அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 மே, 2010

வெளியே செல்லும் பெண்களுக்கு வேதம் சொல்லும் விதிகள்

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 33:33)
இந்த வசனத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களை நோக்கி வீடுகளில் அடங்கி இருக்குமாறு அல்லாஹ் கூறுகின்றான்.
எனவே இந்த வசனத்தின்படி ஒரு பெண் காலா காலம் வீட்டில் தான் அடங்கியும் முடங்கியும் கிடக்க வேண்டுமா? என்று கேட்டால் அதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நமக்கு தெளிவான விளக்கத்தை வழங்குகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களை பள்ளிக்கு வரும்படியும், பெருநாள் திடலுக்கு வருமாறும், போர்க்களத்தில் வந்து காயம் பட்ட போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், மக்காவிற்கு வந்து ஹஜ்ஜை நிறைவேற்றவும், மார்க்கத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும் அனுமதி அளித்ததிலிருந்து பெண்கள் வெளியே வரலாம்; ஆனால் சில நிபந்தனைகளுக்கும் வரைமுறைகளுக்கும் உட்பட்டு வெளியே வரவேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அந்த நிபந்தனைகளுக்கு அவர்கள் மாறுபடும் பட்சத்தில் அவர்கள் வீடடங்கித் தான் இருக்க வேண்டும். அந்த நிபந்தனைகளுக்கு மாறுபட்டு அவர்கள் செல்லும் பயணம் நிச்சயமாக மறுமையில் நிந்தனைக்குரிய பாவமாக ஆகி விடும்.
இன்றைய காலத்துப் பெண்கள் இத்தகைய பயணங்களைத் தான் மனதில் கடுகளவு கூட கவலையில்லாமல் மேற்கொள்கின்றனர். இத்தகைய பயணங்களை இங்கே பார்ப்போம்.

ஹஜ் பயணம்
இன்று பல பெண்கள் ஹஜ்ஜுக்காக தன்னுடன் மஹ்ரம் இல்லாதவர்களுடன், அதாவது திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட தந்தை, மகன், உடன் பிறந்த சகோதரர்கள், தாய் மாமன்கள் போன்றவர்கள் அல்லாதவர்களுடன் பயணம் செய்வதைப் பார்க்கின்றோம்.
எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1086
புகாரி 1088வது ஹதீஸில், "அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிய எந்தப் பெண்ணும் ஒரு பகல், ஒரு இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது'' என்று கூறுகின்றார்கள். இந்த விஷயத்தை ஈமானுடன் தொடர்பு படுத்திக் கூறுவதிலிருந்து இது எந்த அளவுக்குக் கடுமையான விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையை ஹஜ் செய்யும் பெண்கள் கொஞ்சமும் பொருட்படுத்துவது கிடையாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்கள் கண்டிப்பாக போரில் கலந்து கொண்டாக வேண்டும். போரில் கலந்து கொள்ளாதவர்கள் நயவஞ்சகர்கள் என்று கருதப்படுவார்கள். அல்லாஹ்வும் தனது திருமறையில் போரில் கலந்து கொள்ளாதவர்களைப் பற்றி கடுமையாகச் சாடுகின்றான்.
இந்த அளவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ள இந்தப் போர் கடமையில் ஒரு நபித்தோழர் தன் பெயரைப் பதிவு செய்து கொள்கின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கண்ட தடையை அறிவிக்கின்றார்கள். அப்போது அந்தத் தோழர், "நான் போரில் கலந்து கொள்ளப் பதிவு செய்திருக்கின்றேன். என்னுடைய மனைவி ஹஜ் செய்ய விரும்புகின்றார்'' என்று தெரிவித்ததும் நபி (ஸல்) அவர்கள், "நீ உன்னுடைய மனைவியுடன் சென்று ஹஜ் செய்'' என்று அவரை அனுப்பி வைக்கின்றார்கள். (பார்க்க புகாரி 1862, 3006)
ஒரு பெண் செல்வது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கிடைக்கும் புனிதத் தலமாக இருந்தாலும் உரிய உறவினர் இல்லாமல் அப்பெண் செல்லக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வளவு கண்டிப்புடன் இருந்த இந்த விஷயம் தான் இன்று காற்றில் விடப்படுகின்றது. எனவே பெண்கள் தூரப் பயணம் என்று வருகின்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
பள்ளிக்கு தொழச் செல்லுதல்
இஸ்லாம் பெண்களுக்கு பள்ளிக்குச் சென்று தொழுவதற்கு அனுமதியளிக்கின்றது. (பார்க்க புகாரி 900) ஆனால் அப்பெண்கள் இரவு நேரத்தில் நறுமணம் பூசிக் கொண்டு பள்ளிக்கு வரக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் நிபந்தனை இடுகின்றார்கள்.
உங்களில் ஒருத்தி பள்ளிக்கு வரும்போது அவள் நறுமணத்தைத் தொட வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்
இந்த ஹதீஸில் பொதுவாக நறுமணம் பூச வேண்டாம் என்று இடம் பெற்றாலும் பின்வரும் ஹதீஸில் இரவு நேரங்களில் நறுமணம் பூச வேண்டாம் என்று இடம் பெற்றுள்ளது.
உங்களில் ஒருத்தி பள்ளிக்கு இஷா தொழுகைக்கு வரும் போது அந்த இரவு அவள் நறுமணம் பூச வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஸைனப் ஸகபிய்யா (ரலி), நூல்: முஸ்லிம் 673
பள்ளிக்குத் தொழ வருவது ஒரு நன்மையான காரியம் தான். ஆனால் அந்த நன்மையைச் செய்வதாக இருந்தால் இரவு நேரங்களில் நறுமணம் பூசிக் கொண்டு வரக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கின்றார்களே! ஏன்?
பொதுவாகவே ஒரு பெண் வெளியே புறப்பட்டு விட்டாலே பல ஆயிரம் கண்கள் அவளை மொய்க்க ஆரம்பித்து விடுகின்றன. அதிலும் இரவு நேரத்தில் என்றால் கேட்கவே வேண்டாம்.
பெண் என்பவள் (மறைக்கப்பட வேண்டிய) மானம். அவள் வெளியே செல்லும் போது ஷைத்தான் அவளை அலங்கரித்துக் காட்டுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதீ 1093
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த வார்த்தைகளை எவரேனும் மறுக்க இயலுமா? யாராவது ஒரு ஆண் போனால், ஆடைகளை அவிழ்த்து விட்டுப் போனால் கூட அவனை ஏறிட்டுப் பார்க்க நாதி உண்டா? ஆனால் பெண் போனால் அவள் பின்னால் கண் போகின்றது. அதனால் தான் பெண்களுக்கு அல்லாஹ் ஆடைகள் என்ற கவசத்தை அணியச் சொல்கின்றான்.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:59)
இத்தனை கவசங்கள், கட்டுப்பாடுகள் இருந்தும் ஆணின் பார்வைகள் தாவிக் குதிக்கின்றன எனும் போது அவர்கள் நறுமணம் பூசி விட்டு வந்தால் அது கவர்ந்திழுக்காமல் சும்மா இருக்குமா? அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய தடையை விதிக்கின்றார்கள்.
அல்லாஹ்வுடைய பள்ளிக்கு வருவதற்கே இத்தகைய தடை என்றால் பொது இடங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்குப் பெண்கள் கொஞ்சமும் மதிப்பளிப்பதில்லை. இரவு நேரங்களில் மல்லிகைப் பூவை சூடிக் கொண்டு பிற ஆண்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் பெண்கள் வெளியில் நடமாடுகின்றனர்.
களங்கப்படும் கடைத் தெருப் பயணங்கள்
இன்று கடைத் தெருவுக்குச் செல்லும் பெண்களை இரு வகைப்படுத்தலாம். 1. புர்கா அல்லது துப்பட்டி அணிந்து செல்லும் பெண்கள். 2. புர்காவோ, துப்பட்டியோ அணியாமல் செல்லும் பெண்கள்.
இன்று மாற்று மதப் பெண்கள் கடைத் தெருவுக்கு வரும் காட்சிகளை நம்மால் வர்ணிக்க இயலாது. இலைமறை காயாக தெரியும் சேலை, ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு தலை நிறைய வாசனைப் பூவை சூடிக் கொண்டு வருகின்றனர். இதற்குக் கொஞ்சமும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று முஸ்லிம் பெண்களும் கிளம்பி வருகின்றனர். இவர்கள் அணிந்து வரும் ஆடையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுவதை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை.  ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும்.  அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர்.  இன்னொரு சாரார் பெண்கள் ஆவர்.  இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள்.  அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும்.  எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும்.  ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: முஸ்லிம் 3971
இவர்களின் இந்தப் போக்கு நிச்சயமாக சுவனத்திற்கு ஒரு தடைக்கல்லாக ஆகி விடும். அல்லாஹ் காப்பானாக!
நிரம்பி வழியும் பேருந்தில் நெரிசலில் மாட்டும் பெண்கள்
இப்போதுள்ள டவுண் பஸ்ஸின் கொள்ளளவு 60 என்றால் அதை விட இரண்டு மடங்கு அளவுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு நிறை மாத கர்ப்பிணி போல் உள்ளே எள்ளளவுக்குக் கூட இடமில்லாமல் குண்டு, குழிகளில் விழுந்து நகர முடியாமல் ஊர்ந்து செல்கின்றது. இதிலுள்ள நெரிசலில் இந்தக் கற்பு நெறியுள்ள பெண்கள் மாட்டித் தவிப்பது வேதனைக்குரிய விஷயம். இதில் இவர்கள் பர்ஸ் வைக்கும் இடமும், அதை எடுக்கும் விதமும் ஆபாசத்திற்குரியது.
(திருக்குர்ஆனின் 60:10 முதல் 12 வரையிலான) இந்த வசனங்களின் கட்டளைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறை நம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள். இந்த (வசனத்திலுள்ள) நிபந்தனையை இறை நம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக் கொண்டாரோ அவரிடம், "உன் விசுவாசப் பிரமாணத்தை நான் ஏற்றுக் கொண்டேன்'' என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வழங்கும் போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை.  பெண்களிடம், "நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்'' என்று அவர்கள் வாய் மொழியாகவே தவிர வேறு எந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2713, 4891, 5288
நபித்தோழியரிடம் விசுவாசப் பிரமாணம் எடுக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.  நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி தான் விசுவாசப் பிரமாணம்!  இதை அல்குர்ஆன் 48:10 வசனத்தில் காணலாம்.  அத்தகைய விசுவாசப் பிரமாணத்தைக் கூட நபி (ஸல்) அவர்கள் பெண்களின் கையைப் பிடித்து எடுத்ததில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.
ஆனால் பஸ்ஸின் நெருக்கத்தில் கை மட்டுமல்ல. மொத்த மேனியும் அந்நிய ஆண்களுக்கு மேல் படுகின்றது.
"விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான்.  அதை அவன் அடைந்தே தீருவான்.  கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும்.  நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும்.  மனம் ஏங்குகின்றது.  இச்சை கொள்கின்றது.  பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது.  அல்லது பொய்யாக்குகின்றது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-),  நூல் : புகாரி 6243
விபச்சாரத்தின் பல படித்தரங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இவை அனைத்தும் ஒரு சேர இல்லை அதையும் தாண்டி மேனியும் மேனியும் ஒட்டி உரசி நிற்கும் நிலை! எத்தனை சபலப் புத்திக்காரர்கள் இந்தச் சந்தர்ப்பத்துக்காக காத்துக் கிடக்கின்றார்கள். பெண்களை நெருக்கித் தள்ளுகின்றார்கள். இப்படி ஒரு மானம் போகின்ற ஒரு பயணம் தேவையா? பெண்களே சிந்தியுங்கள்.
இது போன்ற கட்டங்களில் நம்முடைய தன்மானத்தைக் காக்கும் வகையில் கட்டுப்பாட்டுணர்வுடன், கற்பு நெறியுடன் கொஞ்சம் காசு போனாலும் பரவாயில்லை. காரிலோ ஆட்டோவிலோ பயணம் செய்யும் பெண்களும் இருக்கவே செய்கின்றனர்.
எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாத கட்டத்திலும், என்ன நெரிசலாக இருந்தாலும் பரவாயில்லை என்று காலணா பெறுமான கத்தரிக்காய் வாங்குவதற்காக கடைத் தெருவுக்குக் கூட பஸ்ஸில் பயணம் செய்யும் பெண்கள் இந்தப் பயணங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். ஏதோ தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தின் போது வேறு வழியே இல்லையே என்று நாணி, கூனிக் குறுகிப் போய் தான் இந்த டவுண் பஸ் பயணங்கள் அமைய வேண்டும்.
கடைத் தெருக்கள்
கடைத் தெருக்குச் செல்லும் பெண்கள் கடைக்காரர்களிடம் தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கக் கூடாது. கடைத் தெருக்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (அல்) அவர்கள் கூறுவதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஊர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானவை அங்குள்ள பள்ளிவாசல்கள் ஆகும். ஊர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் கோபத்திற்குரியவை அங்குள்ள கடைத் தெருக்கள் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1076
எனவே இத்தகைய கோபத்திற்குரிய இடங்களில் எவ்வளவு சீக்கிரம் காரியத்தை முடிக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் காரியத்தை முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும்.
பெண்கள் வீட்டில் இருந்தாலும் வெளியே சென்றாலும் அல்லாஹ் விதித்திருக்கும் விதிகளைப் பேணி அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!
கணவனிருந்தும் விதவைகளாக
நமது நாட்டில் ஒரு பெண் ஒருவனைத் திருமணம் செய்து, புகுந்த வீட்டிற்கு வருகிறாளென்றால் அந்தப் பெண் மட்டும் அவனுக்கு அடிமையல்ல! அந்தப் பெண்ணின் வீட்டார்கள் அத்தனை பேர்களும் கணவனுக்கும் அவனது வீட்டாருக்கும் அடிமையாய் இருக்கிறார்கள். அவனுடைய வீட்டிலுள்ளவர்கள் எல்லோருக்குமே அடிமை சாஸனம் எழுதிக் கொடுத்தவர்கள் போல் செயல் படவேண்டும் என்ற நிலை உள்ளது.
ஒரு பெண் ஒருவனைத் திருமணம் செய்வதென்பது, ஒரு முள் மரத்தில் அழகான சேலையைப் போடுவதைப் போலத் தான். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு, பெண் வீட்டுக்காரர்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களைப் பற்றி சொல்லும் போது, "என்ன செய்வது? விடுங்க! நாம பெண்ணு வீட்டுக்காரங்க! கொஞ்சம் விட்டுக் கொடுத்துத் தான் போக வேண்டும். முள்ளில் சேலையைப் போட்டாச்சு! என்ன செய்றது? பாத்துத் தான் எடுக்கணும்'' என்று சலிப்புடன் கூறுவர்.
மனைவி என்பவள்  கணவனுக்கு அடிமையாகி விடுகிறாளென்பதற்கு அடையாளம் தான் அவளுக்கு அவன் கட்டுகிற தாலி அல்லது கருக மணி! அவளது குடும்பமே கணவனுக்கு அடிமை என்பதற்கு அடையாள முத்திரையாக, திருமண நாளன்று பெண்ணுடைய சகோதரன் மாப்பிள்ளையின் கால்களை ஒரு செம்புத் தண்ணீரால் குனிந்து  கழுவி விடுவான்.
குனிந்து கழுவிக் கொண்டு அடிமைப் பட்டிருக்கும் அந்தப் பெண்ணின் சகோதரனிடம், "நீ மட்டுமல்ல! உன் குடும்பத்தினர் எல்லோருமே இனி எனக்கு அடிமை தான். அதற்கு ஒப்புதல் முத்திரை தான் இந்தத் தங்க மோதிரம்'' என்று மாப்பிள்ளை போடுவார். இந்த அடிமைத் தனத்தை முக மலர்ச்சியுடன் ஏற்று அந்தப் பெண் வீட்டார்கள் மாப்பிள்ளையை வரவேற்று உள்ளே கூட்டிச் செல்வார்கள்.
அந்த வட்டாரத்துக்காரர்ககளும் ஊர் பெரியவர்களும் ஆலிம் பெருந்தகைகளும் மாப்பிள்ளையுடன் சென்று  அந்த அடிமைத்தனத்திற்கு அங்கீகாரம் தந்து விடுகிறார்கள். இது தான் அந்த நிகழ்ச்சியின் தத்துவம்.    
ஒரு பிரச்சனை என்றால் மாமியார் மட்டுமல்ல! வீட்டிலுள்ள பெருசுகள் முதல் சிறுசுகள் வரை, குஞ்சிலிருந்து குருனா வரை அவளுக்கு எதிராக ஒன்று திரண்டு விடுவார்கள். இவள் ஏற்றுக் கொண்ட மாப்பிள்ளையும் ஒரு மாதிரியாக அமைந்து விட்டால் நரகம் தான். ஒன்று அப்பெண் தானாகவே தற்கொலை செய்து கொள்வாள். அல்லது  அவர்களே கொன்று விடுவார்கள். இப்படித்தான் பல ஊர்களில் நடக்கிறது
இப்படி நடப்பது கொஞ்சமென்றால் இது போன்ற பிரச்சனையில் தாங்க முடியாமல் அந்தப் பெண்ணே தாய் வீட்டிற்கு வந்து விடும்.  அல்லது அந்தக் குடும்பத்தினரோ அல்லது கணவனோ அவளைத் தாய் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். இப்படிப்பட்ட பஞ்சாயத்துத்துகள் தான் இப்போது அதிகம் நடக்கிறது.
கணவனிருந்தும் விதவைகள் முஸ்லிம் (?) ஜமாஅத்களின் விந்தைகள்
இப்படி எத்தனை பெண்கள் தங்களுடைய தாய் வீட்டில் குழந்தைகளோடு சிரமப்பட்டு,  கண்ணீரும் கம்பலையுமாக கணவர்கள் இருந்தும் விதவைகளாக காலந் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைப் பற்றி எந்த ஆலிம் பெருந்தகைகள் கவலைப் படுகிறார்கள்? இதைப் பற்றி எத்தனை மவ்லானாக்கள் உபதேசம் புரிகிறார்கள்? இதற்கு அவர்கள் அல்லாஹ்விடம் என்ன பதில் கூறப் போகிறார்கள்? 
இந்த அவலத்தை சுன்னத் வல் ஜமாஅத்  பெரியவர்கள், ஆலிம்கள் கண்டு கொண்டதாகவே தெரிய வில்லை. கல்யாண மற்றும் சுன்னத் விருந்தா? உடனே போய் கலந்து கொண்டு அல் ஃபாதிஹா போட ஓடும் பெருங் கூட்டம் இதுபோன்ற பஞ்சாயத்தென்றால் பிடிக்கிறது ஓட்டம். என்ன செய்வது? இது தான் மிக வேதனை!  நமக்கு வந்த சோதனை!
ஒவ்வொரு முஸ்லிமும் ஏக இறைவனை மட்டும் ஈமான் கொண்டு நம்பிடவில்லை. அல்லாஹ்வை நம்புவதுடன் மறுமை நாளையும் சேர்த்து  உறுதியாக நம்பி வாழ்பவனே உண்மையான முஸ்லிம்.
இஸ்லாத்தின் தனித் தன்மையே ஏக இறைவனையும் இறுதி நாளையும் நம்புவதாகும். இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு ஆழமாக மனதில் பதிந்துள்ளதோ அந்த அளவுக்கு இறையச்சம் மிகுந்து தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும் வாய்ப்பு உண்டு.
அதனாலேயே குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இவற்றை நம்ப வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளது. மறுமை நாளை நம்பியவர்கள் தான் அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் விலகி இருப்பார்கள். இதனால் தான் தடுக்கப்பட்ட சில விஷயங்களை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது அல்லாஹ்வை நம்புவதோடு அவர்கள் மறுமை நாளையும்  நம்பக் கூடியவர்களாக இருந்தால் என்று நிபந்தனை வைக்கிறான்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை.  (அல்குர்ஆன் 2:228)
நபி (ஸல்) அவர்களும் கூட மறுமை நாளை முன் வைத்து பல கட்டளைகளை இட்டுள்ளார்கள்.
இவர்கள் இறுதி நாளை நம்பியவர்களா?
இன்று முஸ்லிம்கள் பெரும்பாலும் மறுமை நாளை நம்பியிருந்தாலும் அதற்குப் பயந்து இவ்வுலகில் நடப்பதில்லை. மறுமையை நம்பாதவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதே போன்று இவர்களும் நடக்கிறார்கள். இதன் விளைவாக அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து விடுகிறார்கள். மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகளை முறையாகச் செய்வதில்லை.
இவ்வாறு இவர்கள் செய்யும் குற்றங்களில் ஒன்று தான் மனைவியைத் துன்புறுத்தி அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முறையாக நிறைவேற்றாமல் இருப்பது. எத்தனையோ கண்வன்மார்கள் தன்னை நம்பி வந்த பெண்ணை அனுபவித்து விட்டு அவளுடைய கையில் ஒரு குழந்தையைக் கொடுத்து விடுவதுடன் அவளிடம் சண்டையிட்டு அவளை அவளுடைய தாய் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்.
இதன் பின்பு அவர்கள் அப்பெண்ணுடைய நிலையையும் அக்குழந்தையின் நிலையையும் எண்ணிப் பார்ப்பதில்லை. யாரோ, எவரோ என்று கண்டும் காணமால் இருந்து விடுகிறார்கள். இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படும் போது மார்க்கம் கூறும் வழிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை.
நாங்கள் உண்மை முஸ்லிம்கள்  அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களையும் நேசிக்கும் உண்மை விசுவாசிகள் என மார் தட்டிக் கொள்ளும் பல முஸ்லிம்கள் பெண்களுக்கு எதிரான பலவிதமான கொடுமைகளைப்  புரிவதோடு அவற்றுக்குத் துணை போவதைப் பார்க்கும் போது நெஞ்சு பொறுக்கவில்லை. அந்த அளவுக்குக் கொடிய கொடுமை கொடி கட்டிப் பறக்கிறது. இதையெல்லாம் கவனிக்கும் போது இவர்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பியவர்களா? என சந்தேகப்பட வேண்டி உள்ளது. அந்த அளவுக்குக் கொடுமைகள் புரிகிறார்கள்.
பெண்ணுக்கு மட்டுமல்ல! பெண்ணைப் பெற்றவர்களுக்கும்  அவர்கள்  மண்டை ஒட்டை மண்ணில் கொண்டு  வைக்கும் வரை பிரச்சனை ஒய்ந்த பாடில்லாமல். நீண்டு கொண்டே செல்கிறது
இருண்ட காலமான அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்தில் பெண்கள் கீழ்த் தரமாகவும் இழிவாகவும் நடத்தப் பட்டார்கள். இஸ்லாம் வந்து அவற்றைத் தகர்த்து தரை மட்டமாக்கி பெண்களுக்குரிய உயர்வுகளையும் உரிமைகளையும் கொடுத்து உலகை வியக்கச் செய்தது. பெண்ணுலகை விழிக்கச் செய்தது.
ஆனால் இன்று  பெரும்பாலான முஸ்லிம்கள் தலை கீழாக மாறி அறியாமைக் கால பழக்க வழக்கத்தையும் மிஞ்சும் வகையில் அதற்கும் மேலாக, மிக  மோசமான நிலைக்குச் சென்று விட்டார்கள். ஜாஹிலிய்யா (அறியாமை)க்காரர்கள் கூட பிறந்த குழந்தைகளை புதைக்கின்ற கெடுமையைத் தான் செய்தார்கள். ஆனால் இவர்கள் அதை விடக் கொடிய காரியத்தையல்லவா செய்கிறார்கள். அது என்ன கொடிய கொடுமை? அதுதான் மனித சமூக வைரஸ் வரதட்சணை வன்கொடுமை.
மற்ற மாபாதகச் செயல்கள் அந்த அறியாமைக் கால மக்களிடம் மலிந்திருந்தாலும் பெண் சமுதாயத்தை சீரழிக்கின்ற சமூகக் கொடுமையாகிய வரதட்சணைக் கொடுமையை  அவர்கள் செய்திடவில்லை. அவர்கள் கூட செய்யாத இந்த  வரதட்சணை வன் கொடுமையை இஸ்லாமிய பெயர் தாங்கிகளான ஜமாஅத் பெரியவர்களும், வரதட்சணையின் தீமையை பிற மக்களிடம் முறையாகப் போதிக்கக் கடமைப்பட்டுள்ள  மார்க்கமறிந்த ஆலிம்களும்  சேர்ந்து இந்தக் கொடுமையை அரங்கேற்றுவது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
இப்படிப்பட்ட ஆலிம்களும் சமூகப் பெரியோர்களும் பெண்களுக்கு எதிராக நடக்கும் உரிமை மீறல்களுக்கும், அக்கிரமங்களுக்கும் எதிராக எப்படி  குரல் கொடுப்பார்கள்?  குரல் கொடுப்பவர்களையும் குரல் கொடுக்கத் தூண்டுபவர்களையும் தடுப்பதில் திறம்பட செயல் படுகிறார்களே தவிர பெண்களுக்கு ஒரு போதும் நியாயத்தைப் பெற்றுத் தர மாட்டார்கள்.
இஸ்லாம் நமக்கு கிடைத்த அரியதோர் பொக்கிஷமாகவும் மாபெரும் பாக்கியமாகவும் உள்ளது. இப்படிப்பட்ட இந்த இஸ்லாத்தை கடைப்பிடிக்காமல் இருந்ததற்கு அவர்கள் எல்லோரும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே தீரவேண்டும். 
திருமணமென்பது வெறும் மகிழ்ச்சியும் குதூகலமும் மட்டுமன்று. மாறாக அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாசப் பிணைப்பையும் கணவனுடைய தேவையை மனைவி நிவர்த்தி செய்வதும் மனைவியுடைய தேவையை கணவன் நிவர்த்தி செய்வதுமாகும். பெண்ணுடைய நலத்திற்கு முழுவதுமாக கணவன் பொறுப்பேற்றுக் கொள்ளும் ஒரு உறுதியான ஒப்பந்தமாகும். இதை அவன் அல்லாஹ் முன்னாலும் அவையோர் முன்னாலும் ஒப்புக் கொண்டேன் என்று கூறி கொடுக்கும் ஓர் உறுதிமொழியாகும். இதைக் கீழ் வரும் குர்ஆன் வசனம் நமக்கு விளக்கிச் சொல்கிறது
உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?  (அல் குர்ஆன் 4:21)
சிறிய விஷயத்திற்காகவெல்லாம் சண்டை போடாமல் பெண்ணிடத்தில் குறைகள் தென்பட்டால் அதைப் பொறுத்துக் கொள்வது தான் நல்லது. அதன் மூலம் வேறு ஏதோ ஒரு வகையில் நல்ல பலனை பின்னால் அல்லாஹ் ஏற்படுத்துவான் என்று பொறுத்து நல்ல முறையில் மனைவியரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களிடம் ஆண்கள் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையும் குர்ஆனும் ஹதீஸும் சொல்கிறது
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக் கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான். (அல்குர்ஆன் 4:19)
நம் மனைவிடம் கனிவாகப் பேச வேண்டும், நம் தோற்றத்தையும் செயல்களையும் இயன்ற வரை அழகிய வடிவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனைவியர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென நாம் நினைப்பது போல் நாம் அவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்.
அந்தப் பெண்களுக்குக் கடமைகள் இருப்பதைப் போன்றே நியாயமான உரிமைகளும் அவர்களுக்கு உண்டு என அல்லாஹ் கூறுகிறான்.
"இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ)
நூல்: முஸ்லிம் 2915
பெண்கள் விஷயத்திலும் அவர்களின் உரிமையைப் பேணும்  விஷயத்திலும் ஆண்கள் மிகவும்  கவனமற்றவர்களாக, அலட்சிய மானவர்களாக இருக்கிறார்கள்.  அதிலும் கணவன்கள் தம் மனைவியர்கள் விஷயத்தில் மிகவும் அலட்சியமாகவே ஏனோ தானோ என  இருக்கிறார்கள். சிலர் வரம்பு மீறி  மோசமாக  நடந்து கொள்கிறார்கள். இதற்குக் காரணம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சம், மறுமை பயம், இஸ்லாமிய அறிவு ஆகியவை அவர்களிடத்தில் இல்லாததேயாகும்.
மேலும் மதரஸாக்களில் இஸ்லாத்தை  அதன் தூய்மையான முறையில் கற்றுத் தராததாலும் நபி (ஸல்) அவர்களின் தூய்மையான சொல், செயல், அங்கீகாரத்தை மட்டுமே போதிக்காமல் கண்ட கண்ட கதை கப்ஸாக்ளைப் போதிப்பதாலும் இவ்விளைவுகள் ஏற்படுகிறன.
மேலும் இஸ்லாத்திற்கு மாற்றமாக நடப்பவர்கள் யாராகயிருந்தாலும் தாட்சனியமில்லாமல் கண்டிப்பவர்கள் இல்லாதது மற்றும் ஒரு காரணமாகும். ஒரு சிலர்கள் மட்டும் கண்டிப்பதால் போதிய பலனில்லாமல் போய்விடுகிறது.
கணவன் மனைவிடம் எப்படி நடந்திட வேண்டும்? குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில் மார்க்கம் எப்படிப் போதிக்கிறது என்பதைப் பற்றி பார்ப்போம்

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites