அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

ஜெட்விமானத்தை தாக்கிய தேனீக்கள் படை

பனி மூட்டம், மேக மூட்டம் போன்ற பருவ நிலை மாற்றம் அல்லது இயந்திரக் கோளாறு போன்ற காரணங்களால் ஒரு விமானம் புறப்படுவதற்குக் கால தாமதம் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். தேனீ படையின் தாக்குதல் காரணமாக சில நிமிடத் துளிகள் அல்ல, முக்கால் மணி நேரம் விமானம் கால தாமதம் என்று நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த அதிசயம், அற்புதம் சென்னை விமான நிலையத்தில் மார்ச் 26ம் தேதி நடந்தேறியது.
தேனீப் படைத் தாக்குதல்
இது தொடர்பாக விமான நிலைய இயக்குனர், தினேஷ்குமார் இந்து நாளேட்டிற்கு அளித்த பேட்டியின் சாராம்சம் இதோ:
விமான நிறுத்தப் பாதை 31ல் ஜெட் விமானம் நின்று கொண்டிருக்கையில் அவரும், விமானத்தின் பைலட் கேப்டன் சந்திரசேகரனும் விமானத்தின் மூக்குப் பகுதியில் தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். ராட்சத உடலைக் கொண்ட ஜெட் விமான மூக்கின் முகப் பரிமாணமே தெரியாத வண்ணம் தேனீ படையினர் மொய்த்துக் கொண்டிருந்தனர். தேனீக்களைக் கொல்லக் கூடாது என்பதில் குறியாக இருந்த அந்த இரு அதிகாரிகளும், தேனீக்கள் பயணிகளைக் கொட்டி விடக் கூடாது என்பதிலும் கவனமாகச் செயல்பட்டனர்.
இங்கிருந்து கிளம்பி இந்தப் படை அடுத்த நிறுத்தத் தளத்தில் நிற்கும் விமானத்தில் போய் மொய்த்து விடுவதையும் அவர்கள் இருவரும் விரும்பவில்லை.
எனவே அவர்கள் தீயணைப்புப் படை வாகனங்களை வரவழைத்து உள்ளனர். தீயணைப்புப் படையினர் தண்ணீர் குழாய்கள் மூலம் வேக அழுத்தத்துடன் தேனீக்கள் மீது தண்ணீரைப் பாய்ச்சி அடித்துள்ளனர். தீயணைப்புப் படையினரின் நீரழுத்தத் தாக்குதலுக்கெல்லாம் தேனீப் படையினர் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.
இந்தக் கட்டத்தில் பயணிகள் அனைவரும் விமானத்தின் பின் வாசல்கள் வழியாக விமானத்தில் ஏறும் படி பணிக்கப்பட்டனர்.
தீயணைப்புப் படையினருக்கு டாட்டா காட்டிய தேனீப் படையினர் கடுகளவு கூட நகரவில்லை. இறுதியாக விமானத்தை இயக்குவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்றானதும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து புறப்படுவதற்கான உத்தரவை கேப்டன் சந்திரசேகரன் பெற்றார்.
விமானம் ஓட்டுவதில் பலவிதமான சவால்களைச் சந்திப்பதில் சாதனை படைத்த சந்திரசேகர், விமானத்தைத் தரையிலிருந்து ஆகாயத்தை நோக்கிக் கிளப்பும் போது மேற்கொள்ளும் சாதாரண வேகத்திற்குப் பதிலாக சம வேகத்தில், சரித்திர வேகத்தில் விமானத்தைக் கிளப்பியுள்ளார்.
அந்தச் சரித்திர வேகத்தில் கூட தேனீப் படையினரில் சிலர் தான் நகர்ந்துள்ளனர். மற்றவர்கள் விமானத் துடன் ஆகாய மண்டலத்திற்குச் சென்று விட்டனர்.
இது இந்து நாளேடு மார்ச் 27ந் தேதி வெளியிட்ட வித்தியாசமான ஒரு செய்தியாகும்.
அல்குர்ஆன் கூறும் அறிவியல் அற்புதம்
இங்கே இந்தச் செய்தியை ஆள்வதற்கான பின்னணி என்ன? அறிவியல் கண்டுபிடிப்பை, அணுகுண்டு வெடிப்பைக் கண்டிராத, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தச் செய்தியை அல்குர்ஆன் சொல்லி இருக்கின்றது என்றால் அது மனித மூளையில் உதித்த செய்தி அல்ல; அனைத்தையும் படைத்த ஓர் அற்புத சக்தியிடமிருந்து பிறந்த உண்மை ஒளிக்கதிர் என்பதைப் போட்டு உடைப்பதற்காகவே இந்தச் செய்தி இங்கே ஆளப்படுகின்றது. இப்போது திருக்குர்ஆனின் தித்திக்கும் தேனீ அத்தியாயத்திற்குள் நுழைவோம். அந்தத் தேனடையில் ஒழுகி வழியும் தேனான கருத்தைப் பருகி வருவோம்.
தேனடையின் தொழில் நுட்பமும் திட்பமும்
"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறு களிலிருந்து மாறுபட்ட நிறங்களை உடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:68,69)
இந்த வசனம் தேனீயின் வாழ்க்கையைப் பற்றிக் கூறுகின்றது.
பொதுவாக பூச்சிகள், புழுக்கள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை ரகசியங்கள், இரைக்கான ஆதாரங்கள், உறைவிடங்கள் அனைத்திலும் மனிதனை அதிர வைக்கும் எத்தனையோ அறிவியல் உண்மைகள் காணக் கிடைக்கின்றன. இவற்றில் தேனீ கட்டும் கூட்டில் என்று சொல்வதை விட இன்றைய அறிவியல் உலகம் அதிசயிக்கத்தக்க வகையில் தேனீக்கள் கட்டுகின்ற வீட்டில் பல அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன.
தேன் கூட்டின் பலம்
ஒரு கட்டடப் பொறியாளர் இன்று கட்டடம் கட்ட வேண்டும் என்றால், அவருக்குக் கட்டடம் எப்படிக் கட்ட வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது. அந்த இடத்தில் பூகம்பம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து அதற்குத் தக்க கட்டடத்தை வடிவமைக்கும் கல்வியையும் கற்றிருக்க வேண்டும் என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது. அதனால் இப்போது சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் இந்தப் படிப்பையும் சேர்த்துப் படித்து வருகின்றனர். இது பகுத்தறிவுப் பிராணி என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் மனிதன் ஒரு வீடு கட்டுவதற்காக எடுக்கும் அதிகப் பட்சமான பாதுகாப்பு நடவடிக்கை!
இதோ பாருங்கள்! ஈ என்ற ஓர் அற்பப் படைப்பு படைக்கின்ற அற்புதப் படைப்பையும் அது கொண்டிருக்கின்ற அறிவியல் படிப்பையும் பாருங்கள். அது எந்த மரத்தில் கூடு கட்டுவதாக இருந்தாலும் அந்த வழியில் புயல் காற்று வீசுமா என்று பார்த்துக் கொள்கின்றது. புயல் காற்று வரும் திசையில் வீடு கட்டுவது கிடையாது.
என்ன ஒரு அறிவாற்றல்! இப்போது தான் அல்லாஹ் தேனீக்குக் கூறிய "மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்!'' என்ற அந்த வார்த்தை எவ்வளவு அற்புதமாக அர்த்தப்படுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
பேயாட்டத்தில் பிய்யாத கூடு
தேனீக்கள் அவ்வாறு ஆய்வு செய்து கூடு கட்டி விட்டால் எந்தப் புயல் வீசினாலும் அந்தக் கூட்டைப் பிய்த்து விட முடியாது. தான் கட்டியிருக்கும் அந்தக் கம்பம், கிளை ஓயாத பேயாட்டம் ஆடினாலும் அந்தக் கூடு பிய்யாது, பிரியாது. இது தேன் கூடு பற்றி இன்றைய அறிவியல் கண்கூடாக நிரூபிக்கும் உண்மை நிரூபணமாகும். மழையில் கரையாத, புயல் அலையில் கலையாத இந்தத் தேன் கூட்டுக்கே இந்தப் பலம் இருக்கின்றது என்றால் அந்தத் தேனீக்களுக்கு எத்தனை பலம் இருக்கும் என்பதை உணர முடிகின்றது அல்லவா?
அதனால் தான் மனித மூக்கில் உட்கார்ந்து கொண்டு சாதாரண ஈ மனிதனிடம் விளையாட்டுக் காட்டுவது போல் ஜெட் விமானத்தின் மூக்கில் உட்கார்ந்து கொண்டு இந்தத் தேனீக்கள் தீயணைப்புத் துறையிடம் விளையாட்டுக் காட்டியிருக்கின்றது. இங்கு நாம் பார்க்க வேண்டிய விஷயம், தேன் அடையின், தேனீ படையின் பலத்தைத் தான்.
"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்!'' என்று அல்லாஹ் கற்றுக் கொடுக்கும் அந்தக் கட்டடக் கலையின் அற்புதம் இந்தத் தேனீக்கள் மூலம் ஜெட் விமானத்தின் மூக்கில் அப்படியே அர்த்தப் படுவதைப் பார்க்கிறோம்.
இதிலிருந்து அல்குர்ஆன் கூறுகின்ற இந்த அறிவியல் அற்புதம் நூற்றுக்கு நூறு சரியாவதைப் பார்க்கின்றோம். இந்த வேதம் மனித் சொல் அல்ல! மந்திரச் சொல்லல்ல! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அற்புதச் சொல் என்று நம்மிடம் வேர் பிடித்த இந்தக் கொள்கை மேலும் நீர் பிடித்துக் கொள்கின்றது.
தேன் கூட்டின் தொழில் நுட்பம்
இதுவரை தேன் கூட்டின் பலத்தையும் அதன் திட்பத்தையும் பார்த்தோம். இப்போது அதன் தொழில் நுட்பத்தைப் பார்ப்போம்.
மனிதன் தான் தொழில் நுட்பத்தில் சிறந்தவன். வட்டம், அரை வட்டம், கால் வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், அறுங்கோணம் போன்ற வடிவியலின் (ஏங்ர்ம்ங்ற்ழ்ஹ்) கணக்குகள் தெரிந்தவன். அந்தக் கணக்குகளைப் பின்புலமாகக் கொண்டு வானளாவ எழுந்து நிற்கும் அன்றைய தாஜ்மஹாலிலிருந்து இன்றை உலக வர்த்தக மையம் வரையிலான கட்டடங்களைக் கட்டத் தெரிந்த தொழில் நுட்ப நிபுணன்! பொறியியல் வல்லுனன் என்று பெயரெடுத்த இவன் கட்டடக் கலையில் தேனீயிடம் பிச்சை வாங்க வேண்டும்.
சதுரம் சதுரமாக ஒரு கூட்டைக் கட்டிக் கொண்டு சென்றால் சதுர அமைப்பில் தான் அதை முடிக்க முடியுமே தவிர அதைக் கூடு வடிவில் கொண்டு வர முடியாது.
அது போல் வட்டம் வட்டமாக ஒரு கூட்டைக் கட்டினால் அதில் ஓட்டைகள் ஏற்படும். அந்தக் கூட்டைப் பூர்த்தி செய்ய முடியாது. நான்கு வட்டங்களை சேர்ந்தாற் போல் வைத்துப் பார்த்தால் அவற்றின் இடையே ஒரு துண்டு விழுவதைப் பார்க்கலாம்.
ஆனால் தேனீக்கள் கட்டுகின்ற இந்தக் கூட்டின், தொழில் நுட்பம் மிக்க வீட்டின் வடிவமைப்பைப் பாருங்கள். ஓட்டை இல்லாமல், உடைசல்கள் இல்லாமல் கூடு வடிவில் உருவாக்கப் படுகின்றது. எப்படி? இதன் அறுங்கோண வடிவ அமைப்பு தான் இதற்குக் காரணம்!
இந்த அறுங்கோண வடிவத்திலான செங்கல்களைச் சேர்த்து இந்தக் கூட்டைக் கட்டினால் தான் ஓட்டை ஏற்படாமல் குடியிருப்பதற்குத் தக்கக் கூடாக அமையும். மலர்களில் மொண்டு, தன் வயிறுகளில் சுமந்து கொண்டு வந்து கொட்டுகின்ற தேன் சொட்டுக்களுக்கு உரிய பாதுகாப்பு வங்கியாக இருக்கும் வகையில் அறுங்கோண வடிவில் அமைக்கும் அறிவியல் அறிவு அதற்கு எப்படி வந்தது?
"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்!'' என்று அல்லாஹ் கற்றுக் கொடுக்கும் வஹீயின் அடிப்படையில் தான் வந்தது.

தேன்கூடும் திருமறைக்கூற்றும்
ஜெட் விமானத்தைத் தாக்கிய தேனீக்கள் என்ற தலைப்பில் தேனீக்களின் அதிசய நிகழ்வுகளைக் கடந்த மே இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக தேனீக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் மேலும் பல அற்புதங்களைக் காண்போம்.
இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் நடக்கும் அபரிமிதமான, அளவுக்கதிகமான மணல் கொள்ளையின் காரணமாக அந்த மணற் தட்டுக்கள் பறி போய் நிலத்தடி நீர் சேமிப்பாகவில்லை.
கொள்ளையடிக்கப்படும் மணல் எங்கு செல்கின்றது? மனிதர்கள் கட்டுகின்ற மாளிகைகளுக்கு! அறிவியல் விலங்கான மனிதன் ஒரு வீட்டைக் கட்டுகின்ற போது, இன்னொரு வளத்தை அழித்து, தன்னுடைய வீட்டைக் கட்டிக் கொள்கின்றான்.
பறவைகள் சில குச்சிகளை வைத்துக் கட்டுகின்றன. எறும்பு, கரையான் போன்றவை மண்ணை வைத்து வீட்டை அமைத்துக் கொள்கின்றன. இவையெல்லாம் கூடு கட்டுகையில் தங்கள் இனத்திற்கும், மற்றவர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீட்டுக்காக மனித இனத்திற்கும், அடுத்த இனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றான்.
ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பின் அற்புதமான இந்தத் தேனீ, யாருக்கும் எதற்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தன் மெழுகுக் கூட்டிற்கான மூலத்தை எப்படிப் பெற்றது? யார் கொடுத்தது?
தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் தேனீ என்று மூன்று வகைகள் உள்ளன. இதில் இளைய பாட்டாளித் தேனீ அல்லது பணியாளர் தேனீ தங்களின் அடிவயிற்றுக் கிடங்கில் அமையப் பெற்றிருக்கும் மெழுகுச் சுரப்பிகளில் இருந்து மெழுகைச் சுரக்கின்றன. இவ்வாறு சுரக்கப்பட்ட மெழுகை, தேனீக்கள் மென்று குழைத்து இந்தத் தேனடையை உருவாக்குகின்றன.
மென்று, குழைத்து, கட்டப்படுகின்ற தேன் கூட்டின் விதவிதமான அறைகளின் சுவர்கள் நன்கு காய்ந்து கனமாகி விடுகின்றன. ஆனால் அதே சமயம், 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் நெகிழ்ச்சியடையும் நிலையையும், 145 டிகிரி அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் உருகும் நிலையையும் அடைந்து விடுகின்றன.
இங்கு தான், கூடுகளைக் கட்டிக் கொள் (16:68) என்று அல்லாஹ் குறிப்பிடும் கட்டளையைச் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மனிதன் தான் கட்டும் வீட்டிற்காக பெரிய சிமெண்ட் கிடங்கை வெளியில் வைத்திருக்கின்றான். கட்டடத்திற்கு சிமெண்ட் மட்டும் போதாது. ஜல்லி, இரும்பு, செங்கல், மணல், தண்ணீர் என பல மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன.
குறிப்பாக வீட்டுச் சுவர்களைக் கட்டும் போது, சுடப்பட்ட செங்கல்களை அடுக்கி வைத்துக் கொண்டு அதன் மீது முகட்டைப் போட்டு விட முடியாது. அந்தச் செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகள் அடைக்கப்பட வேண்டும். செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகளை அடைப்பதற்கு சிமெண்ட் சாந்துகளைப் பயன் படுத்துகின்றோம். மனிதனுக்கு மட்டும் தான் இந்த அறிவுத் திறன் இருக்கிறதா? என்று பார்த்தால் அல்லாஹ்வின் அற்பப் படைப்பான, அதே சமயம் அற்புதப் படைப்பான இந்தத் தேனீக்கு மனிதனை விஞ்சுகின்ற அறிவுத் திறன் இருக்கின்றது.
இந்தச் சின்னஞ்சிறு தேனீ பல்வேறு மரப்பட்டைகள், மலர் அரும்புகளில் இருந்து செந்நிறத்துப் பிசினைச் சுமந்து கொண்டு வந்து தேன் கூட்டில் உள்ள கீறல்களை, இடைவெளிகளை அடைக்கின்றன. அதில் உள்ள பாந்துகளை இந்தப் பிசின் சாந்துகளை வைத்துச் சரி செய்து கொள்கின்றன.
மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீடுகளுக்கு அழகிய வண்ணம் (பெயிண்ட்) தீட்டுகின்றான் என்று எண்ணி விடக் கூடாது. அல்லாஹ்வின் இந்தச் சிறிய படைப்பும் தான் கட்டும் வீட்டிற்கு செந்நிறப் பிசினைக் கொண்டு வண்ணம் தீட்டிக் கொள்கின்றது. இதனால் அந்தத் தேன் கூட்டில் ஒரு பளபளப்பு பளிச்சிடுகின்றது.
இவ்வாறு இந்தச் சின்னஞ்சிறு அரிய படைப்பின் அடிவயிற்றுக் கிடங்கிலிருந்து கிடைக்கின்ற மெழுகின் மூலம் எழுகின்ற மெழுகு மாளிகையான தேன் கூடு, அந்தத் தேனீக்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கும் சேர்த்தே பயன்படுகிறது.
இருட்டில் வாழும் இந்தக் குருட்டு மனிதனுக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியாகவும், அழகு சாதனங்களுக்கும் அவனது வீட்டில் அலங்கரிக்கும் மரச் சாமான்களுக்கும் மெருகூட்டும் வண்ணக் கலவை யாகவும் அது பயனளிக்கின்றது.
மனிதன் இயற்கை வளத்தைச் சுரண்டியும், அடுத்தவரின் அல்லது அடுத்த பிராணியின் சொத்தைச் சூறையாடியும் தன் வீட்டைக் கட்டிக் கொள்கின்றான். ஆனால் இந்தத் தேனீயோ தன் சொந்தக் காலில் நின்று, சொந்த மூலத்தைக் கொண்டே தன் கூட்டைக் கட்டிக் கொள்கின்றது.
தாவர இனத்தில் போய் தேனீ சில சேர்மானங்களைப் பெறுகின்றது. அவ்வாறு தாவர வர்க்கத்திலிருந்து அந்தச் சேர்மானங்களைத் தானமாகப் பெற்றுவிடவில்லை. அதற்குப் பரிகாரமாக அந்தத் தாவரத்தின் மலர்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் மகரந்தச் சேர்க்கையைக் காணிக்கை யாகக் கொடுத்து விடுகின்றது.
சிலந்தியும் தன் சொந்தக் காலில் நின்று, தன் உடலிலிருந்து உருவாகும் திரவத்திலிருந்து இழைகளைப் பின்னி வலையை அமைத்துக் கொள்கின்றது. ஆனால் அதனால் மனித சமுதாயத்திற்கு எவ்விதப் பயனும் இல்லை. மேலும் அது மனிதனுக்கு இடர் விளைவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தேனீயும், தேன் கூடும் மனித சமுதாயத்திற்கு மாபெரும் பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த வகையில் "கூடு கட்டுக'' என்று தேனீயை நோக்கி அல்லாஹ் கூறும் கூற்று வெறும் கூற்றாக இல்லை. மனிதனின் அறிவுக் கண்ணைத் திறக்கின்ற, சிந்தனை ஊற்றாக அமைந்துள்ளது.
என் கூட்டைக் கட்டுவதற்காக மெழுகு எனும் மூலத்தை என்னுள் சுரக்க வைத்தவன் தன்னிகரில்லா என்னிறைவன் என்று அல்லாஹ்வின் படைப்பாற்றலுக்கு சாட்சி கூறி நிற்கின்றன, இந்தத் தேனீக்கள்!
அதிசயப் புதையல்! அதிரசப் படையல்
தேன் கூடு என்பது இன்ன பிற பொடிப் பொடி ஈக்கள், பெரும் பெரும் பறவைகள் கட்டுகின்ற கூடுகள் போன்றதல்ல! அல்லாஹ்வின் அற்புதங்களைச் சுமந்து நிற்கும் அதிசயப் புதையலாகும்; அதிரசப் படையலாகும். தேன் கூடு என்பது தேனீக்கள் வசிக்கின்ற ஒரு வீடு மட்டுமல்ல!
பூக்கள் சுரக்கின்ற இன்சுவை மதுர பானம் (சங்ஸ்ரீற்ஹழ்), மகரந்தத் தூள் ஆகியவை தேனீயின் வயிற்றில் போய் செரிமானம் ஆகி வயிற்றின் வழியாக வெளியேறும் அமிர்த பானமான தேனைக் காக்கின்ற, செயல் நுணுக்கம் தாங்கிய சேமிப்பு வங்கி தான் தேன் கூடு! பாலினச் சேர்க்கைக்குரிய பள்ளியறை! தேனீக்கள் பொறிக்கின்ற சினை முட்டைகளையும் அந்தச் சினை முட்டைகள் ஈனுகின்ற குஞ்சுகளையும் காக்கின்ற கரு என தேன் கூட்டின் பன்பமுகப் பயன்பாட்டைப் பட்டியல் போடலாம்.
தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை
மரக் கிளைக்கு இடையிடையே அந்தரத்தில் தொங்கும் இந்தத் தேன் கூடு வெறும் தேன் கூடல்ல! தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை! அமுதம் சுரக்கும் அதி மதுரத் தேன் ஆலை! இங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் தொழில், பணி நடந்து கொண்டே இருக்கின்றது.
திட்டமிடப்பட்ட தேன் கூட்டு அறைகள்
தேனீயின் பணிகளுக்குத் தக்க தேன் கூட்டில் திட்டமிடப்பட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன. தேன் கூட்டில் ஒரு பகுதி வளரும் ஆண் தேனீக்களுக்காகவும், தேன் மற்றும் மகரந்தத் தூளை சேமிப்பதற்காகவும் கட்டப்படுகின்றது.
ஆண் தேனீக்களுக்காகக் கட்டப்படும் அறைகள் பணியாளர்களுக்காகக் கட்டப்படும் அறைகளை விடப் பெரிதாக அமைக்கப்படுகின்றன. இந்த அறைகள் மூடப்பட்டு விட்டால் ஒரு குவிமாடத்தை (உர்ம்ங்) போல் காட்சி அளிக்கும். பாட்டாளித் தேனீக்களின் அறைகள் மூடப்பட்டு விட்டால் தரை மட்டமாகக் காட்சியளிக்கும்.
ஆண் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் நடுவிலும் கீழ்ப் பகுதியின் வலது புறத்திலும் கட்டப்படுகின்றன. பாட்டாளித் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் மேற்பகுதியில் இடது புறத்தில் கட்டப்படுகின்றன.
ராணித் தேனீக்களின் அறைகள்
தேன் கூட்டின் முகத்தில் நேராக, அதே சமயம் பாட்டாளித் தேனீக்களின் அறைகளுக்கு எதிராக, செங்குத்தாக ஓர் அறை தொங்கும். இது தான் ராணித் தேனீயின் அறையாகும்.
படுக்கை விட்டத்தில் அமைந்துள்ள அறைகள் பாட்டாளி அல்லது ஆண் தேனீக்களின் அறைகளாகும்.
குஞ்சுகளுக்குரிய அறை
குஞ்சுகள் அல்லது முட்டை அல்லது முட்டைப் புழுக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட அறையில் தான் இளம் ராணி பருவம் அடைவதற்காக வளர்க்கப்படுகின்றது. ராணித் தேனீயின் இந்த அறை சாதாரண முட்டைப் புழுக்களுக்கான அறையை விட அகலமானது.
இவ்வாறு ராணீத் தேனீக்கள், ஆண் தேனீக்கள், பாட்டாளித் தேனீக்கள் எனப்படும் பெண் தேனீக்கள் என்று மூன்று வகையான தேனீக்களுக்கும் இந்தத் தேன் கூட்டில் தனித்தனி அறைகள் கட்டப்படுகின்றன.
மனிதன் என்ற அறிவியல் விலங்கு தான் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் கட்ட முடியும். வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, ஒப்பனை அறை என்று பல்வேறு அறைகளைக் கட்ட முடியும் என்று கற்பனை செய்து கொண்டிருக்கின்றான்.
ஆனால் அந்தக் கற்பனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டுத் தன்னிகரற்ற முறையில் தனி பாணியில் பொறியியல் கலை நுட்பத்துடன் கூடு கட்டி, தேனீக்கள் மனிதனை, மனித அறிவை விஞ்சி நிற்கின்றன.
இதனால் தான் மனிதனின் அறிவை விஞ்சுகின்ற தேனீக்களின் இந்தத் தொழில் நுட்பக் கலையை மனிதன் கண்டறியும் வகையில் திருக்குர்ஆனில் தேனீ என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் தேனீக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.
இது உண்மையில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றது. தேனீ கூடு கட்டும் விதம், அது கொண்டு வருகின்ற மகரந்தத் தூள், மொண்டு வருகின்ற தேன் மதுர இன்சுவை பானம், சிவப்பு நிறப் பிசின் போன்றவற்றைச் சேமிக்கும் பணியும் பாங்கும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதோடு அதிர்ச்சியிலும் உறைய வைக்கின்றது.
மனிதனைப் போன்று சுற்றுப் புறச் சூழலை அழித்து தனக்கு வீடு கட்டாமல், இந்தத் தேனீக்கள், தான் கட்டுகின்ற கூட்டிற்காகச் சேமித்து வரும் மகரந்தத் தூள் மூலம் தாவர இனத்தின் உருவாக்கமும், இனப் பெருக்கமும் நடைபெறுகின்றது.
தேனீக்கள் சுமந்து வருகின்ற மகரந்தத் தூள் பூக்களில் படியும் போது ஏற்படும் தாவர இனப் பெருக்கம் பற்றிய அறிவியல் ரகசிய வெளிப்பாட்டை அறியும் போது நம்முடைய ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites