அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

பேச்சின் ஒழூங்குகள்

ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.
சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.
நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் "நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்' என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.
விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.
மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையான பேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானதாகும்.
ஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால், ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்த்துகின்றது. அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது.
நல்ல வார்த்தைகளை நவில வேண்டும்
நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும். மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும். தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.
இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது. நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!
அல்குர்ஆன் (33:70)
யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.
அல்குர்ஆன் (35:10)
ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2989)
நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும் படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்'' என்றேன். அதற்கு அவர்கள் "அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். "எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்'' என்று கூறினேன். "சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் (9996)
நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது. கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல்: புகாரி (6023)
இஸ்லாம் சகுனம் பார்ப்பதைத் தடை செய்கிறது. மனிதன் துற்சகுனம் பார்ப்பதால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான். அவனுடைய முன்னேற்றத்திற்கு சகுனம் பார்த்தல் முட்டுக்கட்டையாக அமைகிறது.
ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன. மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று சொன்னார்கள். மக்கள், "நற்குறி என்பதென்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்: புகாரி (5754)
தீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.
சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, "பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். "தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்'' என்று கூறினோம். அதற்கு அவர்கள், "அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி)
நூல்: முஸ்லிம் (4020)
பிறரை சந்தோஷப்படுத்தும் பேச்சுக்கள் நல்லவையே!
நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதால் மார்க்கம் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேசக் கூடாது என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. பிறரை சந்தோஷப்படுத்தி, நாமும் மகிழ்வதற்காக நகைச்சுவையுடன் பேசுவது குற்றமல்ல. நமது வார்த்தையால் பிறர் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிறரது மகிழ்சிக்கு நம்முடைய சொற்கள் காரணமாக இருப்பதால் அதுவும் நல்ல வார்த்தைகளின் பட்டியலுக்குள் வந்து விடும். நபி (ஸல்) அவர்களின் முன்பாக நபித்தோழர்கள் சிரித்து மகிழ்ந்து பேசியுள்ளார்கள். பெருமானாரை மகிழ்விப்பதற்காகவே ஒருவர் பிரத்யேகமாக இருந்துள்ளார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி (6780)
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்! அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப்
நூல்: முஸ்லிம் (118)
யாகாவாராயினும் நாகாக்க!
நாவைப் பாதுகாப்பதை ஒரு முக்கியமான அம்சமாக இஸ்லாம் கருதுகிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு இரத்தினச் சுருக்கமாக மிக அவசியமான போதனையைக் கூறும்படி கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்வதையும் முக்கிய போதனையாக அவருக்குச் சொன்னார்கள்.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்'' என்று கேட்டார். "அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: அஹ்மத் (14870)
தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்
தேவையற்ற பேச்சுக்கள் பிரிவினையை உண்டு பண்ணுவதால் அது போன்று பேசாமல் நல்ல விஷயங்களைப் பேசுமாறும் வீணானதை விட்டும் தவிர்ந்து கொள்ளும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.
அல்குர்ஆன் (17:53)
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். "எங்கள் செயல்கள் எங்களுக்கு! உங்கள் செயல்கள் உங்களுக்கு! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (28:55)
வீணானதைப் புறக்கணிப்பார்கள்.
அல்குர்ஆன் (23:3)
அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.
அல்குர்ஆன் (25:72)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6018)
நாம் நல்ல வார்த்தைகளை மட்டுமே மொழிய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அஹ்மதில் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில், "நல்லதையே பேசட்டும்' என்ற கட்டளைக்கு முன்பாக "அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்' என்ற கட்டளையும் சேர்ந்து வருகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வைப் பயந்து தனது அண்டை வீட்டாரிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து நல்லதைûயே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும்.
அறிவிப்பவர்: சில நபித்தோழர்கள்
நூல்: அஹ்மத் (19403)
பொது இடங்களில் மூன்று குரங்குகளை நாம் கண்டிருப்போம். அதில் ஒன்று தீயவற்றைக் கேட்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வண்ணம் தன் காதைப் பொத்திக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பார்க்கக் கூடாது என்பதை எடுத்துரைப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பேசக் கூடாது என்பதற்காக வாயை மூடிக் கொண்டிருக்கும்.
இந்த ஓவியத்தை ஏற்பாடு செய்தவர்கள் வலியுறுத்த வரும் செய்தியை ஒரு படி மேல் சென்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது. தீமையைப் பேசுவதை மட்டும் தடுக்காமல் தேவையில்லாத, பலனில்லாத பேச்சுக்களையும் பேச வேண்டாம் என்கிறது.
ஏனென்றால் ஒன்றுக்கும் உதவாத பேச்சுக்கள் தீமையாக உருவெடுத்து விடுகின்றன என்பதே இதற்குக் காரணம். நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நன்மையை செய்ய வேண்டும். இயலாவிட்டால் தம் வார்த்தைகளால் பிறரை துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும்.
சிலருடைய பேச்சுக்கள் நம்மைத் தாக்கி அமையாது. என்றாலும் அவர்கள் சம்பந்தமில்லாத பல தகவல்களை பேசிக் கொண்டே இருந்தால் கேட்பவருக்கு அவரது பேச்சு எரிச்சலூட்டும். தன் குடும்ப விஷயங்களைப் பிறரிடத்தில் அடிக்கடி கூறுவதும் அவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.
அதுமட்டுமல்லாமல் பேச்சில் அதிகமானது கழிக்கப்பட வேண்டியவையாக இருந்தால் அவர் கூறும் நல்ல கருத்துக்கள் கூட எடுபடாமல் போய்விடும். அவர் பேசும் எதையும் பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், நன்மையைத் தவிர வேறெதையும் பேசாதே! என்று கட்டளையிட்டார்கள்.
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) "உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு! தாகித்தவனுக்கு நீர்புகட்டு! நல்லதை ஏவி தீமையைத் தடு! இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றிலிருந்தே தவிர (மற்றவற்றிலிருந்து) பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல்பர்ரா பின் ஆசிப் (ரலி)
நூல்: அஹ்மத் (17902)
தீய பேச்சுக்கள் வேண்டாம்
கெட்ட பேச்சுக்களைப் பேசுவது இறை நம்பிக்கையாளனிடம் இருக்கக் கூடாத பண்பாகும். மானக்கேடான அருவருக்கத்தக்க காரியங்களைச் செய்வது நல்லவர்களின் பண்பல்ல என்று இறைவன் கூறுகிறான். சிலர் அசிங்கமான, இரு பொருள் தருகின்ற வார்த்தைகளைப் பேசி மகிழ்கிறார்கள். அந்த வார்த்தை ஆபாசத்தை எடுத்துக் காட்டாவிட்டாலும் அதைக் கொண்டு தவறான அர்த்தத்தை நாடுகிறார்கள். இப்படி மறைமுகமாகக் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதும் தடுக்கப்பட்டுள்ளது.
"வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் (7:33)
நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
அல்குர்ஆன் (16:90)
இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இந்தக் குணத்தை நயவஞ்சகர்களுடையது என்று கூறியுள்ளார்கள்.  
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: திர்மிதி (1950)
நாம் பேசும் பேச்சுக்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கும் அளவுகோலாக சில நேரத்தில் அல்லாஹ்விடம் கருதப்படுகிறது. எத்தனையோ மோசமான வார்த்தைகள் நாவில் தவழுகின்றன. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சாதாரண பேச்சுக்களைப் போல் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் நாம் விடும் வார்த்தைகள் நமக்கு அற்பமானதாகத் தெரிந்தாலும் அது இறைவனுடைய பார்வையில் படு மோசமானதாகக் கருதப்படலாம். அதனால் நரகத்திற்குச் செல்லும் துர்பாக்கிய நிலையைக் கூட எய்தலாம்.
எனவே சிறிய கெட்ட வார்த்தை, பெரிய கெட்ட வார்த்தை என்றெல்லாம் பாகுபடுத்தாமல் தீயதை முழுமையாகத் தவிர்ந்து கொள்வதே ஏற்புடையது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6478)
அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசுவது நம் பெண்களிடத்தில் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.. ஆனால் நம் சமுதாயப் பெண்களில் சிலர் அந்நிய ஆண்களிடத்தில் குழைந்து பேசுகிறார்கள்.
பேசும் வார்த்தை சரியாக இருந்தாலும் ஒரு ஆணிடத்தில் அதிகமாகப் பேசுவது தீய எண்ணத்தை அவன் மனதில் வளர்க்கும். பெண்கள் ஆண்களால் ரசிக்கப்படுபவர்களாக இருக்கும் போது இருவருக்கும் மத்தியில் பேச்சுத் தொடர்ந்தால் அது நாளைடைவில் தவறான தொடர்பாக உருவெடுத்து விடும்.
பெண் அவ்வாறு நினைக்காவிட்டாலும் சாதாரண ஒவ்வொரு ஆணுடைய எண்ணமும் இப்படித் தான் இருக்கும். நபிமார்களின் மனைவியருக்கு இவ்வாறு அல்லாஹ் உபதேசிக்கிறான்.
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
அல்குர்ஆன் (33:32)
மோசமான மனிதர்
கெட்ட வார்த்தைகளைப் பேசுபவர்களிடத்தில் பேச்சுக் கொடுக்க நல்லவர்கள் பயப்படுவார்கள். நல்லவர்கள் முன்னிலையில் கேட்க முடியாத வார்த்தையைச் சொல்லி விட்டால், சொல்பவர்களுக்குக் கூச்சமாக இல்லாவிட்டாலும் அதைக் கேட்கும் நாகரீகமானவர்களுக்கு நெருடலாக இருக்கும். இதனால் கெட்ட வார்த்தைகளைப் பேசுவர்களிடம் பேசுவதை நல்லவர்கள் தவிர்த்துக் கொள்வார்கள்.
தான் பேச்சைத் துவங்காவிட்டாலும் அவர்களாகத் துவக்கி விடுவார்கள் என்பதற்காக தீய வார்த்தைகளைப் பயன்படுத்துவோர் இருக்கும் சபைக்கும் வர நல்லவர்கள் அஞ்சுவார்கள்.
தீய வார்த்தைகளால் பிறரை அச்சத்திற்குள்ளாக்குபவரை மோசமானவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்'' என்று சொன்னார்கள். உள்ளே அவர் வந்த போது (எல்லோரிடமும் பேசுவது போல்) அவரிடம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசி விட்டு எழுந்து சென்றதும்) நான், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே!'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "ஆயிஷா! யாருடைய அருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார்'' (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்) என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (6054)
சத்தியக் கருத்துக்களால் மக்களை வென்றெடுத்த நபி (ஸல்) அவர்கள் நல்ல வார்த்தைகளால் தான் இத்தகைய மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இந்த அருமையான குணம் அவர்களைத் தலைவராக சமுதாயம் ஏற்றுக் கொண்டதற்கான முக்கிய காரணமாகும்.
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. "உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே!'' என்று அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி (3559)
ஆதாரமற்ற பேச்சுக்கள்
மணிக் கணக்கில் பேசும் பேச்சுக்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ஆதாரமற்ற பேச்சுக்களாகவே இருக்கின்றன. சம்பவத்தை நேரடியாகக் கண்டிருக்க மாட்டார். ஆனால் கண்ணால் கண்டதைப் போல் மற்றவரிடம் விவரித்துக் கொண்டிருப்பார்.
"நீ கண்ணால் பார்த்தாயா?' என்று கேட்கும் போது சற்றுத் தடுமாறி, "இல்லை! இன்னார் தான் இப்படிச் சொன்னார்' என்று கூறுகிறார்.
சொல்லப்பட்ட செய்தி சரியா? தவறா? என்றெல்லாம் பார்க்காமல், தனக்கு நெருடலை ஏற்படுத்தாமல் இருந்தால் உடனே அதை பரப்பி விடுகிறார். இதைக் கேட்பவர்களும் இதுபோன்றே நடந்து கொள்கிறார்கள்.
இதற்கு ஆதாரம் என்ன? என்றெல்லாம் தீர விசாரிக்காமல் கேட்டவுடன் நம்பி விடுகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் நரகப் படுகுழியே பரிசாகக் கிடைக்கும்.
உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.
அல்குர்ஆன் (24:15)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான். "இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார்' (என ஆதாரமின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக்குவதும், அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதுமாகும்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)யின் எழுத்தாளர்
நூல்: புகாரி (1477)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் கேள்விப்பட்டதை எல்லாம் ஒருவன் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்.
அறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் ஆசிம் (ரலி)
நூல்: முஸ்லிம் (6)
சாதாரண குற்றமல்ல!
ஆபாச வார்த்தைகளைப் பேசுவது விபச்சாரத்திற்கு நிகரானது. மர்ம உறுப்பு மட்டும் தான் விபச்சாரத்திற்குக் காரணம் என்று நினைக்கிறோம். ஆபாசமான பேச்சுக்களைப் பேசுவதும் விபச்சாரத்திற்குக் காரணமாக அமைகிறது. எத்தனையோ பல விபச்சாரங்கள் தீயவற்றைப் பேசுவதிலிருந்தே தொடங்குகின்றன. பேசுகின்ற கெட்ட வார்த்தைகள் விபச்சாரத்தைத் தூண்டினாலும் வேறுவிதமாக அமைந்தாலும் தீயது என்ற வட்டத்திற்குள் வந்து விட்டால் நாவு விபச்சாரம் செய்ததாகப் பொருள் என்று பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகின்றது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6243)
விபச்சாரம் என்ற குற்றத்தை மிக ஒழுக்கக் கேடான செயல் என்று சமுதாயம் நினைக்கிறது. இக்குற்றத்திற்கு தண்டனையும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. ஆனால் தவறான பேச்சுக்கள் இது போன்று கருதப்படுவதில்லை. சொல்லப் போனால் அதைப் பாவம் என்று கூட நினைக்காமல், பொழுதுபோக்காக எண்ணப்படுகிறது. இஸ்லாம் மார்க்கம் மட்டுமே தவான பேச்சுக்களை விபச்சாரத்திற்கு நிகராக ஒப்பிடுகிறது.
மர்ம உறுப்பைக் காக்காதவன் சொர்க்கம் செல்ல முடியாததைப் போல் நாவைக் காக்காதவனும் சொர்க்கம் செல்ல இயலாது. இந்த இரண்டையும் பாதுகாக்கத் தவறியவன் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும் அவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வது நபி (ஸல்) அவர்களால் கூட முடியாத விஷயம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளத(ôன நாவி)ற்கும், தம் இரு கால்களுக்கு இடையே உள்ளத(ôன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: புகாரி (6474)
உறுப்புகளால் செய்யும் தீய செயல்கள் குற்றங்களாகக் கருதப்படுகிறது. நாவில் எழும் அசிங்கமான வார்த்தைகள் இது போன்று கருதப்படுவதில்லை. இந்த எண்ணத்தில் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம், நாவினாலும் நாம் தண்டிக்கப்படுவோமா? என்று கேட்ட போது, நாவு சம்பாதித்த தீமைகள் தான் மக்களை நரகில் தள்ளுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(வணக்க வழிபாடுகள்) அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதை உனக்கு நான் அறிவிக்கட்டுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடத்தில், "அல்லாஹ்வின் நபியே! ஆம் (எனக்கு சொல்லுங்கள்)'' என்று கூறினேன். அவர்கள் தன்னுடைய நாவைப் பிடித்து, "இதை நீ பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம்?'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆச்சரியத்துடன் "மக்களை முகம் குப்புற நரகில் தள்ளுவது அவர்களுடைய நாவுகள் அறுவடை செய்தவைகளாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் பனி ஜபல் (ரலி)
நூல்: அஹ்மத் (21008)
உண்மையை உடைத்துப் பேச வேண்டும்
உண்மையைப் பேசுவதற்கு யாருக்கும் அஞ்சக்கூடாது. நாட்டின் அரசனை எதிர்த்துப் பேசுவது என்பது சாதராண ஒன்றல்ல. அவ்வாறு பேசினால் ஆளுபவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம். சகல அதிகாரமும் அவன் கையில் இருக்கிறது.
இவ்வளவு வலிமையைப் பெற்றவன் உண்மைக்குப் புறம்பாகச் செல்லும் போது சத்தியத்தை எடுத்துச் சொல்வதைத் தவிர வேறெதற்கும் சக்தி இல்லாத ஒருவர் அவனிடத்தில் நியாயத்தைக் கேட்பது மிகப் பெரிய ஜிஹாத் ஆகும். நமக்கு வேண்டியவர்கள், நமக்கு மேல் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு நல்லதை எடுத்துச் சொல்வதற்கே பயப்படுகின்ற நாம் எப்படி ஆட்சியாளனுக்கு உண்மையை உணர்த்தப் போகிறோம்?
இன்பத்திலும் துன்பத்திலும், விருப்பிலும் வெறுப்பிலும், எங்களை விடப் பிறருக்கு முன்னுரிம அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்று கீழ்படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்தில் இருப்போரிடம் அவருடைய அதிகாரம் தொடர்பாக சண்டையிடமாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையைப் பேசுவோம் என்றும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்பிற்கு அஞ்ச மாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி எடுத்தோம்.
அறிவிப்பவர்: உபாதத் பின் அஸ்ஸாமித் (ரலி)
நூல்: முஸ்லிம் (3754)
நபி (ஸல்) அவர்கள் வாகன ஒட்டகத்தின் வளையத்தில் காலை வைத்திருந்த நிலையில் ஒரு மனிதர் அவர்களிடம் "எந்த ஜிஹாத் சிறந்தது?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அக்கிரமம் புரியும் அரசனிடத்தில் சத்தியத்தை எடுத்துரைப்பது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல்: நஸயீ (4138)
மூத்தவரை முற்படுத்துதல்
கருத்து தெரிவிக்கும் போது முதலில் பெரியவரைப் பேச விட வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனுபவம் மிக்கவர்கள். எதை எப்படிக் கையாள வேண்டும் என்ற யுக்தியும் அறிந்தவர்கள். வயதில் மூத்தவர்கள் இருக்கும் போது அவர்களைப் பின்தள்ளி விட்டு இளைஞர்களைப் பேச விடுவது மூத்தவர்களை அவமதித்ததாகவும் கருதப்படும்.
அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவ்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் ஹுவைய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள், "பெரியவர்களைப் பேசவிடு. பெரியவர்களைப் பேசவிடு'' என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் மௌனமாகி விட்டார்கள். பின்பு முஹய்யிஸா அவர்களும் ஹுவைய்யிஸா அவர்களும் பேசினார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலி)
நூல்: புகாரி (3173)
தெளிவாகப் பேச வேண்டும்
அவசரம் இல்லாமல் நிறுத்தி நிதானமாக, வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்துப் பேசினால் நம்முடையக் கருத்து, கேட்பவர்களிடம் உடனே எடுபடும். நம்முடைய பேச்சிற்கும் ஒரு மதிப்பு கிடைக்கும்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தைப் பேசுகிறார்கள் என்றால் அதை (வார்த்தை வார்த்தையாக எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால் ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக தெளிவாகப் பேசி வந்தார்கள்.)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (3567)
நீங்கள் ஹதீஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக வேக, வேகமாக அறிவிப்பதைப் போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (3568)
பல விஷயங்களைப் பேசி விட்டு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிடும் போது சொல்ல வருகின்ற கருத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டால் கேட்பவரின் உள்ளத்தில் அது ஆழமாகப் பதிந்து விடும். இல்லையென்றால் கேட்பவர் இதை சர்வ சாதாரணமாக நினைத்து விட வாய்ப்புள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடம் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பச் சொல்வார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (95)
சப்தமாகப் பேச வேண்டிய தேவை ஏற்பட்டால் மாத்திரம் சப்தமிட்டுப் பேச வேண்டும். தேவையில்லாமல் கத்துவது கழுதையின் குரலுக்குச் சமம்.
"நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்''
அல்குர்ஆன் (31:19)
நல்ல பேச்சுக்களை மட்டும் பேசி, சொர்க்கம் செல்லக் கூடிய மக்களாக இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites