அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 மே, 2010

மனைவியிடம் சிறந்தவரே மனிதரில் சிறந்தவர்

பொதுவாக கணவன்மார்கள் தம் மனைவியிடம் காட்ட வேண்டிய மென்மையையும் பாசத்தைûயும் அவளிடம் காட்டாமல் பிறரிடம் காட்டுகிறார்கள். ஊருக்கெல்லாம் நல்லது செய்து நல்லவன் என்ற பட்டத்தை வாங்குவான். ஆனால் தன்னுடைய மனைவியிடம் மிகவும் மோசமான மனிதனாக நடந்து கொள்வான். இப்படிப் பட்டவர்கள் எவ்வளவு தான் ஊர் உலகத்திடம் நல்ல பெயர் வாங்கினாலும் தன் மனைவியிடம் நன்முறையில் நடந்து கொள்ளாவிட்டால் அவன் சிறந்தவனாக முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி(ஸல்) அவரகள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மதி 1082
திருமணம் என்பது வெறும் உடல் சுகத்திற்காக மட்டும் நடத்தப்படுவது கிடையாது. மாறாக திருமணம் என்றாலே இரு மனங்கள் இணைந்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்வதாகும். இதில் யாரும் யாருக்கும் அடிமையில்லை. கணவன் உண்ட பின்பு அவன் வைத்த மீத உணவைத் தான் மனைவி உண்ண வேண்டும் என்று எழுதப்படாத சட்டமாக இன்று வழக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கணவனுடன் சேர்ந்து உண்ணுவதை பெரும் குற்றமாகப் பாவிக்கிறார்கள்.
இன்னும் சில கணவன்மார்கள் வெளியில் தான் விரும்பும் உணவை உண்டு விட்டு வீட்டிற்கு வருவார்கள். வீட்டில் இவனுக்காகக் காத்திருக்கும் மனைவியோ வீட்டில் உள்ள பழைய உணவை உண்பாள். தான் உண்டதை தன் மனைவிக்கும் வழங்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. மனைவியை உணர்வுகள் அற்ற ஆடு மாடுகளை போன்று நடத்துகிறார்கள். கணவனுக்கு மனைவி எந்த விதத்திலும் இளைத்தவள் இல்லை. அவன் உண்ணக் கூடியது பிரியாணியாக இருந்தாலும் பழைய கஞ்சியாக இருந்தாலும் அதில் மனைவியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம்  வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.
அறிவிப்பாளர்: முஆவியா (ரலி)
நூல்: அஹ்மத் 19160
ஒரு மனிதர் நபியவர்களிடம் "மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1830,  அஹ்மத் 19162
பெண்களும் சாமானியர்களல்ல. அவர்களும் தங்களது கை, கால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.
முகத்தில் அடிக்கக் கூடாது என  வைராக்கியம் உடையவனைக் கூட முகத்தில் பளார் பளார் என விளாசித் தள்ளும் அளவுக்குக் கோபத்தை ஏற்படுத்துவார்கள். எனினும் அதில் ஆண்கள் நிதானத்தையே கடைப் பிடிக்க வேண்டும். காரணம் பெண்கள் கோணலான, வளைந்த  விலா எலும்பால் படைக்கப்பட்டவளன்றோ?
உங்கள் மனைவிக்கு உணவை ஊட்டி விடுங்கள்
திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர் பாசமாக நடந்து கொண்டால் தான் அவ்வாழ்வு இனிக்கும். முகத்தை திருப்பிக் கொண்டு செல்வதினால் வெறுப்புகள் அதிகமாகும். எனவே பாசத்தை ஏற்படுத்தும் முகமாக நபி (ஸல்) அவர்கள் கணவன்மார்களை தன் மனைவிமார்களுக்கு உணவு ஊட்டி விடுவது கூட தர்மம் என்று கூறுகிறார்கள். சமுதாயத்தில் இந்த தர்மத்தைச் செய்தவர்கள் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்?. 
"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர்.  உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: புகாரி 56
தாறுமாறாக அடிக்க வேண்டாம்
மனிதர்கள் என்றால் தவறு ஏற்படவே செய்யும். பெரிய தவறு ஏற்பட்டால் பரவாயில்லை. சின்ன தவறுக்கும் பெரிய தண்டனை கொடுத்து அரக்கத்தனமாக நடந்து கொண்டு, இதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத, அலட்டிக் கொள்ளாத ஜென்மங்களும் இருக்கிறார்கள்
பாருங்களேன்! ரசத்தில் உப்பு போட வில்லை என்பதற்காக மனைவியைக் கூப்பிட்டு அகப்பையால் ஓங்கி அடி கொடுக்கிறார் கணவர். அல்லாஹ் தான் இவர்களையும் இவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும். இது போல ஆனத்துடன்  ரசமும்  ஏன் சேர்த்து சமைக்கவில்லை? என்பதற்காக தாண்டவம் ஆடும் கணவர்களும் உண்டு. 
கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் எழும் போது தவறு மனைவியின் தரப்பில் ஏற்பட்டிருந்தால் அவளைக் கண்டிப்பதற்கு, கணவனுக்கு அனுமதி உள்ளது. பலத்த காயங்கள் ஏற்படாதவாறு முகத்தில் அடிக்காமல் அவர்களைக் கண்டிக்கலாம். இது கூட அவர்கள் ஏதும் தவறு செய்தால் தான். ஆனால் இன்று கணவன் மனைவி மீது கோபம் கொண்டு விட்டால் கை, கால் தெரியாமல் கண்ட இடங்களில் கடுமையாக அடித்து விடுகிறான். கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், அதன் இறுதி கைசேதம் என்று கூறுவதைப் போல் நன்கு அடித்து விட்டுப் பின்பு வருந்துகிறார்கள். இதனால் இருவருடைய உறவுகளும் சில வேளைகளில் அறுந்து விடுகிறது. இதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் ஆண்களுக்குப் பெண்கள் விஷயத்தில் இந்த அருமையான யோசனையை கூறியுள்ளார்கள்.
"நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)
நூல்: புகாரி 5204
கேவலமாகத் திட்ட வேண்டாம்
கணவன் மனைவியைத் திட்டும் போதும், ஒரு வரம்பு இல்லாமல் கொச்சையான வார்த்தைகளால் மனம் புண்படும் படி பேசி விடுகிறான். சில கணவன்மார்கள் மனைவியுடைய கற்பைப் பற்றியே அவதூறாக அவளை நேருக்கு நேராக வைத்துக் கொண்டு கண்டபடி ஏசுகிறார்கள். இதுவும் அவர்களுடைய இல்வாழ்கைக்கு பெரும் கேடாக வந்து அமைகிறது. எனவே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு மோசமான வார்த்தைகளை யாரிடத்தில் கூறினாலும் அது பெரும் தண்டனையைப் பெற்றுத் தரும் என்று எச்சரித்துள்ளார்கள்.
"ஒரு அடியார் பின் விளைவைப் யோசித்துப் பார்க்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்'' என்று நபியவர்கள் கூறினாôர்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6477
மனைவியை அலட்சியப் படுத்துபவன் பாவி
இன்று பலர் தாங்கள் அல்லாஹ்வின் பாதையில் செல்வதாக எண்ணிக் கொண்டு தன் குடும்பத்தைத் தெருவில் விட்டு விட்டு எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று கூறி புறப்பட்டு விடுகிறார்கள். இவர்கள் நன்மை செய்வதாக எண்ணி தீமையை சம்பாதித்துக் கொள்கிறார்கள். குடும்பத்தைக் கவனிப்பது அல்லாஹ்வின் பாதை என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
மனைவி மக்களிடத்தில் உலக இன்பங்களைத் தவிர வேறு எதுவும் நன்மை இல்லை என்று நினைக்கின்றானர். பள்ளிவாசலிலே கிடப்பதை விட குடும்பத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதே முக்கியம். மனைவி மக்களைக் கவனிக்காது வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் இறைவனை நெருங்க முடியாது.
நல்ல மனிதனாக, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனாக அவன்  இருந்தாலும் தன் குடும்பத்தை நல்ல முறையில் கவனிக்காவிட்டால் அவனைப் பாவி என்று நபி (ஸல்) அவர்கள் உணர்த்தியுள்ளார்கள்
"தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்''  என்று நபியவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலீ)
நூல்: அபூதாவூத் 1442
உள்ளதை வைத்து
திருப்தி கொள்
எவ்வளவு தான் நாம் பெண்களுக்கு உபதேசங்களைச் செய்தாலும் அவர்களைக் கண்டித்தாலும் அவர்கள் பிழை செய்யாமல் இருப்பதில்லை. அல்லாஹ் இயற்கையாகவே அவர்களை இவ்விதத்தில் படைத்துள்ளான். எனவே எந்தக் கணவனும் தன் மனைவி முழுக்க முழுக்க தவறே செய்யாமல், தான் நினைப்பது போல் எல்லாம் நடக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. வாழ்வில் நெழிவுகளும் சுழிவுகளும் ஏற்படத் தான் செய்யும். சண்டை பிரச்சனைகள் வந்து பிறகு இருவரும் சுமூகமாக இணைவது எத்தனை எத்தனை சுகம்?
பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக் கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும் என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2913
நபியவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி (ஸல்) அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின்  கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள். 
அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ)
நூல்: புகாரீ 2481
ஐஸ் வைத்த அண்ணலார்
பொதுவாக பெண்கள் நம்மைத் துருவித் துருவி விசாரிப்பார்கள். தன் கணவன் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று அவர்கள்  கருதுவதே இதற்குக் காரணம். நாம் நினைத்துக் கூட பார்த்திருக்காத சந்தேகங்கள் எல்லாம் அவர்களுக்குத் தோன்றும். நம்மேல் உள்ள பாசம் தான் இதற்கு காரணம். என் கணவன் எப்படியும் செல்கிறான் என்று ஒரு மனைவி இருந்தால் அவள் தன் கணவன் மீது நேசம் அற்றவளாக இருக்கிறாள் என்று அர்த்தம். எனவே இதுபோன்ற கால கட்டங்களில் ஆண்களுக்குக் கோபம் வருவது நியாயமாக இருந்தாலும் கூட கோபப்படாமல் அவர்களை சமாதானம் செய்வது முக்கியம்.
நபி (ஸல்) அவர்கள் பல மனைவியரை மணம் முடித்திருந்ததால் இது போன்ற நிலை அவர்களுக்கும் ஏற்பட்டது. அப்போது அவர்கள் மனைவியை சமாளித்தார்களே தவிர அதட்டவோ, அடிக்கவோ, கோபப் படவோ இல்லை.
(ஒரு முறை கடுமையான தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், "என் தலைவலியே!'' என்று சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் உயிரோடு இருக்கும் போதே அது (இறப்பு) ஏற்பட்டு விட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்பு கோரி உனக்காக (மறுமை நலன் கோரி) பிரார்த்திப்பேன்'' என்று சொன்னார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அந்தோ! அல்லாஹ்வின் ஆணையாக! நான் (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே சென்று நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது) நான் தான் (இப்போது), "என் தலைவலியே!' என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும் உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனால் தான் உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநிதியாக செயல்படும் படி) அறிவித்து விட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லி விடவோ (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்பட்டு விடவோ கூடாது என்பதற்காகவே (அவ்வாறு விரும்பினேன்) ஆனால் பின்னர் "(அபூபக்ரைத் தவிர வேறொருவரை பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க மாட்டான். இறை நம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்க மாட்டார்கள்' என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர்
நூல்: புகாரி
நாம் ஒன்றை நினைத்துச் சொன்னால் அவர்கள் வேறோன்றை நினைத்துக் கொண்டு பேசுவார்கள். அந்த நேரத்தில் கோபப்படாமல் அவர்களைக் குளிரும் வகையில் நம் பேச்சை புத்திசாலித் தனமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
மாபெரும் செல்வம்
"இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்
நூல்: முஸ்லிம் 2911
பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலமாக அப்பெண்களைப் பெற்றிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டே அவர்களின் கற்புகளை சொந்தமாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்களின் படுக்கையில் படுக்க வைக்காமல் இருப்பதே அவர்கள் உங்களுக்குச் செய்யும் கடமையாகும். அதை அவர்கள் செய்தால் காயமின்றி அவர்களை அடியுங்கள். உணவும் உடையும் வழங்குவதே நீங்கள் அவர்களுக்கு நல்ல முறையில் செய்ய வேண்டிய கடமையாகும். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது ஆற்றிய இறுதி உரையாகும்
அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137,   அபூதாவூத் 1628
ஒப்புக் கொண்டேன் என்று சபையோர் முன்னிலையில் பெண்ணைக் கரம் பிடித்த நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என எண்ணி விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சி நடந்திடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். திருமண ஒப்பந்தம் செய்யும் போதும், இன்ன பிற சமயங்களிலும், ஜும்ஆ நாளிலும் நிகழ்த்தும் சொற்பொழிவுகளில் அடிக்கடிக் கேட்கும் ஒரு வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கின்றான் பாருங்கள்!
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)
திருமணத்தின் மூலம்  ஒரு உறவு மலர்ந்து ஒரு புது வரவு குடும்பத்தில் இணைகிறது. அந்த வரவால், உறவால் இருக்கின்ற உறவுக்கும் இடர் வரக் கூடாது அதுபோல்  அரும்பி வரும் புது உறவுக்கும் இடர் வரக் கூடாது என்பதையே "உறவினர்கள் விஷயத்தில் அஞ்சுங்கள்' எனக் கூறி எச்சரிக்கை செய்யப்படுகிறது
இந்த எச்சரிக்கை மண மக்களுக்கு மட்டுமல்ல எல்லா மக்களுக்கும் தான். எப்படி இந்த எச்சரிக்கையை மணமக்கள் மறந்து விடுகிறார்களோ அது போலவே கூடியுள்ள மற்ற மக்களும் மறந்து விடுகிறார்கள். ஆனால் விருந்து என்றால் பருந்து போல் விரைந்து சென்று சாப்பிட  மட்டும் மறப்பதில்லை, மறுப்பதுமில்லை 
தீமையின் பங்கு தீமை செய்தவர்களுக்கு மட்டுமல்ல! அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தவர்களுக்கும் அதை ஆதரித்தவர்களுக்கும் தான் தன்டனை உண்டு.
ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. அந்தந்த பொறுப்பாளரிடமும் அவரவர்களின் பொறுப்புகள் பற்றி கேட்கப்படும். யாரையும் அல்லாஹ் விடமாட்டான். தனக்குச் சாதகமாக இருக்கும் காரியங்களுக்கு, தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக ஓடிப் போய் முன்னால் நிற்கும் ஒருவர் தீமைகள் நடக்கக் காணும் போது அதைப் போல ஓடிப் போய் தடுக்க வேண்டுமா? இல்லையா?
ஒரு பெண்ணுக்குக் கல்யாணமென்றால் ஒன்று கூடுகின்ற, பெண் வீடு என்று கூட பார்க்காமல் போய் சாப்பிடுகின்ற இவர்கள், விவகாரம் என்றால் முன் வராததேன்?   களத்திற்கு வராமல் காணாமல் போவதேன்?
"விவகாரம் வரும் போது எங்க போனாய்? இரு வீட்டார்கள் சார்பாகவும் நன்மையென்றால் ஃபாத்திஹா ஓதிய நீங்கள், ஆமீன் போட்ட நீங்கள், பஞ்சாயத்தென்றால் பறந்து, மறந்து போய் விட்டீர்களே ஏன்னப்பா ஏன்?' என அல்லாஹ் கேட்காமல் விட மாட்டான்.     தீமைகளுக்கும்  அவற்றுக்குத் தக்க கூலி கிடைக்காமல் வெறுமனே சும்மா விடப்படமாட்டாது.
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே!
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும்  பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ)
நூல்: புகாரீ 5200
கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய விஷயங்களைப் பார்த்தோம். இனி மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டியவை என்ன என்பதை வரும் இதழில் காண்போம் இன்ஷா அல்லாஹ்!

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites