இயற்பெயர் : மாலிக்.
குறிப்புப்பெயர் : அபூஅப்தில்லாஹ்
தந்தைபெயர் : அனஸ் பின் மாலிக்
குலம் இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்ததைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.
பிறப்பு : இவர் ஹிஜ்ரீ 93 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார்.
வளர்ப்பு : இவர் சவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார். அழகியத் தோற்றமும் அழகிய குணமும் கொண்டவராக வளர்ந்தார்.
கல்வி : இவர் பத்து வயதை அடைந்திருக்கும் போதே நல்ல எண்ணத்துடன் கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரைப் பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத்துறையிலும் தேர்ச்சிபெற்றிருந்தார்.
கல்விக்காக பயனித்த ஊர்கள் : இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்கு பயனம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்கு சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.
இவரது ஆசிரியர்கள்: தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது. நாஃபிஃ, ஹிஷாம் பின் உர்வா, யஹ்யா பின் சயீத், அப்துல்லாஹ் பின் தீனார், சைத் பின் அஸ்லம், முஹம்மத் பின் முஸ்லிம், அப்துல்லாஹ் பின் அபீபக்கர், சயீத் பின் அபீ சயீத் ஆகியோர் இவருடைய ஆசிரியர்கள்.
மாணவர்கள் : முஹம்மத் பின் முஸ்லிம், யஹ்யா பின் சயீத், நாஃபிஃ பின் மாலிக் ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள். இன்னும் இமாம் அபூஹனீஃபா, சுஃப்யான் சவ்ரீ, அல்லைஸ் பின் சஃத், ஷýஃபா, அப்துல் மலிக், மஃமர் பின் ராஷித், யஹ்யா பின் சயீத், இப்னுல் முபாரக், வகீஃ மற்றும் இமாம் ஷாஃபீ ஆகியோர் இவருடைய மாணவர்கள்.
பெற்ற சிறப்பு : இவர் சரியான கொள்கைவாதியாக இருந்தார். இவர்காலத்தில் தோன்றியிருந்த பித்அத் செய்யும் கூட்டங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். குர்ஆனுடன் அதிகம் தொடர்பு வைத்திருந்தார். இவரிடம் கற்பதற்காக ஒரு பெரும் கூட்டமே முண்டி அடித்துக்கொண்டு இவருடைய வாசலில் கூடி நிற்கும் அளவிற்கு மக்களிடம் மதிப்புப் பெற்றிருந்தார். இவர் காலத்தில் மன்னராக இருந்த ஜஃபர் பின் சுலைமான் என்பவனுக்கு மாற்றமாக நிர்பந்திக்கப்பட்டவன் விட்ட தலாக் செல்லுபடியாகாது என்று கூறியதற்காக துன்புறுத்தப்பட்டார். கடுமையாக துன்புறுத்தப் பட்ட போதிலும் தான்னுடையக் கருத்தில் வளைந்து கொடுக்கவில்லை. இதன் மூலம் அல்லாஹ் அவருக்கு மெம்மேலும் அந்தஸ்த்தைத் தான் உயர்த்தினான். பெரும்பெரும் இமாம்கள் இவரைப் பற்றி பலவாறு புகழ்ந்துரைத்துள்ளார்கள்.
படைப்புகள் : புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முவத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள். ரிஸாலத்துன் ஃபில் கத்ர், ரிசாலத்துன் ஃபின்னஜ்ம், ரிசாலத்துன் ஃபில் அக்ளியா, ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான், ரிசாலத்துன் இலல்லைஸ், ஜýஸ்உன் ஃபித் தஃப்சீர், கிதாபுஸ் ஸிர், ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.
மரணம்: இவர் ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் ரபீஉல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது எண்பத்து ஆறாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக