அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 1 மே, 2010

தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதுவது ஷைத்தான் கற்றுத் தந்ததா?


அபூஹுரைரா (ரலி) அவர்கள் ரமளான் ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பணியில் இருந்த போது, ஷைத்தான் வந்து திருடியதாகவும், அவன் பிடிபட்டவுடன், தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதினால் ஷைத்தான் தீண்ட மாட்டான் என்று அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் புகாரியில் ஹதீஸ் உள்ளது. அபூஹுரைராவின் முன் ஷைத்தான் வந்தானா? தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதுவது ஷைத்தான் கற்றுத் தந்ததா?

ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த உணவுப் பொருளை அள்ளத் துவங்கினான். உடனே நான் அவனைப் பிடித்துக் கொண்டேன். "உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்'' என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்) இறுதியில் அவன், "நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்'' என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது, "அவன் பொய்யனாயிருந்தும் உம்மிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3275
இந்த ஹதீஸில் இரவில் தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓத வேண்டும் என்ற நற்செயலை ஷைத்தான் கற்றுக் கொடுத்ததாக இடம் பெற்றுள்ளது. இது சரியா என்பதைப் பார்க்கும் முன் ஷைத்தான் குறித்து குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
"இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்த வனாவாய்'' என்று (இறைவன்) கூறினான். "அவர்கள் உயிர்ப்பிக்கப் படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான். "நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான். "நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று கூறினான். "பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமா னோரை நன்றி செலுத்து வோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்)
(அல்குர்ஆன் 7:13-17)
அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைத்து, அவர்களுக்குப் பணியுமாறு ஷைத்தானுக்குக் கட்டளையிட்ட போது அவன் மறுத்து விட்டான். அப்போது நடந்த உரையாடல் இந்த வசனங்களில் இடம் பெற்றுள்ளது.
கியாம நாள் வரை உள்ள மக்களை வழி கெடுப்பது தான் ஷைத்தானின் பணி என்பதை இந்த வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன.
ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவன் ஆவான். (அல்குர்ஆன் 19:44)
இந்த வசனத்திலும் இது போன்ற எண்ணற்ற வசனங்களிலும் ஷைத்தான் தீய செயல்களை மட்டுமே ஏவுவான் என்பது தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. மனிதர்களை வழி கெடுத்து, தீய செயல்களைச் செய்யத் தூண்டுவது தான் ஷைத்தானின் வேலை என்ற கருத்தில் ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன.
மேலும் ஷைத்தானை மனிதர்களால் பார்க்க முடியாது என்றும் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்        தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.  (அல்குர்ஆன் 7:27)
இந்த வசனங்கள் மற்றும் ஹதீஸ்களுக்கு முரணில்லாத வகையில் தான், மேற்கண்ட ஆயத்துல் குர்ஸீ தொடர்பான ஹதீஸை விளங்க வேண்டும்.
ஒரு நற்செயலை ஷைத்தான் கற்றுக் கொடுத்தான் என்பது ஷைத்தானின் பண்புகளுக்கு மாற்றமாக அமைந்திருப்பதால், நிச்சயமாக ஆயத்துல் குர்ஸீயை ஷைத்தான் கற்றுக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.
பொதுவாக, கெட்ட மனிதர்களைப் பற்றிக் கூறும் போது, ஷைத்தான் என்று சொல்வதுண்டு. குர்ஆனிலும் இதற்கு ஆதாரம் உள்ளது.
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின் றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 2:14)
எனவே ஸதக்கத்துல் ஃபித்ர் பொருளைத் திருட வந்தவன் கெட்டவன் என்ற கருத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் "ஷைத்தான்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள் என்று விளங்கினால் குர்ஆனுக்கும், ஏனைய நபிமொழிகளுக்கும் முரணில்லாத வகையில் அமையும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites