நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வெட்டுத் தீர்மானத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாக சிபு சோரன் வாக்களித்ததற்காக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் அவரது தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது பாரதிய ஜனதா கட்சி. ""நீங்கள் ஆட்சி அமைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் ஆதரவு தருகிறோம். எனக்குத் துணை முதல்வர் பதவி தாருங்கள் போதும்'' என்று முதல்வர் சிபுசோரனின் மகன் ஹேமந்த் சொன்னவுடன், ஆதரவு வாபஸ் என்கிற தீர்மானத்தைத் திருப்பிப் பெற்றுக் கொண்டுவிட்டது. இந்த மனமாற்றம் பாஜக எதிர்பாராதது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது பற்றி பாஜக தலைமை ஆலோசித்துக் கொண்டிருக்கும்போது, பாரதிய ஜனதாவின் பலவீனத்தைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இன்னொரு தடால் பல்டி அடித்துவிட்டது. முதல்வராகத் தனது தந்தை சிபுசோரனே தொடர்வார் என்கிற மறு அறிவிப்பை வெளியிட்டார் ஹேமந்த். இப்போது சிபு சோரன் ஜாலியாக சிரித்தபடி முதல்வராகத் தொடர, பாஜக தனது முகத்தில் அசடு வழிய நேற்று சிபு சோரன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறது.சிபு சோரன், காங்கிரஸýக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக வருத்தம் தெரிவித்த அவரது மகன் ஹேமந்த், இது தெரியாமல் நடந்த பிழை என்று தெரிவித்ததுடன், அதற்குச் சொன்ன காரணம் என்ன தெரியுமா? "மிகவும் மோசமான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துவிடக்கூடாது. பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டால் அதன் பின்னர் அங்கே காங்கிரஸ் தனது ஆட்சியை அமைத்துவிடும்' என்பதுதான் சிபு சோரன் தரப்பின் வாதம். அதாவது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கவிழ்ந்து விடக்கூடாது என்கிற சகதாபம். ஆனால், மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அமைத்துவிடலாகாது என்கிற ஆவேசம். பலே, இதுவல்லவா அரசியல் நேர்மை!ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் ஆதரவுடன் சிபு சோரன் ஆட்சி தொடரும் என்றும், அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு முதல்வர் பதவியையும் தன் மகனுக்கு துணை முதல்வர் பதவியையும் பெற்றுக்கொண்டு, மத்திய அமைச்சர் பதவிக்கு சிபு சோரன் வருவார் என்றும் பேச்சு எழுந்தது. இன்னொரு பக்கம், ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிதான் அமைப்பார்கள் என்றும் பேசப்பட்டது. இப்போது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதைப்போல, எதுவுமே நடக்காததுபோல சிபுசோரன் முதல்வராகத் தொடர்கிறார். பாரதிய ஜனதா வாய்மூடி கண்கட்டி, காதுகளைப் பொத்திக் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறது. இதுவல்லவா அரசியல் நேர்மை!மத்தியில் ஆதரவு, மாநிலத்தில் எதிர்ப்பு என்பது இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளும் மேற்கொண்டுள்ள அதிசயக் கொள்கை. அமைச்சரவையில் பங்குபெறாமல், பெரிதாக ஆதாயம் ஏதும் இல்லாதபோதிலும்கூட, கம்யூனிஸ்ட் கட்சிகளும், மத்திய கூட்டணியில் ஆதரவாகவும், மாநிலத்தில் அதே கூட்டணிக் கட்சிக்கு எதிராகவும் செயல்படும் அரசியலை கையில் எடுத்துக்கொள்ளும்போது, பதவி மோகத்தில் இருக்கும் சிபு சோரன் போன்றவர்கள் எத்தகைய அரசியலை கையில் எடுத்தாலும் ஆச்சரியமில்லை. ஆகவே, அவர் வெட்டுத் தீர்மானத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக, நாங்கள் கேளாமலேயே வாக்களித்தார் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும்கூட, ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.சிபு சோரன் காங்கிரஸýக்கு ஆதரவாக வாக்களித்தபோது, அதைப் பொருள்படுத்தாமல், அடுத்த வேலையைப் பார்த்திருந்தால் பாரதிய ஜனதாவுக்கு இத்தகைய சங்கடமான நிலைமை ஏற்பட்டிருக்காது. மேலும், சிபு சோரன் இந்த வெட்டுத் தீர்மானத்தில் பாஜகவுடன் துணை நின்று, காங்கிரஸýக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் மத்திய அரசுக்கு நெருக்கடி வந்திருக்கப் போவதில்லை. இதற்குப் போய் இவ்வளவு கோபப்பட்டு, இப்போது தர்மசங்கடத்தில் ஆள்பட்டு... பாஜக-வுக்கு இது ஒரு சோதனைக் காலம் போலும்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் (20 இடங்கள்) வெற்றி பெற்றுள்ள கட்சி என்ற முறையிலும், பெரும்பான்மை இல்லாத ஒரே காரணத்தால் ஆட்சி அமைக்க முடியாத ஏக்கத்திலும், ஏதோ அமைச்சரவையில் கூட்டணிக் கட்சியாகப் பங்கு பெறும் வாய்ப்பையும் ஏன் இழக்க வேண்டும் என்று பாஜக கருதுகிறதுபோலும். ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்த சிபு சோரன், சசிநாத் ஜா கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் தண்டனை பெற்றபோது, அவரை அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று பாஜக செய்த ஆர்ப்பாட்டம் கொஞ்சமல்ல. ஆனால், அதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல்தான் பாஜக, சிபு சோரனுக்கு ஆதரவு தந்தது. அவரும் பழைய கதைகளை நினைக்காமல்தான் ஆதரவை ஏற்றார். பதவிக்காக எதையும் செய்யத் துணிந்த கட்சி என்று காங்கிரûஸ வர்ணிக்கும் ஏனைய கட்சிகளும் காங்கிரஸ் காட்டிய பாதையில்தான் பயணிக்கின்றன என்பதற்கு இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம் ஏராளம். குழந்தைகளைக் கமர்கட்டைக் காட்டி ஏமாற்றுவதுபோல, நீங்கள் ஆட்சி அமையுங்கள் என்று பதவி ஆசை காட்டி ஏமாற்றி, இப்போது அதுவும் இல்லாமல் செய்திருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ராஜதந்திரத்தை பாராட்டத்தான் வேண்டும்.படித்த முட்டாள்களைப் படிக்காத புத்திசாலி ஜெயித்துவிட்டாரே!
thanks : http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=236625&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=
0 கருத்துகள்:
கருத்துரையிடுக