8 சதவீதம் முஸ்லிம்களே உள்ளனர். ரயில்வே துறையில் 4.5 விழுக்காடு இருக்கும் முஸ்லிம்கள் பெரும்பாலும் கீழ்நிலை ஊழியர்களாகவே உள்ளனர் என்ற உண்மையைக் கூறியிருக்கிறது.
இந்த சச்சார் கமிட்டியின் அறிக்கை, பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டால் முஸ்லிம்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
முஸ்லிம்கள் முன்னேற்றம் காண தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக கடந்த வருடம் ஜனவரி 29 அன்று கும்பகோணத்தில் பல இலட்சம் மக்களை ஒன்றிணைத்து தனி இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வேண்டும் என்பதை வெளிப்படுத்தியது.
இந்தக் கோரிக்கையின் விளைவாக ஜெயலலிதா இதற்கென கமிஷன் அமைத்தது, கருணாநிதி தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது என்பது போன்ற பலன் கிடைத்தாலும் முழுமையான பலன் இன்று வரை கிடைக்கவில்லை.
இதை மீண்டும் வலியுறுத்தும் வண்ணம் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் மக்கள் சக்தியை ஒன்றுகூட்டி வலியுறுத்தியுள்ளது.
ஆட்சியாளர்கள் உடனடியாக முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்குவது கட்டாயமாகும். இல்லை எனில் அவர்கள் மீண்டும் ஆட்சி வர முடியாது என்பதை விளங்கிக் கொள்ளட்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக