அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 21 ஏப்ரல், 2010

கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெறுதல்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல!
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (2622, 6975)
புகாரியின் 2623வது அறிவிப்பில் தம் தர்மத்தை திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான் என்று இடம்பெற்றுள்ளது.
உலகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு உதவி செய்யும் மனிதர்கள், தங்களிடம் உதவியைப் பெற்றவர்கள் இவர்களை மதிக்காத போது அல்லது இவர்களின் கட்டளையை, ஆலோசனையை ஏற்காத போது, தான் செய்த உதவியை சொல்லிக் காட்டுகிறார்கள். இவ்வாறு செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும். இதனால் நாம் செய்த உதவிக்கு இறைவனிடம் கிடைக்கும் நன்மைகள் முற்றிலும் இல்லாமல் போய்விடும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் 2:264)
செய்த தர்மங்களைச் சொல்லிக் காட்டுவது போல், அன்பளிப்புகளையும், தர்மத்தையும் திரும்ப கேட்கும் நபர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களுக்கிடையில் ஏற்படும் சண்டைகள் இதற்குக் காரணமாக அமைகின்றது. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தாம் செய்த தர்மங்கள், அன்பளிப்புகள் இவற்றைத் திரும்பத் தருமாறு கேட்பது மிகப் பெரிய இழிசெயலாகும். மேலும் தாம் செய்த தர்மங்களையும் அன்பளிப்புகளையும் அன்றே மறந்து விட வேண்டும். இதன் கூலியை மறுமை நாளில் தான் எதிர்பார்க்க வேண்டும். இதற்கு மாறாக செய்த தர்மங்களையும் அன்பளிப்புகளையும் திரும்பக் கேட்டால் அவர் எவ்வளவு இழிவானவர் என்பதைத் தான் நாம் முதலில் எடுத்துக் காட்டிய உதாரணத்தில் கூறியுள்ளார்கள்.
தான் தின்ற பொருளை வாந்தி எடுத்து அதையே உட்கொள்ளும் நாயை எப்படி நாம் அருவருப்பாக காண்போமோ அதைப் போன்றே கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெறுபவனை இஸ்லாம் பார்க்கிறது. எனவே செய்கின்ற எந்த காரியமாக இருந்தாலும் இறைதிருப்பதிக்காக மட்டுமே செய்யவேண்டும். இதுவே மறுமை வெற்றிக்கு பயனளிக்கும்.
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முகமலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்.
(அல்குர்ஆன் 76:8-11)
பொதுவாக அன்பளிப்பைத் திரும்ப பெறக் கூடாது என்றாலும், தந்தை மட்டும் தன் மகனுக்குச் செய்த அன்பளிப்பை பெற்றுக் கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பளிப்பைக் கொடுத்து விட்டு அதனை திரும்பப் பெறுவது, ஒரு தந்தை தன் மகனுக்குக் கொடுக்கின்ற விஷயத்தில் தவிர (வேறு) எந்த ஒரு முஸ்லிமுக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல!
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மதி (1220), நஸயீ (3630)
அன்பளிப்பு தொடர்பாக இன்னும் சில விபரங்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றையும் காண்போம்.
அன்பளிப்பின் சிறப்பு
நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து நேசத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அல்அதபுல்முஃப்ரத் (594)
நாம் பிறருக்கு ஒரு பொருளையோ பணத்தையோ கொடுத்து அன்பளிப்புச் செய்வதால், நம்மின் மீது தவறான எண்ணமும் கோபமும் கொண்டவர் ஒருவர், நம் மீது நல்லெண்ணம் கொள்வார். இதனால் இருவருக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்க வழி ஏற்படும்.
முதலில் யாருக்கு அன்பளிப்புச் செய்வது?
அன்பளிப்புச் செய்வதற்கு ஆளைத் தேடிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு மிக அருகாமையில் இருப்பவருக்கு பொருளைக் கொடுத்து மிக இலகுவான முறையில் நன்மைகளைப் பெறுவதற்கு நபியவர்கள் வழிமுறையைக் காட்டியுள்ளார்கள்.
நான் நபியவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் (முதலில்) அன்பளிப்பு செய்வது?'' என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள், "அவ்விருவரில் யாருடைய வாசல் உன் வீட்டுக்கு அருகில் உள்ளதோ அவருக்கு அன்பளிப்பு செய்!'' என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி (2595)
பிள்ளைகளுக்கு நீதமாக அன்பளிப்புச் செய்தல்
எல்லா பிள்ளைகளையும் பத்து மாதம் சுமந்திருந்தாலும் தாய், தந்தை, சில குழந்தைகள் மீது மட்டும் அதிக பாசம் வைத்திருப்பார்கள். இந்தப் பாசம் மற்ற குழந்தைகளை விட இந்தக் குழந்தைகளுக்கு அதிக அக்கரையும் கவனிப்பும் செலுத்தக் காரணமாக அமைந்து விடுகிறது. அத்துடன் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுப்பதிலும் ஊக்கத்தைத் தருகிறது. இவ்வாறு சில குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, சில குழந்தைகளுக்குக் கொடுக்காமல் விட்டு விடுவது கூடாது. அன்பளிப்புச் செய்வதில் அனைத்துக் குழந்தைகளிடமும் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்.
நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்களை அவர்களுடைய தந்தை நபியவர்களிடம் அழைத்துச் சென்று, "எனக்கு சொந்தமான அடிமையை எனது இந்த மகனுக்கு அன்பளிப்புச் செய்கின்றேன்'' என்று சொன்னார்கள். அதற்கு நபியவர்கள், "உன் பிள்ளைகள் அனைவருக்கும் இதைப் போன்று அன்பளிப்புச் செய்துள்ளீரா?'' என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்றார். நபியவர்கள், "அன்பளிப்பை திரும்பபத் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி)
நூல்: புகாரி (2586)
பிரதி உபகாரம்
அன்பளிப்பு வாங்குவது சுய மரியாதையை இழக்கும் செயல் என்று கருதி சிலர் அன்பளிப்பை மறுப்பார்கள். ஆனால் நபியவர்களோ அன்பளிப்புப் பொருளை வாங்குவதோடு மட்டும் இல்லாமல் அதற்கு பிரதி உபகாரம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள்.
நபியவர்கள் அன்பளிப்பை வாங்குபவர்களாகவும் அதற்குப் பதில் உபகாரம் செய்பவர்களாகவும் இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி (2585)
ஏழைகள் தரும் அன்பளிப்பு சிறிதாக இருந்தாலும் அந்த அன்பளிப்பையும் முகமலர்ந்து ஏற்க வேண்டும்.
நபியவர்கள் கூறினார்கள்:
முஸ்லிமான பெண்களே! ஒரு அண்டை வீட்டுக்காரி மற்ற அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) கொடுத்தாலும் அவள் அலட்சியம் செய்ய வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி (2566)
மறுக்கக் கூடாத அன்பளிப்பு
நபியவர்கள் வாசனை திரவியத்தை நிராகரிப்பதில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2582)
லஞ்சம்
உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!
(அல்குர்ஆன் 2:188)
நபியவர்கள் லஞ்சம் வாங்குபவரையும் கொடுப்பவரையும் சபித்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: திர்மிதி (1257)
அன்பளிப்பு என்ற பெயரில் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட லஞ்சத்தை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites