எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு அழைக்கின்றார்கள். திருமணத்தின் போது அனாச்சாரங்கள் நடப்பதால் நாங்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வீட்டிற்குச் சாப்பாடு கொடுத்து விடுகின்றார்கள். அதை ஏற்றுக் கொள்ளலாமா? இல்லாவிட்டால் பக்கத்து வீடு பகையாகும். பக்கத்து வீட்டைப் பேணுங்கள் என்பது நபிமொழி அல்லவா?
அண்டை வீட்டாரைப் பேண வேண்டும் என்பதெல்லாம் மார்க்கத் திற்கு முரணில்லாத வகையில் தான். அந்த அடிப்படையில் அனாச்சாரங்கள் நடைபெறும் திருமண சபைகளில் நீங்கள் கலந்து கொள்ளாமல் இருப்பது சரியான செயல் தான்.
வரதட்சணை, பித்அத்துகள், ஷிர்க்கான பாடல்கள் போன்றவை இந்தத் திருமணங்களில் இடம் பெறுவதால் அந்தப் பாவத்திற்குத் துணை போய் விடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தத் திருமணங்களையும், அதையொட்டி நடைபெறும் விருந்துகளையும் புறக்கணிக்கின்றோம். இது போன்ற திருமண விருந்துகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது அந்த உணவு ஹராம் என்பதற்காக அல்ல!
எனவே நமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்குக் கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்பு என்ற நிலையை அடைந்து விடுகின்றது.
பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப் பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், "இது பரீராவுக்குத் தர்மமாகும். ஆனால் நமக்கு இது அன்பளிப்பாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1495
தர்மப் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவது தடையாக இருந்தாலும், தர்மத்தைப் பெற்றவர் அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே அன்பளிப்பு என்ற அடிப்படையில் வீட்டிற்கு வரும் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக