திரும்பிய திசையெல்லாம் சிணுங்கும் செல்போன்கள் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய எடுத்துக்காட்டு. முதலில் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த செல்போன்களில் இப்போது இண்டர்நெட் வசதி வரை வந்து விட்டது.
அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த செல்போன்கள் இல்லாத இளைஞர்களே இக்காலத்தில் இல்லை. ஆனால் செல்போன்களை பெரும் கலாசார சீரழிவையும், சமூகக் கேடுகளையும் ஏற்படுத்தும் கருவியாக மாற்றி வருகிறது செல்போன் சேவை நிறுவனங்கள்.
தங்களின் பாக்கெட்டை நிரப்பிக் கொள்வதற்காக, இளம் தலைமுறையினரைச் சீரழிக்கும் பல புதிய ‘சேவைகளை’ செல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.
அவற்றில் ஒன்றுதான் ‘ஃபிரண்ட்ஸ் சாட்’. இதில் இணையும் வாடிக்கையாளர்கள் முகம்தெரியாத இளம் பெண்களுடனும், இளைஞர்களுடனும் மணிக்கணக்கில் பேசி மகிழலாம்.
பல்வேறு செல்போன் நிறுவனங்களும், ‘ஃபிரண்ட்ஸ் சாட்’, ‘வாய்ஸ் சாட்’ ‘மொபைல் சாட்’ என வெவ்வேறு பெயர்களில் இந்த சிறப்புச் சேவைகளை அளித்து வருகின்றன.
இந்த ‘கடலைக் கூட்டத்தில்’ இணைவதற்கான கட்டணமாக மாதம்தோறும் ரூ. 30 வரை பிடித்துக் கொள்வார்கள். இதில் சேர்ந்தவுடன் உங்களுக்கு என்று ஒரு பிரத்யேக எண் (சாட் ஐடி) வழங்கப்படும். பின்னர் செல்போன் நிறுவனம் குறிப்பிடும் எண்ணுடன் (டயல் எண்) நமக்கு வழங்கப்படும் சாட் ஐடியை சேர்த்து டயல் செய்தால், அந்த குழுவில் உள்ளவர்களுடன் பேசலாம்.
இதற்கு கட்டணம் ஒரு அழைப்புக்கு ரூ. 2 முதல் ரூ. 3 வரை வசூலிக்கப்படும். பேசுபவரின் எண்ணும் உங்களுக்குத் தெரியாது, உங்கள் எண்ணும் அவருக்குத் தெரியாது என்பது செல்போன் நிறுவனங்கள் அளிக்கும் கூடுதல் வசதி. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி தனது நட்புச் சேவையை அளிக்கிறன்றன செல்போன் நிறுவனங்கள்.
இதற்கான விளம்பரங்களையே செல்போன் நிறுவனங்கள் புதுமையாக அறிவிக்கின்றன. சென்னை, பெங்களூர், ஹைதராபாதில் உள்ள இளம் நண்பர்களுடன் பேசி மகிழ வேண்டுமா! என்றுதான் விளம்பர வாசகம் தொடங்குகிறது. அதன் பின் இது குறித்து கூடுதல் விவரம் அறிய டயல் செய்ய வேண்டிய எண்ணை கொடுத்திருக்கிறார்கள்.
எங்களின் இந்த பிரண்ட்ஸ் சாட் குழுவில் இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பேர் சேர்ந்துள்ளனர் என்று ஒரு செல்போன் நிறுவனம் தனது வெப்சைட்டில் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் கல்லூரி, பள்ளி செல்லும் மாணவர்களைக் குறிவைத்தே இந்த சேவையை செல்போன் நிறுவனங்கள் வழங்குகின்றன.
ஏற்கெனவே இண்டர்நெட் சாட்டிங், ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களில் மூலம் முகம் தெரியாதவர்களுடன் பழகி, அது தற்கொலை வரை முடிந்த செய்திகளை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் அதை விட மோசமாக கையில் இருக்கும் செல்போன்களே, இப்போது ஆபத்தாக மாறிவருகிறது. இதுபோன்ற தேவையற்ற குறுஞ்செய்திகள், தகவல்களை விவரம் தெரிந்தவர்கள் தவிர்த்து விடுவார்கள். ஆனால் கல்லூரி, பள்ளி மாணவர்களில் என்னவென்று பார்ப்போம் என்ற ஆர்வமிகுதியால் இதில் சிக்கிக் கொள்கின்றனர்.
முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களுடன் பேசி மகிழ என்ன இருக்கிறது. இதுபோன்ற குழுக்களில் இணைபவர்கள் எந்த நோக்கத்தில் சேர்வார்கள் என்பது முக்கியமாக யோசிக்க வேண்டிய விஷயம்.
செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களுக்கு இடையே உள்ள போட்டி காரணமாகவும், தங்கள் லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் இதுபோன்ற தரம்கெட்ட சேவைகளை அளிக்கின்றன. இதில் சிக்கி சீரழிவது இந்தியாவின் எதிர்காலமான இளம் தலைமுறையினர்தான்.
விடுதிகளில் தங்கிப் படிக்கும், தினமும் அதிகதூரம் பயணித்து கல்லூரி, பள்ளிக்குச் சென்று வரும் தங்கள் பிள்ளைகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான் பெரும்பாலான பெற்றோர்கள் செல்போன்களை வாங்கிக் கொடுக்கிறார்கள்.
அவர்கள் அதை எந்தவிதத்தில் எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கூட இருந்தே கண்காணிப்பது மிகக் கடினம். இந்நிலையில் இதுபோன்ற தேவையில்லாத சேவைகள் மூலம் இளைஞர்களுக்கு வலை விரிக்கும் செல்போன் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது கட்டாயம்.
இது தொடர்பாக ஒரு செல்போன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு இந்த சேவைக்கு எதிராக கருத்துத் தெரிவித்தபோது, ‘உங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளோம், இது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்’ என்று மட்டும் பதில் வந்தது.
புகார் செய்ததால் குறிப்பிட்ட எண்ணுக்கு மட்டும் பிரண்டஸ் சாட் தொடர்பான
விளம்பரங்கள் அனுப்புவதை அந்நிறுவனம் நிறுத்தி விட்டது. ஆனால் பிற வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற விளம்பரங்களைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது.
‘செல்’ இல்லையெனில் செல்லாக்காசு என்ற அளவுக்கு அந்தஸ்தின் அடையாளமாக விளங்குகிறது செல்போன். செல்போனை வாங்கும்போது அதில் உள்ள வசதிகளைப் பார்த்து வாங்கித் தரும் பெற்றோர்கள், சேவை அளிக்கும் நிறுவனங்கள் அளிக்கும் இதுபோன்ற விபரீத சேவைகளைத் தடுக்காவிடில், வருத்தம், ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியாது.
‘டிராய்’ கட்டுப்படுத்துமா?
‘பிரண்ட்ஸ் சாட்’ போன்ற சேவைகள் அனைத்தும் வாடிக்கையாளர் மேம்பாட்டு சேவை (விஏஎஸ்) என்ற அடிப்படையில் செல்போன் நிறுவனங்களால் அளிக்கப்படுகின்றன.
நிறுவனங்கள் எத்தகைய சேவையை அளிக்கின்றன என்பதை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கவனிக்காது.
அதேசமயம், இதுபோன்ற சேவைகள் குறித்து வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட முறையில் புகார் செய்தாலோ, அல்லது நுகர்வோர் அமைப்புகள் மூலம் புகார் செய்தாலோ அதை மனுவாக டிராய் ஏற்கும். இது தொடர்பாக அதிக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்.
செல்போன் ‘வாய்ஸ்’ மற்றும் ‘எஸ்எம்எஸ்’ அடிப்படையில் இந்த சேவையை அளிக்கின்றன. ‘வாய்ஸ்’ சேவையில் இந்த சேவையைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர், எவருடன் தொடர்பு கொண்டு பேசுகிறார் என்பது தெரியாது. இது முழுக்க முழுக்க ஜிபிஆர்எஸ் தளத்தின் மூலம் அளிக்கப்படுகிறது. ஆனால் எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தி தகவல் பரிமாற்றம் அனுப்புவோர் மற்றும் அதைப் பெறுவோரின் எண்ணைத் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் ‘கடலை’ போட விரும்புவோர் இந்த வசதியைத் தேர்ந்தெடுப்பதில்லை.
ஆனால் இது தொடர்பாக ஒரு புகார் கூட ‘டிராய்’-க்கு வரவில்லை என்பதுதான் உண்மை.தங்கள் பிள்ளைகள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ள பெற்றோர்கள் புகார் கொடுத்தால் மட்டுமே உண்டு.
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் ‘எஸ்எம்எஸ்’ அனுப்பும் வசதியை மட்டும் அளிக்கிறது. ‘வாய்ஸ்’ தகவல் பரிமாற்றம் அளிக்கவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயமாகும். இத்தகைய சீரழிவுக்கு வழிவகுக்கும் சாட் தொடர்பான புகார்களை அளிக்க நுகர்வோர் அமைப்பு ஹெல்ப்லைன் எண் மற்றும் இ-மெயில் முகவரியை அளித்துள்ளது.
தொலைபேசி எண்: 044-2859 2828
இணையதள முகவரி: consumer@tn.nic.in
புகார் அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையர், சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம், எழிலகம், 4-வது தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005.
எஸ். வெங்கடேஸ்வரன்
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF&artid=247192&SectionID=202&MainSectionID=199&SEO=&Title=
0 கருத்துகள்:
கருத்துரையிடுக