எனக்குப் பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி விட்டது. அப்போது
வசதியில்லாத காரணத்தால் அகீகா கொடுக்கவில்லை. இப்போது கொடுக்கலாமா? அதற்கு நன்மை உண்டா?
மார்க்கத்தில் சில அமல்களைக் குறிப்பிட்ட காலத்தில் தான் செய்ய
வேண்டும் என்று கூறப்பட்டிருந்தால் அதை அந்தக் காலத்தில் தான் செய்ய வேண்டும். அதுவல்லாத
நாட்களில் செய்யலாம் என்றால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்திருக்க வேண்டும்.
தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமையான வணக்கங்களுக்கும் இது தான்
சட்டமாகும். கடமையல்லாத, சுன்னத்தான
அமல்களுக்கும் இது பொருந்தும்.
உதாரணமாக ஆஷுரா நோன்பு,
அரஃபா நோன்பு போன்ற நபிவழிகளை அந்தந்த நாட்களில் செய்தால் தான் அதற்கான நன்மை கிடைக்கும்.
இந்த அமல்களை வேறு நாட்களில் செய்ய முடியாது.
அது போன்று அகீகா எனப்படும் நபிவழியையும் குழந்தை பிறந்த ஏழாவது
நாளில் செய்ய வேண்டும் என்று தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். இதுவல்லாத
மற்ற நாட்களில் கொடுப்பதால் அகீகா என்ற அந்த நபிவழிக்குரிய நன்மை கிடைக்காது.
"ஒவ்வொரு குழந்தையும்
தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜுன்துப்(ரலி)
நூல்: நஸயீ 4149
இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு
அறுத்துப் பலியிட வேண்டும். அதே நாளில் குழந்தைக்குப் பெயரிட்டு, தலை முடியைக் களைய வேண்டும்.
அகீகா தொடர்பாக வரக் கூடிய செய்திகளில் ஏழாவது நாள் கொடுக்க
வேண்டும் என்று இடம் பெறும் செய்தி மட்டுமே ஆதாரப்பூர்வமாக உள்ளது. 14ஆம் நாள், 21ஆம் நாள் ஆகிய நாட்களில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தில் சில
ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமானவையாக உள்ளன.
எனவே குழந்தை பிறந்த ஏழாவது நாள் அகீகா கொடுப்பது தான் சுன்னத்தாகும்.
மற்ற நாட்களில் கொடுப்பதற்கு ஆதாரம் இல்லை.
ஏழாவது நாளில் கொடுப்பதற்கு வசதியில்லை என்றால் நமது சக்திக்கு
அப்பாற்பட்ட ஒரு விஷயத்திற்காக அல்லாஹ் நம்மைக் குற்றம் பிடிக்க மாட்டான்.
எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த
மாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. (பார்க்க: 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக