எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகத்தான் முள்ளம் பன்றிக்கு முட்கள் அமைந்துள்ளன. எதிரிகள் தாக்க வரும்போது முள்ளம் பன்றி முட்களையெல்லாம் நிமிர்த்திக்கொண்டு விறைப்புடன் நிற்கும். எதிரிகள் முட்களை சரியாகப் பார்க்கும்படி முதுகு காட்டிதான் நிற்கும். சில சமயம் முட்களை ஒன்றாக மெதுவாக அசைக்கும். இதைப் பார்த்தும் எதிரி பயந்தோடவில்லையென்றால், பின்புறமாகவே விரைந்து வந்து எதிரியின் உடலில் முட்களைச் செருகும். எவ்வளவு சக்தியுள்ள பெரிய மிருகமாக இருந்தாலும் முள்ளம் பன்றியின் முள் குத்தினால் பெரும் சிரமம்தான். முள்ளம் பன்றியால் தாக்கப்பட்ட விலங்கு சில சமயம் இறந்துவிடுவதும் உண்டு. விருப்பப்படி அசைக்க முடிகிற தளர்வான தசைகளில்தான் முட்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தசைகளை தளர்த்தியும் இறுக்கியும், முட்களைப் படிய வைக்கவோ உதிர்க்கவோ முள்ளம் பன்றிகளால் முடியும்.
முள்ளம் பன்றியால் குத்துப்பட்ட மிருகத்தின் உடலில் தைத்த முள்ளின் முனைகள் சிறிய கொக்கிகளைப்போல நிமிர்ந்து மடங்கி உட்சென்றுகொண்டிருக்கும். எதிரிகளிடமிருந்து ஓடியோ, ஒளிந்தோ, தப்பிக்க இயலாதவை முள்ளம் பன்றிகள். அதனால்தான் இயற்கை முட்களின் பாதுகாப்பை இவற்றிற்கு வழங்கியுள்ளது. முட்களற்ற பகுதி முள்ளம் பன்றியின் வயிறுதான். இது உடலில் மிகவும் மென்மையான பகுதி. எதிரிகள் இந்தப் பகுதியை பற்றிவிட்டால் முள்ளம் பன்றி வசமாகச் சிக்கிக் கொண்டுவிடும். எதிரிகளைக் கண்டால் சில சமயம் இவை உடலைச் சுறுட்டிக்கொண்டு பந்துபோலக் கிடக்கும். இந்த நிலையில், முட்களற்ற பகுதி வெளியே தெரியாது. ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் முள்ளம் பன்றிகள் வசிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக