அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 மே, 2010

அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே!

சில ஆண்டுகளுக்கு முன்னால் புதுவையில் ஒரு கோர நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்தக் கோர நிகழ்ச்சி புதுவையை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையும் சேர்த்து உலுக்கியது.  கமல்ஷா என்பரின் மனைவியான பார்வதிஷாவை கமல்ஷாவின் தம்பியே கற்பழித்து, படுகொலை செய்தான்.  பரபரப்பாக இந்தச் செய்தி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதப்பட்டது.  புதுவையில் மட்டுமல்ல! ஒட்டு மொத்த இந்தியாவில், ஏன் உலகின் பல பகுதிகளில் இந்தக் கற்பழிப்புப் படலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.  புதுவையில் நடந்த நிகழ்ச்சி வெளியே அப்பட்டமாகத் தெரிந்து விட்டது.  இன்னும் வெளிச்சத்திற்கு வராமல் இருட்டில் மறைக்கப் பட்டுக் கிடப்பவை ஏராளம்! ஏராளம்!
அண்ணன் மனைவியான அண்ணியிடம் தம்பியும், அல்லது தம்பியின் மனைவியிடம் அண்ணனும் கேலி கிண்டல் பேசுவது, அதிலும் குறிப்பாக இரட்டை அர்த்தத்தில் ஆபாசமான வார்த்தைகளில் பேசுவது என்பது தொடர்கதையான ஒன்றாகி விட்டது.  நமது சமூகத்தில் இது ஒப்புக் கொள்ளப் பட்ட நடவடிக்கையாகி விட்டது.  எந்த ஓர் ஆன்மீகவாதியும், அறிஞரும், மார்க்கமும், மதமும் இதைத் தப்பாகக் காண்பது கிடையாது.
இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே தனது எக்ஸ்ரே பார்வை மூலம் இதை ஒரு கடுமையான, சமுதாயக் கட்டமைப்பை அரித்துத் தள்ளும் புற்று நோய் என படம் பிடித்துக் காட்டுகின்றது.  இதற்குக் காரணம் இந்த மார்க்கம் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் அருளப்பட்ட மார்க்கமாகும்.  எல்லாம் வல்ல அல்லாஹ், மனித மனங்களில் சஞ்சரிக்கின்ற சஞ்சலங்களை, எண்ண ஓட்டங்களை நன்கு அறிந்தவன்.  அதனால் தான் இதை மாபெரும் தீமை என்று அல்லாஹ் தன் தூதர் நபி (ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கச் செய்கின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கின்றேன்'' என்று கூறினார்கள்.  அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி),  நூல்: புகாரி 5232

அண்ணியும் அபாயமும்
தமிழ்நாட்டில் ஒரு சுலோகம் கூட சுற்றி வருகின்றது.  தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி, அண்ணன் பெண்டாட்டி அரை பெண்டாட்டி என்பது தான் அந்தச் சுலோகம்.  இது சர்வ சாதாரணமாக தமிழக மக்களிடம் சுற்றி வருகின்றது.  இங்குள்ள கலாச்சாரம் எந்த அளவுக்குப் போயிருக்கின்றது என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக் காட்டாகும்.
பெற்ற தாய், தந்தையர் கூட இதைப் பெரிதாக மட்டுமல்ல! ஒரு பொருட்டாகக் கூடக் கருதுவது கிடையாது.  சின்னஞ் சிறுசுகள் ஏதோ கிண்டல் பேசுகின்றார்கள் என்ற ரீதியில் இதைக் கண்டு கொள்வது கிடையாது.   ஆனால் மேற்கண்ட ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்ற உறவுகளை விட கணவனின் உறவினர்கள் தான் மரணத்திற்குச் சமம் என்று பிரகடனப் படுத்துகின்றார்கள்.
ஓர் அந்நியப் பெண்ணிடம் ஒருவன் பேசும் போது, ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொள்ளும் போது மிக மிக ஜாக்கிரதையாகப் பேசுகின்றான்.  தொடர்பு கொள்கின்றான்.  ஆனால் தன் சகோதரனின் மனைவியிடம் இந்த ஜாக்கிரதையை எடுத்துக் கொள்வது கிடையாது.  சகோதரன் என்ற உறவுமுறை இங்கு ஒரு கேடயமாக வந்து நிற்கின்றது.  இது முதல் காரணம்!  அடுத்து, அந்நியப் பெண் எனும் போது அந்தப் பெண்ணுடன் தனித்திருப்பது மிக மிக சாத்தியக் குறைவு!  அதற்காக ஒருவன் பெரும் திட்டம் தீட்டியாக வேண்டும்.  ஆனால் இங்கோ வீடு ஒரே வீடு என்பதால் தனிமை என்பது மலிவாகக் கிடைக்கின்றது.  இதற்காக எந்தத் திட்டமும் தீட்ட வேண்டியதில்லை.  இத்தகைய சூழல் விபச்சாரம் என்ற விபத்தை நோக்கி மிக விரைவாக இட்டுச் செல்கின்றது.
இதனால் சகோதரர்கள் இருவரில் ஒருவன் கொலைகாரனாக மாறி மற்றவனைக் கொலை செய்து விடுகின்றான்.  இந்தக் கோர விபத்தின் கதாநாயகியான அந்தப் பெண்ணும் கொலை செய்யப் படுகின்றாள்.  இதுபோன்ற செய்திகளை அன்றாடம் நாம் பத்திரிகைகளில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.  ஓர் இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் இது போன்ற ஒரு கொடுமை நிகழுமானால் இத்தகையோர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.  இப்படிப்பட்ட மோசமான விளைவுகளெல்லாம் அண்ணியுடன் தனித்திருப்பதால் ஏற்படுகின்றது.  இதையெல்லாம் உள்ளடக்கித் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கணவனின் உறவினர்களை மரணத்துக்கு நிகரானவர்கள் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள்.

கண்மூடித்தனமான கலாச்சாரப் பற்று
இந்தப் பேராபத்து நிகழ்வதற்கு மிக முக்கியமான காரணம் பெண்ணின் ஆடையலங்காரம்!  தனது கணவனின் சகோதரனேயானாலும் இஸ்லாம் பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கின்ற அந்த உடை அமைப்புடன் தான் அவன் முன் காட்சியளிக்க வேண்டும் என்ற சட்டம் பேணப்படுவதில்லை. அதிலும் இந்தக் காலத்தில் அணிகின்ற கண்ணாடி போன்ற உடைகள் உடல் உறுப்புக்களை அப்படியே பிரதிபலிக்கின்றன.  இந்நிலையில் தனிமையில் சந்திப்பது, கிண்டலடித்துப் பேசுவது போன்றவை தவறான எண்ணத்திற்கு வழி வகுத்து விடுகின்றன.  இவை முற்றிலும் தடுக்கப்பட்ட காரியங்கள் என்று இன்னும் இந்தச் சமுதாயத்திற்குப் புரிய வைக்கப்படவில்லை.
இவை தடுக்கப்பட்ட செயல்கள் என்று புரிய வைக்கப்படும் இடங்களில், "கூட்டு வாழ்க்கையில் இதுவெல்லாம் நடைமுறை சாத்தியமா?' என்று கேட்கின்றனர். அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வளவு கடுமையாக எச்சரிக்கை செய்யும் இந்த மார்க்க விஷயத்தை சாத்தியமற்றது என்று குற்றம் சாட்டுகின்றனர்.  நம் நாட்டில் பின்பற்றப்படும் இந்தக் கலாச்சாரம் நம்மை அப்படிப் பேச வைக்கின்றது.
இன்னும் சொல்லப் போனால் கூட்டு வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை என்று பாராட்டப் படுகின்றது.  இதற்குத் தாய், தந்தையர் முழு காரணமாக அமைகின்றனர்.  நான் உயிருடன் இருக்கும் போது என் மக்கள் யாரும் தனிக்குடித்தனம் போகக் கூடாது என்று தாய், தந்தையர் சொல்லும் போது, பிள்ளைகள் அதை எதிர்த்துத் தனிக்குடித்தனம் செல்லப் பயப்படுகின்றனர்.  ஆனால் மேலே நாம் சொன்ன பிரச்சனைகள் அனைத்திற்கும் கூட்டுக் குடித்தனமாக வாழ்வது தான் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.  எனவே தாய், தந்தையர் இந்த வறட்டுக் கவுரவத்தைக் கைவிட்டு, தனிக்குடித்தனமாக வாழ்வதற்கு இவர்களே துணை நிற்க வேண்டும்.  இது ஒழுக்க ரீதியிலான ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி வகுக்கும்.
கூட்டு வாழ்க்கைத் திட்டத்தை உடனடியாக உடைத்தெறிந்து விட முடியாது என்பது உண்மை தான்.  அதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை, இது சாத்தியமா? என்று கேட்டு விமர்சிப்பது முறையாகுமா? என்று சிந்திக்க வேண்டும்.  முதல் கட்டமாக கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு விட்டு அதன் பிறகு அதை நடைமுறைப் படுத்துவதற்குக் களமிறங்குவது தான் ஒரு முஃமினின் ஈமானியப் பண்பாகும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக் கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)
அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான் என்று அல்லாஹ் 65:2 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.  இதன்படி நாம் இந்தப் பாதையில் முயற்சி செய்யும் போது நிச்சயமாக அதற்குத் தக்க சூழலை அல்லாஹ் நமக்கு உருவாக்கித் தருவான். நமக்கு மிக மிகத் தேவை இறையச்சம் தான்.  இறையச்சம் இருப்பின் இத்தகைய வாழ்வமைப்பை நாம் எளிதில் உருவாக்கிக் காட்டலாம்.
இரு சக்கர வாகனத்தில் இணைந்திருத்தல்
கொழுந்தன் - அண்ணி உறவில் காணப்படும் மிக வேதனைக்குரிய விஷயங்களில், மிக பகிரங்கமாக நடக்கும் செயல்களில் ஒன்று தான், சகோதரன் மனைவியை இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்வது!  இப்படி இரு சக்கர வாகனத்தில் இணைந்து செல்கையில் ஒருவரின் மேனி இன்னொருவரின் மேனியில் ஒட்டாமல் உரசாமல் வண்டியை ஓட்ட இயலுமா? அதிலும் குறிப்பாக பிரேக் போடும் போதும் மேடு பள்ளங்களிலும் இந்த உரசல்கள் நிகழாமல் இருக்குமா? இது மார்க்கத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்றல்லவா?  இதில் இன்னும் வேதனை என்னவெனில் கணவனே இதற்குப் பச்சைக்கொடி காட்டி வழியனுப்பி வைப்பது தான்.
கணவனே இவ்வாறு இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைத்து விட்டு, பின்னொரு காலத்தில் வண்டியில் கொண்டு சென்றவருக்கும் இவரது மனைவிக்கும் விவகாரம் ஏற்படும் போது இருவரையும் கொலை செய்வார், அல்லது குறைந்தபட்சம் தனது மனைவியை விவாகரத்து செய்வார். இது நபி (ஸல்) அவர்கள் சொல்வது போன்ற மரணத்துக்குச் சமமான ஒரு நிலையாகும்.  கணவன் மனைவி இருவருக்குமிடையில் வாழ்க்கைப் பந்தம் செத்துப் போய் விடுகின்றது.  இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஓர் இறை விசுவாசி வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் தனது வாழ்க்கையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கட்டளையை முழுமையாக வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பின்பற்ற வேண்டும்.  ஏதோ அல்லாஹ் தொழச் சொல்கின்றானா? தொழுகின்றோம். ஆனால் இதுபோன்று காலம் காலமாகப் பின்பற்றி வரும் கலாச்சாரத்தை விடச் சொன்னால், இந்தக் கட்டளையெல்லாம் எங்களுக்கு சாத்தியப்பட்டு வராது என்று ஒதுங்குபவர்கள் இறை நம்பிக்கையாளர் அல்லர்.
வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று மறு பகுதியை மறுக்கின்றீர்களா? என்று அல்லாஹ் யூதர்களைக் கண்டிக்கும் விதமாக தனது திருமறையில் (2:85) வசனத்தில் கூறுகின்றான்.  எனவே அது போன்ற நிலை நம்மிடம் ஏற்பட்டுவிடக் கூடாது.
மச்சான் மைத்துனி கிண்டல்கள்
இங்கு நாம் இன்னொரு தீமையையும் குறிப்பிட வேண்டும்.  மனைவி எப்படி கணவனின் உறவினர்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டுமோ அதே போல் தான் கணவனும் மனைவியின் அக்கா தங்கைகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.  ஒரு பெண் தனது சகோதரியின் கணவரிடம், மச்சான் என்று கிண்டல் செய்வது, அதுபோல் அவரும் மைத்துனி, கொழுந்தியாள் என்று கிண்டல் செய்வது போன்ற செயல்கள் சமூகத்தில் தீமையாகக் காணப்படவில்லை.  கணவன் சம்பந்தப்பட்ட உறவினர் மூலம் ஒரு மனைவிக்கு ஏற்படும் விளைவுகள் அத்தனையும் நூற்றுக்கு நூறு மச்சான் மைத்துனி விவகாரத்தில் ஏற்படவே செய்யும்.  எனவே கணவன் மைத்துனி விஷயத்திலும், மைத்துனி தன் சகோதரியின் கணவன் விஷயத்திலும் கவனமாக நடக்க வேண்டும்.  காரணம் இதுவெல்லாம் ஷைத்தான் எளிதாக நுழையக்கூடிய வாசல்களாகும். இந்தக் கலாச்சாரம் கைமீறிப் போய் சில இடங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் கூட அக்காவையும் தங்கைûயும் ஒரே நபர் திருமணம் முடித்து ஒன்றாக வாழ்க்கை நடத்துவதைக் காணமுடிகின்றது.  இதற்குக் காரணம் வரைமுறை வரம்பற்ற பழக்கம் தான்.  சில இடங்களில் சகலைக்கும் சகலைக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு கொலையில் முடிந்த வரலாறும் உண்டு.  எனவே தான் மனிதர்களின் மனநிலைகளை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.  (அல்குர்ஆன் 24:31)
இந்த வசனத்தில் கூறப்படும் உறவினர்கள் தவிர மற்றவர்களிடம் ஒரு பெண் புர்கா சட்டத்தை அனுசரித்து நடக்க வேண்டும்.  அல்லாஹ் சொல்கின்ற இந்த உறவுமுறைக்கு அப்பாற்பட்டவர்களிடம் ஓர் ஆண் மிக மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.  அண்ணி, மைத்துனி போன்றவர்கள்  அல்லாஹ் இவ்வசனத்தில் கூறும் அனுமதிக்கு அப்பாற்பட்டவர்களே! எனவே மற்ற அந்நியப் பெண்களிடம் காட்டும் பேணுதலை விட இந்த உறவுகளிடம் அதிக பேணுதலைக் காட்ட வேண்டும்.  ஏனெனில் இந்தத் தொடர்பை நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குச் சமம் என்று சொல்கின்றார்கள்.  எனவே இந்தப் பெண்கள் அந்நியப் பெண்கள் என்ற வட்டத்தையும் தாண்டியர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆடைகளில் அலட்சியம்
இன்றைய காலத்துப் பெண்கள் உள்மேனி வெளியே தெரிகின்ற அளவுக்கு மெல்லிய ஆடைகளை அணிந்து கொண்டிருக்கின்றார்கள்.  இந்த ஆடைகளை அணிந்து கொண்டு, அந்நிய ஆண்களிடம் குறிப்பாக கணவனின் உறவினர்களிடம் காட்சி தருவது நிச்சயமாக அவர்களை நரகத்திற்கே கொண்டு சென்று விடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை.  ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும்.  அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர்.  இன்னொரு சாரார் பெண்கள் ஆவர்.  இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள்.  அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும்.  எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும்.  ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: முஸ்லிம் 3971
இந்தக் கட்டளையையும் பெண்கள் கவனத்தில் கொண்டு தங்கள் வாழ்க்கையை சுவனத்திற்குரிய வாழ்க்கையாக அமைத்துக் கொண்டு நற்பயனைப் பெறுவோமாக!
   
அன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்
"என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?'' என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.
அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார். சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிலிருந்து மாலை வரை மாரடித்து விட்டு மனக் கஷ்டத்துடன் திரும்பும் ஆசிரியராகக் கூட அவர் இருப்பார். அல்லது குழப்பவாதிகள் பேசும் ஃபித்னா, ஃபஸாதுகளைப் பற்றி சங்கடப்பட்டுக் கொண்டே திரும்பும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவராக இருப்பார். அல்லது இரவெல்லாம் கண் விழித்து காரோட்டி விட்டு வீடு திரும்பும் ஒரு டிரைவராகக் கூட அவர் இருப்பார்.
இப்படிப்பட்டவர்கள் மன அமைதியையும் நிம்மதியையும் தங்கள் மனைவியரிடம் நாடியே வீடு திரும்புவார்கள். ஆனால் இங்கோ அவர் வந்ததும் எரிமலையை எதிர்நோக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு நிம்மதியின்றி தவிப்பார்.
அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:
அபூ தல்ஹாவின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபூ தல்ஹா (ரலி) வேளியே சென்றிருந்த போது குழந்தை இறந்து விட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா (ரலி) அவர்களின் மனைவி, உடனே கொஞ்சம் உணவைத் தயாரித்தார். பிறகு மய்யித்தை வீட்டின் மூலையில் வைத்தார். வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா (ரலி) வீடு திரும்பியதும், மகன் எவ்வாறு இருக்கின்றான்? என்று விசாரித்தார். அதற்கு அவரது மனைவி, "அமைதியாகி விட்டான். நிம்மதி பெற்று விட்டிருப்பான் என்பதே என் எதிர்பார்ப்பு'' என்று பதிலளித்தார். அபூ தல்ஹா (ரலி) தம் மனைவி கூறியது உண்மை தான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார். பொழுது விடிந்து குளித்து விட்டு வெளியே செல்ல நாடிய போது மகன் இறந்து விட்டதை மனைவி கூறினார். அபூ தல்ஹா (ரலி) நபி (ஸல்) அவர்களோடு தொழுது விட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் செய்யக் கூடும்'' என்று கூறினார்கள்.
"அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என்று மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்'' என்று சுஃப்யான் கூறுகின்றார். (நூல்: புகாரி 1301)
இதே ஹதீஸ் முஸ்லிமில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
உம்மு சுலைம் மூலமாக அபூ தல்ஹாவுக்குப் பிறந்த குழந்தை இறந்து விடுகின்றது. உடனே உம்மு சுலைம் தம் குடும்பத்தாரை நோக்கி, அவரது மகனின் (இறப்புச்) செய்தியை நான் அவரிடம் தெரிவிக்கும் வரை நீங்கள் தெரிவிக்காதீர்கள் என்று சொன்னார். அவர் வந்ததும் இரவு உணவை வழங்கினார். அவர் சாப்பிட்டு முடித்து நீர் பருகவும் துவங்கினார். பிறகு உம்மு சுலைம் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அபூ தல்ஹாவிடம் காட்சியளித்தார். அவர் நன்றாக சாப்பிட்டு விட்டு இல்லறத்தில் ஈடுபட்டதும்,
"அபூ தல்ஹாவே! ஒரு கூட்டத்தார் ஒரு பொருளை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுக்கின்றனர். பின்னர் தாங்கள் இரவல் கொடுத்த பொருளைத் திருப்பிக் கேட்கும் போது, அவ்வீட்டார் கொடுக்காமல் இருப்பது முறையாகுமா?'' என்று கேட்கின்றார். அதற்கு அபூ தல்ஹா (ரலி), "கூடாது'' என்று பதிலளித்தார். "(அது போலத் தான்) உங்கள் மகனின் நிலையைக் கருதிக் கொள்ளுங்கள்'' என்று சொல்கின்றார்.
அதற்கு அபூ தல்ஹா (ரலி), "என்னை நீ அசுத்தமடைய விட்டு விட்டு இப்போது என்னுடைய மகனைப் பற்றி அறிவிக்கின்றாயே?'' என்று கோபப்படுகின்றார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவிக்கின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சென்று விட்ட அந்த இரவில் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக'' என்று துஆச் செய்தார்கள். அது போல் அவர்களுக்குக் குழந்தை பிறக்கின்றது. நபி (ஸல்) அவர்களிடம் அந்தச் செய்து எடுத்துச் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம்பழத்தை மென்று கொடுத்து அப்துல்லாஹ் என்று பெயர் வைத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 4496
பொதுவாக பிள்ளைகளைப் பறி கொடுத்த பெண்கள் தங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் அரிது! அதனால் அழுது தீர்ப்பதோடு அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளைக் கூட அள்ளி வீசுவார்கள். ஆனால் இங்கு உம்மு சுலைம் (ரலி) தமது கணவரிடம், பொய்யைத் தவிர்ப்பதற்காக, "அமைதியடைந்து விட்டான், நிம்மதியடைந்து விட்டான் என்று கருதுகின்றேன்'' என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள். மேலும் இரவல் பற்றிய பீடிகையைப் போட்டு நேரமறிந்து, மகன் இறந்த செய்தியை எவ்வளவு பக்குவமாக எடுத்து வைக்கின்றார்கள் என்று நாம் பார்க்க முடிகின்றது. இது போன்ற ஒரு பக்குவத்தையும் அணுகுமுறையையும் தமது கணவனிடம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.
கதீஜா (ரலி)யின் கனிவான ஆறுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதன் முதலில் மிகப் பாரமான இறை வஹீயைப் பெற்று விட்டு நடுநடுங்கிக் கொண்டு வந்த நேரத்தில் கதீஜா (ரலி) உதிர்த்த வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் அழியாத வைர வரிகள் ஆகும்.
(நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் வஹீ அறிவிக்கப்பட்ட போது) இதயம் படபடத்தவர்களாக - அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி)யிடம் வந்து, "என்னைப் போர்த்துங்கள். என்னைப் போர்த்துங்கள்'' என்று கூறினார்கள். கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா (ரலி)யிடம், நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டு, தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி), "அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவு படுத்த மாட்டான். நீங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கின்றீர்கள். வறியவர்களுக்காக உழைக்கின்றீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3
உம்மு ஸலமா (ரலி)யின் உயரிய ஆலோசனை
நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் உம்ராச் செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.
இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "எழுந்திருங்கள்! அறுத்துப் பலியிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!'' என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது உம்மு ஸலமா (ரலி) யோசனை வழங்குகின்றார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து. அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்'' என்று உம்மு ஸலமா (ரலி) கூறினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து. ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவைர நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி 2732
இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் புத்திக் கூர்மை மிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.
மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா (ரலி)யின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காக) தமது மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், "எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தனர். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரை சேர்த்துக் கொள்பவர் யார்?'' அல்லது "இவருக்கு விருந்தளிப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "நான் (விருந்தளிக்கின்றேன்)'' என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு தமது மனைவியிடம் சென்றார்.
"அல்லாஹ்வின் தூதருடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று (தம் மனைவியிடம்) கூறினார். அதற்கு அவருடைய மனைவி, "நம்மிடம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், "உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று கூறினார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார்.
பிறகு (இருக்கும் உணவை விருந்தாளியை உண்ணச் செய்து விட்டு) அவரும் அவரது மனைவியும் உண்பது போல் அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான்'' அல்லது "வியப்படைந்தான்'' என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், "தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்'' எனும் (59:9) வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3798
இது போன்று எல்லாப் பிரச்சனைகளுக்கும் மனைவியரின் அணுகுமுறைகள் மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அமைந்திருக்குமானால் இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றி கிடைப்பதற்கு இது காரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites