அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 மே, 2010

பெண்ணினம் இழிவானதா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பெண்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அல்லாஹ் முறையாக வணங்கப்பட்டிருப்பான்''
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: அல் காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால். பாகம் 5 பக்கம் 282
என்ன சகோதரிகளே! இந்தச் செய்தியைப் படித்தவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றதா? பெண்ணினம் என்ன அவ்வளவு இழிவானதா? என்ற எண்ணம் தோன்றுகிறதா? கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். இதனுடைய அறிவிப்பாளர்களின் நிலையை அறிந்து கொண்ட பிறகு இதனுடைய விளக்கத்திற்கு நாம் செல்வோம்.
மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர்களின் வரிசையில் நான்காவதாக "அப்துர் ரஹ்மான் பின் ஸைத் அல்அம்மீ'' என்பவர் இடம்பெறுகிறார். இவரைப் பற்றி ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்து இதோ:
அப்துர்ரஹீம் பின் ஸைத் என்பவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் தள்ளுபடிசெய்துள்ளனர் என்று இமாம் புகாரீ கூறியுள்ளார்கள். "இவர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளப்படக் கூடியவர் இல்லை'' என்று யஹ்யா அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: அல் காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால் பாகம்: 5, பக்கம்: 281)
இவர் மிகப் பெரும் பொய்யரும் மோசமானவரும் ஆவார் என்று இப்னு மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 6, பக்கம்: 273)
எனவே மேற்கண்ட செய்தி நபி (ஸல்) அவர்களால் கூறப்படாத, அவர்களின் மீது பொய்யாக இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும் என்பது தெளிவாகிறது.
"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு''
"பெண் புத்தி பின் புத்தி''
"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே''
என்றெல்லாம் பெண்ணினத்தை இழிவு படுத்திப் பல்வேறு பழமொழிகள் நடைமுறையில் கூறப்படுகின்றன. அறியாமைக் காலத்தில் பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை. பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா? என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்ட காலம் அது. இன்றைய காலத்திலும் பெண்கள் போகப் பொருளாகத் தான் கருதப்படுகின்றனர். ஆனால் உண்மையிலேயே பெண்களுக்குரிய உரிமைகளை வழங்கி, அவர்களுக்குரிய கடமைகளையும் தெளிவு படுத்திய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.
பெண்ணுரிமை பறிக்கப்பட்ட காலத்தில் "பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன'' (அல்குர்ஆன் 2:228) என்று பெண்ணுரிமை போற்றிய மார்க்கம் தான் இஸ்லாம். ஆனால் இப்படிப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்திலும் சிலர் பெண்ணினத்தை இழிவு படுத்தும் வண்ணம், மாசற்ற இஸ்லாத்தை களங்கப்படுத்தும் வகையில் நபி (ஸல்) அவர்களின் பெயரால் சில செய்திகளை இட்டுக்கட்டியுள்ளனர். இன்றைக்கும் சிலர் அறியாமையினால் இதனை மக்களுக்கு மத்தியில் கூறி வருகின்றனர். இதனால் சிலர், இஸ்லாம் பெண்களுக்கு எதிரானதோ என எண்ணத் தலைப்பட்டுள்ளனர்.
சில ஊர்களில் பெண்களுக்கு தொழுகை கிடையாது. அவர்கள் நரகிற்கென்றே படைக்கப்பட்டவர்கள் என்று பேசும் அளவிற்கு மோசமாகியுள்ளனர்.
எனவே பெண்ணினத்தை இழிவு படுத்தும் வண்ணம் அமைந்த நபியவர்களின் பெயரால் இட்டுக் கட்டப்பட்ட செய்திகளை தெளிவு படுத்துவது அவசியமாகும். அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்றுதான் மேற்கண்ட செய்தியாகும்
"இவ்வுலகில் பலவிதமான இணை வைக்கக் கூடிய வழிபாடுகள் தோன்றுவதற்கு காரணம், பலவிதமான கொள்கைகள் உருவாவதற்குக் காரணம் பெண்கள் தான். பெண்கள் இல்லாமல் இருந்திருந்தால் இப்படிப் பட்ட கொள்கைகள், வழிகேடுகள் தோன்றியிருக்காது ஆண்கள் அனைவரும் சொர்க்கம் சென்றிருப்பார்கள்'' என்பது தான் மேற்கண்ட செய்தியின் கருத்தாகும். இது பெண்ணினத்தை இழிவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் பலவிதமான திருமறை வசனங்களுக்கு மாற்றமானதாகும். பெண்கள் மூலமாக சில வழிகேடுகள் தோன்றும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இதைப் போன்று ஆண்கள் தொடர்பாகவும் கூறியுள்ளார்கள். அதே நேரத்தில் ஈமானுக்கு பாதுகாப்பான வர்களும் பெண்கள் தான் என்ற கருத்திலும் பல செய்திகள் உள்ளன.
அல்லாஹ் பெண்களைப் படைத்ததன் நோக்கத்தைப் பற்றிக் கூறும் போது,
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21 )
"அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்'' (அல் குர்ஆன் 7:189)
ஆண்களுக்கு அமைதி பெண்களிடம் தான் இருக்கிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் மத்தியில் அன்பையும், கிருபையையும் ஏற்படுத்தியிருப்பதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிறைய சான்றுகள் இருப்பதாகவும் அல்லாஹ் கூறுகிறான். அதாவது நம்மைப் படைத்த இறைவன் ஒருவன் தான் என்பதை ஆண் பெண் உறவிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஓரிறைக் கொள்கைக்கே சான்று ஆண் பெண் உறவில் இருப்பதாக அல்லாஹ் கூறும் போது, பெண்கள் இல்லாமலிருந்தால் அல்லாஹ் முறையாக வணங்கப் பட்டிருப்பான் என்பது இறைவனையே கேலி செய்வதாகும். இறைவனுடைய காரியங்களைக் குறை கூறுவதாகும். இறைவனுடைய நாட்டங்களை அர்த்தமற்றதாக்குவதாகும்.
இவ்வளவு ஏன்? ஓரிறைக் கொள்கையை நிலை நாட்டுவதற் காகவும், மனித சமுதாயம் இறைவனை வணங்க வேண்டிய முறைப்படி வணங்க வேண்டும் என்பதற்காகவும், அனுப்பப்பட்டவர்கள் தான் இறைத் தூதர்கள். அந்த இறைத்தூதர்கள் அனைவருமே பெண் துணை உடையவர்களாகத் தான் இருந்தனர் என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது. பெண்ணினம் ஓரிறைக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்றால் இறைவன் இறைத் தூதர்களுக்கு ஜோடியாக அவர்களை ஆக்கியிருப்பானா? என்று நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 13:38)
பெண்ணின் மூலமாகத் தான் ஆண்களின் சந்ததிகள் உருவாக முடியும் என்றும் திருமறைக் குர்ஆன் கூறுகிறது.
உங்களிலிருந்தே அல்லாஹ் உங்களுக்கு மனைவியரை ஏற் படுத்தினான். உங்கள் மனைவியரி லிருந்து பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் ஏற்படுத்தினான். தூய்மையானவற்றிலிருந்து உங்களுக்கு உணவளித்தான். பொய்யில் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி மறக்கின்றார்களா? (அல்குர்ஆன் 16:72)
ஒரு ஆண் மகன் இவ்வுலகில் பெறும் செல்வங்களிலேயே சிறந்த செல்வமாக நபி (ஸல்) அவர்கள் நல்லொழுக்கமுள்ள பெண்களைத் தான் குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும். இவ்வுலகச் செல்வங்களிலேயே சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள்.
அறிவிப்பவர்:  அப்தில்லாஹ் பின் அம்ரு (ரலி),  நூல்: முஸ்லிம் 2668
இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெற அவள் துணை புரிவதின் காரணத்தினால் தான் நபி (ஸல்) அவர்கள் நல்லொழுக்கமுள்ள பெண்ணை சிறப்பித்துத் கூறுகின்றார்கள்.
மேலும் ஒட்டு மொத்த இறை நம்பிக்கையாளர்களுக்கும் முன் மாதிரியாக அல்லாஹ் இரண்டு பெண்களை உதாரணமாகக் கூறுவது பெண் இனத்தின் சிறப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
"என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!'' என்று ஃபிர்அவ்னின்  மனைவி கூறியதால் அவரை  நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப் படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 66:11,12)
எனவே "பெண்கள் இல்லையென்றால் அல்லாஹ் முறையாக வணங்கப்பட்டிருப்பான்'' என்ற செய்தி திருமறைக்குர்ஆன், மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு எதிரானது மட்டுமல்லாமல், நபி (ஸல்) அவர்களால் கூறப்படாத அவர்களின் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites