அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 4 மே, 2010

திருக்குர்ஆன் விளக்கம் ( அல் கஹ்ஃப் (அந்தக் குகை)அத்தியாயம்)

 ஜைனுல் ஆபிதீன்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் துவங்குகிறேன். 
கஹ்ஃப் பொருள்
கஹ்ஃப் என்ற வார்த்தையின் பொருள் குகை.  அல் கஹ்ஃப் என்றால் அந்தக் குகை என்பது பொருள்.  இந்த அத்தியாயத்தின் ஒன்பதாவது வசனம் முதல் இருபத்தி ஆறாவது வசனம் வரை ஒரு குகையில் தஞ்சம் புகுந்த நல்லடியார்கள் குறித்த வரலாற்றுக் குறிப்பு கூறப்படுகிறது.  இந்த அத்தியாயத்திற்கு அல் கஹ்ஃப் (அந்தக் குகை) என்று பெயர் வர இதுவே காரணமாகும். 
அருளப்பட்ட இடம் காலம்
இந்த அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப் பட்டது என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளதாக குர்துபி உள்ளிட்ட பல விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.  ஆயினும் இதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் எதையும் இவர்கள் எடுத்துக் காட்டவில்லை. 
இந்த அத்தியாயத்தில் உள்ள வசனங்களில் கூறப்படும் செய்திகளைப் பார்க்கும் போது. சில செய்திகள் மக்காவில் அருளப்பட்டு இருக்கலாம்.  வேறு சில செய்திகள் மதினாவில் அருளப்பட்டு இருக்கலாம் என்று அனுமானம் செய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன.  இன்னும் சில வசனங்களின் அமைப்பைப் பார்க்கும் போது அதன் அமைப்பிலிருந்து அது மக்காவில் அருளப்பட்டது என்றோ மதினாவில் அருளப்பட்டது என்றோ முடிவுக்கு வரமுடியாது. 
எனவே, ஒட்டு மொத்தமாக இந்த அத்தியாயம் மக்காவில் அருளப் பட்டது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.  ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. 
இது மக்காவில் அருளப்பட்டது அல்லது மதினாவில் அருளப்பட்டது என்று நபித் தோழர்கள் கூறியதாக குறிப்பு கிடைக்கும் போது மட்டுமே இது பற்றி நாம் முடிவுக்கு வரவேண்டும்.  அவ்வாறு குறிப்புகள் கிடைக்காத போது மக்கீ, மதனி என்று ஏதாவது ஒன்றைக் கூறியாக வேண்டும் என்பதற்காக எதையாவது கூறுவதை ஒப்புக் கொள்ள முடியாது.  திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் பலர் மக்கீ, மதனி என்று எதையாவது கூறியாக வேண்டுமே என்பதற்காகத்தான் கூறியுள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற அடிப்படையில் திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் சமமானவையே என்றாலும் சில அத்தியாயங்களுக்கு தனிச் சிறப்புகள் இருப்பதாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.  திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இத்தகைய ஹதீஸ்களில் பெரும்பாலானவை இட்டுக் கட்டப் பட்டவையாகவே உள்ளன.
அல் பகரா, குல்ஹுவல்லாஹ், குல்அஊது பிரப்பின்னாஸ், குல்அஊது பிரப்பில் ஃபலக், அல்ஹம்து, ஆயத்துல் குர்ஸி, அல் கஹ்ஃப் ஆகிய அத்தியாயங்களின் சிறப்பு குறித்த ஹதீஸ்களில் மட்டுமே ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகிறது.  கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் குறித்தும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதால் அந்த சிறப்புகளை அறிந்து விட்டு இந்த அத்தியாயத்தின் விளக்கத்திற்குள் நாம் நுழைவோம்.
சிறப்புகள்
கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி)
நூல் : முஸ்லிம்
இந்தப் பத்து வசனங்களுக்கும் தஜ்ஜாலுக்கும் என்ன தொடர்பு என்பதை பத்து வசனங்களுக்கான விளக்கம் நிறைவடையும் போது நாம் குறிப்பிடுவோம் இன்ஷா அல்லாஹ்.  இந்தப் பத்து வசனங்களை மனனம் செய்வது தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கும் கேடயம் என்பதை மட்டும் இப்போது புரிந்து கொண்டால் போதுமானது. 
உங்களில் யார் தஜ்ஜாலை அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நீண்ட ஹதீஸின் சிறு பகுதி)
அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி)
நூல் : முஸ்லிம்
அபூதாவூத் நூலின் அறிவிப்பில், "அவனை உங்களில் யார் அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் நிச்சயமாக அது தஜ்ஜாலின் சோதனைகளிலிருந்து பாதுகாக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது. 
முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரிய சோதனையாக இருக்கும் தஜ்ஜாலின் வருகையின் போது ஈமானைக் காக்கும் கேடயமாக இவ்வசனங்கள் அமைந்திருப்பது இந்த அத்தியாயத்திற்கான சிறப்புக்களில் ஒன்றாகும். 
ஒரு மனிதர் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார்.  அப்போது வீட்டிலிருந்த கால்நடை ஓட ஆரம்பித்தது.  கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிய மனிதர் கவனித்த போது அவர் மீது மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது.  அவர் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இந்த நிலை குர்ஆனை ஓதும் போது இறங்கிய (சகீனத் எனும்) அமைதியாகும்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : பராஃ (ரலி), நூலகள் : புகாரி, முஸ்லிம்
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதினால்அடுத்த ஜும்ஆ வரை அவருக்கு பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீது (ரலி), நூல் : ஹாகிம்
அல் கஹ்ஃப் அத்தியாயம் இத்தகைய தனிச் சிறப்புகள் வாய்ந்த அத்தியாயம் ஆகும்.  இந்த அத்தியாயத்தின் விளக்கத்தை இனி காணலாம்

முதல்வசனம்
"தனது அடியார் (முஹம்மது) மீது இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்''
என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று அல்லாஹ் கூறுவதால் அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான் என்று கருதிக் கொள்ளக் கூடாது. மாறாக அவனது அடியார்களாகிய நாம் அவனைப் புகழ வேண்டும் என்று கற்றுத் தருவதற்காகவே இவ்வாறு குறிப்பிடுகிறான்.
ஃபாதிஹா அத்தியாயம், அல் அன்ஆம் அத்தியாயம், ஸபா அத்தியாயம், ஃபாதிர் அத்தியாயம் ஆகிய நான்கு அத்தியாயங்களும் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று துவங்குகின்றன.
ஃபாத்திஹா அத்தியாயத்தில் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே எனக் கூறி விட்டு உன்னையே வணங்குகின்றோம் என்று தொடர்ந்து கூறுகின்றான்.  உன்னையே வணங்குகின்றோம் என்று அல்லாஹ் கூறினாலும் நாம் அவ்வாறு கூற வேண்டும் என்று கற்றுத் தருவதுதான் இதன் கருத்தாகும்.  எனவே, இந்த வசனத்தையும் இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வை அவனுடைய அடியார்களாகிய நாம் புகழ வேண்டும் என்பதை மட்டும் கூறாமல் ஏன் அவனை நாம் புகழ வேண்டும் என்ற காரணத்தையும் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகின்றான். 
அவனது அடியார் மீது இவ்வேதத்தை அருளியது தான் அந்தக் காரணம். "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே'' என்று துவங்கும் ஏனைய நான்கு அத்தியாயங்களில் அல்லாஹ்வை நாம் ஏன் புகழ வேண்டும் என்பதற்கு இங்கே கூறிய காரணத்தை குறிப்பிடவில்லை.  மாறாக அல்லாஹ் அளவற்ற அருளாளனாக இருப்பதாலும் அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தற்காகவும் உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் அவனுக்கு உரிமையானதாக இருப்பதாலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று கூறிய இறைவன், இங்கே திருக்குர்ஆன் எனும் இவ்வேதத்தை அருளியதால் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறச் சொல்கிறான். 
ஏன் புகழ வேண்டும்?
வேதத்தை அருளியதற்காக நாம் ஏன் அவனைப் புகழ வேண்டும்? அது என்ன அவ்வளவு மகத்தானதா என்றால் நிச்சயமாக மகத்தானது தான். 
அல்லாஹ் இந்த சமுதாயத்துக்கு அருளிய அருட் கொடைகளில் எல்லாம் அதற்கு ஈடானது ஏதுமில்லை.  தனது அடியார்கள் மீது வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று கூறிய இறைவன் அதைத் தொடர்ந்து,
 எந்தக் கோணலையும் அவன் ஏற்படுத்தவில்லை''
"அதில் எந்தக் கோணலையும் அவன் ஏற்படுத்தவில்லை''
என்ற அற்புதமான சொற்றொடரையும் பயன் படுத்தியுள்ளான்.
வேதம் என்பதை சாதாரண புத்தகம் போன்று எண்ணி விடாதீர்கள்.  இந்த வேதம் அத்தகையது அன்று. இவ்வேதத்தில் எந்தக் கோணலும் கிடையாது. ஒரு கோணலும் இல்லாத இவ்வேதத்தை அருளியதால் அவனுக்கே எல்லாப் புகழும் என்று அந்தக் காரணத்திற்கு வலிமை சேர்க்கப் பட்டுள்ளது.
பொய், முரண்பாடு எல்லாக் காலத்திற்கும் தாக்குப் பிடிக்க முடியாத தன்மை, சொல்வதை தெளிவாகச் சொல்லாமல் குழப்புதல் போன்றவை கோணல் எனப்படும். இதில் எதுவுமே இல்லாமல் ஒரு வழிகாட்டும் நெறியை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
மறதி, பலவீனம், எதிர்காலம் பற்றிய ஞானமின்மை போன்ற பலவீனங்களைக் கொண்ட மனிதனின் வார்த்தையில் கோணல் இருக்கலாம். இருக்கும். எந்தப் பலவீனமும் இல்லாத அல்லாஹ்வின் வார்த்தையில் கோணல் இருக்கலாகாது. கோணல் இல்லை என்று இங்கே அல்லாஹ் அறை கூவல் விடுக்கிறான்.
இதன் காரணமாகத்தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் இது போன்றதொரு வேதத்தை எவராலும் கொண்டு வர முடியாது என்று அல்லாஹ் சவால் விடுகிறான்.
இன்னும் (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியார்க்கு நாம் அருளியுள்ள(வேதத்)தில் நீங்கள் சந்தேகமுடையோராக இருப்பீர்களானால் (அந்தச் சந்தேகத்தில்) உண்மை உடையவர்களாகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (எல்லாம் ஒன்றாக) அழைத்துக் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். (அல்குர்ஆன் 2 : 23)
இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா?   "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதிலுள்ளதைப் போன்று ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்.  அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்'' என்று (நபியே!) நீர் கூறும்.  (அல்குர்ஆன் 10 : 38)
அல்லது "இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்'' என்று அவர்கள் கூறுகிறார்களா? "(அப்படியானால்) நீங்களும் இதைப்
 போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களைக் கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்கு துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்'' என்று (நபியே) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 11 : 13)
இந்தக் குர்ஆனைப் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது என்று (நபியே) நீர் கூறும்.     (அல்குர்ஆன் 17 : 88)
ஆகவே, "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (குர்ஆன், தவ்ராத்) இவ்விரண்டையும் விட நேர் வழிகாட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடம் இருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்.  நானும் அதைப் பின்பற்றுகிறேன் என்று (நபியே) நீர் கூறும். (அல்குர்ஆன் 28 : 49)
ஆகவே, அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும். (அல்குர்ஆன் 52 : 34)
இவை அல்லாஹ் குர்ஆனைப் பற்றி விடுக்கும் அறைகூவல்கள். கோணல் நிறைந்த புத்தகம் குறித்து இது போன்ற அறைகூவல் விட முடியாது.
இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவர்களிடம் இருந்து இது வந்திருந்தால் இதில் அநேக முரண்பாடுகளை அவர்கள் காண்பார்கள். (அல்குர்ஆன் 4 : 82)
இதன் முன்புறமோ பின்புறமோ தவறுகள் இதை அணுகாது. புகழுக்குரிய நுண்ணறிவாளன் புறத்திலிருந்து இது அருளப் பட்டதாகும். (அல்குர்ஆன் 41 : 42)
இந்த வேதத்தை சிந்திக்க மாட்டார்களா? என்று அறைகூவல் விடுக்கும் வேதம் இந்த உலகில் திருக்குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இல்லை. சிந்தித்துப் பார்த்தால் இதில், ஒரு முரண்பாட்டைக் கூட காணமுடியாது என்று கூறக்கூடிய வேதமும் இது ஒன்று தான்.
இதில் கோணல் எதுவும் இல்லாத காரணத்தினால் தான் 1400 ஆண்டுகளைக் கடந்த பின்பும் அது நடைமுறைப்படுத்தப் படுகிறது. எந்த மாறுதலுக்கும் தேவைப்பட வில்லை. இஸ்லாத்திற்கு காலத்தால் பிந்திய எல்லா தத்துவங்களும் கொள்கைக் கோட்பாடுகளும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் காலத்தை வென்று நிற்கும் ஒரே புத்தகமாக இது திகழ்கிறது.
இஸ்லாத்தின் எதிரிகள் கூட இஸ்லாத்தின் சட்டங்கள் தான் உலகில் அமைதியை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளக் கூடிய அளவுக்கு ஒரு கோணலும் அற்றதாக உள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் தீர்க்க முடியாத தீண்டாமைக் கொடுமை முதல் ஏனைய கிரிமினல் குற்றங்கள் வரை வேரோடு அறுத்தெறியப்பட வேண்டுமானால் குர்ஆனை விட்டால் வேறு வழியே கிடையாது என்பது சந்தேகமற நிரூபிக்கப்பட்டு விட்டது.
மயிர்பிளக்கும் வாதங்கள் புரியும் அறிவுலக மேதைகள் எல்லாம் எந்த ஆற்றலும் இல்லாத ஒரு கல்லின் முன்னால் தலைகுனிந்து வணங்கும் நேரத்தில் கையெழுத்து போடத் தெரியாத ஒரு முஸ்லிம் மட்டும் அதைக் கல் என்று சரியாகப் புரிந்து கொள்கின்றான் என்றால் அதற்குக் காரணம் இவ்வேதம்தான்.
எனவே தான் இவ்வளவு அற்புதமான வேதத்தை அருளியதற்காக அதன் மூலம் மிருகங்களாக இருந்தவர்களை மனிதர்களாக வாழச் செய்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று அல்லாஹ் துதி பாடச் சொல்கிறான்.
இதில் எந்தக் கோணலையும் ஏற்படுத்தவில்லை என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக, "இதை நேரானதாகவும் அருளியிருக்கின்றான்'' என்று கூறுகின்றான். கோணலை ஏற்படுத்தவில்லை. மாறாக நேரானதாக அதை அருளியிருப்பதாகக் கூறி, புகழ் அனைத்திற்கும் அவன் மட்டுமே உரித்தானவன் என்பதை வலியுறுத்துகின்றான்.
"நேரானதாகவும் எவ்விதக் கோணலும் அற்றதாகவும் இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்'' என்று கூறினால் சொல்லவருகின்ற கருத்து முழுமை அடைந்து விடும். ஆயினும், இங்கே "தன் அடியார் மீது'' என்ற சொற்றொடரையும் சேர்த்து கூறுகின்றான்.
வேதம் அருளப்பட்டது மட்டும் அருட்கொடை ஆகாது. அருளப்படுவதற்குத் தகுதியானவர் மீது அருளப்பட்டதும் சேர்த்துத் தான் இது அருட்கொடையாகிறது.
வேதத்தில் சில வசனங்களைப் பார்க்கும் போது தெளிவற்றதாகத் தோற்றமளிக்கலாம். ஆனால் யார் மீது இவ்வேதத்தை அல்லாஹ் அருளினானோ அவர் அளித்த விளக்கம் காரணமாக பிரகாசமான தெளிவு தென்படும்.
எனவே தான் "தனது அடியாருக்கு இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்'' என்கிறான்.
வேதத்துக்கு நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் இல்லை என்றால் "தனது அடியார் மீது'' என்ற வாசகம் பொருளற்றதாகி விடும்.
இவ்வேதம் அருளப்பட்டது ஓர் அருள். அதில் ஒரு கோணலும் இல்லாமல் நேராக அமைந்திருப்பது மற்றோர் அருள். மேலும் யாருக்கு அருள வேண்டுமோ அத்தகையவருக்கு அருளியிருப்பது இன்னோர் அருள் எனக்கூறிய இறைவன் அடுத்து வரும் வசனங்களில் இவ்வேதம் என்ன நோக்கத்திற்காக அருளப் பட்டது என்பதை விளக்குகிறான்.

2, 3 வசனங்கள்
தன்னிடமுள்ள கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும் நல்லறங்கள் புரிந்தோருக்கு நிச்சயமாக அழகான பரிசு இருக்கிறது என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இவ்வேதத்தை அருளினான்) அதில் (பரிசாகப் பெறக் கூடிய சொர்க்கத்தில்) அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். (2,3 வசனங்கள்)
திருக்குர்ஆன் எவ்விதக் குறைபாடும் முரண்பாடும் இல்லாமல் அருளப்பட்டதாகக் கூறிய இறைவன் இவ்வசனங்களில் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தைத் தெளிவு படுத்துகிறான்.
அந்த நோக்கம் மறுமை வாழ்க்கை குறித்து எச்சரிப்பது தான்.  இந்த ஒரு நோக்கத்திற்காகத் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.
இவ்வுலகில் வாழும் மனிதன், தீமை செய்பவர்கள் சொகுசான இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பதையும், நல்லறங்களில் ஈடுபடுவோர் துன்பங்களில் உழல்வதையும் காண்கிறான்.
நல்லவனாக வாழ்ந்தால் ஒரு பயனும் இல்லை.  தீயவனாக நடப்பதால் ஒரு கேடும் இல்லை என்று அவனது மனம் கணக்குப் போடுகிறது.  அவனும் தீயவனாக மாறிவிடுகிறான்.
இந்த மனநிலையை மாற்றியமைப்பது தான் திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான நோக்கம்.
இவ்வுலகில் நல்லவனாக வாழும் போது பல இன்பங்களை இழக்க நேரிட்டாலும், பல துன்பங்களைச் சுமக்க நேரிட்டாலும் நல்லவனாக வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்து விடாதீர்கள்!  மாறாக நீங்கள் இழந்த இன்பங்களை விடப் பல மடங்கு இன்பங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.
அந்த இன்பங்கள் சொற்பமான நாட்களில் முடிந்துவிடக் கூடியதல்ல.  மாறாக என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியவை என்று ஆர்வமூட்டுவது தான் திருக்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கம்.
நல்ல காரியங்களில் ஈடுபட ஆர்வமிருந்தும் அதனால் எந்தப் பயனும் இல்லையே எனக் கருதுவோரை இந்த நம்பிக்கை நல்வழிப்படுத்தும்.
இது போலவே தீய காரியங்களில் ஈடுபடுபவன், தான் செய்யும் காரியங்கள் தீமையானவைதான் என்று அறிவுப்பூர்வமாக உணர்ந்தாலும், தனது தீய காரியங்களால் மற்றவர்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாக நேர்வதைக் கண்கூடாகக் கண்டாலும் அவன் அக்காரியங்களிலிருந்து விலகிக் கொள்ள மறுக்கிறான்.
காரணம், தான் செய்கின்ற தீய காரியங்களால் தனக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லையே!  தனக்குச் செல்வமும் செல்வாக்கும் புகழும் தானே அதிகரிக்கிறது.  பிறகு ஏன் இக்காரியங்களிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்? என்றெல்லாம் நினைக்கக் கூடியவன் தீய காரியங்களில் தொடர்ந்து மூழ்கி விடுகிறான்.
தனது ஒவ்வொரு தீயசெயலும் தன்னைப் படைத்த இறைவனால் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன.  அவனை எவ்வகையிலும் ஏமாற்ற இயலாது.  இவ்வுலகில் வாழும் போதே தவறுகளிலிருந்து திருந்திக் கொள்ளாவிட்டால் அதே நிலையிலேயே மரணித்து விட்டால் கடவுளால் தண்டிக்கப்படுவோம்.  அந்தத் தண்டனை இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அடைகின்ற துன்பங்களை விடக் கடுமையானவை.  தாங்கிக் கொள்ள முடியாதவை என்றெல்லாம் எச்சரிக்கவே இந்தக் குர்ஆன் அருளப்பட்டது.
மரணித்தவுடன் எல்லாம் முடிந்து விடுகிறது என்ற நம்பிக்கைதான் மனிதனது தீய செயல்களுக்கு அடிப்படையாகவுள்ளன.  இந்த அடிப்படையைத் தகர்க்காமல் என்னதான் சட்டங்கள் போட்டாலும் எத்தனை அறிவுரைகள் கூறினாலும் அதனால் ஒரு பயனும் ஏற்படாது.
முதன் முதலில் நம்மைப் படைத்த இறைவன் மீண்டும் படைக்க ஆற்றல் மிக்கவனாகவுள்ளான்.  அவன் மக்கள் அனைவரையும் அழித்த பின் மீண்டும் அனைவரையும் உயிர்த்தெழச் செய்வான்.  உயிர்த்தெழச் செய்தபின் நலலவர்கள் அழியாப் பேரின்பத்தை அடைவார்கள்.  தீயோர் தாங்க முடியாத நரக நெருப்பில் வீசப்படுவார்கள்.  இந்த அடிப்படை தான் இஸ்லாத்தின் வெற்றிக்கு மூலகாரணம்.
இந்த அடிப்படை தான் மற்ற சமுதாயங்களை விட முஸ்லிம்கள் வீரமிக்கவர்களாகத் திகழ்வதற்கும், மற்றவர்களை விட அதிகமதிகமாக வாரி வழங்கும் வள்ளல் தன்மைக்கும் இன்ன பிற சிறப்புத் தகுதிகளுக்கும் காரணமாக இருந்தது.  இன்றைக்கும் இருக்கிறது.
திருக்குர்ஆனில் கூறப்படுகின்ற வரலாறுகளானாலும், அதில் கூறப்படுகின்ற உவமைகளானாலும் சட்டதிட்டங்களானாலும் கொள்கை முழக்கங்களானாலும் அனைத்துமே அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குத் தான் கூறப்படுகின்றன.
மேலே நாம் எடுத்துக் காட்டிய இவ்வசனங்களும் இதைத் தான் கூறுகின்றன.

4,5 வசனங்கள்
மேலும் அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறுவோரை எச்சரிப்பதற்காகவும் (இவ்வேதத்தை அருளினான்) இவர்களுக்கோ இவர்களின் மூதாதையருக்கோ இது பற்றி எந்த ஞானமும் கிடையாது.  இவர்களின் வாய்களிலிருந்து புறப்படும் (வார்த்தைகளில்) மிகப்பெரிய வார்த்தையாக இது இருக்கின்றது.  இவர்கள் பொய்யையே கூறுகின்றனர்.
(சூரத்துல் கஹ்ஃப் : 4, 5 வசனங்கள்)
தனது கடுமையான தண்டனை குறித்துப் பொதுவாக எச்சரிப்பதற்காக இவ்வேதத்தை அருளியதாக முந்தைய வசனத்தில் இறைவன் கூறினான்.  கடவுளை நிராகரிப்போர், கடவுளுக்கு இணை வைப்போர், கடவுளுக்கு மனைவி மக்களைக் கற்பிப்போர் ஆகிய அனைவரும் அந்தப் பொதுவான எச்சரிக்கைக்குள் அடங்குவார்கள் என்றாலும் கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவோரைத் தனியாகக் குறிப்பிட்டு இவ்வசனங்கள் மூலம் இறைவன் எச்சரிக்கிறான்.
கடவுளுக்கு மகன் இல்லை
ஏற்கனவே கூறிய பொதுவான எச்சரிக்கையில் இவர்களும் அடங்குவார்கள் என்ற போதும் இவர்களைத் தனியாக இறைவன் குறிப்பிட்டுள்ளதிலிருந்து கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவது மற்ற இரண்டு குற்றங்களை விடக் கடுமையானது என்பதை விளங்கலாம்.
அவர்கள் பேசும் வார்த்தைகளிலேயே இது தான் பெரிய வார்த்தை என்ற சொற்பிரயோகமும் இதைத் தெளிவாக அறிவிக்கின்றது.  இணை வைத்தலில் கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவது முதலிடத்தில் நிற்கும் என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
பொதுவாக மனிதன் தனக்கு சந்ததி இருப்பதில் பெருமை கொள்கிறான்.  மகிழ்ச்சியடைகிறான்.  சந்ததி இல்லாவிட்டால் இடிந்து போகிறான்.  ஆனால் எல்லாம் வல்ல இறைவனோ தனக்கு சந்ததி இருப்பதாகக் கூறுவதைக் கடுமையாக வெறுக்கிறான். 
மனிதனுக்கு ஏன் சந்ததி?
மனிதன் ஏன் தனக்கு சந்ததிகள் வேண்டும் என்று விரும்புகிறான்? இந்தக் கேள்விக்கு விடை கண்டால் இறைவன் ஏன் சந்ததிகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்ற கேள்விக்கும் விடை காணலாம்.
மனிதன் குறிப்பிட்ட காலத்தில் தள்ளாத வயதை அடைவான்.  அவனது எல்லா செயல்பாடுகளும் படிப்படியாகக் குறைந்து செயலற்றவனாக ஆகிவிடுவான்.  அந்த நேரத்தில் தன்னைக் கவனித்துக் கொள்ள மற்றவரின் துணை அவனுக்குத் தேவைப்படுகிறது.
அந்த மற்றவன் தனது உதிரத்திலிருந்து உருவானவனாக இருந்தால் தன்னைக் கவனித்துக் கொள்வது நிச்சயம் என்று மனிதன் நினைக்கிறான்.  இதன் காரணமாகவே மனிதன் சந்ததிகளை விரும்புகிறான்.
மேலும் தான் என்றாவது ஒரு நாள் மரணித்து விடுவோம் என்பதையும் மனிதன் அறிந்து வைத்திருக்கிறான்.  தான் சிரமப்பட்டு திரட்டிய செல்வங்களை யாரோ எவரோ அனுபவிப்பதை விட நமது உதிரத்திலிருந்து பிறந்தவன் அனுபவிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் மனிதன் சந்ததிகளைப் பெற்றுக் கொள்ள நினைப்பதற்கான காரணம்.
கடவுளுக்கு ஏன் சந்ததியில்லை?
ஆனால் கடவுளைப் பொறுத்த வரை அவனுக்கு முதுமையோ இயலாமையோ மரணமோ ஏற்படப் போவதில்லை.  சந்ததிகள் வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.  இறைவனுக்கு மகனிருக்க 00முடியாது என்பதற்கு இது ஒரு காரணம்
கடவுள் தன்மை என்பது பங்கு போட்டுக் கொடுக்கமுடியாத தனி உரிமையாகும்.  கடவுளுக்குப் பிறப்பவன் நிச்சயம் கடவுளாகத் தான் இருப்பான்.  பிறகு அந்த மகனுக்கும் மகன்கள் பிறப்பார்கள்.  அவர்களும் கடவுளாகவே இருப்பார்கள்.  கடவுள் தன்மையைப் பலரும் பங்கு போட்டுக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படும்.  போட்டியும் பகைமையும் ஏற்படும்.  இதனால் கடவுளின் பணிகளே பாதிக்கப்பட்டுப் போய் விடும்.
கடவுளுக்கு மகன்களைக் கற்பித்த மதங்களில் தந்தைக் கடவுளுக்கும் மகன் கடவுளுக்கும் சண்டை நடந்த கதைகளைக் காண்கிறோம்.  அண்ணன் கடவுளுக்கும் தம்பி கடவுளுக்கும் கூட சண்டை நடந்திருக்கிற கதைகளை கேள்விப் பட்டுள்ளோம்.
மனிதனுக்கு மகன் இருப்பது நன்மை பயக்கும்.  கடவுளுக்கு மகன் இருந்தால் கேடுதான் ஏற்படும்.
இது போக, கடவுள் என்பவன் எந்தத் தேவையுமற்றவனாக இருக்க வேண்டும்.  சந்ததி இருக்கிறது எனக் கூறும் போது அவனுக்குத் தேவை இருக்கிறது என்று ஆகும்.  சந்ததி மட்டும் தேவை என்று ஆகாது.  கூடவே மனைவியும் தேவை என்று ஆகும்.  அப்புறம் கணவன் கடவுளுக்கும் மனைவி கடவுளுக்கும் நடக்கும் சண்டைகளால் உலகம் ஸ்தம்பித்துப் போகும்.
இந்தக் கேலிக்கூத்துகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதற்காகவே அல்லாஹ் தனக்கு மகனோ மகளோ இல்லை எனக் கூறுகிறான்.    அவ்வாறு கூறுவதும் நம்புவதும் கடும் குற்றம் எனவும் எச்சரிக்கிறான்.  இதன் காரணமாகத் தான் சொற்களில் பெரும் பாதகமான சொல் எனக் கூறுகிறான்.
திருக்குர்ஆனில் இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல.  பல இடங்களில் இந்தக் குற்றத்தைக் குறித்து இறைவன் எச்சரிக்கிறான்.  சில இடங்களில் இதைவிடக் கடுமையாகவும் எச்சரித்துள்ளான்.
அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறுகின்றனர்.  அவன் (அந்தப் பலவீனத்திலிருந்து) தூய்மையானவன், வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அவனுக்கே உரியன.
(அல் குர்ஆன் 92 : 116)
"வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அவனது உடமைகள்'' என்பது அற்புதமான சொற்றொடர்.
நாம் ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கி அதை நமது உடமையாக்கிக் கொள்கிறோம்.  அத்தகைய பொருளை நமது சந்ததி என்று நாம் கூறுவோமா? காசு கொடுத்து வாங்கிய காளை மாட்டை இது தான் எனது ஆண் மகன் எனக் கூறுவோர் உண்டா? உடமையாக்கிக் கொண்ட பொருளை யாரும் தனது சந்ததி எனக் கூறமாட்டார்கள்.
அல்லாஹ்வைப் பொறுத்த வரை வானங்களும், (நாம் உள்ளிட்ட) இந்தப் பூமியும் அவனது உடமைகள்.  யாரைக் கடவுளின் மகன் எனக் கூறுகிறார்களோ அவரும் அவனுக்குச் சொந்தமான தட்டு முட்டுச் சாமான் போன்றவர் தான்.  எனவே எனக்கு எவரும் மகனாக முடியாது என்று காரணத்துடன் விளக்குகிறான்.
நாம் சட்டையில் குத்திக் கொண்ட நமது உடமையாக இருக்கின்ற பேனாவை நமது மகன் எனக் கூறமாட்டோம்.  நமக்கும் பேனாவுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளனவோ அதை விட அதிக வித்தியாசம் கடவுளுக்கும் கடவுளின் மகன் எனக் கூறப்படுபவருக்கும் இடையே உள்ளது.
நம்மைப் பொறுத்த வரை பேனா எந்த நிலையில் உள்ளதோ அது போன்ற நிலையில் படைக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் இறைவனின் 0பார்வையில் உள்ளன.  "அனைத்தும் எனது உடமை'' என்ற அற்புதமான சொற்றொடர் மூலம் தனக்கு சந்ததியில்லை என்பதை அறிவுப்பூர்வமாக விளக்குகிறான்.
இதே வாதத்தை 4 : 171, 10 : 68 ஆகிய வசனங்களிலும் முன்வைக்கிறான்.
அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன்.  அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்.  இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 6 : 101)
"அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்த வித பலவீனத்தைக் கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.  இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.
(அல்குர்ஆன் 17 : 111)
அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. அவன் தூயவன். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!'' என்று தான் கூறுவான் (உடனே) அது ஆகிவிடுகிறது.
(அல்குர்ஆன் 19 : 35)
இன்னும், "அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்'' என்று அவர்கள் கூறுகிறார்கள்.  நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள்.  இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போலும்.  அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச்செய்வதினால் ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.
ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை.  நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்.  இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான்.  கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர்.
(அல்குர்ஆன் 19 : 88-95)
அவர்கள் "அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கிறான்'' என்று கூறுகிறார்கள்.  (ஆனால்) அவனோ மிகவும் தூயவன்!  அப்படியல்ல (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள்.
(அல்குர்ஆன் 21 : 26)
அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை.  அவனுடன் (வேறு) நாயனுமில்லை.  அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரை விட மிகைப்பார்கள்.  (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.
(அல்குர்ஆன் 23 : 91)
(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது.  அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை.  அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி எவருமில்லை.  அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப்படி அமைத்தான்.
(அல்குர்ஆன் 25 : 2)
அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பியவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்.  (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன்.  அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.
(அல்குர்ஆன் 39 : 4)
இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்.  அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்.  இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள்.  அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 6 : 100)
அவன் (எவரையும்) பெறவுமில்லை. (எவராலும்) பெறப்படவுமில்லை.
அல்குர்ஆன் 112 : 3)
மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது.  அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.
(அல்குர்ஆன் 72 : 3)
இவ்வசனங்களில் தனக்கு மகனோ மகளோ இருக்க முடியாது என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை முன் வைக்கிறான்.
இது தனக்கு எவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும் எனவும் கூறுகிறான்.
மறுமை நாளில் யாரைக் கடவுளின் மகன் என்று கற்பனை செய்தீர்களோ அவரே ஓர் அடிமையாகத்தான் என் முன்னே நிறுத்தப்படுவார்.  மகனாக அல்ல எனவும் கூறுகிறான்.
இவ்வளவு கடுமையான குற்றமாக இது இருப்பதால் தான் இவர்களுக்குத் தனியாகவும் இறைவன் எச்சரிக்கிறான்.


கவலையினால் தன்னையே மாய்த்தல்
இந்தச் செய்தியை அவர்கள் நம்பவில்லையானால் அதற்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும். (வசனம் 6)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்க மறுத்தவர்களைக் கூறி விட்டு அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கவலை கொள்வதைப் பற்றி இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளைக் கேட்டு அதைப் பலரும் நிராகரிக்கலானார்கள்.  இந்த நிராகரிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது.  மிகப் பெரிய அளவில் கவலைப் பட்டு தம்மையே அழித்துக் கொள்வார்களோ என்று கருதும் அளவுக்குக் கவலைப்பட்டார்கள்.  இதைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.
இப்படியெல்லாம் கவலைப் படக் கூடாது என்று இங்கே கூறுகிறானா?.  மனித குலத்தின் மீது நபிகள் நாயகத்துக்கு இருந்த அக்கறையைச் சுட்டிக் காட்டி பாராட்டுகிறானா?
இவ்வசனத்தின் வாசக அமைப்பைப் பார்க்கும் போது இரண்டு விதமாகவும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் தான் அமைந்துள்ளது.
குடும்பத்திற்காக ஓடாய்த் தேய்கிறாயே என்று ஒருவரிடம் நாம் கூறும் போது இப்படியெல்லாம் தேய வேண்டியதில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது குடும்பத்தின் மீது தான் இவனுக்கு எவ்வளவு அக்கறை என்பதை மறைமாகப் பாராட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
அது போன்ற நிலையில் தான் இவ்வாசக அமைப்பும் உள்ளது.
எனவே இவ்வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம் என்றாலும் வேறு இடங்களில் இது பற்றி ஏதும் கூறப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்த பின்னர் தான் இந்த இடத்தில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதைத் தீர்மானிக்க முடியும்.  அவ்வாறு ஆய்வு செய்யும் போது இது குறித்து தெளிவான கருத்தைக் கூறுகின்ற வசனத்தைக் காணமுடிகின்றது.
நேர்வழீ காட்டும் அதிகாரம் இறைவனுக்கே
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழி கேட்டில் விட்டுவிடுகிறான்.  நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்.  எனவே உம்முடைய உயிரைப் போக்கிக் கொள்ளும் அளவுக்கு கவலைப்பட வேண்டாம்.  நிச்சயமாக அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 35 : 8)
அவர்கள் நேர்வழிக்கு வரவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் கூடாது என்று 35 : 8 வசனத்தில் தெளிவாகக் கூறுவதால் கஹ்பு அத்தியாயத்தின் மேற்கண்ட வசனத்தையும் இந்தக் கருத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சமுதாயம் குறித்து கவலைப்படுவது வரவேற்கத்தக்கப் பண்பாடு தானே என்று சிலருக்குத் தோன்றலாம்.  இந்தப் பண்பாடு இருப்பதால் நபிகள் நாயகத்துக்குப் பெருமை தானே சேரும்.  இதை ஏன் இறைவன் கடிந்து கொள்ள வேண்டும்? என்ற சந்தேகம் எழலாம்.
மக்களுக்காகக் கவலைப்படுவது மனிதனின் உயர்ந்த பண்பு தான்.  இறைவன் ஏன் இதைத் தடுக்க வேண்டும்?
இக்கேள்விக்கான விடை இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் நாம் எடுத்துக் காட்டிய 35 : 8 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருவர் நேர்வழி பெறுவதும் பெறாமல் போவதும் இறைவனின் அதிகாரத்தின் பாற்பட்டதாகும்.  எவரையும் நேர்வழியில் சேர்க்கும் அதிகாரம் எந்த மனிதருக்கும் கிடையாது.  சிலர் நேர்வழி பெற மறுக்கிறார்கள் என்பதற்காக கவலைப்பட்டு தம்மையே அழித்துக் கொள்வது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.  இறைவனின் முடிவைக் குறை கூறுவதாக அமையும்.  அல்லாஹ்வுடைய முடிவில் அதிருப்தி கொள்வதாகவும் இது அமைந்து விடும்.  இந்தக் காரணத்துக்காகத் தான் இப்படி கவலைப்பட்டு தம்மைத் தாமே அழித்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இவ்வாறு நாம் சுயகற்பனையை கூறவில்லை.  35 : 8 வசனத்தில் இந்தக் கருத்து அடங்கியுள்ளதைப் பார்க்கலாம்.  "அவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான், நாடியவர்களை வழி கேட்டில் விட்டு விடுகிறான்'' எனக் கூறிவிட்டுத் தான் "கவலைப்பட்டு உம்மையே மாய்த்துக் கொள்ள வேண்டாம்' எனக் கூறுகிறான்.
உமக்குச் சம்பந்தமில்லாத ஒன்றுக்காக நீர் ஏன் வீணாகக் கவலைப்பட்டு அழிய வேண்டும் என்ற தோரணையில் தான் இந்த அறிவுரை கூறப்படுகிறது.
அபூ தாலிப் மரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் மரண வேளையை அடைந்த போது அவருக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு கொடுத்தார்கள்.  அவர் ஏற்க மறுத்து காபிராகவே மரணித்தார்.  இதற்காக கவலைப்பட்ட போது, "நீர் விரும்பியர்களுக்கு நேர்வழி காட்ட முடியாது.  எனினும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான். (அல்குர்ஆன் 28 : 56) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.
இது புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.
ஒருவர் நேர்வழி பெறவில்லை என்பதற்காக கவலைப்படுவதை அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அவர்களுக்கு நேர்வழி காட்டுவது உமது பொறுப்பு அல்ல.  எனினும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் (அல்குர்ஆன் 2 : 272) என்ற வசனமும்  நீர் எவ்வளவு தான் ஆசைப் பட்டாலும் பெரும்பாலான மக்கள் நம்பிக்கை கொள்ளக் கூடியவர்களாக இல்லை (அல்குர்ஆன் 12 : 103) என்ற வசனமும் ஏன் கவலைப்படக் கூடாது என்பதை விளக்குகின்றன.
நபிகள் நாயகத்துக்கே இந்த அதிகாரம் இல்லை என்றால் நம்மவர்களின் நிலை என்ன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இத்தனை வருடமாக நான் சொல்லியும் கேட்க மறுக்கிறார்களே!  என் தந்தையை என்னால் திருத்த முடியவில்லையே என்றெல்லாம் மாய்ந்து போகும் உரிமை நமக்கு இல்லை.  எடுத்துச் சொல்லும் கடமை தவிர வேறு கடமை நமக்கில்லை என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
கவலையின் விளக்கம்
இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தை நாம் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
கவலைப்படும் படியான நிகழ்வுகள் ஏற்படும் போது நம்மையுமறியாமல் கவலை ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.  அது நமது அதிகாரத்தின் பாற்பட்டது அல்ல.  இத்தைகைய கவலை இங்கே தடை செய்யப்படவில்லை.  35 : 8 வசனத்திலும் இந்த அத்தியாயத்திலும் கவலைப்பட்டு கவலைப்பட்டு உயிரையே மாய்த்துக் கொள்ளும் படியான கவலைக்குத் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது.  வாசக அமைப்பிலிருந்தே அதை அறிந்து கொள்ளலாம்.
உயிரைப் போக்கிக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்பட வேண்டாம் எனக் கூறுவதிலிருந்தே சாதாரணமாக ஏற்படும் கவலைக்கு அனுமதி உள்ளது என்பதை விளங்கலாம்.
நாம் வேண்டிய உறவினரை இழந்து விடும் போது அழுவது அல்லாஹ்வின் தீர்ப்பை மறுப்பதாக ஆகாது.  அதே நேரத்தில் காலமெல்லாம் அதையே நினைத்து பிரலாபித்துக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர்ப்பதாக ஆகும்.  இது போலத் தான் இந்தக் கவலையையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாகக் கவலைப்பட வேண்டாம் என்ற கருத்திலும் சில வசனங்கள் உள்ளன.  அவ்வசனங்களை ஆதாரமாகக் காட்டி சிறிய அளவில் கூட இதற்காகக் கவலைப்படக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர்.  அந்த வசனங்கள் இவைதாம்.
(இறை) மறுப்புக் கொள்கையில் அவர்கள் விரைவாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக் கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்.  நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்து விட முடியாது.  மறுமையில் அவர்களுக்கு எந்த பாக்கியமும் இருக்கக் கூடாது என்று அல்லாஹ் விரும்புகிறான்.  அவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.  (அல்குர்ஆன் 3 : 176)
தூதரே! உள்ளத்தால் நம்பிக்கை கொள்ளாமல் நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறுகிறார்களே அவர்களிலும் யூதர்களிலும் நிராகரிப்பின் பால் விரைந்து செல்பவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். (அல்குர்ஆன் 5 : 4)
எவர் நிராகரிக்கின்றாரோ அவருடைய நிராகரிப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம்.  (அல்குர்ஆன் 31 : 23)
இந்த வசனங்கள் யாவும் காபிர்களுக்காக அறவே கவலைப்படக் கூடாது என்று தானே கூறுகின்றன.  உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்பட வேண்டாம் எனக் கூறவில்லையே என்பது இவர்களின் வாதம்.
கவலைப்படுதல் என்பது இரண்டு வகைகளில் ஏற்படும்.
நரகத்தில் கிடந்து வேதனைப் படப் போகிறார்களே என்று கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்காக படுகின்ற கவலை ஒரு வகை.
நமக்கெதிராகத் திரண்டு விட்டார்களே, இவர்களால் நமக்கோ நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ ஏதும் தீங்கு நேருமோ என்று தமக்காகப் படும் கவலை மற்றொரு வகை.
ஒன்று பரிதாபத்தால் ஏற்படுவது.  மற்றொன்று பயத்தால் ஏற்படுவது.  ஒன்று மற்றவருக்காகக் கவலைப்படுவது.  மற்றொன்று தமக்காகக் கவலைப்படுவது.
இவர்கள் எடுத்துக் காட்டும் வசனங்கள் யாவும் இரண்டாவது வகையான கவலையைக் குறிக்கின்றன.
அவர்கள் இறை நிராகரிப்பின் பால் விரைந்து செல்வது பற்றிக் கவலைப்படாதே எனக் கூறிவிட்டு அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது மார்க்கத்துக்கும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.  அவர்களால் ஏதும் தீங்கு நேருமோ என்று பயந்து கவலைப் படாதீர் என்ற கருத்திலேயே இவ்வசனங்கள் அமைந்துள்ளன.  கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்காகக் கவலைப்படுவதை கூறவில்லை.
சங்பரிவாரக் கும்பலைப் பற்றி கவலைப்படாதே என்பதும், மனைவி இறந்ததற்காகக் கவலைப்படாதே என்பதும் ஒரே வகையானது அல்ல.  இதைப் புரிந்து கொண்டால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதற்காக நம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் கூடாது, அதே சமயம் அக்கறையின் காரணமாக சாதாரணமாகக் கவலை கொள்ள எந்தத் தடையும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம்.  மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!
ஏழு மற்றும் எட்டாவது வசனங்கள்
இவ்விரு வசனங்களிலும் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.
இறைவன் எத்தகைய ஆற்றல் மிக்கவன் என்பது ஒரு செய்தி!
மனிதர்களுக்கு இவ்வுலகில் இன்பங்களை வாரி வழங்கியிருப்பது ஏன் என்பது மற்றொரு செய்தியாகும்.
இவ்வசனத்தில் தனது வல்லமையைக் கூற வெகு தொலைவுக்கு மனிதனை இழுத்துச் செல்லாமல் அவன் எந்த மண்ணில் வாழ்கின்றானோ அந்த மண்ணையே இதற்குக் களமாக்கிக் காட்டுகின்றான்.
எவ்வித கவர்ச்சியும் அலங்காரமும் இல்லாமல் கட்டாந்தரையாகக் கிடந்த பூமியின் மேல் மழையை விழச் செய்து அவற்றில் மரம் செடி கொடிகளை முளைக்கச் செய்கிறான்.  இவ்வாறு முளைத்தவுடன் பூமிக்கு புதுப் பெண்ணின் கவர்ச்சி வந்து விடுகின்றது.  இதை நாம்  தான் செய்கின்றோம் என்று இங்கே சுட்டிக் காட்டுகின்றான்.
திருக்குர்ஆனின் வேறு இடங்களில் இன்னும் அழுத்தமாகத் தனது இந்த ஆற்றலை மனிதனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றான்.
அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான்.  அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளிப்படுத்துகின்றோம்.  அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகின்றோம்.  பேரீச்சை மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக் குலைகளும் இருக்கின்றன.  திராட்சைத் தோட்டங்களையும் (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம்)  அவை (பூத்துக்) காய்ப்பதையும் பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன. (அல் குர்ஆன் 6 : 99)
பந்தல்களில் படர விடப்பட்ட கொடிகளும் படர விடப்படாச் செடிகளும் பேரீச்சை மரங்களும் உள்ள சோலைகளையும் புசிக்கத் தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும் ஒன்று போலவும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும் அவனே படைத்தான்.  ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள்.  அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள்.  வீண் விரயம் செய்யாதீர்கள்.  நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.  (அல் குர்ஆன் 6 : 141)
இன்னும் பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும் விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும் கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை) யும் (அவனே உண்டாக்கினான், இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப் பட்டாலும் அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றைவிட சுவையில் நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்.  நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.  (அல் குர்ஆன் 13 : 4)
அதனைக் கொண்டே (விவசாயப்) பயிர்களையும் ஒலிவ (ஜைத்தூன்) மரத்தையும் பேரீச்சை மரங்களையும் திராட்சைக் கொடிகளையும் இன்னும் எல்லா வகைக் கனி வர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான்.  நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு (தக்க) அத்தாட்சி இருக்கின்றது.  (அல் குர்ஆன் 16 : 11)
இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணையை உற்பத்தி செய்கின்றது.  மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது)
(அல் குர்ஆன் 23 : 20)
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.  (அல் குர்ஆன் 26 : 7)
அன்றியும் வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்?  பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கின்றோம்.  அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா?  இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.  (அல் குர்ஆன் 27 : 60)
அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்.  அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?  (அல் குர்ஆன் 32 : 27)
பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும் (மனிதர்களாகிய) இவர்களையும் இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். 
(அல் குர்ஆன் 36 : 36)
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுக்களில் ஓடச் செய்கின்றான்.  அதன் பின் அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகின்றான்.  அப்பால் அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்.  பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகின்றான்.  நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.           (அல் குர்ஆன் 39 : 21)
(பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?  அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? (அல் குர்ஆன் 56 : 63, 64)
கடவுள் என்று ஒருவன் இருக்கின்றான் என்பதற்கும் அவனது வல்லமைக்கும் மண்ணில் முளைக்கும் பயிர் பச்சைகள் மிகப் பெரும் சான்றாகவுள்ளதால் தான் இதை முக்கியத்துவத்துடன் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.
இனிப்பான மாம்பழத்தை மா மரம் உற்பத்தி செய்கின்றது என்றால் மாங்கொட்டையில் அந்த இனிப்பு இருக்கவில்லை.  அது புதைக்கப்பட்ட மண்ணிலும் அந்த இனிப்பு இருக்கவில்லை.  ஊற்றுகின்ற தண்ணீரிலோ, வீசுகின்ற காற்றிலோ வெளிச்சத்திலோ இனிப்பு இருந்ததில்லை.  ஆனாலும் மாம்பழங்கள் இனிக்கின்றன.  இப்படிப் பல்வேறு சுவைகள் கொண்ட கனிகளை மனிதன் உண்ணும் போது அதைப் பற்றி சிந்தித்தால் "சூப்பர் பவர்'  உள்ள ஒருவன் ஆட்டிப் படைக்கின்றான் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வான்.
இலைகள், பூக்கள், காய்கள், கனிகளில் தான் எத்தனை வண்ணங்கள்!  அந்த வண்ணங்கள் எப்படி வந்தன? என்றெல்லாம் ஆராயும் ஒருவன் கடவுளை மறுக்கவே மாட்டான்.
அடிக்கடி பார்த்துப் பழகியதால் நாம் இதை உரிய விதத்தில் சிந்திப்பதில்லை.  மண்ணில் முளைத்தெழும் ஒவ்வொன்றிலும் கணக்கிட முடியாத அதிசயங்கள் புதைந்து கிடப்பதை இதனால் தான் நாம் சிந்திப்பதில்லை.  எப்போதுமே தூரத்தில் இருப்பதுதான் நமக்கு அதிசயமாகத் தோன்றும்.  நம் பக்கத்தில் நிற்கும் அதிசயங்கள் அதிசயமாகத் தோன்றாது.
மனிதன் இதைச் சிந்திக்க மாட்டான் என்பதற்காகத் தான் இம் மண்ணின் மேல் உள்ளவற்றை மண்ணுக்கு அலங்காரமாக ஆக்கினோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இதை மட்டும் கூறி விட்டு றிறுத்திக் கொண்டால் கூட இதெல்லாம் இயற்கை என்று மனிதன் கூறி விடுவான்.
நாளை வறண்ட பாலைவனமாகவும் நாம் ஆக்குவோம் என்று சேர்த்துக் குறிப்பிடுகின்றான்.
உரிய நேரத்தில் உரிய அளவில் மழை பெய்த பிறகு இயற்கையாக முளைத்தன என்று கூறும் மனிதனே!  உரிய நேரத்தில் மழை பெய்ததும் இயற்கையா?  உரிய அளவில் மழை பெய்ததும் இயற்கையா?  மேலப்பாளையத்தில் பெய்து விட்டு பாளையங்கோட்டையில் பெய்யாமல் இருந்ததும் இயற்கையா?
காற்றும் குளிர்ந்து தரையும் குளிர்ந்து இதோ மழை வரப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ராஜஸ்தான் பாலைவனத்தில் - அனலாய் கொதிக்கும் பூமியில் - மழையை விரட்டிச் சென்று பெய்விப்பவன் யார்?
இதற்கு இயற்கை என்று எவனும் காரணம் சொல்ல முடியாது அல்லவா?  இதனால் தான் தனது வல்லமைக்கு பசுமையை மட்டும் சான்றாகக் கூறி நிறுத்திக் கொள்ளாமல் வறட்சியை ஏற்படுத்துவதும் நாம் தான் எனக் கூறி ஆப்பு வைக்கிறான்.
இந்த இடத்தில் ஏன் இத்தனை வருடங்களாக மழை பெய்யவில்லை என்ற கேள்விக்கு "இயற்கை' என்று விடை கூற முடியாது.  யாரோ ஒருவன் தான் இதற்குக் காரணமாக இருக்கின்றான் என்பது தான் இதற்கு விடையாக இருக்க முடியும்.
இறைவனை மனிதன் நம்ப வேண்டும், அதுவும் சிந்தித்து விளங்கி நம்ப வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த இரண்டு தன்மைகளையும் கூறுகின்றான்.
அவனது வல்லமையைக் காட்டுவது ஒருபுறமிருக்க உன்னைச் சோதித்துப் பார்ப்பதும் இதற்குக் காரணம் என்பதையும் சின்னஞ்சிறு சொற்றொடருக்குள் சேர்த்துக் கூறிவிடுகின்றான்.
இன்பமும் துன்பமும்
அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கியுள்ளோம்.  மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!
(ஏழு மற்றும் எட்டாவது வசனங்கள்)
கடவுளை எல்லா மதத்தவர்களும் நம்புகின்றனர்.  ஆனால் மற்ற எந்தச் சமயத்தவர்களையும் விட முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கை வலிமை மிக்கதாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
பக்திமான்களாக இருந்தவர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் போது நாத்திகர்களாகி விடுவதை மற்ற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண்கின்றோம்.
கடவுள் என இவர்கள் நம்புகின்ற கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அதைத் திட்டுகின்ற காட்சியையும் மண்ணை வாரி தூற்றுகின்ற காட்சியையும் பிற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண முடிகின்றது.  "கடவுளே! உனக்கு கண் இருக்கிறதா?'' என்றெல்லாம் துன்பம் வரும் வேளையில் புலம்புகின்றவர்களையும் நாம் பார்க்கிறோம்.
கடவுளை நம்புகின்ற மற்ற மதத்தவர்களிடம் காணப்படும் இந்தக் கோளாறு முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லையே அது ஏன்?
மற்ற மதத்தினர் தவறான அடிப்படையின் மீது தங்கள் நம்பிக்கை எனும் மாளிகைகளை எழுப்பிக் கொண்டது தான் இதற்குக் காரணம்.
இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான செல்வச் செழிப்புடனும் வசதி வாய்ப்புகளுடனும் இருப்பதில்லை.  சிலர் அதிகமான வசதிகளையும் பதவிகளையும் பெற்றுள்ளனர்.  பலர் இத்தகைய வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை.  இதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கும் போது மற்ற மதங்கள் செய்கின்ற தவறுகள் தான் அடிப்படைக் கோளாறு எனலாம்.
நீ கடவுள் மீது பக்தியுடன் இருந்தால் உனக்கும் எண்ணற்ற வசதிகள் கிடைக்கும் என்று ஏழைகளிடம் அம்மதங்கள் பேசுகின்றன.  சென்ற பிறவியில் நல்ல பக்திமானாக இல்லாததே நீ இப்போது ஏழையாக இருப்பதற்குக் காரணம் என்று அவனுக்கு அறிவுரை கூறுகின்றன.
இதுபோல் வசதி வாய்ப்புகளுடன் உள்ளவனை நோக்கி, கடவுள் உன் மீது அன்பாய் இருக்கிறார்.  நீ நல்லவனாக இருப்பதால் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறாய் என்றும் சென்ற பிறவியில் நீ நல்லவனாக இருந்ததால் தான் இந்த உயர்ந்த நிலை கிடைத்தது என்றும் பேசுகின்றன.
செழிப்பாய் இருந்தவனுக்கு ஒரு நட்டம் ஏற்பட்டால் "இவன் என்னவோ செய்திருப்பான்' என்று கூறுவதும் இதனால் தான் இப்படி ஏற்பட்டது என்று பேசுவதும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான்.
கீழ் நிலையில் இருந்த ஒருவனுக்கு நல்ல நிலை ஏற்பட்டால் அவன் கொடுத்து வைத்திருக்கிறான்.  இவன் புண்ணியம் செய்திருப்பான் என்று காரணம் கூறுவதற்கும் இந்த நம்பிக்கை தான் காரணம்.
இந்த நம்பிக்கை ஆழமாகப் பதிந்த பிறகு ஒரு கேடுகெட்டவன் உயர்ந்த நிலையை அடைவதைப் பார்க்கும் போதும் ஒரு நல்லவன் சொல்லெனாத் துன்பத்தை அடையும் போதும் கடவுள் நம்பிக்கையே அவன் உள்ளத்திலிருந்து விலகி விடுகின்றது.  மதத்தை வளர்ப்பதற்காக பொய்யான காரணங்களைக் கூறி நம்மை ஏமாற்றி விட்டனர் என்று அவனுக்குக் கோபம் ஏற்படுகின்றது.  இதனால் தான் கடவுள் (?) மீதே மண்ணை வாரித் தூற்ற முடிகின்றது.
ஆனால் இஸ்லாம் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றவில்லை.  பொய்யான வாக்குறுதிகள் எதனையும் அளிக்கவில்லை.    எது உண்மையோ அதை மட்டுமே கூறுகின்றது.
இவ்வுலகில் உள்ள ஏழைகள் பலரை நாம் பார்க்கிறோம்.  அவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருப்பதில்லை.  அது போல் அனைவரும் நல்லவர்களாகவும் இருப்பதில்லை.  அவர்களின் ஏழ்மை நிலைக்கும் அவர்களது பாவ புண்ணியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகின்ற உண்மை.
அது போல் செல்வந்தர்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர்.  இவர்களின் செல்வ நிலைக்கும் பாவ புண்ணியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருப்பதைக் காண்கின்றோம்.
இந்த நிதர்சனமான உண்மையை அப்படியே கூறுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!
இவ்வுலகில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருப்பதற்கும் நல்லவர்களாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  இந்த வசதிகளைப் பெற்ற பிறகும் நீங்கள் நல்லவர்களாக வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்கவே இவை வழங்கப்பட்டுள்ளன.  வசதிகள் வந்த பின் அதன் காரணமாக ஆணவம் பிடித்து அலைந்தால் நீ கெட்டவனாவாய்!  அதை மற்றவருக்கு வாரி வழங்கி நற் செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நல்லவனாவாய் என்று இஸ்லாம் கூறுகின்றது.
அது போல் நீ வசதி வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதால் நீ கெட்டவன் இல்லை.  இந்த வறுமையின் காரணமாக நீ தடம் மாறுகிறாயா அல்லது தடம் புரளாமல் உறுதியாக நிற்கிறாயா? என்று சோதித்துப் பார்க்கவே இந்த நிலை என்று இஸ்லாம் கூறுகின்றது.
செழிப்பு வறட்சி இரண்டுமே இரண்டு வகையான பரீட்சைகள் என்று இஸ்லாம் கூறுகின்ற காரணத்தினால் தான் முஸ்லிம்கள் எத்தகைய துன்பத்தை அடைய நேர்ந்தாலும் அவர்கள் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர்.  கடவுளே உனக்குக் கண்ணில்லையா என்று கேட்பதில்லை.
இரண்டு நிலைகளில் எது ஏற்பட்டாலும் இரண்டும் சோதனைதானே தவிர நம்மை நல்லவன் கெட்டவன் என்று வழங்கப்படும் தீர்ப்பு அல்ல.  இனிமேல் தான் தீர்ப்பு வழங்கப் படவுள்ளது.  அங்கே நல்ல தீர்ப்பு பெறுவதற்காக வறட்சியிலும் செழிப்பிலும் நிலை குலையாமல் இருக்க வேண்டும் என்று உறுதியான அடிப்படையின் மீது முஸ்லிம்களின் நம்பிக்கை எழுப்பப் பட்டுள்ளது.
அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் ஏழாவது வசனமும் அந்த அடிப்படையைத் தான் சொல்லித் தருகின்றது.  இப்பூமியில் உள்ள செழிப்புகள் யாவும் நீங்கள் நல்லவர்களாக நடக்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்குத் தான் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பலமான அஸ்திவாரத்தின் மீது எழுப்புகின்றது.  பின்வரும் வசனங்களும் இந்த வசனத்தின் விளக்கவுரைகளாகத் திகழ்கின்றன.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பாலும் சோதிப்போம்.  ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!  (பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.  நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்.     (அல்குர்ஆன் 2 : 155, 156)
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும் உஙகள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப் படுவீர்கள்.  உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப் பட்டோரிடமிருந்தும் இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்.  ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தரும்) தீர்மானத்திற்குரிய செயலாகும்.
அல்குர்ஆன் 3 : 186
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது.  பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம்.  பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப் படுவீர்கள்.
அல்குர்ஆன் 21 : 35
இன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான்.  அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கின்றான்.  ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கின்றான்.  இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான்.  இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
அல்குர்ஆன் 22 : 11
இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன் "என் இறைவன் என்னைக் கண்ணியப் படுத்தியுள்ளான்' என்று கூறுகின்றான்.  எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து அவனை (இறைவன்) சோதித்தாலோ அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப்படுத்தி விட்டான்' என்று கூறுகின்றான்.
அல்குர்ஆன் 89 : 15, 16
எனவே செல்வமும் வறுமையும் சோதனைக்குத் தான் என்பதை உணர்ந்து சோதனையில் தேறிட வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

9வது வசனம்
"அந்தக் குகை' எனும் பெயர் பெற்ற இந்த அத்தியாயத்தின் எட்டு வசனங்களுக்கான விளக்கத்தை இதுவரை நாம் பார்த்தோம்.
ஒன்பதாம் வசனம் முதல் 26வது வசனம் வரை கடந்த காலத்தில் நடந்த ஒரு வரலாறு மிகவும் சுருக்கமாகக் கூறப்படுகிறது.  இந்த வரலாறு ஒரு குகையுடன் தொடர்புடையதாக இருப்பதால் தான் இந்த அத்தியாயத்திற்கு "அந்தக் குகை' - அல் கஹ்ஃப் என்ற பெயர் வந்தது.
முதலில் அந்த வசனங்களின் தமிழாக்கத்தைத் தொடராகப் பார்த்து விட்டு அதன் விளக்கத்தைப் பின்னர் பார்ப்போம்.
9. குகை மற்றும் ரகீம் வாசிகள் நமது அத்தாட்சிகளில் மிகவும் அதிசயமானவர்கள் என எண்ணிக் கொள்கிறீரா?
10. அந்த இளைஞர்கள் குகையின் பால் ஒதுங்கியதை நினைவு கூர்வீராக!  எங்கள் இறைவா!  உன்புறத்திலிருந்து அருளை எங்களுக்கு வழங்குவாயாக!  மேலும் எங்கள் காரியங்களில் நேர்வழியை எங்களுக்காகக் காட்டுவாயாக என்று அவர்கள் கூறினார்கள்.
11.  அக்குகையில் குறிப்பிட்ட ஆண்டுகள் அவர்களின் காதுகளை நாம் அடைத்தோம்.  (உறங்கச் செய்தோம் என்பதை காதுகளை அடைத்தோம் என்று கூறப்படுவது அரபு மொழியில் வழக்கமாக இருந்தது.)
12.  இரு கூட்டத்தினரில் அவர்கள் தங்கிய காலம் பற்றி நன்கறிந்தவர்கள் யார் என்பதை நாம் அறிவதற்காக பின்னர் அவர்களை நாம் எழுப்பினோம்.
13.  அவர்களது வரலாற்றை உண்மையுடன் நாம் உமக்குக் கூறுகிறோம்.  நிச்சயமாக அவர்கள் இளைஞர்களாவர்.  அவர்கள் தம் இறைவனை நம்பினார்கள்.  மேலும் அவர்களுக்கு நேர்வழியை நாம் அதிகப் படுத்தினோம்.
14.  எங்கள் இறைவன், வானங்கள் மற்றும் பூமியின் இறைவனாவான்.  அவனையன்றி (யாரையும்) கடவுளாக நாம் பிரார்த்திக்கவே மாட்டோம்.  அவ்வாறு செய்தால் நாங்கள் வரம்பு மீறிய சொல்லைக் கூறியவர்களாவோம் என்று அவர்கள் (துணிவுடன்) நின்ற போது அவர்களின் உள்ளங்களை நாம் மேலும் பலப்படுத்தினோம்.
15.  நமது சமுதாயத்தினராகிய இவர்கள் அவனை விடுத்து பல கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.  அவர்கள் தங்களுக்காக தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா?  அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அதிக அநியாயக் காரன் யார்? (எனவும் அவர்கள் கூறினார்கள்.)
16.  இவர்களை விட்டும், அல்லாஹ்வைத் தவிர எவற்றை வணங்குகிறார்களோ அவற்றை விட்டும், நீங்கள் விலகும் போது அந்தக் குகையில் தஞ்சமடையுங்கள்!  உங்கள் இறைவன் தனது அருளை வாரி வழங்குவான்.  மேலும் உங்கள் காரியத்தில் எளிமையான போக்கிடத்தை உங்களுக்கு அவன் ஏற்படுத்துவான் (என்று தமக்குள் கூறிக் கொண்டனர்)
17.  சூரியன் உதிக்கும் போது அவர்களது குகையின் வலப்புறத்தில் காய்வதையும் அது மறையும் போது அவர்களின் இடப்புறமாக அது அவர்களைக் கடந்து செல்வதையும் நீர் காண்பீர்.  அவர்கள் அக்குகையின் விசாலமான இடத்தில் உள்ளனர்.  இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றாகும்.  அல்லாஹ் யாருக்கு வழி காட்டினானோ அவன் தான் நேர்வழி பெற்றவன்.  யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழிகாட்டும் பொறுப்பாளரைப் பெற்றுக் கொள்ள மாட்டீர்.
18.  அவர்கள் விழித்துக் கொண்டிருப்பவர்களாக் காண்பீர்.  அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  மேலும் அவர்களை வலப்புறமும் இடப்புறமும் நாம் புரட்டுவோம்.  குகையின் வாசலில் அவர்களின் நாய் முன்னங்கால்களை விரித்து வைத்துள்ளது.  அவர்களை நீர் பார்த்திருந்தால் அவர்களை விட்டு வெருண்டோடியிருப்பீர்.  அவர்களைக் குறித்து பயத்தால் நிரப்பப் படுவீர்.
19.  அவர்கள் தமக்கிடையே விசாரித்துக் கொள்வதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.  எவ்வளவு நாட்கள் தங்கியிருப்பீர்கள் என்று அவர்களில் ஒருவர் கேட்டார்.  ஒருநாள் அல்லது ஒருநாளில் ஒரு பகுதி தங்கியிருப்போம் என்று அவர்கள் கூறினார்கள்.  நீங்கள் தங்கியது குறித்து உங்கள் இறைவனே நன்கறிந்தவன் என்றும் கூறினார்கள்.  உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் அந்த நகருக்கு அனுப்புங்கள்.  தூய்மையான உணவு எது என்பதைக் கவனித்து அதிலிருந்து உங்களுக்கு உணவை அவர் கொண்டு வரட்டும்.  மேலும் அவர் கவனத்துடன் இருக்கட்டும்.  அவர் உங்களைப் பற்றி எவருக்கும் அறிவித்து விடக் கூடாது (எனவும் கூறினார்கள்.)
20.  அவர்கள் உங்களை அறிந்து கொண்டால் உங்களைக் கல்லால் அடித்தே கொன்று விடுவார்கள்.  அல்லது அவர்களது மார்க்கத்தில் உங்களை மாற்றி விடுவார்கள்.  அவ்வாறு செய்தால் நீங்கள் ஒருக்காலும் வெற்றி பெறவே மாட்டீர்கள் (எனவும் கூறிக் கொண்டார்கள்.)
21.  அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும் கியாமத் நாளில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும் அவர்கள் அறிந்து கொள்வதற்காக (இவர்களைப் பற்றி) அவர்களுக்கு (அவ்வூராருக்கு) நாம் வெளிப்படுத்தினோம்.  அவர்கள் தமது காரியத்தில் தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொண்டதை நினைவு கூர்வீராக!  இவர்கள் மீது ஒரு கட்டடத்தை எழுப்புங்கள் என்று கூறினார்கள்.  அவர்களைப் பற்றி அவர்களின் இறைவன் நன்கறிந்தவன்.  இவர்கள் மீது நாம் ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்துவோம் என்று காரியத்தில் மிகைத்தவர்கள் கூறினார்கள்.
22.  மூன்று பேர்.  அவர்களில் நான்காவது அவர்களது நாய் என்று கூறுவார்கள்.  ஐந்து பேர்.  அவர்களில் ஆறாவது அவர்களின் நாய் என்றும் மறைவானதை யூகம் செய்து கூறுகின்றனர்.  ஏழு பேர்.  அவர்களில் எட்டாவது அவர்களின் நாய் என்றும் கூறுகின்றனர்.  அவர்களின் எண்ணிக்கை குறித்து என் இறைவனே நன்கு அறிந்தவன் என்று கூறுவீராக!  குறைவானவர்களைத் தவிர அவர்களை யாரும் அறிய மாட்டார்கள்.  எனவே அவர்கள் விஷயத்தில் வெளிப்படையாகத் தெரிந்தவை தவிர வேறு விவாதம் செய்ய வேண்டாம்.  மேலும் அவர்கள் குறித்து இவர்களில் எவரிடமும் விளக்கம் கேட்காதீர்!
23.  இதை நாளைக்கு நிச்சயமாக நான் செய்பவன் என்று எந்த விஷயம் குறித்தும் நீர் கூற வேண்டாம்.
24.  அல்லாஹ் நாடினால் தவிர!  மறந்து விட்டால் உமது இறைவனை நினைவு கூர்வீராக!  இதை விட நெருக்கமான காலத்தில் என் இறைவன் எனக்கு வழி காட்டக் கூடும் என்றும் கூறுவீராக!
25.  அவர்கள் தங்கள் குகைகளில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள்.  மேலும் ஒன்பதை
26.  அவர்கள் தங்கியது குறித்து அல்லாஹ் நன்கறிந்தவன் என்று கூறுவீராக!  வானங்கள் மற்றும் பூமியின் மறைவானது அவனுக்கே உரியது.  என்னே அவனது பார்வை!  என்னே அவனது கேள்வி!  அவனைத் தவிர அவர்களுக்கு எந்தப் பொறுப்பானும் இல்லை.  அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டு சேர்க்க மாட்டான்.
குகைவாசிகள் குறித்து குர்ஆன் கூறும் வரலாறு இதுதான்.  திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்திருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.  ஆனால் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் குகைவாசிகளின் வரலாறு குறித்து இவ்வசனங்களில் கூறப்பட்டதைத் தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையும் கூறவில்லை.  இவ்வசனங்களில் கூறப்பட்டதை விட மேலதிகமாக யார் எதைக் கூறினாலும் அவை வெறும் கற்பனையே தவிர வேறில்லை.  மேற்கண்ட வசனங்களுக்கிடையே இது குறித்து அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று கூறப்படுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலதிகமாக எந்த விளக்கமும் கூறாமல் இருந்தது ஆச்சரியப் படக்கூடிய விஷயம் அன்று.
எனவே இவ்வசனங்களில் கூறப்பட்டவைகளை மட்டும் அடிப்படையாக வைத்துத் தான் அவர்களின் வரலாறை நாம் அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம். 
குகைவாசிகள் பற்றி கட்டுக் கதைகள்
ஆனால் கவலைப் பட வேண்டிய அம்சம் என்னவென்றால் எது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட எதையும் மேலதிகமாகக் கூறவில்லையோ அது பற்றி விரிவுரை என்ற பெயரில் கட்டுக்கதைகளைப் புனைந்து எழுதியுள்ளனர்.
இவ்வாசகங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் வரலாறு என்ன?  விரிவுரை என்ற பெயரில் இட்டுக்கட்டப் பட்டவை யாவை? என்பதை இனி காண்போம்.



குகைவாசிகள் அத்தாட்சிகள்
குகைவாசிகளின் வரலாற்றைக் கூறும் ஒன்பது முதல் இருபத்தாறு வரையுள்ள வசனங்களின் தமிழாக்கத்தை இதுவரை நாம் கண்டோம்.  இனி ஒவ்வொரு வசனத்திற்குரிய விளக்கத்தை விரிவாகப் பார்ப்போம்.
குகை மற்றும் ரகீம் உடையவர்கள் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்கள் என்று நீர் கருதுகின்றீரா?
(ஒன்பதாம் வசனம்)
என்று இவ்வரலாற்றை இறைவன் கூறத் துவங்குகின்றான்.
எந்த மனிதனும் வருடக் கணக்கில் உறங்கிட முடியாது.  பலநூறு வருடங்கள் உறங்கி விட்டு மீண்டும் விழித்தெழ முடியாது என்பதை மனிதன் சந்தேகமற அறிந்திருக்கிறான்.  பத்து நாட்கள் ஒருவர் உறக்கத்திலேயே இருக்கிறார் என்று கூறப்பட்டால் கூட அதை மனிதன் நம்ப மாட்டான்.  பலநூறு நாட்கள் அல்ல.  பலநூறு வருடங்கள் சில பேர் தூக்கத்தில் கழித்து விட்டு ஏதும் அறியாதவர்கள் போல் விழித்தெழுந்தார்கள் என்று கூறினால் எந்த மனிதனாலும் அதை நம்ப முடியாது.
இத்தகைய ஒரு நிகழ்ச்சி நிச்சயம் நடந்திருக்க முடியாது என்றே மனிதன் நினைப்பான்.  எனவே தான் இந்த அற்புத வரலாற்றைக் கூறுவதற்கு முன்னால் மனிதர்கள் அதை நம்புவதற்குரிய காரணங்களை இங்கே முதலில் குறிப்பிடுகிறான்.
மனிதர்களே! இதை உங்களது நிலையிலிருந்து நோக்காதீர்கள்.  இதைக் குகைவாசிகளின் சாதனை எனவும் கருதாதீர்கள்.  இதை நிகழ்த்திக் காட்டியவன் யார் என்ற கோணத்தில் இதைச் செவிமடுங்கள்.
இது உங்களையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும் சர்வ சக்தனாகிய நான் நிகழ்த்திக் காட்டிய அற்புதமாகும்.  நான் இவ்வுலகில் எண்ணிலடங்கா அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளேன்.  அந்த அற்புதங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது மிகவும் சாதாரணமான நிகழ்ச்சி தான் என்று விளக்குவதற்காகவே "நமது அத்தாட்சிகளில் இது அதிசயமானது என நினைக்கிறீரா?'' என்று கேட்கிறான்.
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது, எண்ணற்ற கோள்களைப் படைத்து அந்தரத்தில் மிதக்க விட்டிருப்பது, கோடானு கோடி உயிரினங்களைப் படைத்து அவற்றுக்குள் அதிசயங்களை நிகழ்த்தி வருவது, இவை யாவும் திட்டமிட்டபடி சீராக இயங்குவது போன்ற பேராச்சரியங்களைப் பார்க்கும் மனிதன் - இந்த அதிசயங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்று சொல்லத் தக்க குகைவாசிகள் பற்றிய நிகழ்ச்சியை எவ்வாறு நம்ப மறுக்க முடியும்?
இறைவனால் எதுவும் இயலும் என்பதை நம்புகின்ற மக்களுக்கு இதை நம்புவதற்கு எந்தத் தயக்கமும் இருக்காது.  இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் துவக்கத்திலேயே தனது எண்ணற்ற அற்புதங்களை நினைவு படுத்திக் காட்டுகிறான்.
இறைவனை நம்புகின்ற மக்களைப் பொறுத்த வரை அவர்கள் இந்நிகழ்ச்சியை நம்பிட இவ்வசனத்தில் இறைவன் எழுப்பியுள்ள கேள்வியே போதுமானதாகும்.
ஆனால் இறைவனையும் இறைவனது ஆற்றலையும் நம்பாதவர்கள் இதை எப்படி நம்புவார்கள்?  இது போன்ற அற்புதங்கள் உங்கள் மார்க்கத்தில் இருப்பதை விட அதிகமாகவும் பிரம்மாண்டமாகவும் ஏனைய மதங்களில் இருக்கின்றனவே! என்றெல்லாம் கேள்வி கேட்பவர்கள் இதை நம்ப வேண்டுமானால் இதற்கான தடயங்களைக் காட்ட வேண்டும்.  அப்போது தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.  நம்பிக்கை கொள்ளாவிட்டாலும் ஆட்சேபனை செய்யாமலாவது இருப்பார்கள்.
இவர்களது வாதத்தையும் திருக்குர்ஆன் கவனத்தில் கொள்கிறது.  திருக்குர்ஆனில் கூறப்படும் அற்புதமான நிகழ்ச்சிகளுக்குரிய தடயங்கள் இன்றளவும் கிடைத்துக் கொண்டிருப்பது தான் இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.
நூஹ் நபி வெள்ளம்
நூஹ் நபியவர்கள் காலத்தில் மாபெரும் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டது.  நூஹ் நபியவர்களும் அவர்களை ஏற்றவர்களும் கப்பல் தயாரித்து அதில் ஏறிக் கொள்ள, மற்றவர்கள் அடியோடு அழிக்கப் பட்டார்கள் என்ற அற்புத வரலாற்றை திருக்குர்ஆன் கூறுகிறது.  அப்போது ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தினால் மலை உயரத்துக்கு தண்ணீர் உயர்ந்தது எனவும் திருக்குர்ஆன் கூறுகிறது.  மலை உயரத்துக்கு மேல் தண்ணீர் மட்டம் உயர்வதை யாராலும் நம்ப முடியாது.
இந்த அற்புத நிகழ்ச்சியை நிகழ்த்திய இறைவன், "வெள்ளம் வடியத் துவங்கிய போது நூஹ் நபியின் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது" (அல்குர்ஆன் 11 : 44) என்று கூறுகிறான்.
மலையின் மீது அமர்ந்த கப்பல் பனிப்பொழிவுகளால் மறைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.  பின்னர் இம்மலை மீது உள்ள கப்பலை மனிதர்கள் கண்டு பிடித்தனர்.  இவ்வளவு உயரமான மலை மீது கப்பலைக் கொண்டு போய் யாரும் வைத்திருக்க முடியாது.  மலை மட்டத்திற்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே கப்பல் மலை உச்சிக்கு வர முடியும் என்ற முடிவுக்கு வந்து அந்த அதிசய நிகழ்ச்சியை உண்மைப் படுத்தினார்கள்.
கடல் பிளத்தல்
கடலை இரு கூறாகக் கிழித்து மூஸா நபி காப்பாற்றப் பட்டதும், பிர்அவ்ன் என்ற கொடுங்கோலன் அழிக்கப் பட்டதும் நாம் அறிந்த வரலாறு.  திருக்குர்ஆன் கூறும் இவ்வரலாற்றை இறை நம்பிக்கை அற்றவர்களால் நம்ப முடியாது.
கடல் எப்படிப் பிளந்து வழிவிடும் என்று அவர்கள் வியப்படைவார்கள்.  இதன் காரணமாகத் தான் கடல் பிளந்த வரலாற்றைக் கூறிய இறைவன் பிர்அவ்னின் உடலை நாம் பாதுகாத்து எதிர் காலத்துக்கு படிப்பினையாக்குவோம் (அல்குர்ஆன் 10:92) என்று கூறுகிறான்.  இறைவன் பாதுகாத்த அந்தத் தடயம் - பிர்அவ்னின் உடல் கண்டு பிடிக்கப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப் பட்டு வருகின்றது.  அந்த அற்புத நிகழ்ச்சிக்குரிய வரலாற்றுத் தடயமாக அவனது உடல் அமைந்துள்ளது.
இதே போல் குகை வாசிகள் குறித்த நிகழ்ச்சியிலும் இறை நம்பிக்கையற்றவர்கள் சந்தேகம் கொள்வார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ள இறைவன் அந்த நிகழ்ச்சிக்கும் அற்புதமான தடயத்தை விட்டு வைத்துள்ளான்.
அந்தத் தடயத்தைக் காணும் உலகம் அதிசயித்து பிரமிக்கிறது.
அந்தத் தடயம் குறித்தும் இதே வசனத்திலேயே வல்ல இறைவன் குறிப்பிடுகிறான்.
அந்தத் தடயம் என்ன என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.


குகைவாசிகள் தடயம்
குகை மற்றும் ரகீம் உடையவர்கள் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்கள் என்று நீர் நினைக்கின்றீரா?
(ஒன்பதாம் வசனம்)
இறை நம்பிக்கையாளர்கள் இந்நிகழ்ச்சியில் எந்தச் சந்தேகமும் கொள்ள மாட்டார்கள் என்று கூறிய இறைவன் இந்நிகழ்ச்சி நடந்ததற்கான தடயத்தையும் விட்டு வைத்திருக்கிறான் என்று கடந்த இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
அந்தத் தடயம் எது என்பதை இப்போது பார்ப்போம்.
அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு குகையில் தூங்கிய காரணத்தால் குகை வாசிகள் என்று குறிப்பிடப் படுகின்றனர்.  ஆனால் குகைவாசிகள் என்பதுடன் "ரகீம்'' வாசிகள் - ரகீம் உடையவர்கள் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்.
ரகீம் என்றால் ஏடு, எழுதப்பட்டது என்று பொருள்.  "அர் ரகீம்'' என்றால் அந்த ஏடு என்று பொருள்.
குகையில் தங்கியவர்களைப் பற்றி கூறுவதென்றால் குகைவாசிகள் என்று மட்டும் கூறினால் போதுமானது.  "அந்த ஏட்டுக்குரியவர்கள்'' என்று கூறுவது ஏன்?
ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது.  "அந்த ஏடு' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.
அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப் பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே "அந்த ஏட்டுக்குரியவர்கள்'' என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும்.  அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் "அந்த ஏடு'' என்று முக்கியத்துவப் படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.
அந்த ஏடுதான் இந்நிகழ்ச்சிக்குரிய முக்கியமான தடயம் என்று நாம் கூறுகிறோம்.
அந்த ஏடு - அந்த மாபெரும் வரலாற்றுத் தடயம் கிடைத்து விட்ட செய்தியை சவூதியில் பணியாற்றிய பேராசிரியர் அமீருத்தீன் அவர்கள் 1998ஆம் ஆண்டு நமக்குத் தெரிவித்தார்கள்.  பி.பி.சி. தொலைக்காட்சியில் அந்தத் தடயம் கிடைத்தது குறித்து ஒளிபரப்பப் பட்டதை வீடியோவில் பதிவு செய்து நமக்கு அனுப்பி வைத்தார்கள்.
அல்லாஹ்வின் அற்புதத்தை எண்ணி நாங்கள் வியப்புற்றோம்.  அந்த ஒளிப்பதிவை ஆதாரமாகக் கொண்டு தனியாக ஆய்வு நூல் ஒன்றை வெளியிடவும் நாம் நினைத்திருந்தோம்.
இந்த நிலையில் தான் கோவை குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி நமது அலுவலகத்தைச் சோதனையிட்ட காவல்துறையினர் எல்லா வீடியோ கேஸட்டுகளையும் அள்ளிச் சென்று விட்டனர்
(இந்த நிகழ்ச்சியை பி.பி.சி. தொலைக்காட்சியிலிருந்து பதிவு செய்தவர்கள் யாராவது நமக்கு அனுப்பி வைத்தால் நாம் மிகவும் நன்றி செலுத்துவோம்.)
அந்த ஒளிப்பதிவில் உள்ள விபரங்களை நினைவு படுத்தி எழுதித் தருமாறு பேராசிரியர் அமீருத்தீன் அவர்களிடம் கேட்டோம்.  அவர்கள் இயன்ற வரை நினைவு படுத்தி பி.பி.சி. யில் ஒளிபரப்பப் பட்டதை எழுதித் தந்தார்கள்.  அதை அவரது நடையிலேயே கீழே தருகின்றோம்.
சாவுக்கடல் சாசனச் சுருள்கள் (உங்ஹக் நங்ஹ நஸ்ரீழ்ர்ப்ப்ள்)
மேற்கண்ட தலைப்பில் 1998ம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி. யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது.  அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப் பட்டதாகவும் சொல்லப்பட்டது.  அதன் விபரங்கள் :
1947-ம் ஆண்டு ஒருநாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை (உங்ஹக் நங்ஹ) ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதிகளில் தேடி அலைந்தான்.  அந்த மலைப்பகுதி கும்ரான் மலைப்பகுதி என்று அழைக்கப் படுகிறது.
ஆட்டுக்குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த பொழுது, மண் சாடிகளில் சுருட்டி நிரப்பி வைக்கப் பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான்.  அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும் மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்து சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அந்தப் பழைய தோல்களை தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருசலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.
ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனைச் சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.  கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப் பட்ட விஷயம் வெளிப்பட்டது.  அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும் முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.  அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், அந்த சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப் பட்டு அவைகள் ஆராயப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்துவிட்டனர்.  கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவைகளைப் படிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப் படவில்லை.  இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருசலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப்பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.  1952-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய் சேர்ந்து விட்டன.  பதினைந்தாயிரம் ஙஹய்ன்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ள் இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.
கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து விட்டது.  பல கிறித்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டது.
சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப் பட்டு வந்தது.  இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப் பட்டு வந்தது.  இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.
தோலில் பதிந்த அந்தப் பழங்கால சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை ஙண்ஸ்ரீழ்ர்ச்ண்ப்ம் எடுத்தார்கள்.  அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு ரகசிய பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டது.
1990-ம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப் பட்டார்.  அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப் பட்டவர்.  இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களை பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவைகளைப் படித்தார்.  அவற்றைப் படித்தபோது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்குமூலம் அளிக்கின்றார்.  இத்தனை காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.
மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 ஙஹய்ன்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ள்-களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடுகின்றார்.  அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும் குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.
மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும் ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.  அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது.
கிறித்தவப் பாதிரியார்கள் இவ்வளவு காலமும் "சாவுக்கடல் சாசனச் சுருள்களை'' ரகசியமாக வைத்திருந்ததன் காரணத்தை அந்த இரு அறிஞர்களும் விளக்குகின்றார்கள்.
இந்த சாசனங்கள் கும்ரான் மலைப்பகுதிகளில் அக்கால ரோமர்களின் ஆட்சியை எதிர்த்து ரகசியமாகக் குடியேறியவர்களால் எழுதப் பட்டிருக்கின்றது.  அவர்கள் "எஸ்ஸீன்ஸ்'' என்ற பெயரால் அழைக்கப் படுகின்றனர்.  அவர்கள் இல்லற வாழ்வைத் துறந்தவர்கள்.  தமது பணியின் கடுமை கருதி அவர்கள் துறவறம் மேற்கொண்டவர்கள்.  ஏசு பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே யூதர்கள் மத்தியில் இந்த இறைப் பணியாளர்கள் இருந்தார்கள்.  அவர்களின் தலைவர்கள் பலர் "மெஸய்யா'' (மஸீஹ்) என்று அழைக்கப் படுகின்றார்கள்.  எனவே மெஸய்யா என்பது ஏசுவுக்கு மட்டும் உள்ள பிரத்தியேகப் பெயர் அல்ல.  ஒரு தலைவர் ரோமர்களால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டால் மற்றொருவர் அந்தப் பொறுப்புக்கு வருகிறார்.  அதைத் தான் "மஸீஹ் - உயிர்த்தெழுந்தார்' (தங்ள்ன்ழ்ழ்ங்ஸ்ரீற்ங்க்) என்று அவர்கள் கூறி வந்தார்கள்.  மஸீஹை சிலுவை மூலம் கொலை செய்வது யூதர்கள் காலத்தில் இருந்த வழக்கம்.  இப்படி பலர் ரோமர்களால் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.  உதாரணமாக ஜேம்ஸ் என்ற நல்ல தலைவர் இருந்தார்.  அவரும் "மெஸய்யா'' என்றே சாசனத்தில் அழைக்கப் படுகிறார்.  அவரை சிலுவையில் அறைந்தே ரோமர்கள் கொலை செய்கின்றார்கள்.
அந்த "எஸ்ஸீன்ஸ்'களில் இருந்து வந்தவர் தான் ஏசு.  ஆகவே தான் அவரும் "மெஸய்யா' என்று குறிப்பிடப் படுகின்றார். ஏசு ஒன்றும் சாந்த சொரூபி அல்ல.  ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டவேண்டும் என்பதெல்லாம் அவர் கொள்கை அல்ல.  இப்போது ஏசுவைப் பற்றி சொல்லப் படுவதற்கு சாசனச்சுருள்களில் எந்த ஆதாரமும் இல்லை.  ஏசு ரோமர்களை எதிர்க்க ரகசியமாக ஒரு படையைத் தயாரித்துக் கொண்டிருந்தார் என்பதற்கே ஆதாரங்கள் இருக்கின்றன.
கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப் படும் மதச் சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.  இந்தச் சடங்குகளுக்கும் ஏசுவின் பிரச்சாரத்திற்கும், கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  அவை அனைத்தும் "பவுல்' என்பவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டவை.  மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப்படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானது.  அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலைமுறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.
மேற்கண்டவாறு அறிஞர் ஐஸ்மேன் கூறி வரும்போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ணன்ழ்ஹய் - அது குர்ஆனை உறுதிப் படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார்.  அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறு காட்சி காட்டப் படுகின்றது.
இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞரும் பேசும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ஒள்ப்ஹம் - அது இஸ்லாத்தை உறுதிப் படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப் படுகின்றது.  ஆகவே இந்த சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும் இஸ்லாத்தையும் உண்மைப் படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதை பார்வையாளர்கள் அறியமுடியவில்லை.  அதன் பிறகு தான் அந்த டாக்குமெண்டரியை நான் பதிவு செய்தேன்.  பலமுறை பார்த்தேன்.  ஓரளவு தெளிவான பின் அந்த அறிஞர்களின் கருத்துக்கு ஆதாரத்தைத் தேடி ஆராய்ச்சியில் இறங்கினேன்.
அந்த ஆராய்ச்சியின் போது திருக்குர்ஆனின் 18-ம் அத்தியாயம் "குகை' என்ற தலைப்பில் இருப்பது என் கவனத்தைக் கவர்ந்தது.  அங்கு குகை வாழ் தோழர்களின் ஆச்சரியமான வாழ்க்கையின் செய்திகள் சொல்லப் படுகின்றன.  அந்தத் தோழர்கள் ஆரம்ப காலத்தில் ஏசுவின் வழியை மேற்கொண்ட கிறித்தவர்கள் என்று பல அறிஞர்கள் தங்கள் உரைகளில் கூறுகின்றார்கள்.
"தஜ்ஜாலின் பாதிப்பிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புபவர்கள் குகை அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை நினைவு படுத்திக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் உள்ளது என்று ஓர் அறிஞர் கூறுகின்றார்.  தஜ்ஜால் என்பதற்கு ஏசு எதிர்ப்பாளர் என்றும் குழப்பவாதி என்றும் பொருள் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.  ஆகவே இதிலிருந்து தஜ்ஜால் யாராக இருக்க முடியும் என்பதையும் நாம் அறிய முடியும் என்பது அவரின் வாதம்.
பேராசிரியர் அமீருத்தீன் அவர்கள் நினைவு படுத்தி எழுதித் தந்த செய்தி இதுதான்.
அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.
ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்சீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது.
ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் இருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை எனலாம்.
ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு கடவுள் வழங்கியதன்று.  மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.
பைபிளின் பல இடங்களில் இயேசு, ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தைப் பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் என்பதை மறைத்துவிட்டு ஈஸா நபியைப் பற்றி உண்மையையும் பொய்யையும் கலந்து எழுதியதே பைபிள்.  (அதிக விபரங்களுக்கு இதுதான் பைபிள் என்ற நமது நூலைப் பார்வையிடுக)
எந்த இறைவேதத்தை அவர்கள் மறைத்தார்களோ அதைத் தான் இயேசுவின் வழிவந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.
"குர்ஆனை ஒத்திருக்கின்றது'' என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.
இஞ்சீல் எனும் வேதத்தை குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.
அடுத்ததாக அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் அந்தக் கருத்தை உறுதிப் படுத்துகின்றது.  இதுதான் இயேசுவின் வேதமாக இருக்க முடியும், இது அம்பலமானால் காலா காலமாக தாங்கள் போதித்த கொள்கைக்கு சாவுமணி அடிக்கப்படும் என்று இவர்கள் அஞ்சியதே இதை மேலும் உறுதிப் படுத்துகின்றது.
மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப் படுத்துகின்றது.
குகைவாசிகளும் (இவர்கள் திட்டமிட்டு மறைத்த) அந்த ஏட்டுக்குரியவர்களும் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்கள் என்று எண்ணுகிறீர்களா? என்ற வசனத்தை வாசிக்கும் போது நம்மையும் அறியாமலே நாம் ஆச்சரியத்தின் விளிம்புக்குச் சென்று விடுகின்றோம்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites