அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

குர்ஆனில் முரண்பாடு ஏன்?

கேள்வி: மனித வளர்ச்சியில் கருவறையின் காலம் சராசரி பத்து மாதங்கள். குர்ஆனில் 2:233-வது வசனம் பால்குடியின் காலம் 2 வருடம் எனக் கூறுகிறது. இவை இரண்டும் சேர்ந்தால் மொத்த மாதங்கள் முப்பத்து நான்கு ஆகிறது. இப்படியிருக்க, அல்குர்ஆனின் 46:15-வது வசனத்தில் கருவறை மற்றும் பால்குடியின் கால அளவு 30 மாதங்கள் எனக் கூறுகிறது. இரண்டும் முரண்படுகிறதே! என்ற என்னுடைய மற்றும் என் தோழருடைய கேள்விக்கு விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- எம்.ஏ. பக்கீர் முஹம்மது, தென்காசி.
பதில்: 2:233-வது வசனத்தில் மட்டுமின்றி 31:14 வது வசனத்திலும் பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு வருடங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
ஆனால், 46:15-வது வசனத்தில் பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக் குறிப்பிடும் போது மொத்தம் முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
அதில், பாலூட்டும் காலங்கள் என்று இறைவன் கூறிய இரண்டு வருடங்களை (24மாதங்களை) கழித்தால் கர்ப்பகாலம் ஆறு மாதம் என்று ஆகிறது. ஒரு குழந்தையின் கர்ப்பகாலம் ஆறு மாத காலம் என்று எந்தக் காலத்திலும் எவரும் கூறியதில்லை. ஏறத்தாழ பத்து மாதங்கள் என்று இன்றைய சமுதாயம் விளங்கி வைத்துள்ளது போலவே திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்து மக்களும் விளங்கி வைத்திருந்தனர்.
கர்ப்ப காலம் பத்து மாதம் என்று அனைத்து மனிதர்களும் விளங்கி வைத்திருக்கும் போது, "ஆறு மாதம்' என்று குர்ஆன் கூறுகிறது என்றால் வேண்டுமென்றே தான் அவ்வாறு கூறுகிறது. இந்த இடத்தில் அவ்வாறு குறிப்பிடுவது தான் பொருத்தமானதாகும்.
இது எப்படி என்பதை விளங்குவதற்கு முன்னால் கடந்த காலங்களில் இதற்கு அறிஞர்கள் கூறியுள்ள பல்வேறு விளக்கங்களை அறிந்து கொள்வோம்.
குறைந்தபட்ச கர்ப்ப காலம் ஆறு மாத காலம் என்று சிலர் கூறினார்கள். குறைந்தபட்ச கர்ப்ப காலம் ஆறு மாதம் என்பது முற்றிலும் தவறு என்பதை இன்றைய விஞ்ஞான உலகில் நிரூபிக்கப்பட்டு விட்டது. எட்டு மாதத்தில் பிறந்தால் தான் ஓரளவு குழந்தை பிழைப்பதற்குச் சாத்தியம் உள்ளது எனவும் நிரூபிக்கப்பட்டு விட்டது. ஒரு வாதத்துக்கு இது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் கோடியில் ஒன்று என்ற கணக்கில் பிறப்பதை பொதுவான விதியாக யாருமே கூற மாட்டோம்.
இவ்வாறிருக்க இறைவன் எப்படிக் கூறுவான் என்று சிந்திக்க வேண்டும். குறைந்தபட்ச கர்ப்ப காலம் ஆறு மாதம் என்பதை  குழந்தையின் வளர்ச்சி குறித்த விபரங்கள் முழுமையாக அறியப்பட்ட இன்றைய காலத்தில் நம்ப மாட்டார்கள். இவர்களது விளக்கம் குர்ஆன் அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்தையே தரும்.
இன்னும் சில பேர் வேறு விதமாக இவ்வசனத்துக்கு விளக்கம் கூறியுள்ளனர். அதாவது, இரண்டும் சேர்ந்து முப்பது மாதங்கள் இருக்க வேண்டும். ஆறு மாதத்தில் பிறந்த குழந்தைக்கு 24 மாதம் பாலூட்ட வேண்டும். ஏழு மாதத்தில் பிறந்த குழந்தைக்கு 23 மாதம் பாலூட்ட வேண்டும். எட்டு மாதத்தில் பிறந்த குழந்தைக்கு 22 மாதம் பாலூட்ட வேண்டும். ஒன்பது மாதத்தில் பிறந்த குழந்தைக்கு 21 மாதம் பாலூட்ட வேண்டும். பத்து மாதத்தில் பிறந்த குழந்தைக்கு 20 மாதம் பாலூட்டவேண்டும். இரண்டும் சேர்ந்து முப்பது மாதங்களைத் தாண்டக் கூடாது எனக் கூறியுள்ளனர்.
இது கேட்கப்படும் கேள்விக்குரிய விடையாக இருக்கவில்லை. குர்ஆனில்  பாலூட்டும் காலம் இரண்டு வருடங்கள் என இரண்டு இடங்களில் கூறப்பட்டுள்ளதே? அதற்கு இது முரண்படுகிறதே என்ற கேள்விக்கு இது விடையில்லை. ஆறு மாதத்தில் பிறந்த கோடியில் ஒரு குழந்தைக்குத் தான் இது பொருந்துமே தவிர, மனித குலத்துக்குப் பொருந்தாது என்ற அடிப்படைக் கேள்விக்கும் இது விடையாக இருக்க முடியாது.
விவாகரத்துச் செய்யப்பட்ட பின் இரு வருடங்கள் பாலுட்ட வேண்டும் என்று 2:233- 31:14-  வசனங்களில் அல்லாஹ் கூறுவது பொதுவான சட்டமாகும். ஆறு மாதத்தில் பிறந்த குழந்தைக்கு மட்டும் உரியது அல்ல.
அன்றைய காலகட்டத்தில் இருந்த அறிவுக்கேற்ப இப்படி விளக்கம் கூறினார்கள். நாம் அன்றைய காலத்தில் வாழ்ந்தாலும், அப்படித் தான் கூறியிருப்போம்.
இறைவன் ஏன் இவ்வாறு கூற வேண்டும்? கர்ப்பகாலம் பத்து மாதம் என்பதை அனைவரும் தெரிந்திருக்கும் போது வேண்டுமென்றே இறைவன் ஆறு மாதம் என்று ஏன் கூற வேண்டும்? என்று இன்றைய காலத்திலாவது ஆராயவேண்டுமல்லவா?
நவீன காலத்து அறிஞர்கள் எழுதிய அனைத்து விரிவுரை நூல்களிலும் கூட ஏற்கனவே நாம் கூறியது போன்ற தத்துவத்தைத்(?) தான் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறுவதை நம்மால் ஏற்க முடியவில்லை. இறைவன் வேண்டுமென்றே அனைவரும் தெரிந்து வைத்துள்ள நிலைக்கு எதிராகக் கூறுகிறான் என்றால் இதற்கு ஆழமான பொருள் இருக்கும் என்று சிந்தித்து, கரு வளர்ச்சியை ஆராயும் போது இவ்வசனம் இறை வார்த்தை என்பதை தனக்குத் தானே நிரூபிக்கும் அதிசயத்தைக் காண்கிறோம்.
மனிதனுக்கு என்று தனியான வித்தியாசமான வடிவம் உள்ளது. மற்ற விலங்கினங்களுக்கு என்று தனியான வடிவம் இருக்கிறது. மனிதன் கருவில் விந்துத் துளியாகச் செலுத்தப்படுகிறான். பின்னர் கருவறையின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு வளர்கிறான். அதன் பின்னர் சதைக் கட்டியாக ஆகின்றான். இந்தக் காலக்கட்டங்களில் மனிதன் தனக்கே உரிய வடிவத்தை எடுப்பதில்லை. தாயின் கருவறையில் இருக்கும் ஆடு எவ்வாறு ஒரு இறைச்சித் துண்டு போல் கிடக்குமோ அது போலவே மனிதனும் இருக்கிறான். கைகளோ, கால்களோ எதுவுமே தோன்றியிருக்காது.
கருவறையில் இந்த நிலையை அடைந்த இறைச்சித் துண்டைப் பார்த்து இது மனிதனுக்குரியது. இது இன்ன பிராணிக்குரியது என்றெல்லாம் கூட கூற முடியாது.
இந்த நிலையைக் கடந்த பின் தான் மனிதனிடம் உள்ள செல்கள் உரிய இடங்களுக்குச் செல்கின்றன. அதன் பின்னர் தான் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய தன்மைகளுடனும் உறுப்புகளுடனும் அது வளரத் துவங்குகிறது.
மனிதனுக்கே உள்ள சிறப்புத் தகுதிகளுடனும், மனித உருவத்திலும் கருவில் வளரும் மாதங்கள் மொத்தம் ஆறு தான். அதற்கு முந்திய கால கட்டத்தில் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய எந்தத் தன்மையும் அடையாளமும் இல்லாத இறைச்சித்துண்டு தான் கருவில் இருந்தது.
நீங்கள் சுட்டிக் காட்டிய வசனத்தில் கருவளர்ச்சி என்று கூறாமல் மனிதன் "இன்ஸான்' என்ற சொல்லை இறைவன் பயன்படுத்தி விட்டு இன்ஸானை (மனிதனை) அவள் சுமப்பது ஆறு மாதம் என்று அற்புதமாக இறைவன் கூறுகிறான்.
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாள னாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (திருக்குர்ஆன் 23:14)
பின்னர் மற்றொரு படைப்பாக அதை நாம் ஆக்கினோம் என்பது எவ்வளவு அற்புதமான சொல்! இந்த நிலையை அடையும் வரை கருவில் எல்லாப் படைப்பும் ஒன்று தான். அதன் பின்னர் ஆடு ஆடாகவும், மாடு மாடாகவும் மனிதன் மனிதனாகவும் வேறுபடும் நிலை உருவாகிறது. எனவே அதை மற்றொரு படைப்பு என்று இறைவன் கூறுகிறான். இதையே தான் மனிதனை தாய் ஆறு மாதம் சுமந்தாள் என்பதும் கூறுகிறது.
இந்த மாபெரும் உண்மை படைத்த இறைவனுக்குச் சாதாரண விஷயம் என்பதால் தான் மக்கள் விளங்கி வைத்திருந்ததற்கு மாற்றமாக வேண்டுமென்றே மனிதனைத் தாய் சுமந்தது ஆறு மாதம் என்கிறான். கருவின் வளர்ச்சி காலம் எனக் கூறவில்லை. எனவே எந்த முரண்பாடும் இல்லை.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites